ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:58 pm

எங்கே வித்தியாசம்?


மனசுங்கறது காந்தம் மாதிரி. நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ... எதை ஈர்க்கணும்னு அதை நாம பழக்கப்படுத்தறமோ அதைக் கத்துக்கும்! இதை எதுக்கு சொல்றேன்னா... ஏதோ காலட்சேபங்கள்ல மட்டும்தான் நல்லத சொல்லுவாங்கன்னு இருந்துட்டா... அப்புறம் நல்லத காதுல வாங்கறதுக்கு வாரத்துல ரெண்டு மணிநேரம்கூட நமக்கு கிடைக்காது!
கடைவீதி, எலெக்ட்ரிக் டிரெயின், டவுன் பஸ், ஆபீஸ்னு நாம எங்க இருந்தாலும் சரி... பேசறது சின்னவங்களோ பெரியவங்களோ... படிப்பு, பதவி, அந்தஸ்துன்னு குறைச்சலா இருந்தாலும் சரி... அவங்ககிட்டேயிருந்து கத்துக்கறதுக்கு நிறைய்ய விஷயங்கள் இருக்கும்! கற்றது கைமண் அளவும்பாங்களே!
சரி... எதுக்கு இத்தனை பீடிகை?
டி.வி-யில, நாகேஷ் நடிச்ச பழைய படம் ஒண்ணு ஓடிட்டு இருந்துச்சு. 'யாருமே இல்ல... அப்புறம் ஏன் டி.வி. இப்படி கத்திட்டு இருக்கு'னு கேக்க நினைச்சப்பதான், அந்த வசனம் காதுல விழுந்துச்சு...
''ஒரு சின்ன கல்லை எடுத்து கண்ணுக்குக் கிட்ட வெச்சு பார்த்தா, அது உலகத்தையே மறைச்சுடும். கவலையும் அப்படித்தான்... அதை ரொம்ப கிட்ட வெச்சுப் பார்த்தா உலகத்தையே மறைச்சுடும்''

- இந்த வசனத்தை மறக்கவே முடியலை. எத்தனை அர்த்தம் நிறைஞ்ச வார்த்தைங்கறது, மறுநாள் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தப்பதான் தெரிஞ்சது.
பெண்ணைப் பெத்த மாமிக்கு கால் தரையிலயே இல்லை. எங்கே நகை வாங்கினோங்கறதுல ஆரம்பிச்சு, எப்படி மருதாணி வைச்சாங்கங்கற வரை வந்தவங்க கிட்ட எஃப். எம். ரேடியோ மாதிரி சிரிக்கச் சிரிக்க சந்தோஷமா சொல்லிட்டிருந்தாங்க. பொண்ணு கழுத்துல தாலி ஏறினதும், ''என் கடமை முடிஞ்சுது; இனிமே 'ராமா கோவிந்தா'னு நிம்மதியா பொழுதை ஓட்டிருவேன்''னு கையெடுத்துக் கும்பிட்டபடி நன்றி சொன்னாங்க.
அப்பதான்... மணமக்கள்கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்க வந்த குழந்தைகள்ல ஒண்ணு, அங்கிருந்த கைவிளக்கை தெரியாம தள்ளி விட... அந்த மாமியோட பட்டுப் புடவையல எண்ணெய்! சுள்ளுன்னு கோபம் தலைக்கேற... அந்தக் குழந்தைகளைத் திட்டிட்டாங்க! அப்படியும் மனசு ஆறலை மாமிக்கு!
அதுவரை சந்தோஷமா இருந்த மாமியோட மனசுல இப்ப அப்படியரு துக்கம். போதாக்குறைக்கு, 'என்ன மாமி... புடவைல எண்ணெய் கொட்டிருச்சா?'ங்கற விசாரிப்புகள் வேறு! கலகலப்பா இருந்த மாமி, இப்போ ஏகத்துக்கும் அப்செட்! கம்பீரமா வளைய வந்த மாமி, யாரும் பாத்துடக்கூடாதேனு தூணுக்குப் பின்னே ஒளிஞ்சுகிட்டாங்க. அப்பதான் நாகேஷ் சொன்ன உண்மை புரிஞ்சது. 'ஒரு சின்ன துக்கம், மிகப் பெரிய சந்தோஷத்தைக்கூட மறைச்சிடுது பாத்தீங்களா?'
பக்கத்து வீட்டுச் சிறுமிக்கு, வெளிநாட்டு விருந்தாளி ஒருத்தர், ஃபாரின் சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார். 'அது எப்படி இருக்கும்'னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல, அந்த வீட்டு பாட்டி, சாக்லெட்டைக் கிள்ளி, ஒரு துளி எடுத்து வாயில போட்டுகிட்டாங்க. அவ்வளவுதான்... அந்தச் சிறுமி அழுது ஊரையே கூட்டிட்டா!
பெட்டி நிறைய நூறு சாக்லேட் இருந்ததுகூட பெரிசா தெரியலை. அந்த நூறு சாக்லேட்ல, ஒரே ஒரு சாக்லெட்... ஒரு சின்ன விள்ளல்... அந்த வேதனைல அழ ஆரம்பிச்சுட்டா சிறுமி!
பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த அந்த மாமிக்கும் பக்கத்து வீட்டுச் சிறுமிக்கும் என்ன வித்தியாசம்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:59 pm

''சந்தோஷம்னா என்ன? அது எங்கே இருக்கு?''
- நகரத்து மக்களிடம் கேட்டார் உபந்யாசகர்.
''என்ன சந்தேகம்? பணத்துலதான்!''- ஒருவர் பதில்.
''டாலர்ல சம்பளம் கொடுக்கிற அமெரிக்க வேலைதான் சந்தோஷம்''- இது அங்குள்ள இளைஞர்கள் சொன்ன பதில்.

''நாலு பேரு மதிக்கிற அளவுக்கு கையில கழுத்துல நகைநட்டு இருந்தாதான் சந்தோஷம்'' - பெண்மணிகள் சொன்னாங்க!
'நல்ல ஏரியால நல்ல அபார்ட்மென்ட் இருந்தா சந்தோஷம்'- இது நடுத்தர வயதுக்காரரோட கமென்ட்! உடனே, வயதான ஒரு பெண்மணி எழுந்து, ''இதெல்லாம் வாழ்க்கைக்கான பாதுகாப்புன்னு சொன்னா சரியா இருக்கும்''னாங்க!
''அப்படியா? சரி... நாளை உபந்யாசத்துக்கு வரும் போது, பேங்க்ல ஃபிக்ஸட்ல போட்டிருக்கற அஞ்சு லட்ச ரூபாயை எடுத்துகிட்டு வாங்க. உங்களுக்கு ஒரு பாடம் சொல்லித் தரேன்''னார் உபந்யாசகர்.
ஆடிப்போயிட்டாங்க அந்தம்மா! ''எனக்குப் பாடமும் வேணாம்; ஒண்ணும் வேணாம். அஞ்சு லட்ச ரூபாயை மடியில கட்டிகிட்டு, நிம்மதியா வரமுடியுமா? வழியில, பிக்பாக்கெட்காரன் லபக்குவானோ?னு பயந்து நடுங்கிகிட்டு, வீடு திரும்பறதுக்குள்ளே பிராணனே போயிரும். தவிர, கல்யாணத்துக்குப் போட்டுட்டுப் போன நகை யெல்லாம் பீரோவுலதான் இருக்கு. பேங்க் லாக்கர்லகூட திரும்பி வைக்கல இன்னும்! வீட்ல எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க. பின்பக்க கதவை மூடினேனான்னுகூட ஞாபகமில்ல...'' என்று விவரித்த அந்தப் பெண்மணி சட்டுன்னு எழுந்தாங்க.
உடனே அந்த உபந்யாசகர், ''அப்ப... வீடு, நகை, பணம்லாம் உங்களுக்கு பாதுகாப்பு இல்ல; நீங்கதான் இதுங் களையெல்லாம் பாதுகாக்கறீங்க போல..!''ன்னு சொல்லிச் சிரிச்சார்.
அந்தம்மாவுக்கு மொள்ள புரிஞ்சா மாதிரி இருந்துச்சு. அப்ப, ''பணம், வீடு, நகையெல்லாம் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லியா?''ன்னு கேட்டாங்க.
''நீங்க எஜமானாவும் பணம்வேலைக் காரனாவும் இருந்தா ஒரு பிரச்னையும் இல்ல; பணம் எஜமானாவும் நீங்க வேலைக்காரனாவும் இருந்துட்டா, சந்தோஷமே கிடைக்காது!''ன்னாரு உபந்யாசகர். சத்தியமான வார்த்தைதான்!
இப்படித்தான் நண்பர் ஒருத்தருக்கு திடீர் சிந்தனை... 'பைக்ல போனா மரியாதை இல்ல, கார்ல போறதுதான் கௌரவம்'னு நினைச்சு, அஞ்சு லட்ச ரூபாய்க்கு காரை வாங்கி, அதுல ஆபீசுக்குப் போனாரு. சுமாராத்தான் கார் ஓட்டத் தெரியும்! தினமும் கார்ல ஆபீஸ் போய் திரும்பறதுக்குள்ள மனுஷனுக்கு எவ்ளோ அட்டாக் வரும்னே தெரியாது.
'சைக்கிள்காரன் கார்ல கோடு போட்ருவானோ', 'ஆட்டோக்காரன் காரை சொட்டையாக்கிருவானோ'ன்னு பயந்து பயந்துதான் கார் ஓட்டுவாரு.
ஒருநாள், மீன்பாடி வண்டி ஒண்ணு காரை இடிச்சதுல கார் கதவு பெயின்ட் கொஞ்சமா போயிருச்சு. ஏதோ... வீட்ல பெருந் துக்கம் வந்தது போல, நொந்து போனார். இத்தனைக்கும் வீட்ல காரை நிறுத்த இடமில்லாம, தெருவுலதான் நிறுத்தறாரு. ராத்திரில எதுனா நாய் குலைச்சாலே, 'நம்ம காரைத் திருட எவனோ வந்துருக்கான்'னு ஓடி வந்து பார்ப்பாரு. ராத்திரித் தூக்கம் போனது தான் மிச்சம்! அவருக்கு சந்தோஷம் தந்த காரே இப்போ துக்கமா மாறிடுச்சு.
அந்தப் பெண்மணிகிட்ட உபந்யாசகர் சொன்ன அறிவுரைய திரும்பவும் படிச்சுப் பாருங்க... 'பணமோ, காரோ, நகையோ, அதை நாம வைச்சிருக்கலாம். அதுங்க நம்மள வைச்சிருக்கலாமா?'
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:59 pm

இந்தக் காலத்து குழந்தைகளைப் பார்த்தா பாவமாவும் இருக்கு; பயமாவும் இருக்கு. ஓடியாடி விளையாடற வயசு! ஆனா, 'காத்தாடிவிடாதே... கிரிக்கெட் விளையாடாதே...'ன்னு மிரட்டறாங்க. டி.வி. யாவது பாக்கலாம்னு குழந்தைங்க உக்காந்தா, 'டி.வி. பாத்தா கண்ணு கெட்ரும்; படிப்பு கெட்ரும்'னு பெத்தவங்களே விரட்டறாங்க.
'சரி... எதுனா படிக்கலாம்'னு பசங்க படிக்க உக்காந்ததும் ''கண்ட கண்ட பொஸ்தகத்தைப் படிக்காம, பாட பொஸ்தகத்தைப் படி'ன்னு ஒரு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து குழப்பறோம்.வீட்லதான் இப்படின்னா... ஸ்கூல்ல கேக்கவே வேணாம். முள்வேலி முகாம் ரேஞ்சுதான்.

நண்பன் ஒருத்தனுக்கு பன்னெண்டு வயசுல ஒரு பொண்ணு. மூணு வயசுல ஒரு பொண்ணு. ஒருநாள், அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்ப, சின்னக் குழந்தைய ப்ளே ஸ்கூல்ல விட்ருக்கறதா சொன்னான்.
விளையாடறதுக்குகூட இந்த வயசுலயே ஸ்கூலுக்கு அனுப்பிச்சா, ராமாயண, மகாபாரத கதைகள்னு நல்ல விஷயங்களை எப்போ கத்துக்குவாங்க, குழந்தைங்க?'ன்னு கேள்வி வந்துச்சு. ஆனா கேக்கல!
கொஞ்ச நேரத்துல, ப்ளே ஸ்கூல்லேருந்து குழந்தைய கூட்டிட்டு வந்தாங்க நண்பனின் மனைவி. நான் சாக்லெட்டை நீட்டினேன். குழந்தை அத வெடுக்குன்னு பிடுங்குச்சு.
உடனே, ''நீ என்னை ஏமாத்தறா மாதிரி, குழந்தையை ஏமாத்த முடியாதுடா''ன்னான் நண்பன். வெடுக்குன்னு பிடுங்கறது தப்புன்னு சொல்லித் தர்ற தகப்பனே இப்படி என்கரேஜ் பண்ணலாமா? நண்பனின் மனைவி குழந்தைகிட்ட, ''செல்லம்... அம்மாவுக்கு சாக்லெட்டு'ன்னு குழந்தையோட முகத்துக்கு நேரா கைய நீட்ட, அந்தக் குழந்தை சாக்லெட் வெச்சிருந்த கைய பின்பக்கமா வெச்சுகிட்டு, ''காக்கா தூக்கிட்டுப் போச்சு'' என்று மழலை மாறாமல் சொன்னது. அவ்வளவுதான்... ''ஹய்யோ என் சமத்து.'' என்று குழந்தையின் கன்னம் கிள்ளி திருஷ்டி சுற்றினாள்.
'அட... குழந்தை பொய் சொல்லுது; பகிர்ந்து சாப்பிடாம தனியா சாப்பிடுது. இது தப்புன்னு சொல்லாம, கண்ணு பட்ரும்னு திருஷ்டி சுத்துறாங்களே...' நொந்தே போனேன். ''காலம் மாறிப் போச்சுடா. குழந்தைங்கள தயிர் சாதம் மாதிரி வளக்கக்கூடாது. நல்லா காரசாரமா வளத்தாத்தான், இந்த உலகத்துல அவங்களால வாழ முடியும்''னு சமையல் குறிப்பு வேற கொடுத்தான் நண்பன்!
பிறகு, என்னை டிராப் பண்ண காரை எடுத்துட்டுகுழந்தைங் களோட வந்தான் நண்பன். காரை அவனே ஓட்டினான்!
''என் பெரிய பொண்ணு, உன்னைவிட அற்புதமா எஸ்.எம்.எஸ்., ஈ-மெயில் அனுப்புவா; சாட்டிங் பண்ணுவா. நம்ம காலம் மாதிரி இல்லடா; வேகமாப் போவுது உலகம். நம்ம சந்ததியும் வேகமாத்தான் இருப்பாங்க...அதுக்காக ஏன் பயப்படணும்'' அப்படின்னான்.
நான் 'ஐயோ...'ன்னு அலறினேன். ''ஏன்டா... உனக்கு முன்னாலே போற பைக் கண்ணுக்கு தெரியலியா? இடிக்கிற மாதிரி வேகமாப் போறே..?'' பதட்டத்தோட கேட்டேன்.
''ஹய்யோ அங்கிள்! ஏன் இப்படி பயப்படறீங்க?'' - இது நண்பனின் மூத்த மகள்.
''டாடியோட காலுக்குக் கீழே பிரேக் இருக்கறா மாதிரி, அங்கிள் காலடியிலயும் பிரேக் இருந்தா பயப்பட மாட்டாங்க'' - கமெண்ட் கொடுத்தது, மூன்று வயது வாண்டு.
சுளீரென்றது எனக்கு! உண்மைதான்... வாகனத்தில் அமர்ந்து வருபவர்கள் பயப்பட, வேகத்தைக் கட்டுப்படுத்தும் 'பிரேக்' காலுக்குக் கீழே இல்லாததுதான் காரணம்!
'கன்ட்ரோல் யுவர் செல்ஃப்'னு சும்மாவா சொன்னான் வெள்ளைக்காரன்?!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:59 pm

காட்டில் தீவிரமாக தவம் செய்தார் ஒரு துறவி. தன் பரிவாரங்களுடன் அந்தக் காட்டுக்கு வேட்டையாட வந்த மன்னன், துறவியைப் பார்த்தான். அவரிடம், ''சுவாமி. எனக்கு எப்ப ஞானம் பிறக்கும்?'' என்று கேட்டான். ''நான் செத்தால்தான் உனக்கு ஞானம் பிறக்கும்!'' என்று சொல்ல, கோபம் அடைந்த மன்னன், தனது உடைவாளை உருவி, ''அப்படி என்றால் இப்போதே நீங்கள் செத்துப் போங்கள்- எனக்கு ஞானம் பிறக்கிறதா என்று பார்க்கிறேன்'' என்றவாறே வாளை ஓங்கினான். புன்னகைத்த துறவி, அமைதியாகச் சொன்னார். ''அட மன்னா... 'நான்' என்ற உன் அகம்பாவம் செத்தால்தான் உனக்கு ஞானம் பிறக்கும் என்றல்லவா சொன்னேன்...'' என்று விளக்கினார். இதைக் கேட்ட மன்னன், தன் அகம்பாவத்தை விலக்கினான்.
இப்படி, கதை அளவில் கேட்டு ரசிக்கிறோம். ஆனால், பலருக்கு இன்னும் அகம்பாவம் போகவில்லை. 'இது நான் வாங்கிய பட்டம், இது நான் வகித்த பதவி, இது நான் வாங்கிய வீடு, இது நான் சேர்த்த நகை' என்று பெருமை கொண்டாடுகிறார்கள். வீடும் நிலமும் நகைகளும் சேர்ப்பதாக நினைத்து, அகம்பாவத்தையே சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் பையன், தன்னைக் கேட்காமல் வீட்டில் ஒரு டாய்லெட் கட்டினால்கூட, சத்தம் போடுகிற ரிட்டயர்ட் அப்பா... அரக்க பறக்க வேலைக்குப் போகும் மருமகளாக இருந்தால்கூட, 'இன்னிக்கு சமையல் என்ன' என்று தன்னை ஒரு வார்த்தை கேட்கவில்லையே என மருகும் மாமியார்கள்..!
வயதாக ஆகத்தான், பக்குவமும் வரவேண்டும். ஆனால், என்னதான் வயதானவர்களாக இருந்தாலும், சிலருக்கு இந்தப் பக்குவம் வருவதில்லை.
'படித்தவன், காசு பணம் சேர்த்துவிட்டதாக நினைத்து கர்வம் கொள்ளாதே...என் முன் நீ ஒரு தூசுதான்!' என்பதை உணர்த்துவதுதானே விஸ்வரூப தரிசனத்தின் தாத்பரியம்.
இதே சிந்தனையில் '2012 ருத்ரம்' என்று ஒரு சினிமா வந்திருக்கிறது. புவிவெப்பம்... அதுதான் சினிமாவின் கரு. விஞ்ஞானிகள் பயப்படும்படியாக பூமியில் இன்னும் ஒரு சில டிகிரி வெப்பம் அதிகமாகிவிட்டால், பூமிப் பந்தின் மேல் இருப்பவை என்னவாகும் என்று கற்பனை செய்திருக்கிறார்கள். இமயமலை இடம் மாறுகிறது. தீவுகள் மட்டுமல்ல, கண்டங்களே காணாமல் போகின்றன. உலக வரைபடமே மாறுகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எல்லோரும் வீதிகளில் ஓடுகிறார்கள். இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் லியனார்டா டாவின்சியின் மோனலிஸா ஓவியத்தை மட்டும் எப்படியாவது பத்திரப்படுத்தி, பல ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் முளைத்து வரப்போகும் மனிதனிடம் சேர்த்துவிட சிலர் முயற்சிக்கிறார்கள். கட்டடங்கள் அழியலாம்; கண்டங்கள் அழியலாம். ஆனால் புன்னகை, சந்தோஷம், புரிதல், பகிர்தல்... இவை மட்டும் அழியக்கூடாது என்பதுதான் இதன் அர்த்தம். இதைப் புரிந்து கொள்வதற்கு வயதாகணுமா என்ன? பக்குவம் வரவேண்டுமா என்ன?
ஒரு கிராமத்துக்கு வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தார்கள். அவர்கள், அப்பாவி உள்ளூர்காரன் ஒருவனிடம் கேட்டார்கள்... ''ஏம்பா... உங்க கிராமத்தில் பெரிய மனிதர்கள் யாராவது பிறந்திருக்காங்களா?'' என்று.
அதற்கு அவன் சொன்னான்... ''இல்லீங்க சார்... இதுவரை எங்க ஊர்ல குழந்தைங்க மட்டும்தான் பிறந்திருக்கு!''
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 9:00 pm

பயம்... கிட்டத்தட்ட எல்லோரையுமே பிடித்து ஆட்டுவது! உயிர் பயம், உறவு பயம், திருடர் பயம்... என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம். சிலருக்கு எதற்கு எடுத்தாலும் பயம் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் இருக்கும் பயம் என்ன தெரியுமா? பண பயம்தான்! கட்டுக்கட்டாக கரும்புகளை சாப்பிடும் யானைக்கும் பசி... சிறு சர்க்கரைத் துண்டுக்கு அல்லாடும் எறும்புக்கும் பசிதான்! அதுபோல், பணக்கஷ்டம் யாருக்குத்தான் இல்லை..?! லட்சாதிபதிகளுக்கும் பணக் கஷ்டம் வருகிறது. பிச்சாதிபதிகளுக்கும் பணக்கஷ்டம் வருகிறது. பணம் இல்லாதவர்களுக்கு 'பணம் இல்லையே!' என்ற கஷ்டம்! பணம் இருப்பவர்களுக்கு, 'ஐயோ பணம் செலவாகிறதே!' என்ற கஷ்டம்!
நண்பர் ஒருவர்... பணக் கஷ்டத்தாலே நொந்து போயிருந்தார். அவருக்கு தேவைப்பட்டது என்னவோ வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்! அவரது கஷ்டத்தைப் பார்த்து பெரிய மனசு படைத்த முதலாளி, அதை நண்பருக்குக் கொடுத்தார். சரி... மனிதர் இனிமேல் நிம்மதியாக இருப்பார் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், ஒரே வாரத்தில் முதலாளியின் எதிரில் நின்றார் நண்பர்.
விசாரித்ததில்... ''எங்கிட்ட பணம் இல்லாதப்போ, என் பொண்ணுங்களோ பசங்களோ அவங்க பிரச்னைகளை என்னிடம் சொன்னதில்லை. ஆனா பணம் வந்ததுன்னு தெரிஞ்சதும், ஆளாளுக்கு பிரச்னைகளை கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப பத்து லட்ச ரூபாய் கிடைச்சாதான் என்னால் எல்லாப் பிரச்னையையும் சமாளிக்க முடியும் போல இருக்கே...'' என்று தலையை சொறிந்தார்.
பணம் இல்லையே என்று பயந்தவ ருக்கு, பணம் வந்தவுடனே பயம் போகணும் இல்லையா? ஆனால், அதிகரித்துவிட்டதே!
இப்படி, பண பயம்தான்னு இல்லை... வயதானால் முதுமை பயமும் வந்துவிடும் சிலருக்கு!
ஒரு பெரியவர்... முதுமையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பயந்தார். காது வேறு மந்தமாகி வந்தது. 'கேட்கும் திறன் கூர்மையானால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?' - ஏங்கியபடி, ஒரு மரத்தின் கீழ் படுத்துத் தூங்கினார். அது மந்திர சக்தி நிறைந்த மரம். கண்விழித்த போது, வெகு தொலைவில் டீக்கடையில் இருவர் பேசுவதுகூட தெளிவாகக் கேட்டது. சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடினார்.
வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டும்போதே, ''ஓட்டல்ல இருந்து வாங்கி நாம சாப்பிடுறத அந்த கிழடு பார்த்தா வயிறெரியும். எல்லாத்தயும் எடுத்து உள்ளே வை!'' மருமகள் சொன்னது காதில் விழுந் தது. உடனே நண்பரின் வீட்டுக்கு ஓடினார். ''வேலை வெட்டி இல்லாத கிழடுகிட்ட என்ன சகவாசம் வேண்டிக் கிடக்கு?'' - நண்பரின் மனைவி பேசியது காதில் விழுந்தது... அதிர்ச்சியடைந்தவர், 'அடக் கடவுளே... இந்த அவஸ்தை இனி வேண்டாம்...' என்று கதறியபடி மந்திர சக்தி கொண்ட மரத்தை நோக்கி ஓடினார்.
எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டே வாழ்வது, உலகில் இருந்துகொண்டே இறப்ப தற்குச் சமம். சரிதான்... ஆனால், நம்மாளு எதற்கு பயப்படுகிறார் பாருங்கள்...
''ஐயய்யோ பயமாயிருக்கு...'' அலறியபடி ஆபரேஷன் தியேட்டரை விட்டு ஓடிவந்தார் நோயாளி.
''என்ன ஆச்சு?''- உறவினர் கேட்டார்.
''பயப்படாதீங்க. இது சின்ன ஆபரேஷன் தான்னு நர்ஸ் சமாதானம் சொன்னா பயமா யிருக்காதா?''
''அட முட்டாளே. இதுக்கு ஏன் பயப்படற?''
''நர்ஸ் ஆறுதல் சொன்னது எனக்கு இல்லே... ஆபரேஷன் செய்ய வந்த டாக்டருக்கு!''
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 9:00 pm

நடுத்தர வயது பெண்மணி... வழக்கம்போல் கோயிலுக்கு வந்தார். குடும்பப் பிரச்னையை கடவுளிடமும் குருக்களிடம் புலம்புவது அவரது வாடிக்கை!
''சாமீ! கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. ஆனா என் வீட்டுக்காரர் இன்னமும் தனக்கு வயசாயிட்டுதுங்கற உண்மைய ஏத்துக்கவே மாட்டேங்கறாரு. டீ ஷர்ட் போடுறாரு. நரைமுடி தெரியாம இருக்க தலைக்கு மருதாணி பூசிக்கிறாரு. அவரு கோயில் பக்கம் வரும் போது, கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க, சாமீ!'' - குருக்களிடம் புலம்பினாள்.
இளமையாக இருக்க ஆசைப்படுவ தில் தவறில்லையே! மார்க்கண்டேயன் மாதிரி 'என்றும் 16' வரம் கிடைத்தால், வேண்டாம் என்போமா? ஆனால், எது இளமையாக இருக்க வேண்டும்..? மனசா; முடியா; தேகமா; டி-ஷர்ட்டா?
தாகூருக்கும் அரவிந்தருக்கும் முடி நரைத்துத்தான் இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர்கள் கம்பீரமாகத்தானே இருந்தார்கள்?!
மனம், தேகம் - இந்த இரண்டையும் எப்போதும் தெம்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யும் போது... தானாகவே இளமையாகி விடுவோம்! மனசையும் தேகத்தையும் இளமையாக வைத்துக் கொள்ள முடியாதவர்கள்தான், தலை முடியையும் மீசையையும் சாயம் தீட்டிக் கொள்கின்றனர். 'எது இளமை?' - இதற்கான பதிலை அறிந்து செயல்படுபவர்கள், வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க இன்னும் வளர்ச்சியுறுவார்கள்; புரியாத வர்களுக்கு... வயது மட்டுமே கூடிக் கொண்டு போகும்!
நெப்போலியன் ஒருமுறை எதிரி நாட்டின் மீது படை யெடுத்தான். எதிரி நாட்டின் தளபதியை அவனது வீரர்கள் கைது செய்து நெப்போலியன் எதிரே நிறுத்தி, 'மன்னா! இவன் சாதாரணமானவன் இல்லை; யுத்த வியூகங்களை அமைப்பதில் கெட்டிக்காரன். இவனை காவல் காக்க வேண்டும். இல்லையெனில் தப்பிவிடுவான்!' என்றனர்.
புருவம் உயர்த்திய நெப்போலியன் அவனிடம், ''அப்படியா? ஆமாம்... உனக்கு என்ன வயது?'' என்று கேட்க... அவனோ யோசித்து விட்டு,''ஐம்பது அறுபது இருக்கலாம்''என்றான்.
சிரித்த நெப்போலியன், ''உன்னைப் பற்றி இவ்ளோ பெருமையா பேசறாங்க. ஆனா உன் வயசே உனக்குத் தெரியலியா? குத்துமதிப்பா சொல்றியே...!'' என்றான்.
இதற்கு அந்த தளபதி என்ன சொன்னான் தெரியுமா?
''என் படையில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன? எவ்வளவு வாகனங்கள் உள்ளன? ஆயுதங்களின் எண் ணிக்கை... இவற்றைக் கேட்டால், துல்லியமாகச் சொல்வேன். ஏனென்றால், பகைவர்கள் இவற்றைக் கவர்ந்து விடுவார்கள் என்று அடிக்கடி கணக்கிடுவேன். ஆனால் என் வயதை எந்தப் பகைவனாலும் கவர்ந்து செல்ல முடியாது. ஆகவே, வயது குறித்து சிந்திப்பதும் இல்லை; பயப்படுவதும் இல்லை!''
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 9:00 pm

ஏழுதப் படிக்கத் தெரியாத ஒருவனுக்கு, அவன் காதலி கடிதம் எழுதியிருந்தாள். அதை எடுத்துக் கொண்டு நண்பனிடம் ஓடியவன், மூச்சிரைத்தபடி சொன்னான்...
''என் காதலி எனக்கு எழுதிய அந்தரங்கக் கடிதம் இது. அதை நீ படிப்பது இங்கிதமான செயல் இல்லை. அதனால், கண்களை மூடிக்கொண்டு இதை எனக்கு படித்துக் காட்டு'' என்றான்.
''என்ன கேலி செய்கிறாயா? கண்களை மூடிக்கொண்டால் நான் எப்படி படிக்க முடியும்?'' - திரும்பிக் கேட்டான் நண்பன்.
''சரி, அப்படியென்றால் ஒன்று செய்... நீ படிப்பது உனக்குக் கேட்காமல் இருக்க, இந்தா... இந்த பஞ்சை வைத்து உன் காதுகளை மூடிக்கொள்'' என்றான்.
இப்படித்தான் நம்மில் பலர், இறைவன் குறித்த விஷயத்திலும் இருக்கிறோம்!
கோயில்களை கலாசாரக் கேந்திரங்கள் என்பார்கள். அந்தக் காலத்தில் ஆடல் பாடல், உபந்நியாசங்கள், முக்கியக் கூட்டங்கள் என கோயில்களில் உள்ள பிரமாண்டமான மண்டபங்களில் நடந்தனவாம்! அப்படிப்பட்ட கோயில்களில்... மணி அடித்து, சத்தமாக மந்திரங்கள்- ஸ்லோகங்கள்- பாடல்கள் சொல்லி, நாகஸ்வர-தவில் முழங்க பூஜைகள் செய்யும்போது என்ன ஒரு தடபுடல்?! அடுத்த சில நிமிடங்களில், நம் மனம் ஒன்றி இறைவனை வழிபட எண்ணும்போது, சந்நிதியில் அப்படி ஓர் அமைதியான சூழல் நிலவுவதையும் பார்க்கிறோம். இவை எல்லாம், இறைவன் என்ற புள்ளியை மட்டுமே மையமாகக் கொண்ட நிகழ்வுகள். இவைதானே இறைவனின் சந்நிதியில் நிகழ வேண்டும்?!
ஆனால்... இப்போதெல்லாம் என்ன நடக்கிறது? ஊர் வம்பு பேசும் மடமாகவும், சுற்றத்தார் பற்றி கிசுகிசுக்கள் பரப்ப உகந்த இடமாகவும் சிலர் அதை மாற்றிக் கொண்டிருக்கிறார்களே!
கோயில்களில் நடக்கும் திருமண வைபவங்களுக்கு போய் வந்தால் இது தெரியும். ஆலயங்களில் நடக்கும் திருமணங்களிலும் சீர்வரிசை தகராறு, வரதட்சணை பேரம், சம்மந்தி தகராறு... என்று, அத்தனையும் நடப்பது வினோதம்தான்!
இதை வினோதம் என்பதற்கு காரணம் இல்லாமலில்லை. வீடு, நகை, பதவி எல்லாவற்றையும் வேண்டி, தங்கள் மனசுக்குள் சொல்லும் பிரார்த்தனை, இறைவனின் காதுகளில் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்... ஆனால், இறைவனின் சந்நிதியிலேயே தாங்கள் பேசும் ஊர்வம்பு, அடாவடிப் பேச்செல்லாம் ஆண்டவனின் காது களுக்குக் கேட்காது என்றல்லவா நினைக்கிறார்கள்!?
கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன், கோயிலுக்குப் போய், வாய் விட்டுக் கதறினான்... ''கடவுளே... என் கடன் தொல்லையை ஒழித்து, எனக்கு நிம்மதியைக் கொடு?'' என்று!
கதறி ஓய்ந்துபோய் வெளியில் வந்தான். கடும் பசி. அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப் போனான். இரவு நேரம் ஆகிவிட்டது. சாப்பாடும் தீர்ந்துவிட்டது.
வெறுத்துப் போய் திரும்பியவன், 'ச்சே... என்னடா வாழ்க்கை' என்று அலுத்துக் கொண்டான். அரைகுறை மயக்கத்தில் உறங்கிப் போனான்.
சற்றுநேரத்தில் அவனைத் தட்டி எழுப்பிய கடவுள் அவனிடம் ''என்ன வேண்டும் கேள்!'' என்றார்.
சட்டென்று அவன் சொன்னான்... ''நாலு இட்லி... ஒரு தோசை!''
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 9:01 pm

தாத்தா- பாட்டிகளுடன் பேரன்- பேத்திகள் இருக்கும் வீடுகள் இப்போது மிக அரிது. மிச்சமீதி இருக்கும் வீடுகளிலும் தாத்தா- பாட்டிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை. இதற்கு எத்தனையோ காரணங்கள்... இருந்தாலும், முக்கியமான காரணம் என்று இளைய தலைமுறையால் சொல்லப்படும் குற்றச்சாட்டு - தாத்தா பாட்டிகளின் 'தொண தொண'ப்பு.
பேரக் குழந்தைகளாகவே இருந்தாலும், எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கலைன்னா, பெரியவங்க பலரால் அமைதியா இருக்க முடியாது. பூஜை அறையில் எரியற விளக்குல எண்ணெய் இல்லாம போனா, மாமியார்களால் அதை உடனே எழுந்து சரிசெய்யவும் முடியாது; பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவும் முடியாது. மருமகளை பதட்டத்தோட கூப்பிடுவாங்க. அந்தப் பொண்ணோ, 'பெரியவங்களுக்கு வேற வேலை இல்ல'ன்னு ஏதோ ஒரு வேலைல மும்முரமா இருப்பாங்க. 'இங்க ஒருத்தி இப்படி கத்தறேன். காதுல விழாத மாதிரி அலட்சியப்படுத்தறாளே!'னு இவங்களுக்கு மனசு குக்கர் மாதிரி விசும்பும். ஆனா, உண்மையில பழுத்த அனுபவம் உள்ள பெரியவங்க இருக்கற வீடு கோயிலுக்குச் சமம்!

மகான் கபீர், தனது கடைசி காலம்வரை நெசவுத் தொழிலை கைவிடவில்லை. அதிலிருந்து கிடைத்த வருமானத்தை வைத்தே வாழ்க்கை நடத்தினார். இதைப் பார்த்த அந்த ஊர் ராஜா, ''பக்தி மார்க்கத்துக்கும் பக்தி இலக்கியத்துக்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன. அதனால் இந்த நெசவுத் தொழிலை விட்டுவிட்டு அரண்மனைக்கு வந்து விடுங்கள்!' என்று கபீரை அழைத்தார்.
''என்னிடம் ஏராளமானவர்கள் ஆடைகள் வாங்க வருகிறார்கள். நிச்சயமாக ஒரு நாள் கடவுளும் வருவார். அவர் எந்த வடிவத்தில் வருவார் என்று தெரியாது. அதனால் நான் தயாரிக்கும் ஒவ்வொரு ஆடையையும் 'ஆண்டவன் அணியப் போகிறான்!' என்ற நம்பிக்கையோடு தயாரிக்கிறேன். இதைவிட இறைப் பணி எனக்கு வேறு என்ன வேண்டும்'' என்று சொல்லி ராஜாவை திருப்பி அனுப்பிவிட்டார்.
பெரியவங்களுக்கும் சரி, துறவிகளுக்கும் சரி... சங்கடத்தை ஏற்படுத்த பலர் முனைவார்கள். அவர்களுக்கும் சங்கடங்கள் வரும். சோதனைகள் வரும். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு, கவலைப்பட மாட்டார்கள்.
இந்த விஷயத்துல புலன் அடக்கம் என்பது முக்கியம். அது என்னங்கறதுக்கு, இரண்டு கேள்வி கேட்பேன். இந்த இரண்டுக்குமே நீங்க ஒரே வார்த்தையில பதில் சொல்லணும். என்ன தயாரா?
கேள்வி நம்பர் 1 டயாபடீஸ், ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக்... என்று எந்த நோய்களும் வராமல் இருக்கணும்ன்னா என்ன செய்யணும்?
கேள்வி நம்பர் 2. வீட்டில் மாமியார், மாமனார், மருமகள், நாத்தனார்... என்று எந்தப் பிரச்னையும் வராமல் இருக்கணும்னா என்ன செய்யணும்?
என்ன பதிலை கண்டுபிடிச்சாச்சா... இல்ல, ஒரு க்ளூ சொல்லட்டுமா? பதிலை திருக்குறளா யோசிச்சுப் பாருங்க, சுலபமா விடையை கண்டுபிடிச்சுடலாம்.... கரெக்ட்... 'நாகாக்க' என்பதுதான் சரியான விடை. யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்.
ஒரு மாமாவும் மாமியும் திருச்சிக்கு ரயில்ல பயணம் செய்தாங்க. வண்டி தாம்பரம் தாண்டியிருக்கும். அப்ப, ''அடுத்த ஸ்டேஷன் எது?''னு மாமி கேட்டாங்க. அதே நேரத்துல எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு சிறுமி, ''உங்க தலையில காயமா இருக்கே... எப்படி அடிபட்டுச்சு?''னு கேட்டுது... இந்த இரண்டு கேள்விக்கும் மாமா ஒரே பதிலச் சொன்னார். மாமா சொன்ன அந்த ஒரு வார்த்தை பதில் என்ன தெரியுமா?
'செங்கல்பட்டு!'
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 9:01 pm

முட்டாள்களில் பல வகை உண்டு. இவர்களில் மிகமிக மோசமான முட்டாள் யார் தெரியுமா? மேதாவி முட்டாள்! தாம்தான் பெரிய அறிவாளி என்ற நினைப்பில் பெரியோர், ஆசிரியர்கள் என எவரிடமும் எந்த மரியாதையும் இல்லாமல் இவர்கள் அலட்டுவார்கள்; கேலியும் கிண்டலும் செய்வார்கள்!
அந்த ஊரில் இப்படியரு மேதாவி முட்டாள் இருந்தான். ஒருமுறை ஓட்டலுக்குச் சென்றிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்தவர் இரண்டு இட்லியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உடனே மிஸ்டர் மேதாவி, ''இவருக்கு ரெண்டுதான் ராசியான நம்பர் போல...'' என்றான். பக்கத்து டேபிளில்... இட்லி, பொங்கல், வடை என ஆர்டர் செய்து சாப்பிட்டவர்களைப் பார்த்து, ''செரிமானம் ஆகறதுக்கு வயித்துல மிஷின் ஏதும் ஃபிட் பண்ணி இருப்பாங்களோ!'' என்று நக்கல் அடித்தான்.

இவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார் ஓட்டல் முதலாளி. நேரே இவனிடம் வந்து, ''தம்பி, வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?'' என்று கேட்டார். இவன், ''எட்டு இட்லி'' என்றான்.
இதைக் கேட்ட முதலாளி, ''அதெப்படி? முதல் இட்லி உள்ளே போனதுமே 'வெறும் வயிறு'ங்கற அந்தஸ்து போயிடுமே?!'' என்று மடக்கினார்.
குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக குபுக்கெனச் சிரித்த மிஸ்டர் மேதாவி, ''அடடா... இப்படியும் மடக்கலாமோ?'' என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினான்!
வழியில் கையேந்தி பவன்... ஆட்டோ டிரைவர் ஒருவர் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்ற மேதாவி, ''ஆமாம்... உன்னால வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிட முடியும்?'' என்று கேட்டான். ''ஆறு'' என்றார் டிரைவர். உடனே மேதாவி முட்டாள் என்ன சொல்லியிருப்பான்..?
அதுதான் இல்லை! டிரைவரிடம் ரொம்ப ஸ்டைலாக, ''ச்சே... நீ மட்டும் எட்டுன்னு சொல்லியிருந்தா, இந்நேரம் உன்னை மடக்கியிருப்பேன்'' என்றானாம்!
முட்டாள்களின் பரிகாசம்- கேலியில் இருந்து தப்பிக்க, விசாலமான எண்ணமும் பரந்தமனமும் இருந்தால் போதும். இதற்கு, புத்தகங்கள்பெரிதும் உதவும். புதிய மனிதர்களை சந்திக்கவும்அவர் களுடன் பழகவும் செய்ய வேண்டும். வேற்றுமொழி, வேறு கலாசாரம் ஆகியவற்றை அறிந்துகொள்ள, பயணங்கள் மேற்கொள்ளலாம். 'பயணங்கள் மனதை விசாலமாக்கும்' என்கின்றனர் முன்னோர்!
வாகன- போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே புனித யாத்திரை மேற்கொண்டனர். காடு- மலை கடந்து, குளிரில் நடுங்கி, உணவே கிடைக்காத நிலையிலும் பல நாட்கள்- பல மாதங்கள் நடந்து ஆலயத்தை அடைந்து, ஸ்வாமியை தரிசித்தனர். இறைவனை தரிசித்ததும் கிடைக்கிற பேரமைதி, இந்த யாத்திரையிலேயே கிடைப்பதை உணர்ந்து சிலிர்த்தனர். இதனை உள்வாங்கிக் கொள் ளாமல் பலரும் புனித யாத்திரை செல்கின்றனர். அப்படி யாத்திரை சென்று திரும்பியவரிடம், ''அப்புறம்... பயணம் எப்படி இருந்துச்சு?'' என சாதாரணமாகக் கேட்டார் அவருடைய நண்பர்.
அவ்வளவுதான்... புலம்பித் தீர்த்து விட்டார் மனுஷன். ''அட ஏம்பா கேக்கறே? அந்த ஸ்டேட் காரன் பேசற பாஷை புரியவே மாட்டேங்குது; மூணு வேளையும் எப்படிடா சப்பாத்தியையே சாப்பிடுறாங்க.. நம்மால முடியாதுப்பா!'' என்று தொடங்கியவர், புலம்பலை நிறுத்தவே இல்லை.
யாத்திரையை விட பாஷையும், இறைவனை விட சப்பாத்தியும் முக்கியமாகி விட்டது நண்பருக்கு!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 9:02 pm

போலிச் சாமியார்களைப் பத்தின செய்திகளைக் கேள்விப்படும்போதெல் லாம், நம்ம மனசு குழம்பித் தத்தளிக்குது; வெளியே வர முடியாம அதுலேயே கிடந்து அல்லாடுது!
எல்லாருக்கும் தெரிஞ்ச, பழைய கதை ஒண்ணு சொல்றேன்.
சாமியார் ஒருத்தர், தன் சிஷ்யர்களோடு ஒரு ஆற்றைக் கடந்துக்கிட்டிருந்தாரு. அப்ப, ஆற்று வெள்ளத்துல மாட்டிக்கிட்ட ஒரு பொண்ணு கத்திக் கூச்சல் போட்டா. உடனே தண்ணியில குதிச்சு அவளைக் காப்பாத்தின சாமியார், அந்தப் பொண்ணைத் தன் தோள்ல தூக்கிட்டு வந்து கரைல சேர்த்தாரு.

சாயந்திரம் ஆஸ்ரமத்துக்கு வந்ததும், சீடர்கள்ல ஒருத்தன் தயங்கித் தயங்கி மெதுவா கேட்டான்... ''குருவே, நீங்க ஒரு சாமியார்! காலைல ஒரு பொண்ணைத் தொட்டுத் தூக்கிட்டு வந்து கரைல விட்டீங்களே! இளம் பெண்ணை நீங்க இப்படித் தூக்கிட்டு வந்தது...''
- அவன் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே குறுக்கிட்ட குரு, ''அடடா! நான் அப்பவே அந்தப் பெண்ணைக் கீழே இறக்கி விட்டுட்டேனே! நீ இன்னுமா அவளைச் சுமந்துட்டிருக்கே?''ன்னு கேட்டாராம் புன்னகையோடு.
அந்தக் கால சாமியாரையும் இந்தக் காலத்து போலிச் சாமியார்களையும் ஒப்பிடவில்லை. அதே நேரம், அப்போதைய சீடர்களோடு இன்றைய சீடர்களை ஒப்பிடத் தோன்றியது.
போலிச் சாமியார்கள் சுமந்த அசுத்தங்களை நம்ம சிந்தனைக்குள்ளேயே வெச்சுக்கிட்டிருந்தா, நம்ம மனசும் அசுத்தமாயிடும்!
இரண்டு பேர், ஒரு திருமணத்துக்காக பாண்டிச்சேரி போனாங்க. வைபவம் முடிஞ்சதும், அவங்கள்ல ஒருத்தர், ''பக்கத்துல அரவிந்தர் ஆஸ்ரமமும், சித்தானந்தா சுவாமி கோயிலும் இருக்கு. போய்த் தரிசனம் பண்ணிட்டு வருவோமா?''ன்னாரு.
மற்றவரோ, ''இந்த ஊர்ல விதம்விதமா சோம பானமெல்லாம் கிடைக்குமாமே?''ன்னு சப்புக் கொட்டினார்.
இருவரும் அவரவர் விருப்பப்பட்ட இடங்களுக்குப் போனாங்க. என்ன... ஆஸ்ரமத்துக்கும் கோயிலுக்கும் போனவருக்கு, 'சோமபான' நண்பரைப் பற்றியும், சோமபானங்கள் குறித்துமே சிந்தனை ஓடிக்கிட்டிருந்தது. சோமபான நண்பருக்கோ மனசு முழுக்க ஆஸ்ரமம், தியானம், கோயில், பிரார்த்தனைன்னு தன் நண்பரைப் பற்றின சிந்தனைதான்!
இதுல... கோயில் குளத்துக்குப் போனாலும் சோம பானத்தையே சிந்திச்சுக்கிட்டு இருந்ததால, அவருக்குப் பாவமும், சோமபானத்தைத் தேடிப் போனாலும் கோயில்- குளத்தையே சிந்திச்ச நண்பருக்குப் புண்ணியமும் சேர்ந்துச்சுங்கறதுதான் நீதி! நல்ல சிந்தனை வேணுங்கிறதுக் காக சொல்லப்படற கதை இது.
எனவே, நீங்கள் எதைச் சிந்திக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். காரணம், உங்கள் சிந்தனையே சொற்களாகின்றன; சொற்களே செயல்கள் ஆகின்றன!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலகலப் பக்கம்! - சக்திமித்ரா Empty Re: கலகலப் பக்கம்! - சக்திமித்ரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum