புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
44 Posts - 43%
heezulia
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
4 Posts - 4%
prajai
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
4 Posts - 4%
Jenila
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
2 Posts - 2%
kargan86
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
1 Post - 1%
jairam
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
8 Posts - 5%
prajai
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
6 Posts - 4%
Jenila
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
4 Posts - 3%
Rutu
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
2 Posts - 1%
manikavi
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அந்திம காலம்(நாவல்) Poll_c10அந்திம காலம்(நாவல்) Poll_m10அந்திம காலம்(நாவல்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திம காலம்(நாவல்)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:17 am

ரெ.கார்த்திகேசு ஓய்வு பெற்ற தொடர்புத் துறை (mass communication) பேராசிரியர். இந்நாவல் தவிர "வானத்து வேலிகள்"; "தேடியிருக்கும் தருணங்கள்"; "காதலினால் அல்ல" என்ற மூன்று நாவல்கள் மற்றும் "புதிய தொடக்கங்கள்"; "மனசுக்குள்"; "இன்னொரு தடவை" என்னும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.



அந்திம காலம் - 1

மழைத் தாரைகள் காரின் முன் கண்ணாடியில் வீசி அடித்துக் கொண்டிருந்தன. காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. இடை விடாத பொழிவு. அகலமான கண்ணாடியெங்கும் மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடை விடாது அழித்துக் கொண்டிருந்தது.

டடக்...டடக்...டடக்... டடக்.

அழிக்க அழிக்கப் புதிது புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் கொஞ்சமும் இல்லாத வைப்பர்.

டடக்... டடக்.. .டடக். அழி... அழி... அழி. வரை... வரை... வரை. டடக்... அழி.. டடக்... வரை... டடக்... அழி... டடக்... வரை.

எது முதல்? எது தொடர்? வரைதல் முதலா, அழிதல் முதலா?

சுந்தரத்தின் கார் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது. அந்தக் கடுமையான மழையில் அவர் காரை ஓட்ட விரும்பவில்லை. பார்வை தெளிவாக இல்லை. இரண்டடிக்கு முன்னால் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மருத்துவ மனைக்குப் போய்விட்டு வீடு திரும்புகிற வழியில் இப்படித் திடும் என மழை பிடித்துக்கொண்டது.

வேணுமானால் முன் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நிதானமாக ஓட்டலாம். கண்ணாடி உள்ளே பனி படரும் போது துடைத்து விட்டுக் கொள்ளலாம். இந்த மழைக்குப் பயந்து வேறு யாரும் காரை நிறுத்தி விட்டதாகத் தெரியவில்லை. கார்கள் வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு காரும் அவர் காரைக் கடக்கும் போது சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை சர்ரென்று கிழித்து அவர் காரின் மீது பாதியை ஊற்றிக் குளிப்பாட்டி விட்டுத்தான் செல்லுகிறது.

ஆனால் அவருக்கு அப்படி அவசரம் ஒன்றும் இல்லை. வீடு பக்கத்தில்தான். பத்து நிமிடம் நின்று மழை தணிந்ததும் போகலாம். மற்றவர்களுக்கு அவசரம் இருக்கிறது. அவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஆயிரம் வேலைகள். அவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஓய்வு பெற்று விட்ட மனிதனுக்கு ஏன் அவசரம்? அவசரமாக வேலை செய்து காலத்தை விரைவாக ஓட்டி... அப்புறம் என்ன செய்வது? ஓய்வெடுப்பதைக் கூட வெறுப்பாக்கிவிட்ட வேலை ஓய்வுக் காலத்தில் அவசரம் ஒன்றும் இல்லை.

இங்கே இப்படி இந்தக் காருக்குள் உட்கார்ந்திருப்பது நிம்மதியாகக் கூட இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மழை இத்தனை கொடூரமாகப் பெய்தும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. பட்டாம் பூச்சியாகவிருக்கும் பியூப்பாவை இறுக்கிக் காப்பாற்றும் கூடு போல அவரை இந்தக் கார் பத்திரமாகப் பாதுகாக்கிறது. சுற்றிலும் தண்ணீர் வடூந்து வெள்ளமாகிவிட அவர்மட்டும் நனையாமல் காய்ந்திருக்கிறார். தலைக்கு ஆறு அங்குலத்திற்கு மேலே தண்ணீர். தோளுக்கு இரண்டு அங்குலம் பக்கத்தில் தண்ணீர். காலுக்கு ஓரடி கீழே வெள்ளம். ஆனால் அவர் மேல் ஒரு துளியும் தண்ணீர் இல்லை.

என்ஜின் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிர் சாதனக் கருவி கீழ் சுருதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியில் ஆவி பரவாமல் இருக்க அது வேண்டியிருந்தது. அதனால் பரவும் குளிருக்கு அவருடைய வெப்பமான மூச்சே மாற்றாக இருக்கிறது. மழையின் "சோ" என்ற ராகமும் கூரையில் அது போடும் தட தட தாளமும் ரசிக்கும்படியாகக்கூட இருந்தன. இது பாதுகாப்பான இடம். இது நிம்மதியான சூழ்நிலை.

அதோ தண்ணீரைக் கிடூத்துக்கொண்டு போகும் லாரியில் அந்த லாரி உதவியாளன் பாதி நனைந்தவாறு போகிறான். லாரியின் தார்ப்பாலின் துணி கிழிந்து கிடக்கிறது. அவனுக்குப் பாதுகாப்பில்லை. மோட்டார் சைக்கிளில் மழைக்கோட்டு அணிந்தவாறு போகிறவனுக்கும் முகம் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் பின்னால் உள்ள பெண் மழைக் கோட்டும் இல்லாமல் முதுகில் மழை வழிய பிளவ்ஸ் உடம்போடு ஒட்டிக்கொள்ள வெட்கப்படக் கூட வசதியில்லாமல் கணவனை -- ஒருவேளை அண்ணனாகக் கூட இருக்கலாம் -- கட்டிக் கொண்டு போகிறாள். இங்கே ஒருவன் சைக்கிளை பஸ் பிரயாணிகள் நிற்கும் நிழல் கூடத்தில் வைத்து விட்டு மழைக்குக் காப்புத் தேடியிருக்கிறான். ஆனால் மழை அவன் காலடியில் வெள்ளமாக ஏறி அவனை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர் பாதுகாப்பாக, நனையாமல், குளிரில்லாமல், சூடாக, நிம்மதியாக, காரின் உள்ளே கர்ப்பப்பைக்குள் குழந்தை போல இருக்கிறார். நான் கடலின் மத்தியில் தீவாக இருக்கிறேன். நான் பாலைவனத்தின் மத்தியில் சோலையாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். அர்ஜுனா! மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம்.

டடக்...டடக்...வரை... டடக்...டடக்...அழி.. .டடக்...வரை...டடக்...அழி...

எது பாதுகாப்பு? எது நிம்மதி? யார் இந்த உலகில் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கிறார்கள்? அதோ மழையில் அவதிப்பட்டு நிற்கும் அந்த சைக்கி்காரன் இன்னும் பத்து நிமிடங்களில் மழை விட்டதும் உடம்பை வழித்து விட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறி வீடு போய்ச் சேருவான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் உடல் காய்ந்து விடும். திடகாத்திரமாக இருக்கிறான். இன்னும் ஐம்பது வருடங்கள் உயிரோடு இருப்பான்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் மழை விட்டதும் ஜோராக காரோட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். ஆனால் என் உடல் அழுக ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் முற்றாகச் செத்துப் போய்விடுவேன்.

யாருக்கு இருக்கிறது பாதுகாப்பு? என்னுடைய தற்காலிகச் சுகத்துக்கும், அவனுடைய தற்காலிகத் துன்பத்துக்கும் என்ன பொருள்? ஏ சைக்கிளோட்டியே! இங்கே வா! இந்தக் காரையும் சுகத்தையும் எடுத்துக் கொள். உன் இடத்தில் இருந்து நான் நனைகிறேன். வெள்ளம் என் கணுக்கால்களை நனைத்து முழங்கால் வரைக்கும் வந்தாலும் பரவாயில்லை. உன் மீதியிருக்கும் ஐம்பது வருடங்களை எனக்குக் கொடுப்பாயா? மாற்றிக் கொள்வோமா?



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:17 am

கண்களில் கண்ணீர் படர்ந்தது. ஸ்டியரிங் சக்கரத்தைக் கைகள் அழுத்திப் பிசைந்தன. நெற்றியை மெதுவாக அந்த சக்கரத்தில் சாய்த்து மௌனமாக அழுதார். அவர் அழுகைகூட பாதுகாப்பாக இருந்து. பிறர் பார்வை பட்டு அவமானப்படுத்தாத சுகம்.

ஒரு யுகம் போல் மனசுக்குத் தோன்றினாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்காது. மின்னல் தெறிப்புக்களாக அவை மனசுக்குள் ஓடின. வாழ்ந்த வாழ்க்கை, வளர்ப்பு, படிப்பு, தொடூல், கல்யாணம், மனைவி, குழந்தைகள், எல்லாம் துண்டு துண்டாக, குழந்தை மனம்போன போக்கில் வெட்டி ஒட்டின ஒட்டுப்படம் போல....

மழையின் படபடப்பு தணிந்திருந்தது. "சோ" என்ற சத்தம் இல்லை. தலை நிமிர்ந்து பார்த்தார். வானம் தௌிந்திருந்தது. தூவானம். சூரிய வௌிச்சமும் வானவில்லும் கூடத் தோன்றியிருந்தன. சைக்கிள்காரன் இருக்கையைத் தட்டித் துடைத்துவிட்டு சைக்கிள் மேல் உட்கார்ந்து ஜிவ்வென்று போனான்.

இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துச் சூடாக்கிக் கண்களையும் கன்னத்தையும் முகத்தையும் துடைத்துச் சுத்தமாக்கினார். பின்பார்வைக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, பின்னால் கார் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, கியரைப் போட்டு, கை பிரேக்கை விடுவித்து, மெதுவாக, பத்திரமாகக் காரை வீட்டை நோக்கிச் செலுத்தினார்.

*** *** ***

அவருடைய காரை கேட்டின் முன் கண்டதும் ஜிம்மி ஓடிவந்தது. கேட்டின் பின்னாலிருந்து துள்ளிக் குதித்தது. பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களைக் கோர்த்துக் கொண்டு முகமன் சொல்லிற்று. நாக்குத் தொங்க வாய் விரிந்து சிரித்தது. ஒரு இரண்டு மூன்று மணி நேரம் வௌியே போய் வந்தாலும் ஏதோ பத்து நாட்கள் பார்த்திராத நண்பனைக் கண்ட கொண்டாட்டம். என் அன்பு நாயே! உன்னைப் போல் என்னை என் மனைவியும் குழந்தைகளும் கூட வரவேற்பதில்லை. உனக்கு இது எப்படி வாய்த்தது? நான் போடும் சில எலும்புத் துண்டுகளுக்காகவா இத்தனை உற்சாகமான நன்றி செலுத்துகிறாய்? அதற்காகவா இந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற இங்கு வரும் அத்தனை பேரையும் பார்த்துக் குலைத்து இந்த உலகத்தையே விரோதித்துக் கொள்ளுகிறாய்?

காரிலிருந்து இறங்கி கேட்டைக் கொஞ்சமாகத் திறந்து ஜிம்மியைக் கூப்பிட்டுச் சங்கிலியில் கட்டினார். சரணடைந்து தலை கொடுத்துக் கட்டுப்பட அது வழக்கம் போல சம்மதித்தது. கட்டாவிட்டால் கேட்டைத் திறந்ததும் வௌியே ஓடி விடும். பிற நாய்களிடம் சண்டை போட்டுக் கடிபட்டு வரும். சாலையில் போகும் மோட்டார் சைக்கிளோட்டிகளைத் துரத்தும்.

காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தினார். கேட்டைச் சாத்தினார். ஜானகி எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை. அவளிடம் விஷயத்தைத் தருணம் பார்த்துச் சொல்ல வேண்டும். அதிர்ச்சியைக் குறைக்கும் வகையில்... "இதெல்லாம் சாதாரண விஷயம்தான்" என்ற தோரணையில்... "எந்த மானுடன் சாகாவரம் வாங்கி வந்திருக்கிறான் இந்த உலகத்தில்..." என்ற தத்துவ முன்னுரையோடு...

ஜானகி சமயலறையிலிருந்து பரபரப்பாக வௌியே வந்தாள். "ஏங்க இவ்வளவு நேரம்?" பதில் சொல்ல வாயெடுத்த போது...

"ராதா போன் பண்ணுனாங்க... இப்பதான்.."

அவசரமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழக்கமாகத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் மகளின் செய்தி இத்தனை மூச்சுத் திணறும் அவசரத்தில் வௌிப்படக் காரணமில்லை. வேறு முக்கிய விஷயம் தன் அவசர நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று முதல் நிகழ்ச்சியைத் தள்ளிப் போட்டதில் ஒரு வக்கிரமான நிம்மதி இருந்தது.

"என்ன விஷயம் ஜானகி..?"

"மறுபடி பிரச்சினையாம்..."

"பிரச்சினைன்னா?"

"அந்தப் பாவி மறுபடி போட்டு அடிச்சிருக்காங்க..." அவள் கண்களில் நீர் கட்டியது.

"ஏனாம்?"

"என்னமோ மறுபடியும் பணம் கேட்டானாம்" கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசினாள்.. "முடியாதின்னு சொன்னாளாம். வார்த்தை முத்திப் போய் அடிக்கிற அளவுக்கு வந்திருக்கு!"

மனத்தில் திகீரென்றது. எத்தனை அன்பாக இந்த மகளை வளர்த்தோம் இருவரும். கொஞ்சி குளிப்பாட்டி, படிக்க வைத்து, அவள் படிக்க விழித்திருக்கிற நாட்களில் தாங்களும் விழித்திருந்து... பட்டதாரியாக்கி, அவள் விரும்பியவனைத் தாங்கள் விரும்பாத போதும், அவள் விருப்பத்தை ஏற்று, அவனையே அவளுக்கு மணாளனாக்கி... வீடு பிடித்துக் கொடுத்து... குழந்தைப் பேறு பார்த்து... இப்படி அடிபடவா? எப்படி இவர்கள் வாழ்க்கை கசந்து போனது? ஏன் இவர்கள் காதல் வாழ்க்கை வன்முறைக்குள் வீழ்ந்தது? மனசுக்குள் கேட்டுக் கொண்டார். வாய்விட்டு யாரிடம் கேட்பது?

"நம்ப என்ன செய்றது ஜானகி?"

"அவ இன்னைக்கே புறப்பட்டு வர்ராளாம் இங்க! போனைக் கீழே வச்சதும் பேக்க எடுத்துக்கிட்டு வந்திடுவேன்னு சொன்னா..."

"பஸ்ஸிலியா...?"

"இல்லைங்க. அவ கார்ல... பையனையும் கூட்டிட்டுத் தானா ஓட்டி வரப் போறாளாம்..."

"ஒண்டியாவா? என்ன ஜானகி நீ? இதுவரைக்கும் அவ ஒண்டியா காரை ஓட்டி வந்ததில்லையே! ஏன் சரின்னு சொன்ன?"

"நான் என்ன சொல்றது? நான் புறப்பட்டுட்டம்மான்னு சொல்லிட்டு போன வச்சிட்டா. நான் என்ன பண்ண முடியும்?"

இப்போது மணி ஏழாகி விட்டது. கோலாலம்பூரிலிருந்த இப்போது புறப்பட்டாலும் இந்தப் பினாங்கு வந்து சேர நான்கு மணி நேரம் ஆகும். இரவுப் பிரயாணம். இதற்கு முன் இப்படித் தனியாக வந்ததில்லை. மூன்று வயதுக் குழந்தையையும் கூட்டிக்கொண்டு, இரவில், மழைக்காலத்தில், மனத்தில் வெறுப்பையும் எரிச்சலையும் கோபத்தையும் சுமந்து கொண்டு, இடைவிடாத 110 கிலோமீட்டர் வேகத்தில், மனசை வசியப்படுத்தி மூளையை மரத்துப் போகச் செய்யும் நெடுஞ்சாலையில்... நினைக்க பயமாக இருந்தது. விபத்துக் காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.

"சே! நீ அவளத் தடுத்திருக்கணும் ஜானகி!" என்று சொல்லி அசந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.

"எப்படிங்க தடுக்கிறது? இன்னும் அங்க இருந்து அவனோட சண்டை போட்டு உதை வாங்கவா? இங்கவாவது வந்து ரெண்டு நாள் நிம்மதியா இருக்கட்டும்னு வரச் சொல்லிட்டேன்"

உண்மைதான். ராதா தன் கணவனிடம் அடிபடுவது இது முதன் முறையல்ல. இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது அதிகமாகிவிட்டது. அவர்கள் குடும்ப வாழ்க்கையில் பலவித விஷங்கள் கலந்து விட்டன. மருமகன் சிவமணி அதற்கு முக்கிய காரணம். அவனுக்குக் குறுக்கு வடூயில் முன்னேறவேண்டும் என்ற பேராசைகள் அதிகம்.

எல்லாம் அவனுடைய குற்றம் என்றும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்கள் என்ற கோணத்தில் இுந்து பார்க்கும்போது ராதாவின் மேல் பரிதாபம் தோன்றினாலும், அவளுக்கும் விட்டுக் கொடுத்துப் போகமுடியாத பண்பு உண்டு. கோபம் வந்தால் மூர்க்கமாக மாறிவிடுவாள். பிடிவாதம் உண்டு.



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:18 am

"எனக்குக் கொஞ்சம் டீ கலக்கிக் கொண்டா ஜானகி!" என்றார். ஜானகி மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.

ராதாவின் குறைகளை ஜானகி ஒருநாளும் ஏற்றுக் கொண்டதில்லை. எல்லாக் குறைகளும் மணியிடம்தான் என்பது அவள் கருத்து. ராதாவும் சிவமணியும் காதல் கொண்ட காலத்திலிருந்தே மணியை அவளுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் சிவமணியிடம் அப்போது ஒன்றும் கெட்ட பழக்கங்கள் இல்லை. ஆனால் தன் அன்பு மகளின் மனத்தை வௌியில் இருந்து வந்து ஆக்கிரமித்துக் கொண்டவன் என்ற பொறாமை ஆரம்பத்திலிருந்து உண்டு. தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்த வரை அதை அடக்கி உள்ளே போட்டிருந்தாள். அந்த உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியதும் அவள் முழுக் கோபமும் உக்கிரமாகத் தலையெடுத்துவிட்டது.

ஆனால் அந்த விரிசல் பிளவாகி அவன் அவளை அடிக்கத் தொடங்கிவிட்டான் என்று கேள்விப் பட்டபோது அவரும் அவனை ஒரு மிருகமாகத்தான் நினைத்தார். இந்த நாகரிகக் காலத்தில், இந்த நாகரிகக் குடும்பத்தில் இப்படி நடப்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ராதாவின் வாழ்க்கைத் துன்பங்கள் ஏற்கனவே அவருடைய மனத்தின் ஒரு மூலையில் பாரமாக உட்கார்ந்திருந்தன. இன்றைக்கு நடந்தவற்றைக் கேள்விப்பட்ட பிறகு அந்த பாரம் உட்கார்ந்திருந்த இடம் ரணமாகிவிட்டது. அதிலும் இன்றைக்கு டாக்டரிடம் சென்று மரண ஓலை பெற்றுக் கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில், இன்னும் ஒரு ஈட்டியா இப்படிப் பாய வேண்டும்?

எவ்வளவு துன்பங்களுக்கு இந்தச் சின்ன மனத்துக்குள் இடம் இருக்கும்? எவ்வளவு பாரம்தான் இந்தப் பைக்குள் போட்டு வைக்க முடியும்? இது எவ்வளவு போட்டாலும் தளர்ந்து விரிந்து கொடுத்து ஏற்றுக் கொள்ளுகின்ற பையா? அல்லது இதற்கும் எல்லை உண்டா? உடையும் கன அளவு உண்டா? அல்லது விரும்பினால் கருங்கல்லாகவும் விரும்பினால் ரப்பர் பையாகவும் மனிதன் இதனை மாற்றிக் கொள்ள முடியுமா?

ஜானகி ஆவி பறக்கும் டீயோடு வந்தாள். அவர் முன் மேசையில் வைத்தவாறு கேட்டாள்: "இப்படி இங்க மழை பேஞ்சுக்கிட்டு இருக்கே, அவ வர்ர வழியெல்லாம் மழை பேயுமோ என்னமோ தெரியிலியே!"

பெய்யும் என்று ஒரு வாரமாகமே வானிலை அறிக்கையில் சொல்லி வருகிறார்கள். மேற்கு மலேசியாவில் கரையோரப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை, மேகமூட்டம், தாழ் நிலங்களில் வெள்ளம் என்றுதான் தொலைக்காட்சிச் செய்தியில் சொல்லுகிறார்கள். இந்த நிலையில் ஜானகிக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் அவரால்?

"மழை இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? மெதுவா ஓட்டி வந்தா ஹைவேயில ஒண்ணும் ஆபத்தில்ல. கவலப் படாத! எல்லாம் பத்திரமா வந்து சேந்திருவாங்க ரெண்டு பேரும்!" ஜானகிக்குச் சொன்னாரா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாரோ தெரியவில்லை.

ஜானகி மீண்டும் மழைத் தாரைகள் விழ ஆரம்பித்திருந்த வீட்டுக் காம்பவுண்டை திறந்திருந்த கதவுகள் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராதாவின் நினைவும் அவளுடைய அந்த நேரத்துத் துன்பமும் அவள் மனத்தை முற்றாக ஆக்கிரமித்திருந்தன. என் அன்பு மனைவியே, புதிய துயரம் வந்ததும் காத்திருந்த இன்னொரு துயரத்தை மறந்து விட்டாயே! அப்படித்தானா வாழ்க்கை! "இப்போது" என்பதுதான் முக்கியம். இப்போது நிகழ்வதுதான் நெஞ்சில் நிறைகிறது. இப்போதுதான் உண்மை.

நான் ஒருமாதமாக தலை கடுமையாக வலிக்கிறது என்று சொன்னதும் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதும் டாக்டர் பரிசோதனைக்குப் பலமுறை சென்று வந்ததும் இன்று பரிசோதனை முடிவு தெரிந்து கொள்ள மத்தியான வேளையில் நான் டாக்டரிடம் சென்றதும் உன் மனத்தின் கொல்லைப் புறத்தில் புதையுண்டு போய்விட்டன. மகளின் துயரம் மரமாக உன் வாசற்புறத்தில் வளர்ந்து விட்டது. அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். அவள் அடிபட்டதை, அவள் காரில் ஏறிக் கோபமாக ஓட்டி வரும் காட்சியை, உன் பேரன் அந்தக் காரின் ஓரத்தில் தொத்திக் கொண்டு வருவதை, மழை பொடூந்து வெள்ளக்காடாகிவிட்ட நெடுஞ்சாலையில் உன் மகளின் கார் இருளைக் கிழித்துக் கொண்டு வரும் அபாயகரமான காட்சிகளை கற்பனை செய்தவாறு இருக்கிறாய்.

என் அன்பு மனைவியே! மனசை இப்படி நைந்து போக விட்டு விடாதே. நான் சொல்லுகின்ற செய்தியைத் தாங்கிக்கொள்ள உனக்கு இன்னும் உரம் வேண்டும். இது பெரிது. உன் மகளின் செய்திகள் உன் மனதுக்குத் துப்பாக்கி ரவைகள் என்றால் என் செய்தி ஆயிரம் டன் டிஎன்டி. தயாராக இரு. பக்கத்தில் எதையாவது உறுதியாகப் பிடித்துக் கொள். மயக்கம் வரும். ஆண்டவனை வேண்டிக்கொள்.

ஜானகி திடீரென்று தலை நிமிர்ந்து அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். "சரி, டாக்டர் என்ன சொன்னாரு? அதக் கேக்காம ராதா கதயே பேசிக்கிட்டு இருந்திட்டேனே!"

டீ கோப்பையைக் கீழே வைத்தார். ஜானகி முகத்தைப் பார்த்தார். இதை உன்னால் தாங்க முடியுமா? நீ உன் மகள் நினைவில் குலைந்திருக்கும் இந்தத் தருணத்தில் இந்தக் கல்லை உன் தலையில் போடட்டுமா? நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னை வதைப்பதற்குத் தயாராக இல்லை. மனிதன் வதை படுவதில் துன்பம் இருந்தாலும் கண்ணியம் உண்டு. ஆனால் மற்றவர்களை வதைப்பதில் கண்ணியமில்லை. என் அன்பு மனைவியே! இந்தச் செய்தி காத்திருக்கலாம். நான் உன்னை விதவையாக்கப் போவது நிச்சயம். ஆனால் அது நாளைக்கே நடக்கப் போவதில்லை. அது இன்னும் சொஞ்ச நாள் காத்திருக்கலாம். உனக்கு இந்த ஓரிரவுக்குப் போதிய துன்பங்கள் மனத்தில் இருக்கின்றன. இன்றிரவு உன் மகளைப் பார்த்துக் கதைகளைக் கேட்டறிந்து நாம் இருவரும் நம் புண்களில் செருகிக் கொள்ள பல வேல்கள் காத்திருக்கின்றன. இப்போது இது வேண்டாம்.

"இன்னும் லேப்ல இருந்து பரிசோதனை முடிவு வரலியாம் ஜானகி. ரெண்டொரு நாள்ல தெரியும்னு டாக்டர் சொல்றார்"

"இன்னைக்குக் கண்டிப்பா வந்திரும்னு சொன்னாங்களே..."

"சொன்னாங்க. இப்ப இல்லைங்கிறாங்க. என்ன பண்றது?"

"உங்களுக்கு வலி எப்படி இருக்கு?"

"பரவால்ல. சாப்பாட்டில கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கச் சொன்னார்."

கொஞ்சம் கால அவகாசம் வாங்கிக் கொண்டார். ஜானகி முகம் மீண்டும் மழைத் தாரைகளை நோக்கித் திரும்பியது. மழைத்தாரைகள் என்ற வெள்ளித்திரையில் ராதா - மணி இவர்களின் வாழ்க்கைப் படம் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டார். காதல், பிரிவு, வீரம் கொஞ்சமும் கலக்காத அடிதடி, சில புண்கள், ஏராளமான கண்ணீர்... இப்படி அவல ரசங்கள் நிறைந்த திரைக்கதை. இதன் முடிவை இப்போதைக்கு இந்த வெள்ளித்திரையில் காண முடியாது. அதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:18 am

இந்தக் கதையின் முடிவில் பழங்காலப் பாணியில் "சுபம் சுபம்" என்று போடமாட்டார்கள். புதிய பாணியில் டைரக்டரின் முடிவுரையாகத் தமிழ்ப் பண்பாட்டை போலித்தனமாக மிகைப் படுத்தும் குரலும் கேட்காது. விளக்குகள் மீண்டும் பளிச் பளிச்சென்று எரிந்து கற்பனை உலகிலிருந்து நம்மை நிஜ உலகுக்கு கொண்டு வராது. இது முடிந்தது என்று எழுந்து காரில் ஏறி வீடு போய்ச் சேர முடியாது. ஏனென்றால் இது வாழ்க்கை. நிஜ உலகுக் கதை.

இல்லை. இதுவும் நிஜ உலகு இல்லை. இதுவும் மாயைதான். இதற்கு அப்பால் இருக்கிறது ஒன்று. ஜானகி! அதை நான் விரைவில் தெரிந்து கொள்ளும் காலம் வந்து விட்டது.

"நான் போய் குளிச்சிட்டு வந்திட்றேன் ஜானகி!" என்றார்.

ஜானகி தன் நினைப்பில் இருந்தாள். பதில் சொல்லவில்லை. எழுந்து குளிக்கப் போனார்.


*** *** ***

ஷவர் சுகமாக இருந்தது. வெந்நீர் உடம்பில் வழிந்தோடுவது தோலுக்கு இதமாக இருந்தது. உள் உடல் வேதனை இப்போது தெரியவில்லை. மேல் உடல் சுகம் மட்டுமே தெரிந்தது. ஆனால் தோலைத் தேய்க்கும் போது ஆங்காங்கே கருமை கட்டியிருந்த இடங்களில் கொஞ்சம் வலி தெரிந்தது.

ஜெனரல் ஆஸ்பத்திரியின் புற்று நோய்ப் பிரிவில் அந்த இரண்டு டாக்டர்களும் துன்பமோ மகிழ்ச்சியோ இல்லாத இயந்திரத் தனமான குரலில் அவருடைய மருத்துவ அறிக்கையை வாசித்து விளக்கிக் காட்டியது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

"திரு சுந்தரம். உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் டாக்டர் ஷகாபுதீன்.

"அப்படித்தான் இருக்கிறது டாக்டர். தலை வலி சில நேரங்களில் தாங்க முடியவில்லை. வயிற்றில் எப்போதும் ஒரு குமட்டல் உணர்ச்சி. சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் உடனே வயிற்றுப் போக்கு வந்துவிடுகிறது. இரவில் சில நேரங்களில் உடல் நடுங்குகிறது" என்றார் சுந்தரம்.

டாக்டர் டான் கேட்டார்: "உங்கள் அன்றாட காரியங்களைக் கவனிக்க போதிய பலம் இருக்கிறதா?"

"கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். ஆனால் கொஞ்சம் ஏதாகிலும் வேலை பார்த்தவுடன் உடல் அசந்து விடுகிறது"

டாக்டர் டான் கையிலிருந்த கோப்பிலிருந்து தாள்களைப் புரட்டியவாறு சொன்னார்.

"உங்கள் நோய் அடையாளங்களைப் பார்த்து நாங்கள் சந்தேகப்பட்டது சரியாகப் போய்விட்டது. உங்கள் கபாலம் முதுகுத் தண்டு ஆகியவற்றின் "ஸ்கேனிங்" முடிவுகள் வந்திருக்கின்றன. உங்கள் ரத்தப் பரிசோதனையும் எலும்பு "மேரோ" பரிசோதனை முடிவுகளும் வந்துவிட்டன. கல்லீரல் "பயோப்சி" முடிவும் வந்திருக்கிறது."

சுந்தரம் அவர்கள் முகத்தை ஆவலுடன் பார்த்தார்.

ஷகாபுதீன் சொன்னார்: "உங்கள் மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. ஆபத்தான புற்று நோய்க்கட்டி. இரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் மிக அதிகமாக இருக்கின்றன. கல்லீரலில் புண் இருக்கிறது. இவை நிச்சயமாக உங்களுக்குப் புற்று நோய் இருப்பதற்கான ஆதாரங்கள்."

இதயத்தில் பாறை தாக்கிற்று. ஆனால் அதன் முழு வலியும் இன்னும் தெரியவில்லை.

"அப்படியா? உண்மையாகவா டாக்டர்?"

"ஆமாம். எல்லாப் பரிசோதனைகளும் செய்து விட்டோம். சந்தேகம் ஒன்றும் இல்லை!"

"ஆரம்பக் கட்டமா, முற்றி விட்டதா எப்படி...?"

"மூளையில் இருந்து உடம்பின் மற்ற உறுப்புக்களுக்கும் பரவ ஆரம்பித்து விட்டது. மிக விரைவாகப் பரவுகிறது. முற்றுவது மிக விரைவாக நடை பெறும்"

சுந்தரத்துக்கு நாக்கு வறண்டிருந்தது. "என்ன ஆகும் டாக்டர்?"

"இப்போது ஆகிக் கொண்டிருப்பது போலத்தான். தலைவலியும் மயக்கமும் இன்னும் அதிகமாகும். கல்லீரல் வீங்கி விடும். சாப்பாட்டில் ருசி போய்விடும். சாப்பாடு தங்காது. தோலில் ரணங்கள் உண்டாகும். அந்த ரணங்கள் சுலபத்தில் ஆறாது. உள் உறுப்புக்களில் புண் ஏற்பட்டால் ஆறாது. போகப்போக எந்த உறுப்பு புண்ணாகும் என்று சொல்ல முடியாது!"

இப்போதே வயிற்றில் அமிலங்கள் ஊறிப் புண்ணாய்ப் போவது போல உணர்ந்தார். கபாலத்துக்குள் மூளை மடிப்புக்களில் புழுக்கள் நௌிவது போன்ற ஒரு கண நேரக் கற்பனை. தலைகுனிந்து மௌனித்திருந்து கேட்டார்.

"மருந்துகள், சிகிட்சை...?"

"இங்கு நாங்கள் செய்வதற்கு அதிகம் இல்லை. அறுவை சிகிட்சை முடியாது என்று முடிவு செய்து விட்டோம். கட்டி உண்டாகியிருக்கும் இடம் மிக அபாயமானது. மௌன்ட் மிரியம் புற்று நோய் மருத்துவ மனையில் அட்மிட் பண்ணிக் கொள்ளுங்கள். ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் விரிவான ரிப்போர்ட் தருகிறோம்!"

"எப்போது போக வேண்டும்?"

"எங்களைக் கேட்டால் இப்போதே அம்புலன்ஸ் வரச்சொல்லி அனுப்பி விடுவோம். அவ்வளவுக்கு முற்றியிருக்கிறது. ஒரு நாளும் கடத்தக் கூடாது. ஆனால் முடிவு உங்களுடையது"

"குணமாகிவிடுமா டாக்டர்?" கேள்வியில் குழந்தைத்தனம் இருந்தது. பயம் இருந்தது.

"அதை நாங்கள் சொல்ல முடியாது திரு. சுந்தரம். புற்று நோய் மருத்துவ மனையில் நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சோதித்துச் சொல்லுவார்கள். அதுவும் ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்த பிறகுதான் உத்தேசமாகச் சொல்ல முடியும். நீங்கள் விரைவாகப் போவது நல்லது. இதில் கடிதம் இணைத்திருக்கிறோம்! ரிப்போர்ட்டும் இருக்கிறது!" ஒரு பெரிய உறையைத் தந்தார்கள்.

ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வௌியே வந்த பிறகு மனம் அந்த முடிவுகளை மறுதலித்தது. அந்த டாக்டர்களின் அறிக்கையின் மேல் சந்தேகம் வந்தது. ஏதோ இரண்டு நாட்கள் பரிசோதித்துவிட்டு இத்தனை நிச்சயமாகச் சொல்லுகிறார்களே! எப்படி இவர்களுக்குத் தெரியும்? கொஞ்சம் தலை வலி வந்துவிட்டால் புற்று நோய் என்ற அர்த்தமாகிவிடுமா? இந்த 57 வயதில் கொஞ்சம் அசதி, கொஞ்சம் அஜீரணம், கொஞ்சம் வயிற்றுப் போக்கு, கொஞ்சம் தலைவலி இயற்கைதானே! வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துக் கேட்க வேண்டும். உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அரசாங்க ஆஸ்பத்திரி என்றால் இப்படித்தான். ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குச் சென்று வேறு நல்ல டாக்டர்களைப் பார்க்க வேண்டும்.

காரில் வந்து உட்கார்ந்த போது சாவியைத் திருப்ப முடியாமல் கை நடுங்கிற்று. டாக்டர்களின் அறிக்கையின் மேல் பட்ட சந்தேகம் திடுமெனக் கரைந்து விட்டது. இவர்கள் நிபுணர்கள், என்னைப் போல் ஆயிரம் கேஸ் பார்த்தவர்கள். இவர்கள் சொல்லுக்கு அட்டியில்லை என்ற உண்மை தாக்கிற்று.

காரை எடுத்து வௌியாகி, ஜாலான் ஹோஸ்பிட்டல் சாலையிலிருந்து மெதுவாக நிதானமாக ஓட்டி வந்தார். ஜாலான் சுல்தான் அஹமட் ஷாவில் நுழைந்து தன் வீட்டுக்குப் போகும் வடூயில் தஞ்சோங் தொக்கோங் சுற்றுவட்டத்துக்கு வந்த போது இந்த விஷயத்தை ஜானகியிடம் எப்படிச் சொல்லுவது என்ற கேள்வி எழுந்தது. காரின் வேகம் குறைந்தது. தஞ்சோங் பூங்காவில் உள்ள தன் வீட்டுக்குப் போகும் பாதையில் திரும்புவதற்கு பதிலாக கர்னி டிரைவுக்குத் திரும்பினார். ஓரமாக நிறுத்திவிட்டு கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சடசடவென மழை பிடித்தது. அங்குதான் காரைப் போட்டுவிட்டுக் காத்திருந்தார். தன் நோயின் கனத்தை அசை போட்டுப் பார்த்து அழுது தௌிந்தது அப்போதுதான்.

வெதவெதவென்றிருந்த சுடு நீர் வழிந்தவாறிருந்தது. உடம்பை வருடிக்கொண்டிருந்தது. இந்த சுகங்களை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். இவை நெடுநாட்களுக்கு நிலைப்பவை அல்ல. எத்தனை நாட்களுக்கு இப்படித் தானாக எழுந்து வந்து ஷவரைத் திறந்து சோப் தேய்த்துக்கொண்டு துண்டால் உடம்பைத் துவட்டிக்கொள்ள இயலுமோ தெரியவில்லை. டாக்டர் சொல்வதைப் பார்த்தால் யமதூதர்கள் வாசலில் காத்திருப்பதாகத்தான் தோணுகிறது.

ஏன் இப்படி 57 வயதில் எனக்கு அழைப்பு? என்ன குற்றம் செய்தேன்? எனக்குத் தெரிய 90 வயது வரை வாழ்ந்தவர்கள் இருக்கிறார்களே! பிரபல இடைநிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பதவியை கௌரவமாக வகித்து எல்லாரிடமும் நல்லவர் என்று பெயரெடுத்து, கோலாகலமாக ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்களின் அன்புக் கண்ணீர் மல்கும் பிரியா விடையைப் பெற்று இன்னும் ஈராண்டுகள் ஆவதற்குள்...

ஒருவேளை இது இறைவன் என்னைத் தண்டிக்கின்ற வேளை போலும். மகள் ராதாவின் வாழ்க்கை போன இரண்டாண்டுகளாகவே சரிந்து கொண்டிருக்கிறது. வௌிநாட்டுக்குப் படிக்கப் போன மகன் வசந்தன் இரண்டாண்டுகளாகப் பரிட்சையில் தோல்வி கண்டு திரும்பி வராமல் பணத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறான். ஓய்வு பெற்றதில் வருமானம் நின்று போய் பென்ஷன் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த நோய்.

புற்றுநோய் மருத்துவ மனைக்குப் போவதா இல்லையா? ரேடியோதெராப்பிக்கும் கெமோதெராப்பிக்கும் சம்மதிப்பதா இல்லையா? முடிவுகள் எடுக்க வேண்டும். சிரமமான முடிவுகள். கெமோதெராப்பி பற்றி அவருக்குக் கொஞ்சம் தெரியும். கதிரியக்கம் பாய்ச்சுவார்கள். வயிறு குமட்டிக் கொண்டு வரும், தலைமயிர் உதிர்ந்து மொட்டையாகும். இரவில் தூக்கம் வராது. தலை சுற்றியவாறிருக்கும்.



அவர் மனதுக்குள் பீதி படர்ந்தது. கால்கள் தளர்ந்தன. குளியலறைச் சுவரில் சாய்ந்தார்.

"எவ்வளவு நேரமா குளிக்கிறிங்க? சீக்கிரம் வாங்க! நான் சாப்பாடு எடுத்து வச்சிட்டு ராதாவுக்கும் பையனுக்கும் தங்கிறதுக்கு ரூம் தயார் பண்ணனும்!"

ஜானகி வௌியிலிருந்து சத்தம் போட்டார்.

சுந்தரம் ஷவரைத் திருகி அடைத்தார். தண்ணீர் நின்றது. தோல் ரணங்கள் நோகாமல் டவலை ஒத்தி ஒத்தி எடுத்தார்.

மகளுக்கு அறை மட்டும் தயார் பண்ணுவதோடு உன் கடமை முடிந்துவிடாது ஜானகி. கையோடு இந்தக் கணவனுக்கும் ஒரு கல்லறை தயார் பண்ணி விடு.



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:24 am

அந்திம காலம் - 2


பத்தரை மணிக்கு அவர்களின் மனப் படபடப்பு தொடங்கியது. ஜானகி அர்த்தமில்லாமல் சமையலறைக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். எட்டு மணியளவில் தான் சாப்பிட்ட சூப்பையும் இரண்டு ரொட்டித் துண்டுகளையும் ஜீரணிப்பதில் சிரமத்துடன் தலையில் லேசான வலியுடன் சுந்தரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்து, திரையில் என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஜானகியின் நடையையும் வாசலில் தோன்றித் தோன்றி மறையும் கார் விளக்குகளின் வௌிச்சத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அதில் ஏதாவது ஒன்று ராதாவின் காராக இருக்காதா என்ற நப்பாசை தோன்றித் தோன்றி அமிழ்ந்து கொண்டிருந்தது. மத்தியானம் டாக்டர் கொடுத்த மரணச் செய்தியும் ராதாவின் துயரமும் மனத்துக்குள் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டிருந்தன.

பதினொரு மணியளவில் ஜானகி ஒரு நிமிஷ நீளத்திற்கு வாசலில் நின்று வடூயை வெறித்துப் பார்த்தாள். "எங்கேயாவது வழியில நின்னு போன் பண்ணக் கூடாது? கொஞ்சங்கூட பொறுப்பில்லாத புள்ள..." என்று முனகிக் கொண்டாள்.

பதினொன்று முப்பதுக்கு சடசடவென மழை பெய்யத் தொடங்கியது. ஜானகி அசந்து நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். "இப்படி மழை பெய்யுதே!" என்றாள்.

தொலைக்காட்சியில் ஏதோ ஓர் ஆங்கிலப் படத்தில் இரண்டு தரப்பினர்கள் துப்பாக்கியால் தட தடவென சுட்டுக் கொண்டார்கள். பலர் சுருண்டு வீழ்ந்தார்கள். ஆனால் எங்கும் ரத்தம் சிந்திக் கிடக்கவில்லை. அப்படியே ரத்தம் சிந்தும் காட்சிகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழு அவற்றை இரக்கமில்லாமல் வெட்டி எறிந்திருக்கும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

தொலைக்காட்சித் துப்பாக்கிப் போர் பார்க்கச் சோர்வாக இருந்தது. தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தார். மழைத் தண்ணீர் வழிந்து சிறு சிறு ஆறுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

"ஏங்க எதுக்கும் வீட்டுக்குப் போன் பண்ணி புறப்பட்டுட்டாளா இல்லையான்னு கேட்டிருவமா?" என்றாள் ஜானகி.

சுந்தரம் யோசித்தார். கேட்கலாம். ஏதாவது தகவல் கிடைத்தால் ஆறுதலாக இருக்கும். ஆனால் புறப்பட்டு நெடு நேரமாயிற்று என்று தகவல் வந்தால் ஜானகியின் பீதி இன்னும் அதிகமாகும். அதைவிட மருமகன் சிவமணி போனை எடுத்தால் என்ன பேசுவது என்று தெரியாது. அவனிடம் சொல்லிவிட்டு வருகிறாளா, சொல்லாமல் வருகிறாளா ஒன்றும் தெரியவில்லை. இந்த நிலையில் ஏதாகிலும் பேசப்போய் பிரச்சினை விபரீதமாகிவிடலாம்.

"கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம் ஜானகி. மழையினால தாமதமாகலாம். பாக்கலாம்" என்றார். ஜானகி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தார்.

தொலைக்காட்சியில் ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. ஒரு துப்பாக்கியின் முனை தெரிந்தது. துப்பாக்கி வெடித்தது. அடுத்த ஷாட்டில் ஹெலிகாப்டர் ஒரு தீப்பந்தாக மாறி பூமியை நோக்கி விழுந்தது. அதன் பாகங்கள் நெருப்புத் துண்டங்களாகச் சிதறி விழுந்தன.

சுந்தரத்தின் தலையின் வலதுப் பொட்டில் சுரீர் என்று வலித்தது. முகத்தைச் சுளித்து அந்தப் பக்கத்தைத் தடவிக் கொண்டார். வலி மறைந்து விட்டது. ஆனால் மனத்தில் கிலி வந்து புகுந்தது. என்ன செய்தி அனுப்புகிறாய் என் உடலே? உன்னை விடமாட்டேன் என்கிறாயா? சித்திரவதைக்குத் தயாராயிரு என்கிறாயா? உன் காலம் முடிகிறது, அதைக் கவனிக்காமல் தொலைக்காட்சி ஒரு கேடா என்கிறாயா?

பொறு, பொறு. இன்றிரவு உன்னைப் பற்றி அதிகம் யோசிக்க எனக்கு நேரமில்லை. என் மகள் பற்றிய செய்தி முடிவாக வேண்டும். அதன் பின் உன்னைப் பற்றி யோசிக்கிறேன்.

நெஞ்சில் லேசாகக் குமட்டல் வந்தது. தொண்டையைக் கனைத்து அடக்கிக் கொண்டார்.

மழை பட்டென்று நின்றுவிட்டது. முன்வாசல் மரத்தின் இலைகளிலிருந்து தண்ணீர் சொட்டுகின்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

பதினொன்றே முக்காலுக்கு கேட்டின் முன்னால் பளீரென்று விளக்குகள் தெரிந்தன. கார் "பீப்" என்று ஹாரன் அடித்தது. ஜானகி முகத்தில் உயிர் வந்தது. "இதோ வந்திடுச்சிங்க. போய் கேட்டத் தெறங்க" என்றாள். சுந்தரம் எழுந்து சென்று கேட்டைத் திறந்தார். காரை காம்பவுண்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினாள் ராதா.

அவர் கேட்டைச் சாத்தி வருவதற்குள் பரமா காரை விட்டு இறங்கினான். "தாத்தா" என்று கூவிக்கொண்டு ஒடிவந்தான். "பரமா... வா... வாடா கண்ணு" என்று அவனைக் கட்டித் தூக்கிக் கொண்டார். தூக்க முடிந்தது. மூன்று வயதுக் குழந்தை இலேசாகத்தான் இருந்தான். போனமுறை பார்த்தற்கு இப்போது இளைத்திருந்தான்.



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:25 am

"தாத்தா, டோன்ட் கால் மி பரமா. மை நேம் இஸ் பிரேம்..." என்றான் குழந்தை.

"மத்தவங்களுக்கு நீ பிரேம்... தாத்தாவுக்கு நீ பரமாதான்" என்று முத்தமிட்டார். பேரனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. மலேசியாவில் தமிழ்க் குடும்பங்களின் நடுத்தர வர்கத்துப் பழக்க வழக்கங்களுக்குப் பலியானது அவனுடைய குடும்பம். பிரேம் என்று அவன் பெற்றோர்கள் நாகரிகமாக வடநாட்டுப் பேராக வைத்திருந்தார்கள். சுந்தரத்திற்கு அந்தப் பெயர் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தப் பெயரை பரமா என மாற்றிக் கூப்பிட்டார்.

பரமா திமிறிக் கொண்டு பாட்டியிடம் ஓடினான். ஜானகி அவனைத் தூக்கி முத்தமிட்டாள். ராதா ஒரு சிறிய துணிப் பையையும் கைப் பையையும் எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கினாள். சுந்தரம் போய் அவள் துணிப் பையை வாங்கிக் கொண்டார்.

"ஏம்மா இவ்வளவு நேரம்?" என்று ஜானகி கேட்டாள். அவள் குரலில் படபடப்புப் போய் ஆறுதல் வந்திருந்தது.

"வர்ர வழியெல்லாம் ரொம்ப மழைம்மா. அதான் மெது மெதுவா வரவேண்டியதாப் போச்சி!" என்றாள்.

"வழியில நின்னு போன் பண்ணியிருக்கலாமே!"

"போன் பண்ண வசதியில்ல. பிரேமுக்கு சாப்பாடு வாங்கிக் குடுக்க ஒரு இடத்தில நிப்பாட்னதத் தவிர வேற எங்கியுமே நாங்க நிக்கல..." என்றாள்.

"சரி, சரி. வா. சாப்பாடு வச்சிருக்கேன். வந்து துணி மாத்திட்டு சாப்பிடு" என்றாள் ஜானகி.

"பட்டி. கிவ் மீ சொக்கலேட்" என்றான் பரமா.

"வா. மொதல்ல சோறு சாப்பிடு! அப்புறந்தான் சொக்லேட்" என்று அவனைத் தூக்கியவாறு உள்ளே போனாள்.

ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவாறு மீண்டும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தார் சுந்தரம். இப்போது ஏதோ நகைச்சுவைப் படம் நடந்து கொண்டிருந்தது. வரிக்கு வரி வெடிச்சிரிப்பு கேட்டது. கறுப்பர்கள் சிலரும் வெளுப்பர்கள் சிலரும் ஆண்களும் பெண்களுமாக சரிசமமாக ஜீன்ஸ் அணிந்து கொண்டு பெரிய பெரிய சப்பாத்துக்களுடன் வீட்டினுள் நடந்து கொண்டு பேசிப் பேசிச் சிரிக்க வைத்தார்கள். அதில் உள்ள போலித் தனத்தை சுந்தரம் நினைத்துப் பார்த்தார். இவர்கள் நாட்டில் இவர்கள் இப்படிக் குலவிக் கொள்வதில்லை. தொலைக் காட்சியில்தான் இது. வாழ்க்கையில் இவர்கள் நாட்டிலும் சரி, உலகத்தில் வேறு எங்காகினும் சரி, இத்தனை சிரிப்பில்லை. ராதாவின் வாழ்க்கையில் சிரிப்பில்லை. என் வாழ்க்கையில் இனி சிரிப்புக்கு இடமில்லை.

மீண்டும் தலைக்குள் சுரீர் என்று வலித்தது. முகம் சுளித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு பொட்டைத் தடவினார். வலி வலது முன் கையில் இறங்கி முறுக்கியது. இடது கையால் பிசைந்து விட்டுக் கொண்டார். யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தார். அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் மட்டும் வடை பொரிப்பது போல சர் சர்ரென்று சரஞ்சரமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.


*** *** ***

சாப்பாட்டு மேசையில் மௌனம்தான் கனத்திருந்தது. பரமாவுக்கு முன்னால் குடும்பக் கதைகள் பேசவேண்டாம் என ராதா நினைத்திருக்க வேண்டும். பரமா அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்து எதையும் சாப்பிடாமல் சோர்ந்து தூங்கி விழுந்தான். ராதா சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவனைத் தூங்க வைக்க அறைக்குள் போனாள். ஜானகி பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்திருந்தாள்.

தலையிலும் வயிற்றிலும் வலி இப்போது வருவதும் போவதுமாக இருந்தது. சிறிய சிறிய அலைகளாக, சுருட்டிச் சுருட்டி...

வலி தணிந்த நேரங்களில் சுந்தரத்தின் மனம் ராதாவின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வந்தது.

இவர்களின் இந்தச் சண்டைகள் கடந்த மூன்று வருடங்களாகவே நடந்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் முற்றிக்கொண்டுதான் போகிறதே தவிர சமரசமாவதாகத் தெரியவில்லை. தம்பதிகளுக்கிடையில் உண்மையான அன்பிருந்தால் இது இப்படி மோசமாக வேண்டாமே என்று சுந்தரம் நினைத்துக் கொண்டார். அந்த அன்புச் சுனைகள் எப்படியோ வற்றிவிட்டன. அந்த வறட்சியிலிருந்து காய்ந்த எரிந்த துகள்கள் பறக்கின்றன. புதிய புல் பச்சைகள் வளர முடியாத உரமிடூந்த வெள்ளை மணலாக அது ஆகிக் கொண்டு வருகிறது.

இத்தனைக்கும் இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். ராதா கோலாலும்பூரில் ஒரு பிரபலப் பொருளகத்தில் அதிகாரியாக இருந்தாள். சிவமணி கம்ப்யூட்டர் கம்பெனி ஒன்றில் உயர் அதிகாரியாக இருந்தான். ராதாவின் பொருளகத்தில் அவனுக்குக் கணக்கு. அங்குதான் சந்தித்தார்கள். அந்த சந்திப்பில் மந்திரம் இருந்திருக்க வேண்டும். அவனைப் பற்றி வேறொன்றையும் அறிந்து கொள்ளாமலேயே அவனோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டாள்.

அவனை முதன் முறையாக ராதா வீட்டுக்கு அழைத்து வந்த போது சுந்தரமும் ஜானகியும் அவனை அன்பாகத்தான் வரவேற்றார்கள். ஆனால் சிவமணியின் பேச்சும் போக்கும் சுந்தரத்திற்குப் பிடிக்கவில்லை. சளசளவென்று பேசினான். எல்லா நேரமும் தன் வேலை, உத்தியோக உயர்வு, தன் நண்பர்கள், பங்குச் சந்தை, அதில் எப்படி விரைவாகப் பணம் புரட்டுவது என்பது பற்றிப் பேசினான். சுந்தரத்தைப் பற்றியோ அவரின் குடும்பம் பற்றியோ ஒன்றும் அறிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. ராதாவிடம் மட்டும் முற்றாக மயங்கிப் போயிருக்கிறான் என்று தெரிந்தது. அவளை "டார்லிங், டார்லிங்" என்று அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே அடிக்கடி அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான். ராதா அந்தப் பிடியில் கிறங்கிப் போயிருப்பதும் தெரிந்தது.



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:25 am

ராதா கண்டிப்பாகவும் ஒழுக்கம் போதிக்கப்பட்டும் அளவான பாசத்தோடும் வளர்க்கப் பட்டவள். சுந்தரம் பிள்ளைகளிடம் பாசமாக இருப்பாரே தவிர கொஞ்சுவது அதிகம் இல்லை. இப்படிக் குடும்பத்தில் மிதமான, மிகைப்படுத்தப்படாத, வௌிப்படுத்தப் படாத பாசம் அவளுக்கு ஒரு குறையாகக் கூட அமைந்து விட்டிருக்கலாம். இப்போது இங்கே இன்னொரு ஆண் கட்டுப்பாடில்லாமல், வெட்கப்படாமல் வௌிப்படையாகக் கொஞ்சுகிறபோது தந்தையிடம் கண்ட குறையை நிறைவு செய்து கொள்ளுகிறாள் என்று அவருக்குத் தோன்றியது. இதைத் தவிர இந்த சிவமணியென்கிற ஆண்பிள்ளையிடம் இவள் கண்ட சிறப்புக்கள் அதிகமாக இருக்க முடியாது.

ஜானகிக்கும் அவனைப் பிடிக்கவில்லை. ராதாவும் சிவமணியும் திரும்பப் போனபிறகு அதை வௌிப்படையாகவே சுந்தரத்திடம் சொன்னாள்.

"ஏன் பிடிக்கல உனக்கு?" என்று கேட்டார் சுந்தரம்.

"என்ன மாதிரி ஜனங்களோ தெரியிலிங்க. அவனோட சொந்தக்காரங்க யாரையும் நமக்குக் கொஞ்சங்கூட அறிமுகமில்ல. முன்ன பின்ன கேள்விப்படாத ஆளுகளா இருக்காங்க" என்றாள். அப்படியானால் அவளுக்கு உறுதியான காரணங்கள் இல்லை. தான் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாமல் போனது, முன்பின் தெரியாத ஒருவன் தன் அனுமதிக்குக் காத்திராமல் தன் சொத்தை அபகரித்துப் போகும் உணர்வு இவைதான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

"இதையெல்லாம் இப்ப நெனச்சி என்ன பிரயோஜனம் ஜானகி? உன் பெண்ணோட கண்களக் கவனிச்சியா? அவன் முகத்திலேயே அது நெலச்சிப் போச்சி. அந்தக் காதல்ல இருந்து அவள மீட்க முடியாது. அதோட அவ படிச்ச பொண்ணு. பட்டதாரி. அவளுடைய கணவனத் தேர்ந்தெடுக்கிற அளவுக்கு அவளுக்குப் புத்தியிருக்காதா?" என்றார்.

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது! பட்டப் படிப்பு படிச்சிட்டா எல்லாந் தெரிஞ்சதுன்னு அர்த்தமா? வாழ்க்கையில அனுபவப்பட வேண்டாமா? நான் அவளுக்குப் புத்தி சொல்றேன். என் பேச்சக் கேப்பா!" என்றாள் ஜானகி.

கேட்கவில்லை. அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது ராதாவைத் தனியாக அழைத்து ஜானகி பேசினாள். கட்டினால் அவனைத்தான் கட்டுவேன் என ஒரே போடாகப் போட்டுவிட்டாள் ராதா. அவன் அன்போடு நடந்து கொள்ளுகிறான். அவள் சொல்வதையெல்லாம் மதிக்கிறான். எந்நாளும் அவளுடனேயே குழையக் குழைய வருகிறான். தடபுடலாக உடுத்துகிறான். தன்னுடைய அந்தரங்க விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக நீதான் என் தேவதை என்று சொல்லிவிட்டான். அவளைத் தான் பூஜிக்கின்ற பீடத்தில் உயர்த்தி வைத்துவிட்டான். இந்த நிலையில் நிர்தாட்சண்யமாக, நடுநிலையாக அவனை எப்படி எடை போட முடியும் அவளால்? ஜானகி தோற்று விட்டாள்.

திருமணம் பேச அவன் பெற்றோர்கள் வந்தபோது தடங்கல்கள் நிறைய வந்தன. தங்கள் பிள்ளையைப் போலவே அவர்களும் அவர்களைப் பற்றியே நிறையப் பேசினார்கள். "எங்க சொந்தக்காரங்க ஏராளம் பாருங்க! உலகம் பூரா இருக்காங்க. என் தம்பி ஆஸ்த்திரேலியாவுல செட்டில் ஆகியிருக்கு. சிவமணிக்குப் பொண்ணக் குடுக்க காத்திக்கிட்டு இருக்காங்க. இவனுக்குத்தான் குடுத்து வைக்கில!" என்று அவன் அம்மா பிரகடனப் படுத்தி, போனால் போகிறதென்று இதற்கு உடன்பட்டதை மறைக்காமல் சொன்னாள். பின்னர் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணையைப் பற்றியும் கேட்டாள் அந்த அம்மா.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரம் அந்த இடத்தில் மட்டும் உறுதியாகத் தௌிவாகச் சொன்னார். "அம்மா, நான் வரதட்சணை கொடுக்க மாட்டேன். அந்தப் பேச்சையே எடுக்க வேணாம். பொண்ணுக்கு நாங்க கொஞ்சம் பணம், நகைகள் தனியா வச்சிருக்கிறோம். அதக் கொடுப்போம். ஆனால் அது எவ்வளவுன்னு நீங்க கேக்கிறதும் நாகரிகமில்ல, நாங்க சொல்றதும் நாகரிகமில்ல!" என்றார். சம்பந்தியம்மாள் அடங்கிப் போனாள். ஆனால் அவள் முகம் தொங்கிப் போனது.

ஆனால் திருமண சமயத்தில் பல விஷயங்களில் அவள் அவர்களை நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். திருமணத்தன்று அவள் ஆர்ப்பாட்டம் சொல்லிமுடியவில்லை. ஆனால் சுந்தரமும் ஜானகியும் காரியம் கெடக்கூடாது என ஒத்துப் போனார்கள்.

திருமணம் முடிந்த ஓராண்டு அவர்கள் வாழ்க்கை இன்பமாகத்தான் இருந்தது. அப்புறம் பரமா கருத்தரித்துப் பிறந்தான். அதன் பின் சின்னச் சின்ன விரிசல்கள் ஆரம்பித்தன. சிவமணி பங்கு மார்க்கெட்டில் திடீர் பணக்காரனாக ஆசை கொண்டு கொஞ்சம் பணத்தை இழந்தான். சுந்தரம் கொடுத்துச் சரிகட்டினார். மீண்டும் அவனுக்குப் பணமுடை வந்தபோது சுந்தரம் மறுத்துவிட்டார். ராதா தன் சேமிப்பிலிருந்து கொடுத்தாள். அதற்கப்புறம் அப்படிக் கொடுக்க அவள் தயங்கியபோது சண்டைகள் தொடங்கின. அப்புறம்தான் இந்த அடிதடிக் கொடுமை.

*** *** ***



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:25 am

பரமாவைத் தூங்கப் போட்டுவிட்டு ராதா ஹாலில் வந்து உட்கார்ந்தாள். உடை மாற்றி இரவு டிரஸ் போட்டிருந்தாள். மேக்கப் கலைந்து எண்ணெய் முகமாக இருந்தாள். ஜானகியும் எல்லாவற்றையும் கழுவித் துடைத்துவிட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். சுந்தரம் தொலைக்காட்சியை அடைத்தார்.

"நீ வந்திருக்கிறது உன் புருஷனுக்குத் தெரியுமா அம்மா?" என்று கேட்டார்.

"தெரியாது. தன் அட்டகாசங்கள் முடிஞ்சதோட ஆள் தன் காரை எடுத்துக் கொண்டு வௌியே போயாச்சி!" என்றாள் ராதா.

"என்னம்மா பிரச்சினை உன் வீட்டில...?" என்று கேட்டார்.

"எல்லாம் எப்போதும் உள்ள பிரச்சினைதான் அப்பா! அந்த மனுஷன் வரவர மிருகமாகிகிட்டு வர்ராரு. கொஞ்சம் விவகாரம் வந்திட்டா கைய நீட்டிட்றாரு!"

"என்ன விவகாரம், புதுசா?"

"என்னமோ புதுசா ஒரு பிஸ்னஸ்ல பணம் போடப் போறாராம். அதுக்கு என் சேமிப்பில இருக்கிற பணம் வேணுமாம். நான் முடியாதின்னேன். அதுக்குப் பலவிதமான ஏச்சு பேச்சு. அது முத்தினவொண்ண கையில பிடிச்சித் தள்றது, அறையிறது! நான் என்ன அவருக்கு வேலைக்காரியா, அடிமையா இதெல்லாம் ஏத்துக்கிட்டு போறதுக்கு?" கண்களை கசக்கிக் கொண்டாள்.

"என்ன மாதிரி ஜென்மம் இந்த மனுஷன்? அவங்க அப்பா அம்மா வளர்த்த வளர்ப்பு அப்படி. ஆந்த ஜனங்கள அப்ப இருந்தே எனக்குப் பிடிக்காது" என்று தான் முன்னால் சொல்லமுடியாமல் மறைத்து வைத்திருந்த குறைகளைக் கொட்டித் தீர்த்தாள் ஜானகி.

"அவங்க அம்மாகாரி மாசத்துக்கு ஒருதடவ வந்ததிர்ராம்மா ஊட்டுக்கு. வந்து என்ன தூபம் போடுவாளோ தெரியில. அவ போனவுடனே இந்த மனுஷன் என்னக் கறிக்க ஆரம்பிச்சிடுவாரு!" என்றாள் ராதா.

சுந்தரம் யோசித்துச் சொன்னார். "நான் உனக்கெதிரா பேசிறதா நெனைக்காதம்மா. உன் புருஷன் முரடனா மாறிக்கிட்டிருக்கான் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன். ஆனா நீ கொஞ்சம் அடங்கிப் போய் விட்டுக் கொடுத்து மாத்தலாமில்லியா? குடும்ப ஒத்துமை முக்கியம் இல்லியா? இப்படி கோவிச்சிக்கிட்டு வீட்ட விட்டு வந்திட்டா விஷயம் முத்திப் போய் ஒட்ட முடியாத அளவுக்கு ஒடஞ்சிடுமே அம்மா!"

ராதா சீறினாள். "அந்த 'பாஸ்டர்டோட' நான் இனிமே இருந்து குடும்பம் நடத்த முடியாது அப்பா. முடியவே முடியாது. அவன் மனுஷன் இல்ல மிருகம்!"

அந்தச் சொற்களின் கடுமை அவரைத் தாக்கிற்று. இவளை இத்தனை மென்மையாக வளர்த்திருந்தும் இத்தனை வன்முறை இவள் மனத்திலும் வாயிலும் எப்படி வந்து விளைந்தது?

"ராதா! எல்லா மனுஷருக்குள்ளேயும் மிருகங்கள் இருக்கத்தான் செய்யுது. அந்த மிருகத்த எழுப்பிறதுக்கு எடங் குடுக்கும் போது அது எழும்பி வந்து சீறுது. இப்ப நீ ஒரு கொடிய பாம்பாகச் சீறலியா? அப்படித்தான். இந்த முகந் தெரியாத, இனந்தெரியாத மிருகங்கள நாம் அடிச்சித் துவச்சி அடக்க முடியாதம்மா. அடிக்க அடிக்க அது புதுசா உயிரெடுத்து இன்னும் சீறும். உன்னக் கொல்ற வரையில அது உன்னத் துவம்சம் செய்யும். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி"ன்னு திருக்குறள்ள இருந்து நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்ல..." சிறு வயதில் தன் குழந்தைகளுக்குத் தமிழும் திருக்குறளும் அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது இப்போது ஞாபகப் படுத்தக் கை கொடுத்தது.

"அப்பா! அந்த மனுஷனப் பத்திப் புரியாம பேசிறிங்க. நான் அவன மிருகம்னு சாதாரணமா சொல்லல. மொதல்ல வாயால திட்டினாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் பிடிச்சித் தள்ள ஆரம்பிச்சாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் அடி, கிள்ளல். இப்ப என்ன நடக்குது தெரியுமா அப்பா?"

நைட் டிரசைக் கொஞ்சம் தூக்கி துடையைக் காட்டினாள். தளும்புகள். திட்டுத் திட்டாக... "சிகிரெட்டால சூடு வைக்கிறாருப்பா..." விம்மி அழுதாள்.

மனம் நைந்தது. எப்படி மனிதன் முற்றாக இப்படி மிருகமாகிவிட முடியும்? மிருகத்திலும் இது கொடிய மிருகம். இன்னொரு சக மிருகத்தைச் சித்திரவதை செய்கின்ற கொடிய மிருகம். இரையாக ஒரு பறவையை தாடையில் பற்றியவுடன் பகுதி பகுதியாக அதை நீண்ட நேரம் சித்திரவதைச் செய்து கொல்லுகின்ற விஷப் பாம்பு.

தன் உள்ளத்திலும் சினம் சீறி எழுவது தெரிந்தது. இப்படிச் செய்யப் பட்டால் தான் கூட கத்தியைத் தூக்கி தன் எதிராளியைக் கொல்ல முடியும் என்று தோன்றியது. மருமகன் இப்போது தன் முன் இருந்தால் "அட மிருகமே" என்று சீறி அவனை அடித்திருப்பேன் என்று தோன்றியது. உடலில் நோய் இருந்தாலும், இதனால் எனக்குத்தான் ஆபத்து என்று தெரிந்தாலும் அவற்றையெல்லாம் அந்தக் கணத்தில் மறந்துவிட்டு பழி வாங்கும் உணர்ச்சிக்குத் தான் முற்றாக ஆட்படமுடியும் எனத் தெரிந்தது.

ஆனால் அந்த எதிர்ச்செயலும் ஒரு மிருக உணர்வுதான். மிருகங்கள்தாம் கொஞ்சமும் யோசிக்க இடமில்லாமல் தங்கள் தற்காப்புக்காக வெறும் உணர்ச்சி நிலையில் எதிர்க்கின்றன. ஆனால் அறிவு நிலையில் மனிதன் அப்படிச் செய்யக் கூடாது. தன்னுடைய எட்ரினலின் சுரப்பிக்கு அவன் முற்றாக அடிமைப்பட்டுப் போக முடியாது. நீதி என்று ஒன்று இருக்கிறது. கொள்கை என்று ஒன்று இருக்கிறது. ஒழுக்கம் என்றும் வாழ்க்கை நெறி என்றும் உள்ளன. இவற்றுக்குக் கீழ்தான் மனிதன் செயல்படவேண்டும்.



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:33 am

ஏதாகிலும் காரணத்தால் அந்த மரியாதையையும் அன்பையும் மற்றவர்கள் அவர்களுக்குக் காட்டவில்லை என உணர்ந்தால் அவர்கள் அதை வற்புறுத்திப் பெறவில்லை. அவர்கள் எந்தக் காலத்திலும் எந்த விஷயத்திலும் முன்னுக்கு நிற்க வேண்டும் என்று முயன்றதில்லை. ஆனால் பல வேளைகளில் அவர்கள் முன்னுக்கு நிறுத்தி வைக்கப் பட்டபோது தங்கள் கடமையைப் பொறுப்புடன் ஆற்றியிருக்கிறார்கள்.

அந்தப் பண்புகள் இந்த இளைய தலைமுறையைப் போய்ச் சேரவில்லை. குடும்பம் தந்த பண்புகளை விட வௌியில் உள்ள ஆடம்பர உலகம் தந்த பண்புகளே இவர்களிடம் பதிந்துள்ளன. தங்கள் சூழ்நிலையிலிருந்து பலவற்றைத் தாங்களே கற்றுக் கொண்டார்கள். மிகச் சிறு வயதிலேயே பெற்றோர்களை அந்நியப் படுத்திக்கொண்டு தங்கள் சகவயது மக்களோடு இணைந்து வாழ்க்கையின் எல்லாவித இன்பங்களையும் அனுபவிக்கத் துடித்து, பின் அதனால் - இப்போது ராதாவின் வாழ்க்கையில் நடப்பது போல - எல்லாவிதத் துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். வேண்டாம் என்று சொல்வது, நீங்கியிருப்பது, ஒதுங்கியிருப்பது இவர்களுக்குப் பழக்கமில்லை. கொடு என்பதும் அனுபவிப்பதும் முழுகுவதும் பின்னர் துன்பப்படுவதும் இவர்கள் வாழ்க்கையாக இருக்கிறது. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல" என்பது இவர்களுக்கு ஒரு காலும் புரியாது.

ஜானகி என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்திருந்த வேளையில் சுந்தரமும் சொல்லிழந்து உட்கார்ந்திருந்தார். அந்த மௌனத்தில் இத்தனை நேரம் அடங்கியிருந்த வயிற்றின் நோய் தலை தூக்கிற்று. எங்கோ ஆழத்தில் ஒரு சிறிய தீப்பொறியாக ஆரம்பித்தது விறு விறுவென்று பற்றி எரிமலையாக வெடித்தது. அம்மா என்று வாய்விட்டுக் கத்த வேண்டிய நேரம்தான். ஆனால் அதற்குப் பதிலாக மௌனத்தைத் தூள் தூளாக உடைப்பது போல் டெலிபோன் மணி அலறியது. வயிற்றில் வலி கப்பென்று அடங்கிவிட்டது.

வயிற்றை லேசாகத் தடவியவாறு அவர் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தார். ஒன்றே கால். இந்த நடு நிசியில் யார் போன் பண்ணுவார்கள்?

மனத்தின் அடியில் யாராக இருக்கலாம் என்ற உத்தேசம் இருந்தது. ராதாவின் முகத்திலும் ஜானகியின் முகத்திலும் இருந்த கலவரத்தைப் பார்த்த போது அவர்கள் உத்தேசமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தது.

டெலிபோனைக் காதில் வைத்து "ஹலோ" என்றார்.

"ராதா அங்க வந்தாளா?" ஒரு ஹலோ இல்லை, வணக்கம் இல்லை, யார் பேசுவது என்ற கேள்வி இல்லை. அவனுடைய அவசரம்தான் அவனுக்குப் பெரிது.

"யார் சிவமணியா பேசிறது?"

"சொல்லுங்க மாமா! வந்தாளா?"

"ஆமாப்பா. இங்கதான் இருக்கா!"

"ப்ளடி, ஸ்டுப்பிட் வூமன். ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லாம என் பிள்ளையையும் தூக்கிடடுப் போயிட்டா!"

அவன் கோபத்தோடு அவர் போட்டி போட விரும்பவில்லை. "உன்கிட்ட நல்ல முறையில சொல்லிட்டுப் புறப்பட்ற சூழ்நிலை உன் வீட்டில இல்லைன்னு நெனைக்கிறேன்!" என்றார் அமைதியாக.

"அவளப் பேசச் சொல்லுங்க!"

சுந்தரம் போனைப் பொத்திக் கொண்டு ராதாவைப் பார்த்தார். "சிவமணி பேசணும்கிறதும்மா!"

ராதா கையை பலமாக ஆட்டினாள். மாட்டேன் என்றாள். முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சுந்தரம் போனில் சொன்னார்.

"அவ இப்ப இங்க இல்லப்பா. தூங்கிட்டான்னு நெனைக்கிறேன்!" பொய்தான். அந்தத்தருணத்தில் ஏன் பொய் இந்த வாய்க்குள் வந்தது எனத் தெரியவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்பதாலா? "புரை தீர்ந்த நன்மை பயக்கும்" என்பதாலா?

"எனக்குத் தெரியும் மாமா! எங்கிட்ட பேசமாட்டேங்கிறாள்ள? ஓக்கே. நாளக்கு ராத்திரி புறப்பட்டு நான் அங்க வர்ரேன். அவ என்ன செஞ்சான்னு உங்க கிட்ட சொல்றேன். உங்க மக செஞ்சது சரிதானான்னு நீங்களே சொல்லுங்க!" போனை வைக்கப் போனவன் திடீரென்று கேட்டான்: "பிரேம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்காம்பா. அசந்து தூங்கிறான்"

"மாமா! யூ ரிமெம்பர் திஸ். உங்களுக்கும் சொல்றேன், அவளுக்கும் சொல்றேன். பிரேம் என் பிள்ளை. எங்கிட்ட இருந்த பிரேம பிரிக்க நெனைச்சான்னா நான் கொலைகாரனாயிடுவேன்னு சொல்லுங்க!" படார் என்று போனை வைத்தான்.

சுந்தரம் வயிற்றில் அந்த வலி எரிமலை இன்னொருமுறை வெடித்துக் குழம்பு கக்கி அடங்கியது. முகம் சுளித்து வயிற்றைப் பிசைந்தார்.

"என்னப்பா?" என்று கேட்டாள் ராதா. அவள் தன் வலியைப் பற்றிக் கேட்கவில்லை. டெலிபோன் உரையாடலைப் பற்றிக் கேட்கிறாள் என்பதை அவர் ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

வயிற்றைப் பிசைந்தவாறு சொன்னார். "மணி நாளைக்கு ராத்திரி இங்க வருதாம்மா. பிரேம் அவரோட பிள்ளைங்கிறத ஞாபகப் படுத்தச் சொன்னிச்சி!"

"ஆமா. அதில கொறச்சல் இல்ல! பத்து மாசம் சுமந்து பெத்துப் போட்டாரில்ல!"

இன்னொரு எரிமலை வயிற்றுக்குள் வெடித்து குழம்பு வடூந்து தணிந்தது. என் வேளை வந்து விட்டதா? இத்தனை விரைவாகவா? மத்தியானம் தண்டிக்கப்பட்டு இரவுக்குள் தண்டனை நிறைவேற்றமா?

"ஜானகி! நான் போய் படுக்கிறேன். உடம்பு சரியில்ல..." படுக்கை அறையை நோக்கி நடந்தவர் திரும்பி ஜானகியைப் பார்த்துச் சொன்னார். "ஜானகி. நேரமாச்சி வந்து படு. ராதாவையும் படுக்க விடு. களைப்பா இருக்கும்."

ஜானகி அரை குறையாகத் தலையாட்டினாள்.

ஜானகிக்குத் தெரியாது. நான் கூப்பிடும் அர்த்தம் புரியாது. இந்தத் துயரம் கப்பிய சூழ்நிலையில் என் சூசகங்கள் புரியா.

ஜானகி, சீக்கிரம் படுக்கைக்கு வா. நான் செத்துப் போகும் வேளை வந்துவிட்டது. உன்னிடம் தனிமையில் சொல்லி விடைபெற்றுக் கொள்ள வேண்டும். சீக்கிரம் வா என் அன்பு மனைவியே! உன் மகள் துயரத்தை அவள் மெதுவாக அனுபவிக்கட்டும். உனக்கென தனித்துயரங்கள் நான் ரகசியமாய் வைத்திருக்கிறேன். உன்னிடம் தந்து நான் போக வேண்டும். வா. விரைந்து வா.
----



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:33 am


அந்திம காலம் - 3



ஆனால் ஜானகி நெடு நேரம் வரை வரவில்லை. மகளுடன் பேசியவாறே இருந்தாள். மகளின் காயப்பட்ட மனத்தின் நோவுகளுக்கு வடிகால் தேவைப் படுகின்றது. தாயின் மடியில் அதனைக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். இங்கே சுந்தரத்தின் உண்மையான உடல் நோவுக்கு அன்பு ஒத்தடம் கொடுக்க வேண்டிய மனைவியை மகள் பறித்துக் கொண்டு விட்டாள்.

சுந்தரத்துக்குத் தலைக்குள் மின்னல்கள் வெட்டின. வயிறு குமட்டியது. நெஞ்சுக்குள் ஏறி தொண்டை வரை வந்தது. குளியலறைக்கு ஓடி கழுவு பேசினில் குனிந்து குமட்டினார். ஒன்றும் வரவில்லை. எச்சில் மட்டும் துப்பினார். அந்தக் குமட்டலின் தீவிரத்தில் கண்களில் கண்ணீர் வந்தது. நெஞ்சு எரிந்தது. குழாயைத் திறந்து முகம் கழுவித் துடைத்தவாறு கண்ணாடியில் பார்த்தார்.

முகம் கருத்துத் தொங்கிக் கிடந்தது. கண்களைச் சுற்றிக் கருமை இருந்தது. முகத்தில் வெள்ளை மயிர்கள் துளிர்த்திருந்தன. பார்க்கப் பாவமாக இருந்தது. சென்ற வருடம் வரை எப்படி இருந்தேன்! "நீங்க ரிட்டையராகப் போறிங்களா? அப்படி வயசே தெரியலியே" என்று எத்தனை பேர் சொன்னார்கள்! இந்த இரண்டாண்டுகளுக்குள் இத்தனை மாற்றங்களா?

மெதுவாகப் படுக்கைக்கு வந்து சாய்ந்தார். மெதுவாகச் சுழலும் காற்றாடியிலிருந்து வரும் காற்றின் வருடல் இதமாக இருந்தது. மெத்தையின் தாங்கல் சுகமாக இருந்து. மிருதுவான தலையணையின் அணைப்பு ஆறுதலாக இருந்தது. ஆனால் மனம் ஜானகிக்கு ஏங்கியது. "ஏங்க, என்ன செய்யுதுங்க உங்களுக்கு?" என்ற படபடப்பு மிக்க கேள்விக்கும் அவள் கைகள் நெஞ்சை நீவிவிடும் சுகத்துக்கும் ஆசைப்பட்டது. ஆனால் ஜானகி மகளின் துயரத்துக்கு பாரந்தாங்கியாக அங்கேயே இருந்தாள்.

தொண்டையில் புளிப்புணர்ச்சி இருந்தது. வயிற்றின் பக்க வாட்டில் லேசான மழுங்கிய வலி இருந்தது. கல்லீரலா? சிறுநீரகமா? குடல் வாலா? எந்த உள் உறுப்பு இப்போது புண்ணாகிப் போனது? என்ன குற்றம் செய்து விட்டேன் இந்தத் தண்டனைக்கு? அதுவும் இப்படி அடுக்கடுக்கான தண்டனைகளுக்கு? எந்தத் தெய்வம் இப்படி என்னைத் தருணம் பார்த்துக் கொல்லுகிறது?

சுந்தரம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். ஆனால் மனிதனால் எக்காலத்திலும் தன் குறுகிய மூளைக்குள் புரிந்து கொள்ள முடியாத பிரம்மாண்டமான சக்தி என்ற அளவில்தான் தெய்வத்தை நம்பினார். காடன் மாடன் கருமாரி என்ற தெய்வங்கள் மேல் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கோவில்களிலும் அவர் சடங்குகளைச் சமூக இயல்பு கருதி இயந்திரமாகச் செய்வது தவிர நம்பிக்கையுடன் செய்ததில்லை. கோவில்களில் கண்மூடி மனம் குவித்த நேரங்களில் அந்த உருவமில்லாத அறிதற்கு அப்பாற்பட்ட சக்திக்குத்தான் அவர் வணக்கமும் நன்றியும் அர்ப்பணித்திருக்கிறார். கருவறையில் உள்ள உருவத்திற்கு அவர் எந்த நாளும் பயந்ததில்லை.

அதுதான் குற்றமோ? தான் நம்ப மறுத்த தெய்வங்களில் ஒன்று தனக்குப் புத்தி போதிக்க முடிவு செய்து விட்டதோ? தான் மரியாதை செய்ய மறுத்துவிட்ட தேவதை ஒன்று தன்னை நின்று கொல்லுகிறதோ? "உன் மூளையில் தெய்வ பக்தி வராததால் புற்றுப் பிடித்துச் சாவாயாக!" என்று கொடிய தெய்வம் ஒன்று சபித்துவிட்டதோ?

மரண வேளையில் வரும் பயங்கள் மனத்தைப் பிடித்துக் கொண்டன என்று உணர்ந்து கொண்டார். அந்தப் பயத்தை மறுக்க விரும்பவில்லை. மறுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சரி! நான் பிடிவாதக்காரனில்லை. தெய்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். எந்தத் தேவதையை நான் அவமதித்தேனோ அந்தத் தேவதை என்னை மன்னிக்குமாக. என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ செய்து விடுகிறேன். தெய்வம் இல்லை என்று சொல்லும் பிடிவாதம் என்னிடம் இல்லை.

இயற்கையாகவே 'நான் இருக்கிறேன்' என்று எந்தத் தெய்வமும் இதுவரை அவரை நம்ப வைத்ததில்லை. நம்பிக்கையாளர்கள் கதை கதையாகச் சொல்வது போல அவர் ஆபத்து வேளைகள் எதிலும் எந்தத் தெய்வமும் அவர் முன் வந்து தோன்றியதில்லை. அவர் கனவில் வந்து "எனக்கு ஆடு வெட்டிப் போடு" என்று சொன்னதில்லை. கோவில்களில் தீப தூபங்களுக்கிடையிலும், நாதஸ்வர மேளத்தின் ஒலிக்கிடையிலும் மந்திரங்களுக்கிடையிலும் எந்தத் தெய்வமும் அவரைப் பார்த்து "பக்தா" என்று சிரித்ததில்லை. சிலைகளின் அழகுணர்ச்சியில் அவர் லயித்திருக்கிறார். ஆனால் சிற்பம் என்ற நிலையிலிருந்து தெய்வம் என்ற நிலைக்கு அவர் நம்பிக்கை திரும்பியதிலலை.



அந்திம காலம்(நாவல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக