ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தமிழ் இலக்கணம்

View previous topic View next topic Go down

தமிழ் இலக்கணம்

Post by சிவா on Mon Sep 14, 2009 1:38 am

ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும்.

இலக்கியமும் இலக்கணமும்

இலக்கியம் தாய்; இலக்கணம் சேய். இலக்கியம் தேமாங்கனி; இலக்கணம் தீஞ்சுவைச்சாறு. இலக்கியம் பெருவிளக்கு; இலக்கணம் அதன் ஒளி. இலக்கியம் எள்; இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை-பிணைப்பு முறையை நம் முன்னோர் நன்கு அறிந்து தெளிந்திருந்தனர்.

இதனாலேயே,

`இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.'


எனக் கூறிப் போந்தனர். எனவே, இலக்கியப் பெருந் தருவின் நிழலில் எழுந்து நிற்பதே இலக்கணம் என்பது பெறப்படும். இலக்கியமும் இலக்கணமும் வேறுபட்ட நிலையுடையன அல்ல; ஒருவழிப்பட்ட ஒற்றுமையுடையனவே ஆகும்.


இலக்கணத் தோற்றம்:

இலக்கியம் பலவாய்ப் பல்கிப் பெருகி வளரத் தலைப்படும் காலத்தில் மொழியினை ஒழுங்கு படுத்த எண்ணும் மூதறிவாளர் கண்ட முறையே இலக்கணமாகும். இவர்கள், தாம் வாழும் காலத்திற்கும் அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் அறிந்து வகைப்படுத்திக் கூற முயல்வார்கள். இம்முயற்சியின் விளைவே இலக்கணத் தோற்றம் எனலாம். தொல்காப்பியர் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி இலக்கணம் வகுத்தார் எனச் சிறப்புப் பாயிரம் செப்புகின்றது. பாணினிமுனிவர், வேதம் முதலிய வடமொழி நூல்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றின் சாரத்தைப் பிழிந்து பாணினியமாக வடித்துக் கொடுத்தார் என்று கூறுவர். எனவே நூல்கள் பல எழுந்த பின்பே நூல்களின் பண்பு நுவலும் இலக்கணங்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இதுகாறும் கூறியவற்றைக்கொண்டு இலக்கியங்களின் மொழியமைப்பைக் கொண்டு மட்டும் இலக்கணம் தோன்றியது என முடிவு கட்டி விடுதல் கூடாது. இலக்கணத் தோற்றும், இலக்கியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. வழக்கு மொழியின் வாழ்வையும் வளத்தையும் மதித்து அதனையும் தழுவி ஒழுகும் உயர்வுடையது. இதனால்தான், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், `வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித்' தொல்காப்பியம் தொகுக்கப் பெற்றது என அந்நூலின் இயல்பினை எடுத்துரைக்கின்றது. இலக்கணப் புலவர்கள் இலக்கிய அமைப்பினை மட்டும் தழுவி, உலக வழக்கினை உதறித் தள்ளிவிட வேண்டும் என்ற உள்ளம் படைத்தவர்கள் அல்லர். அவர்களது பரந்த நோக்கமெல்லாம் மொழி ஒரு திறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதே. இதனால், அவர்கள், தம் காலங் கடந்த புலமையை ஒரு கட்டுக்குள் அடக்கிக் கொண்டு வாழாமல், இரு வேறு வழக்கின் இயல்பினையும் அறிந்து ஏற்பன ஏற்றுத் தள்ளுவன தள்ளி இலக்கணப் படைப்புக்களை ஈந்துள்ளார்கள்.


இலக்கணம் - சொல்லாராய்ச்சி


இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்னும் வடமொழிச் சொல்லின் சிதைவு என்பர். ஆனால் வடமொழியில் நாம் கருதும் இலக்கணத்தை லக்ஷணம் என்று சொல்வதில்லை. வியாகரணம், சப்த சாஸ்திரம் என்று கூறுவார்கள். இதனால் இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்பதன் சிதைவு என்பது பொருந்தாது. இலக்கு என்னும் தமிழ்ச்சொல், அணம் என்னும் விகுதிபெற்று இலக்கணம் என ஆயிற்று என்று கோடலே பொருந்தும். இச்சொல் சிறந்த தமிழ்ச்சொல்லே; இலக்கணம் என்ற சொல்லினை முதன் முதல் வழங்கியவர் தொல்காப்பியனாரே ஆவர். இவர், இச்சொல்லினை, `பல பொருளை உய்த்துணர்ந்து அவற்றின் இயல்பினை உள்ளவாறு அறிவித்தற்குக் காட்டப்படும் வரையறை' என்ற பொருளிலேயே ஆட்சி செய்துள்ளார். சிலர், புலம் என்னும் சொல், தமிழ் இலக்கணத்தைக் குறிக்கும் என்பர். இதற்குச்சான்றாகப் `புலம் தொகுத்தோனே போக்கறுபனுவல்' என்னும் பனம்பாரனார் கூற்றைக் காட்டுவர். வேறு சிலர், இயல் என்பது இலக்கணத்தினைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பர்.


இலக்கணத்தால் ஏற்படும் நன்மை


இலக்கணத்தை ஏன் படிக்க வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மை என்ன? என்று இன்று சிலர் கேட்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்ற விடையினை அளிக்க வேண்டியது நம் பொறுப்பாகும்.


இலக்கணத்தால் என்ன நன்மை என்பதற்கு ஆறுமுக நாவலர் அவர்கள், பிழையறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம் என அழகாக விடை கூறியுள்ளார்கள். மனிதன், தன் எண்ணத்தினை வெளிப்படுத்தப் பயன்படும் கருவிகளுள் எழுத்தும் பேச்சும் தலைசிறந்தன. இவ்விரண்டுமின்றேல் வாழ்வேது? வளர்ச்சியேது? இத்தகைய வாழ்வோடு இணைந்த பேச்சினையும் எழுத்தினையும் ஒழுங்குபடுத்தித் தரும் சாதனமாக இலக்கணம் இலங்குகின்றது.

எழுத உதவுவதோடு படிக்கவும், உதவுவது இலக்கணமாகும். இலக்கண அறிவு இன்றேல் ஒரு நூலையும் நாம் படித்தல் இயலாது. இந்த முடிபு, தமிழினைத் தாய் மொழியாகக் கொண்ட நமக்கு அவ்வளவு எளிதில் புலப்படாது. ஏனெனில், தமிழ், வழக்கில் இருக்கும் வளமான மொழி. ஆனால் வடமொழி, இலத்தீன், கீரீக் முதலியவற்றில் உள்ள நூல்களை உணர வேண்டுமாயின், இலக்கண அறிவு மிகமிக இன்றியமையாததாகும். அப்பொழுதுதான், அம்மொழிகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பொருளினைத் தெளிவாக அறிந்து கொள்ளுதற்கு உரியதும் இலக்கணம் ஆகும். இம்முறையில் இலக்கணம் செய்யுள் வழக்குக்கு மட்டுமன்று; பேச்சு வழக்குக்கும் இன்றியமையாதது என்பதனை அறிதல் வேண்டும். உதாரணமாக ஒன்றனைக் காண்போம். வாழைபழம் என்பதற்கும் வாழைப் பழம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. வாழைபழம் என்பது, வாழையும் பழமும் என உம்மைத் தொகையாகப் பொருள்படும். வாழைப்பழம் என்பது வாழையினது பழம் என வேற்றுமைத் தொகையாகப் பொருள்படும். இந்த வேறுபாட்டுணர்ச்சியை அறிந்து கொள்ள இலக்கணம் உதவுகின்றது; நன்மை செய்கின்றது.

மொழியினைக் கட்டிக்காத்துச் செம்மொழியாக்கும் பேராற்றலும் இலக்கணத்திற்கு உண்டு. ஒரு மொழி, பல்வேறு கிளை மொழிகளாகப் பிரிந்து போய்விடாமல், ஒருமொழி என்ற கூட்டுக்குள் நிறுத்திவைக்க இலக்கணம் முயல்கிறது. இப்பணியில் இலக்கணம் மன்னவனைப் போல ஆட்சி செய்கிறது. தமிழைப் பேசுவோர் எங்கிருந்தாலும், எவ்வாறு பேசினாலும் எழுத்துலகில் ஒன்றுபட்டு நிற்கக் காண்கிறோம். பேச்சு மொழி புரியாவிடினும் எழுத்து மொழி இனிமை தரப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், எழுத்து மொழியில் ஏற்பட்ட ஒற்றுமையேயாகும். இவ்வொற்றுமை இலக்கணத்தால் விளைந்தது எனலாம். இலக்கணம் மட்டும் இல்லாதிருக்குமானால், இன்றிருக்கும் பேச்சுத்தமிழ், எத்துணையோ கிளைமொழிகளாகத் தனித்தனி புரிந்து விடும். இந்தப் பிரிவைத் தடுத்து, ஒற்றுமையை நிலை நிறுத்துவது இலக்கணமாகும். இக்கொள்கையினைச் சில மொழி நூலார்கள் ஒப்பமாட்டார்கள். பேச்சுத் தமிழுக்கும் இலக்கணம் கண்டு அதனையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் `பேச்சுத் தமிழ்க் காதல்' எத்தகையது என்பது புரியவில்லை. தமிழில், எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் இடைவெளி கொண்டவனாய், இருவேறு மொழிகள் போன்றனவாய்ச் செல்லவில்லை. பெரும்பாலும் ஒற்றுமைப்பட்டே செல்கின்றன. மேலும் பேச்சுத் தமிழ், சார்ந்திருக்கும் இடத்தால் வேறுபாடு சிறிது அடைந்துள்ளது. இப்பேச்சுத் தமிழினை அப்படியே எழுதுதல் வேண்டும் என எண்ணி எழுதியவர்கள் ஏற்றம் பெறவில்லை; வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பேச்சுத் தமிழை வளர்த்து அதனால் பல கிளை மொழிகள் உருவாக மொழியியலார்கள் வழி வகுத்துக் கொடுத்து விடுதல் கூடாது.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by சிவா on Mon Sep 14, 2009 1:39 am

இலக்கணம் சட்டமா?

இலக்கணம் மொழியின் சட்டம்; அதன்படி நடக்க இயலாது எனக் கருதிச் சிலர் அஞ்சுகின்றனர். மற்றும் சிலர், இலக்கணம் சட்டமே; அது வாழ்வின் உயிர்நாடி எனக்கருதி அடிமையாகின்றனர். முன்னவர் மொழியறியாதவர்; பின்னவர் வாழ்வறியாதவர். இலக்கணத்தினைக் கண்டு அஞ்ச வேண்டியதும் இல்லை. இலக்கணத்திற்கு அடிமையாக வேண்டியதும் இல்லை. இலக்கணம் மொழியின் பிரிவு; கலங்கரை விளக்கம்; சட்டமன்று. சட்டம் இவ்வாறு நட, இன்றேல் குற்றம் என ஆணையிடும். இலக்கணம் ஆணையிடாது. இவ்வாறு செல்லுதல் மரபு; இதனை விலகியும் தேவை வரும்போதும் செல்லலாம் எனத் துணை நிற்கும்.

இலக்கணத்தை அரசியல் சட்டம் போல ஆக்குவோர் மொழியின் நிலையறியாதவரே ஆவர். இவர்களால் ஏதும் செய்ய இயலாது; எழுதவும் இயலாது. சிறந்த இலக்கணப் புலவன் எழுத்தாளனாக முடியாது என்று இயம்புவார்கள். இது முற்றிலும் உண்மை. இலக்கணத்தை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு சட்டம் என எண்ணிக் கொண்டு பேசவும் எழுதவும் முற்படுவோர், பேசவும் முடியாது; எழுதவும் முடியாது. அவ்வாறு இலக்கண அளவுகோலைக் கொண்டு எழுதவும் பேசவும் துணிந்து விடுவார்களேயானால், அவர்கள் பேசும் பேச்சில், எழுதும் எழுத்தில் உயிர் இருக்காது; அமைப்பு இருக்கும்; அழகு இருக்காது. இதனால்தான், `காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று' எனச் சொல்லி வைத்தார்கள். யாப்பிலக்கணத்தை வைத்துக் கொண்டு, ஒருவன் கவிதையாக்கத் தொடங்கினால் அக்கவிதை, கவிதையாகாது. எலும்புச் சட்டகமாய் விடும்.

இலக்கணம் வேண்டாம் எனச் சொல்லுவோர் எழுத்திலும், பேச்சிலும் அவர்களையறியாமலே இலக்கணம் அமைந்துள்ளது. எழுத்திற்கும் பேச்சிற்கும் ஏற்ற அமைப்பு முறை இன்றேல், வனப்பிருக்காது. ஆற்று வெள்ளம், கரைக்கு உட்பட்டுச் செல்லுமானால் கவின்பெறும்; இன்றேல் தாறுமாறாக ஓடிச் சென்று வறண்டொழியும். இலக்கணம் வெள்ளத்திற்கு இடும் கரை; கரை வேண்டாம் எனச் சொல்வோர் வளம் வேண்டாம் எனச் சொல்லுபவர் ஆவார். இவர்களே இலக்கணம் வேண்டாம் எனச் சொல்லி உள்ளம் சாம்புபவர்கள். இவர்கள் இலக்கணம் சட்டமன்று; அமைதி நெறி என உணர்ந்தால் இவ்வாறு கூற மாட்டார்கள்.

இலக்கணம் என்றும் ஒரே இயல்பினதாய் இருக்க வேண்டும் என எண்ணி இறுமாந்தவர்கள் அல்லர் நம் முன்னோர். மொழியின் வாழ்வும் கால வெள்ளத்தின் போக்கும் அறிந்தவர்கள்; மொழி உயிருள்ளது; வளரும்; மாறும் எனக் கண்டவர்கள். இதனால் இலக்கணம் செய்யும்போது, புறனடை அமைத்துப் போந்தார்கள். நன்னூலார், `பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' எனக் கூறுவார். இத்தகைய இலக்கணம் நம்முன்னோர் அறிந்து தெளிந்து அமைத்த மொழியமைப்பு என்றும் யாவரும் ஏற்றிப் போற்றும் இயல்பில் அமைந்தது ஆகும்.


தமிழ் இலக்கணம்

தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பாகுபாடு களையுடையது. முத்தமிழ், எனப் போற்றும் பெருமையுடையது. `முத்தும் முத்தமிழும் தந்து முந்துமோ வானுலகம்?' என இறுமாப்போடு கேட்பார் கம்பர். இம்முத்தமிழுக்கும் இலக்கணம் கண்டனர் நம்முன்னோர். கிடைக்காத அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணமும் அமைத்தனர். ஆயினும் இயற்றமிழ் இலக்கணமே, இலக்கணம் என்னும் பெயருக்குத் தனியுரிமை பூண்டதாய் விளங்குகின்றது.


இயற்றமிழ் இலக்கணம்

செய்யுளும் உரைநடையும் ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். இப்பிரிவில் இலக்கியமும் அடங்கும். இலக்கணமும் அடங்கும். செந்தமிழால் இயன்ற செய்யுள்களும் உரைநடையும், கொடுந்தமிழால் அமைந்த செய்யுள்களும் உரைநடையும் இயற்றமிழே ஆகும். இத்தமிழின் இலக்கணத்தையே தமிழ் மக்கள் பெரிதும் வளர்த்துள்ளனர். தமிழின் உயிர்க் கிழவன் தொல்காப்பியன் இத்தமிழுக்கே இலக்கணம் கண்டான்.


இலக்கணப் பிரிவு

தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று பிரிவில் இலக்கணங்களைக் கூறியுள்ளார். இம்மூன்றினையும் மூன்று இலக்கணம் எனக் கொள்வோம். தொல்காப்பியப் பொருளதிகாரம் மிக விரிவுடையது. இப்பகுதியில், பொருள், உவமை, யாப்பு என்பன பற்றியும் கூறுகின்றார். இம்மூன்றினையும் பொருளிலக்கணம், அணியிலக்கணம், யாப்பிலக்கணம் என மூன்று தனி இலக்கணங்களாகக் கொண்டால் எழுத்தும், சொல்லும் இயையத் தொல்காப்பியம் ஐந்திலக்கண நூல் ஆகும். ஐந்திலக்கணமாவன: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன. தொல்காப்பியம் ஐந்திலக்கணமாகக் கருதப்படுவதும் உண்டு என்பது, பேராசிரியர், `யாப்பதிகாரம் எனச் செய்யுளியலைப் பிறர் கூறுவர்' என்ற காட்டுதலாலும், சேனாவரையர் `உவமையியலை அணியியல்' எனச் சுட்டுதலாலும் பெறப்படும். இவ் ஐந்திலக்கணத்துள் ஒரு பகுதியான பொருளை அகப் பொருள், புறப்பொருள் என இரண்டாகக் கொண்டால் ஆறு இலக்கணம் என்று கூடக் கூறலாம். பிற்காலத்தில் வளர்ந்த பாட்டியலைச் செய்யுளின் ஒழிபு எனக் கொண்டு, செய்யுளிலக்கணம், பாட்டியலிலக்கணம் என இரண்டாகப் பிரித்து, ஏழு இலக்கணம் என்று கொள்வது, பெரிதும் தவறாகிவிடாது. இன்று தமிழில் ஏழு இலக்கணங்களும் காணப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியைத் தனித்தனியாகக் காண்போம். தொல்காப்பியருக்கு மூன்று இலக்கணமாகக் கொள்வதே உடன்பாடு என்றும் ஐந்திலக்கணமும் உடன்பாடு அன்று என்றும் கூறுவர்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by சிவா on Mon Sep 14, 2009 1:40 am

ஐந்திலக்கண நூல்கள்

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன ஐந்திலக்கண நூல்களாகும். இவற்றுள் தொல்காப்பியத்தை ஐந்திலக்கணம் எனக் கூறுதல் மரபன்று. ஆயினும் ஐந்திலக்கணமும் இதன்கண் உண்டு. வீரசோழியம் பொருளை இரண்டு கூறாகக் கொண்டு இலக்கணமும் புறப்பொருள் இலக்கணமும் உணர்த்துகின்றது. இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள், பாட்டியல் இவற்றின் இலக்கணமும் கூறுகின்றது. தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் என்பன பாட்டியல் இலக்கணமும் கூறுகின்றன. சாமிநாதம் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூல் முழுதும் வெளிவரவில்லை. தமிழ் நெறி விளக்கம் என்னும் நூலும் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூலில் அகப்பொருள் பகுதியே கிடைத்துள்ளது. பிற பகுதிகள் கிடைக்கவில்லை. நன்னூலும் ஐந்திலக்கண நூல் என்று கூறுவர். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் என்னும் நூலும் ஐந்திலக்கணம் உணர்த்துவது என்பர். இனி ஒவ்வோர் இலக்கணப் பிரிவு பற்றியும் காண்போம்.


எழுத்தும் சொல்லும்

தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் ஆய்ந்தார்; பொருளும் ஆய்ந்தார். ஆனால் பின் வந்தோர் எழுத்தும் சொல்லுமே சிறப்பாகக் கருதத் தக்கன என எண்ணினர். இந்நிலையில் எழுத்தும் சொல்லும் பற்றி மட்டும் இலக்கணங்கள் தோன்றின. கி.பி. 12-ம் நூற்றாண்டளவில் எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நேமிநாதம் தோன்றியது. நன்னூல் கி.பி. 13-ம் நூற்றாண்டில் எழுந்தது. இந்நன்னூல் ஐந்திலக்கணமும் உணர்த்துவது எனக் கொண்டாலும், எழுத்தும் சொல்லுமே நிலைத்தன.

எழுத்தும் சொல்லும் இலக்கணமேயாயினும் சொல்லிலக்கணமே இலக்கணம் எனக் கருதினர். வடமொழி வாணர்கள் சொல்லிலக்கணத்தையே வியாகரணம் எனக் கொண்டனர். வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் சொல்லக்கணத்தையே பெரிதும் ஆராய்ந்தன. கி.பி. 17-ம் நூற்றாண்டில் எழுந்த பிரயோக விவேகமும், இலக்கணக் கொத்தும் சொல்லிலக்கணம் பற்றியே விரிவாக விளக்கின.

எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன.

அகப்பொருள் இலக்கணம்

பொருளதிகாரம் கிடைக்காததால் எழுந்த இலக்கண நூலே இறையனார் களவியல் என அந்நூல் உரை கூறுகின்றது. இறையனார் களவியல் தோன்றிய காலத்தில் எழுத்தும் சொல்லும், யாப்பும் கிடைத்தன. பொருள் கிடைக்கவில்லை; ஆதலால் இறையனார் களவியல் காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அறிகிறோம். இக்காலத்தில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நான்கு வகையாக ஆராயப்பட்டது என்று தோன்றுகிறது. மேலும் பொருள் என்பது அகப்பொருளே என்பதும் நாம் அறியவேண்டும். பொருளதிகாரம் வல்லாரைக் காணோம் என்று வருந்தியவர்கள் இறையனார் களவியல் கண்டனம் என அகப்பொருள் இலக்கணத்தையே பொருளாகக் கருதினர். இறையனார் களவியல் தோன்றிய காலமுதலே அகப்பொருள் தனியாக வளரத் தொடங்கியது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் நம்பியகப் பொருள் தோன்றியது. இந்நூலுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் திருக்கோவையாரில் அகப்பொருள் துறைகள் அமைந்த சூத்திரங்களும், துறைகளை விளக்கும் கொளுக்களும் காணப்படுகின்றன. இவை, யாரால் இயற்றப்பட்டன என்று புலனாகவில்லை. பின்வந்த பழனிக்கோவையிலும் இவ்வமைப்பு காணப்படுகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மாறனகப்பொருள் தோன்றியது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற இலக்கண விளக்கம், தொல்காப்பியத்தினையும் நம்பியகப் பொருளையும் பின்பற்றி அகப்பொருள் இலக்கணம் வகுக்கின்றது. முத்துவீரியம், தொன்னூல் விளக்கம் என்பனவும் அகப்பொருள் இலக்கணத்தினைக் கூறின. இறையனார் களவியலை ஒட்டிக் களவியற்காரிகை என்னும் நூலும் இயற்றப் பெற்றது. பரிமேலழகர் முதலியோருக்கு முற்பட்ட இந்நூல், அகப்பொருள் இலக்கணம் உணர்த்துகின்றது.

தொல்காப்பியர், அகப்பொருள் இலக்கணத்தினை வகுக்கும்போது, ஒவ்வொரு பாடலும் ஒன்றற்கொன்று தொடர்பின்றித் தனித்தனி நாடக பாத்திரங்களின் கூற்றாக அமைந்த நிலைக்கே இலக்கணம் கூறுகின்றார். இதனால் தொல்காப்பியத்தில் கூற்று உண்டேயன்றித் துறையில்லை என அறியலாம். பின் வந்தோர் நாடக பாத்திரம் பேசுதல்போல அமைந்த நிலையினின்றும் வேறுபட்டுத், துறைகளாகப் பகுத்து, ஒரு தொடர்கதை போல இலக்கணம் கண்டார்கள். இதனால் பல கோவை இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்தன.

அகப்பொருள் இலக்கணம் கூறும் நூல்கள்: தொல்காப்பியம், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், வீரசோழியம், நம்பியகப்பொருள், களவியற்காரிகை, மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன. இவையன்றித் திருக்கோவையார், பழனிக்கோவை ஆகிய நூல்களில் உள்ள நூற்பாக்களும் அகப்பொருள் இலக்கணம் கூறுகின்றன.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by சிவா on Mon Sep 14, 2009 1:42 am

புறப்பொருள் இலக்கணம்

தொல்காப்பியம் புறத்திணையியல், புறப்பொருள் இலக்கணம் பற்றிப் பேசுகின்றது. இதன்பின் பன்னிருபடலம் எழுந்தது. பன்னிரு படலத்தின் வழிநூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் பின் தனியாகப் புறப்பொருள் நூல்கள் தோன்றவில்லை. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என்பன ஓரளவு புறப்பொருளைப் பற்றிய இலக்கணம் கூறுகின்றன. வீரசோழிய உரைகாரர் மேற்கோளாகக் காட்டும் புறப்பொருள் பற்றிய நூற்பாக்கள் தனி நூலைச் சார்ந்தனவா? அவர் பாடியனவா? என்பது தெரியவில்லை.

புறப்பொருள் இலக்கணத்தைப் பொறுத்தமட்டில் புறப்பொருள் வெண்பாமாலையே சிறப்புற்று விளங்குகின்றது. வேறு புறப்பொருள் இலக்கண நூல்கள் தோன்றாமைக்கு உரிய காரணம் விளங்கவில்லை. ஒரு வேளை, காதல் பாடல்களும் - ஆன்மீக இலக்கியங்களும் போதும் என நினைத்தார்களோ, என்னவோ? அறியோம். புறப்பொருள் இலக்கியங்களும் மிகுதியாகத் தோன்றவில்லை என்பதனை இங்கு நாம் சிந்தித்தல் வேண்டும். பொதுவாக மனிதனை விலங்காகவும் மனித இதயத்தைக் கல்லாகவும் ஆக்கக்கூடிய போர் முறைகளில் கவிஞர்களுடைய உள்ளம் யாப்பிலக்கணம்

தொல்காப்பியம் செய்யுளியல் மிக விரிவுடையது. இவர் காலத்திலேயே பலர் யாப்புப் பற்றித் தனியாக ஆராய்ந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் பல இடங்களில் `யாப்பறி புலவர்' எனச் சுட்டுதல் இதற்குச் சான்றாகும். தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணவர் எனக் கூறும் காக்கைப்பாடினியார் யாப்பிலக்கணம் செய்ததாக அறிகிறோம். காக்கைப்பாடினியார் என்னும் பெயருடையார் இருவர், சிறுகாக்கைப்பாடினியம், பொருங்காக்கைப்பாடினியம் என்னும் இரண்டு நூல்கள் இயற்றினர். இவர்கள் பல்லவர் காலத்தினர் என்பர். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கலமும். யாப்பருங்கலக் காரிகையும் தோன்றின. இந்நூலுரைகளால் பல யாப்பிலக்கண நூல்களை அறிகிறோம். அவற்றை நூலின் இறுதியில் உள்ள பட்டியலில் காண்க.

பாவிற்கு இலக்கணம் கூறுதற்குப் பதிலாக அப்பாவின் வகைகளுக்கு எடுத்துக் காட்டும் விளக்கமும் அளிக்கச் சில நூல்கள் தோன்றின. மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, பல்சந்தப் பரிமளம், திருவலங்கற்றிரட்டு என்பன இத்தகைய நூல்கள். விருத்தப்பாவியல் என்ற நூல், சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. இது, வசனத்தில், விருத்தத்தை வடமொழி மரபு பற்றி ஆராயத் தொடங்கியது. வண்ணங்களின் இலக்கணம் கூறும் நூலினைத் தண்டபாணி சுவாமிகள் `வண்ணத்தியல்பு' என்னும் பெயருடன் செய்தார். இந்நூல் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

செய்யுள் இலக்கணம் கூறும் நூல்கள்:
- தொல்காப்பியம், யாப்பருங்கலம், காரிகை, வீரசோழியம், பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், திருவலங்கற்றிரட்டு, பல்சந்தப் பரிமளம், விருத்தப்பாவியல், வண்ணத்தியல்பு முதலியன.


அணியிலக்கணம்

தொல்காப்பியர் உவம இயலில் உவமைக்கே முதலிடம் கொடுத்தார். இவ்வுவமையின் வேறுபாடுகளே ஏனைய அணிகள் என்பது அவர் கருத்து. பிற்காலத்தில் அணியிலக்கண ஆராய்ச்சி விரிந்தது. வடமொழியின் பயனால், இவ்வாராய்ச்சி பரந்துபட்டது. வடமொழிக்காவ்யாதர்சத்தை அடியொற்றித் தமிழில் தண்டியாசிரியர் அணிநூல் செய்தார். அவருக்கு முன் அணியியல் என்னும் பெயரால் நூல் ஒன்றும் இருந்தது. வீரசோழிய ஆசிரியர் 35 அணிகள் பற்றி விளக்குகின்றார். தண்டியலங்காரமும் 35 அணிகள் பற்றிக் கூறுகின்றது. ஆனால் வீரசோழியமும் தண்டியலங்காரமும் கூறும் அணிகளில், சில வேறுபாடுகள் உள்ளன. இலக்கண விளக்க நூலாசிரியர், தண்டியாசிரியரைப் பின்பற்றி 35 அணிகளே கொண்டார். மாறனலங்காரம் 64 அணிகளைப் பற்றிக் கூறுகின்றது. வடமொழிச் சந்திராலோகத்தையும் அதன் உரையான குவலயானந்தத்தையும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழி பெயர்த்தனர். இவை 100 அணிகள் பற்றிப் பேசுகின்றன. முத்துவீரியம் 58 அணிகள் பற்றிக் கூறுகின்றது.

அணியிலக்கணம் கூறும் நூல்கள்:- தொல்காப்பியம், வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சந்திராலோகம், குவலயானந்தம் என்பன.


பாட்டியல்

யாப்பிலக்கணத்துள் பாட்டியல் அடங்கும். இப்பாட்டியல் ஆராய்ச்சியினை யாப்பின் ஒழிபியல் என்று கூடக் கூறலாம். இவ்வாராய்ச்சியினை இரண்டு கூறாகப் பகுத்து விளக்கம் கண்டனர். முதற்பகுதியில் பாட்டுக்கும் பாடப்படுவோனுக்கும் உரிய பத்துப் பொருத்தங்கள் ஆராயப்பெறும். இப்பொருத்தங்கள் சோதிட நூலார் கூறும் மணப் பொருத்தங்கள்போல, இலக்கண நூலார் கூறும் இலக்கியப் பொருத்தங்களாகும். அவை: மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணவு, வருணம், நாள், கதி, கணம் என்னும் பொருத்தங்கள். இவற்றோடு நாழிகைப் பொருத்தம், பெயர்ப்பொருத்தம், புட்பொருத்தம் என்பனவற்றையும் சிலர் சேர்த்துக் கூறுவர். இப்பொருத்தங்கள் பாட்டுக்கும் பாடப்படுவோனுக்கும் உரியது என்பதனை,

`விரித்த பாமகட்கும் வேட்கும் இறைக்கும்
பொருத்தம் ஈ.ரைந்து போற்றல் வேண்டும்'


என்பதனால் உணரலாம். இப்பொருத்தங்கள் ஒன்றப் பாடினால் பாடப்பெறுவோர் நன்மையடைவர். இன்றேல் அவர்கள் செல்வம் இழப்பர்; நோய் அடைவர்; சுற்றத் தொடர்பு நீங்குவர்; இறப்பும் எய்துவர். அவர்களுக்குச் சந்ததி ஏற்படாது. கடவுளைப் பாடும் போதும் பொருத்தங்கள் இல்லாமல் பாடினால், பாடுவோர் துன்பம் அடைவர் எனப் பாட்டியல் நூல்கள் பகர்கின்றன.


பொருத்தங்களின் வீழ்ச்சி

பத்துப் பொருத்தங்களுள் மங்கலப் பொருத்தம், சொற்பொருத்தம் என்னும் இரண்டும் சொல் நோக்கியன. கணப்பொருத்தம் சீர்நோக்கியது; ஏனைய பொருத்தங்கள் எழுத்து நோக்கியன. இப்பொருத்தங்களைப் பற்றித் தொல்காப்பியர் ஏதும் கூறவில்லை. வெண்பாப் பாட்டியல் தோன்றிய கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குச் சற்று முன்பே இம்முறை ஏற்படத் தொடங்கியிருத்தல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியில், ஆனந்தக் குற்றம் என்பது அறுவகைப்படும் என விளக்கப்பட்டுள்ளது. இதனால் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே இவ்வாராய்ச்சி தோன்றிவிட்டது என்னலாம். இக்கொள்கை வடநூல் மரபினைத் தழுவி எழுந்தது என்பர். இக்கொள்கையினைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் ஏற்கவில்லை. அவர்களுக்கு இக்கொள்கை உடன்பாடும் அன்று. நச்சினார்க்கினியர், பத்துப்பாட்டுரையில், `நூற்குற்றம் கூறுகின்ற பத்து வகைக் குற்றத்தே, தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்னும் குற்றத்தைப் பின்னுள்ளோர், ஆனந்தக் குற்றம் என்பதோர் குற்றம் என்ற நூல் செய்ததன்றி, அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இக்குற்றம் கூறாமையில், சான்றோர் செய்யுட்கு இக்குற்றம் உண்டாயினும் கொள்ளார் என மறுக்க' என்பர். பேராசிரியர், இம்மரபினைப் பிற்காலத்துத் தோன்றிய வழக்கு எனச்சொல்லி பாட்டியல் மரபு என்னும் நூலினை எடுத்துக்காட்டி, இந்நூல் நின்று பயனின்மை என்னும் குற்றத்திற்கு, மேற்கோளாக அமைவது என்பர். இவற்றால் பொருத்தம், குற்றம் முதலிய வேண்டாத அமைப்புக்களை அக்காலத்திலேயே அறிஞர்கள் எதிர்த்தனர் என்பது போதரும். இக்காலத்தில் இம்மரபு முற்றிலும் அழிந்து விட்டது என்று கூடக் கூறலாம்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by சிவா on Mon Sep 14, 2009 1:44 am

பாட்டியல் சாதி

மனித குலத்தில் சாதிப் பிரிவினையைப் பார்த்தவர்கள், பாவகையிலும் சாதியை நாட்டத் தயங்கவில்லை. இன்ன குலத்தவரை இன்னபாவினால்தான் பாடவேண்டும் என வரையறுத்தனர். வேதியன், வேந்தன், வணிகன், வேளாளன் என்ற நான்கு குலங்களையும் முறையே வெண்பா, அகவல், கலி, வஞ்சி என்ற நான்கு வகைப்பாக்களாலும் பாடவேண்டும் என்று கூறினர். `சாதிகள் இல்லையடி பாப்பா' என மனித சாதியையே தகர்த்தெறியும் போதும், பாட்டுச் சாதி எவ்வளவு நாள் நிலைத்து நிற்கும்? அழிந்தொழிந்தது நகைப்புக்கு இடனாகியது.


பிரபந்த இலக்கணம்

பொருத்தங்கள் அல்லாத மற்றொரு வகைப்பிரிவு, பிரபந்தங்களின் அமைப்பினைப் பற்றிக் கூறுவதாகும். தொல்காப்பியர், ஓரளவு குறிப்பாகச் சுட்டிச் சென்ற இலக்கியப் பாகுபாடுகளைக் கால வளர்ச்சியில் விரித்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பணியில் பாட்டியல் நூல்கள் தொல்காப்பியர் காலத்தில், 42, செய்யுள் வகைகள் இருந்தன. அவர் காலத்தில் பரந்துபட்ட அளவில் பல்வேறு வகைத் தனி இலக்கியங்கள் இல்லை. ஆயினும், அத்தகைய இலக்கியங்கள் காலப்போக்கில் தோன்றுதல் கூடும் என்பதனை அறிந்தே விருந்து என்னும் வனப்பினை அமைத்துள்ளார். பிற்காலத்தில் பல புதிய இலக்கிய வகைகள் பழமையின் அடிப்படையில் தோன்றின. இதற்கு ஏற்பப் பாட்டியல் நூல்கள், அதன் அமைப்பையும் ஒழுங்கையும் ஆராய முற்பட்டன.


பாட்டியல் நூல்கள்

இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாட்டியல் நூல்கள் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், இலக்கண விளக்கத்துள் அமைந்த இலக்கண விளக்கப் பாட்டியல் என்பன. மேலும் முத்துவீரியத்துள்ளும், தொன்னூல் விளக்கத்திலும் பாட்டியலைக் காண்கிறோம். பிரபந்ததீபிகை என்னும் நூலும் பாட்டியலே ஆகும். இவையன்றி வாருணப் பாட்டியல், தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், அகத்தியர் பாட்டியல், மாமூலர் பாட்டியல், பாட்டியல் மரபு, பிரபந்ததீபம், பிரபந்தத்திரட்டு முதலிய நூல்கள் பற்றியும் சில சில குறிப்புக்கள் கிடைத்துள்ளன. பன்னிருபாட்டியல் முதலிய நூல்கள் பற்றிய செய்திகளை, அவ்வந்நூல் பற்றிய தலைப்பில் காண்க. அங்கு ஒவ்வொரு நூலின் சிறப்பியல்புகளையும், அமையும் முறைகளையும் குறித்துள்ளேன்.


பாட்டியல் கூறும் பிரபந்தங்கள்

பன்னிரு பாட்டியலில் 65 இலக்கியங்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுந்த வெண்பாப் பாட்டியலில் 56 இலக்கியங்களைப் பற்றிய இலக்கணம் உள்ளது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நவநீதப் பாட்டியலில் ஏறத்தாழ 97 இலக்கிய வகை பற்றிய விளக்கம் அமைந்துள்ளது. இவற்றை நோக்கும் போது கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை இலக்கிய வகையில் வரையறை எதுவும் ஏற்படவில்லை என்பது புலனாகின்றது. இலக்கிய உலகில் காணப்பட்ட இலக்கியங்களுக்கு எல்லாம் பாட்டியல் ஆசிரியர்கள் இலக்கணம் அமைத்தனர். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஒருவாறு இவ் இலக்கியங்களுக்கு வரையறை ஏற்பட்டது என்று நினைக்க இடமுண்டு. கி.பி. 1635-இல் வாழ்ந்தவனாகக் கருதப்படும் சிவந்தெழுந்த பல்லவராயன் மீது பாடப்பெற்ற உலாவில்,

`தொண்ணூற்றாறு
கோலப்ர பந்தங்கள் கொண்டபிரான்'


என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரித்துக் காணும் மரபு ஏற்பட்டது என அறியலாம். கி.பி. 1732-இல் வீரமாமுனிவரால் இயற்றப் பெற்ற தொன்னூல் விளக்கத்திலும் சதுரகராதியிலும் 96 பிரபந்த வகைகள் காணப்படுகின்றன.. இவ்வகராதிக்கு முற்பட்டது எனக் கூறும் பிரபந்த மரபியல் என்னும் நூலில்,

`பிள்ளைக் கவிமுதல் புராண மீறாத்
தொண்ணூற் றாறுஎனும் தொகையதாம்'


என்று 96 வகைப் பிரபந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன, ஆனால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கண விளக்கப் பாட்டியலிலும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த சிதம்பரப் பாட்டியலிலும் 96 என்ற வரையறை காணப்படவில்லை. இலக்கண விளக்கப் பாட்டியல் 68 இலக்கியப் பிரிவுகளையும், சிதம்பரப் பாட்டியல் 62 இலக்கியப் பிரிவுகளையும் குறிப்பிடுகின்றன. பிரபந்த தீபிகையில் 97 பிரபந்தங்கள் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் நோக்கும்போது, கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை 96 இலக்கியம் என்ற வரையறை ஏற்படவில்லை என்பதும், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சிவந்தெழுந்த பல்லவராயன் காலத்தில் 96 என்ற பகுப்பு ஏற்பட்டது என்பதும் இவ்வரையறையைச் சிலர் தழுவினர், சிலர் தழுவ வில்லை என்பதும் புலனாம். மேலும் 96 வகைப் பிரபந்தங்களுக்கும் அடங்காமல் அம்மானை, அலங்காரம், வண்ணம், வில்பாட்டு, புலம்பல், தென்பாங்கு, சிந்து, சீட்டுக் கவி என்பன ஆதியாக எண்பதுக்கு மேற்பட்ட புதிய இலக்கியங்கள் உள்ளன. இதனை நோக்கும்போது வளர்ந்து வரும் சமுதாயத்தில் இலக்கிய ஆக்கம் இவ்வளவுதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது என்பது விளங்கும்.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by மீனு on Mon Sep 14, 2009 1:48 am

ஷிவா அண்ணா இந்த தகவல் எல்லாம் நந்திதா அக்கவுக்காக தானே போடுறீங்கள்.. இல்லை மீனுவின் தொல்லை தாங்க முடியாமல் ..இப்படி புரியாத இலக்கணம் போட்டு விரட்ட பார்க்கின்றீர்களா ..உண்மை சொல்லுங்கள்.. நீங்கள் போடும் புறப் பொருள் ,அகப் பொருள் இலக்கணம் எல்லாம் நந்திதா அக்காவுக்கு அல்வா சாப்பிடுவது போல ..பாருங்கள் இதுக்கு இன்னொரு அருமையான விளக்கம் நந்திதா அக்கா தருவா.. ஆளை விடுங்கப்பா இப்பவே கண்ணை கட்டுதே..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by ரூபன் on Mon Sep 14, 2009 1:49 am

மீனு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அருமையான உழைப்பு பெரியப்பு
எனக்கு தமிழ் இலக்கண நூல் வேண்டும் எங்காவது கிடைக்குமா பெரியப்பு

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by சிவா on Mon Sep 14, 2009 1:57 am

அடுத்த கட்டுரை ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் பற்றி வருகிறது! படித்துப் பயன் பெறுங்கள்



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் இலக்கணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 03, 2011 10:46 pm

பொறுமையாகப் படிக்கவேண்டிய கட்டுரையாகும்...மீண்டும் வரவேண்டும்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum