புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
3 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
284 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 8 of 84 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 46 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 17, 2013 8:26 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (51)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘கமலிக்குப் பணம் தந்தான் ’ – இத் தொடரில் கமலி அருகே ஒட்டிக்கொண்டு ஒரு ‘கு’ உள்ளதல்லவா ? இதனைத்தான் நான்காம் வேற்றுமை உருபு என்பர்.

நான்காம் வேற்றுமை உருபு, ‘குவ்வுருபு’ எனவும் அறியப்படும்.

நான்காம் வேற்றுமை என்னென்ன பொருள் நிலைகளில் வரும் ?

தொல்காப்பியர் தரும் பட்டியல் ! :-

“அதற்குவினை உடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்
அதற்குயாப் புடைமையின் அதன்பொருட் டாதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்று
அப்பொரொட் கிளவியும் அதன்பால என்மனார்” (வேற்றுமையியல் 15)

புலவர்கள் தரும் ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்துப் ,புதிய எடுத்துக்காட்டுகள் மூலம் மேல் பட்டியலை விளக்கலாம் ! :-
1. ‘அதற்கு வினை உடைமை’ – ‘காசுக்குத் தேங்காய் உரித்தான்’

ஒரு செயலை (வினையை) எதற்குச் செய்கிறான் என்ற கருத்து தொடரில் வரவேண்டும் ! அவ்வளவுதான் !

2 . ‘அதற்கு உடம்படுதல்’ – ‘ காதலனுக்குக் காதலியை உடம்படுத்தினாள்’ .

இதற்கு எடுத்துக்காட்டாகச், ‘சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர்’ எனும் தொடரையே கல்லாடனார் (கி.பி. 15 ஆம் நூ.ஆ.) வரை உரையாசிரியர் பலரும் தந்துளர் !

‘சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் ’– சாத்தனுக்குத் திருமண வகையால் பெண்மகளைச் சேர்த்துவைத்தனர் சான்றோர்!

‘உடன்படுதல்’ வேறு , ‘உடம்படுதல்’ வேறு !

‘ஆயிரம் ரூபாய் தருவதாக உடன்பட்டான்’ – எனில் , சம்மதித்தான் என்பது பொருள் !

உடன்படுதல் – சம்மதித்தல் .

உடம்படுதல் – சேர்த்துவைத்தல் .

உடம்படு மெய் – இரு உயிர் எழுத்துகளைச் சேர்த்துவைக்கும் மெய் !

தலைவனின் கருத்தோடு தலைவி கருத்தும் சேர்வதே மதியுடம்படுதல் !

3 . ‘அதற்குப் படுபொருள்’ – நில ஆவணங்களில் ‘ இந் நான்கு எல்லைக்கு உட்பட்ட மாவடை மரவடை’ என்று எழுதுவார்கள்!

‘படுபொருள்’ – உட்பட்டபொருள் .

உரையாசிரியர்களின் பழைய எடுத்துக்காட்டு – ‘சாத்தற்குப் படுபொருள் கொற்றன்’ .

என்ன பொருள் ?

‘சாத்தனுக்கு உரிமைப்படுபொருள் கொற்றன்’ என்பது பொருள் ! அஃதாவது , ‘சாத்தனுக்கு உறவினன் அல்லது வேலைக்காரன்’ கொற்றன் என்பது பொருள் ! அவ்வளவுதான் !

4 . ‘அதுவாகு கிளவி’ – ‘மருந்துக்கு வேப்பிலை’ .

அஃதாவது , வேப்பிலையே மருந்தாவதால் , ‘அதுவாதல்’ பொருந்துகிறது !

5 . ‘அதற்கு யாப்புடைமை’ – ‘காலுக்குக் கொலுசு’ .
யாப்பு – பிணிப்பு ; இயைபு .

6 . ‘அதன் பொருட்டாதல்’ - ‘வெயிலுக்கு நிழற் குடை’

பொருட்டு – காரணம் .

அதன் பொருட்டு – அதன் காரணம் .

நிழற்குடையானது என்ன காரணத்திற்காக ?

வெயிலுக்காக ! எனவே , ‘அதன் பொருட்டாதல்’ என்ற வாய்பாடு பொருத்தமாதல் காண்க !

7 ‘நட்பு’ - ‘வ.உ.சி.க்கு நண்பர்’

நண்பர் என்றால் யாருக்காவதுதானே அவர் நண்பர் ? எனவே குவ்வுருபு கட்டாயம் வரும் !

8 . ‘பகை’ – ‘புறாவுக்குப் பகை வல்லூறு’ .

9 . ‘காதலி’ – ‘கோவலனுக்குக் காதலி மாதவி’ .

10 . ‘சிறப்பு’ – ‘மோருக்குச் சிறந்தது’ .

‘மோரைவிடச் சிறந்தது தயிர் ’ என்பது பொருள் .

தொல்காப்பிய நூற்பாவின் ஈற்றில் உள்ள ‘அப்பொருட் கிளவியும்’ என்பதிலுள்ள எச்ச உம்மையால் , இன்னும் இவைபோன்ற வாய்பாடுகளையும் (pattern) நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும் !

தொல்காப்பியர் 10 வாய்பாடுகளைக் குவ்வுருபுக்குத் தெரிவித்துவிட்டார் !

அஃதாவது , தொல்காப்பியர் காலத்தில் , பெருவழக்காக , அடிக்கடி பயன்பட்டு வந்தனவாக ,இந்தப் பத்து வாய்பாடுகளும் திகழ்ந்தன என்று நாம் விளங்கிக் கொள்ளவேண்டும் !

தொடர்களைக் காலவாரியாக அடுக்கும் மொழியியலாளர்களுக்கு(Linguists) இஃது அரிய குறிப்பு !

10 வாய்பாடுகளைத் தொல்காப்பியர் கூறினாரல்லவா ? இந்தப் பத்து வாய்பாடுகளையும் சேர்த்து ஒரே வாய்பாட்டில் அடக்கி நம்மால் கூறமுடியுமா ?

முடியாது !

ஆனால் தொல்காப்பியர் அடக்கிக் கூறியுள்ளார் !

அந்த வாய்பாடுதான் – ‘எப்பொருளாயினும் கொள்ளல்’ !

இதோ அந்த நூற்பா :-

“ நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினும் கொள்ளும் அதுவே ”
=====




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 23, 2013 9:37 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (52)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

உலகத்துப் பொருட்களைத் தொல்காப்பியர் இரு வகைகளாகப் பகுக்கிறார் ! :-

1 . இயற்கைப் பொருள்

2 . செயற்கைப் பொருள்

1 . இயற்கைப் பொருள்களைக் குறிக்கும்போது , ‘இப்படிப்பட்டது’ என்று எழுதவேண்டும் !

இதனைத் தொல்காப்பியர் ,

“இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் ” (கிளவியாக்கம் 19)

என்றார் .

இற்று = இத்தன்மைத்து - இப்படிப்பட்டது .

தொல்காப்பியர் கருத்துப்படிக் கீழ்வரும் தொடர்கள் சரியானவை :-

1 . பால் வெண்மையது √
2 . பனை உயர்ந்தது √
3 . வேம்பு கசப்புச் சுவை உடையது √
4 . கடல் நீர் உப்புக் கரிக்கும் √
5 . நிலம் வலியது √

‘சரி ! செயற்கைப் பொருளை எப்படிக் கூறுவது ?

தொல்காப்பியர் சொன்னார் ! :-

“செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்” (கிளவியாக்கம் 20)

செயற்கைப் பொருளாக இருந்தால் , ஆக்கச் சொல் சேர்த்துக் கூறவேண்டும் !

மேல் எடுத்துக்காட்டுகளுக்கே வருவோம் ! :-

1 . பால் வெண்மையானது ×
ஏனெனில் , பாலின் இயற்கைப் பண்பே வெள்ளைதானே ? எனவே , ‘ஆனது’ என்ற சொல் (இதுதான் ஆக்கச் சொல்) சேர்க்கக்கூடாது !

பால் நீலமானது √
ஏனெனில் பாலில் ஏதோ நீலப்பொருள் கலந்து அதை நீலமாக ஆக்கியுள்ளனர் ! இதுதான் செயற்கைப் பொருள் ! இத் தொடரில் ‘ஆனது’ என்ற ஒட்டு உள்ளதல்லவா? இதனைத்தான் தொல்காப்பியர் ‘ஆக்கமொடு கூறுக’ என்றார் !

கூறுல் - கூறுக ( ‘அல்’லீற்று வியங்கோள் விகுதி உடன்பாட்டுப் பொருளில் வந்தது ) .

பால் சூடானது √
ஏனெனில் பாலின் தன்மை சுடுவது அல்ல ! ; பாலைச் சூடாக்கி ஒரு செயற்கைப் பொருளை உருவாக்கியுள்ளோம் ; அதனால் , ஆக்கச் சொல் ‘ஆனது’ என்பதைக் கொடுத்துச் ‘சூடானது’ எனக் கூறவேண்டும் !

2 . பனை உயரமானது ×
ஏனெனில் , பனை அதற்கு முன்பு குட்டையாக இருந்ததுபோலவும் , தற்போது ஏதோ ஒரு காரணத்தால் உயரமாகிவிட்டது போலவும் தொடருக்கு ஒரு பொருள் வருகிறது ! எனவே , இத் தொடரில் ஆக்கச் சொல் தரக்கூடாது !

பனை முறிவானது √
எனெனில் , பனையைச் செயற்கையாக முறித்துள்ளனர் ! அங்கே ஒரு செயற்கைப் பொருள் உருவாகியுள்ளதால் , ஆக்கச் சொல் தேவை !

இதே பாங்கில் கீழ்வரும் தொடர்களைப் பாருங்கள் !:-

வேம்பு கசப்பானது ×
வேம்பு மருந்தானது √

கடல் நீர் உப்புச்சுவையானது ×
கடல் நீர் குடிநீரானது √

நிலம் வலிமையானது ×
நிலம் ஆடுகளமானது √

ஆக்கம் பற்றி மேலும் தொல்காப்பியர் ,

“ஆக்கம் தானே காரணம் முதற்றே” (கிளவியாக்கம் 21) என்றார் !

‘ஆக்கம்’ என்று சொன்னால் அது ஏற்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் ! – இதுதான் தொல்காப்பியரின் கருத்து !

குத்தூசி கூரானது √

குத்தூசியைத் தட்டிக் கூராக ஆக்கியுள்ளனர் என்பது பொருள் ! காரணமில்லாமல் ஊசி கூராகுமா ?

தங்கம் நகையானது √
எனெனில் தங்கம் அதுவாக நகை ஆகாது ! தங்கத்தைப் பணி செய்து நகை ஆக்கவேண்டும் !

எனவே , ஏதாவது ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்துத்தான் ‘ஆக்கம்’ தோன்றும் என்பது தொல்காப்பியர் கருத்து ! ஆனால் , அந்தக் காரணத்தைத் தொடரில் எழுதியிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை ! காரணத்தை உய்த்துணரும் படியாகவும் தொடரை எழுதலாம் !

“ ‘நன்கு சப்பிட்டதால் உடல் பருமனானது ’ – இதில் பருமன் என்ற ஆக்கம் , ‘நன்கு சாப்பிட்டது’ என்ற காரணத்தால் நிகழ்ந்தது ; இவ்வாறுதான் காரணத்தை முன்னே சொல்லிப் பின் ஆக்கச் சொல்லை எழுதவேண்டும் ! ” – இவ்வாறு பலர் உரை எழுதியுள்ளனர் !

தவறு இது !

‘உடல் பருமனானது ’ என்றாலே , எதோ ஒரு காரணத்தால்தான் என்பது விளங்கவில்லையா ? அதைத் தொடரில் எழுதத்தான் வேண்டுமென்பதில்லை ! அப்படி எழுதத்தான் வேண்டும் என விதித்தால் நாம் உரைநடையையே எழுதமுடியாதே ?

‘ஆக்கம்’ என்று எதனைக் கூறவேண்டும் ? – என்ற மயக்கம் ஏற்படும்போது , செயலின் பின்னணியில் ஏதாவது காரணம் இருக்கிறதா ? என்று ஒரு கேள்வியை நாம் கேட்கவேண்டும் ! இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !

ஆனால் காரணம் இல்லாமலே, தொல்காப்பியருக்கு முன்பே , ஆக்கச் சொல் போட்டுப் பேசும் முறை வந்துவிட்டது !

‘மயில் அழகானது’ , ‘குயிலின் குரல் இனிமையானது’ , ‘அவள் முகம் அழகானது’ – இவையெல்லாம் ஆக்கச் சொல் பெற்ற தொடர்கள் ! ஆனால் , காரணமில்லாமல் வந்தவை !

மயில் இயற்கையிலேயே அழகுதானே ? குயிலின் குரலைப் பயிற்சி மூலமாகவா இனிமையாக்கினார்கள் ? அவளின் முகம் முன்பு குரூரமாக இருந்து இப்போது அழகாகிவிட்டதா ? இல்லையல்லவா? இதனைத்தான் , தொல்காப்பியர் ,

“ஆக்கக் கிளவி காரண மின்றியும்
போக்கின்று என்ப வழக்கி னுள்ளே” (கிளவியாக்கம் 22)

என்றார் !

தமிழில் ,எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் வேறுபாடு தொல்காப்பியருக்கு மிக முன்பிருந்தே இருந்துவருகிறது ! தொல்காப்பியர் மேலே சொன்ன விதிகள் எழுத்து நடைக்கானவையே ! இம்மாதிரியான விதிகளால்தான் தமிழ் இன்றளவும் தமிழாக இருக்கிறது!

=========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 23, 2013 10:33 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (53)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


தொல்காப்பியர் , “கேள்வி கேட்கும்போதும் சரி , பதில் கூறும்போதும் சரி , கவனமாகக் குளறுபடி இல்லாமல் செய்யவேண்டும்” என்று கண்டிப்புடன் எழுதுகிறார் ! :-

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” (கிளவியாக்கம் 13)

செப்பு – விடை ; வழாஅல் – வழுவாமல் ; ஓம்பல் – ஓம்புதல் .

‘வினாவுக்கு ஏற்ற விடை ’ – என்பது எளிய கருத்தல்ல !

வினாத் தொடுப்பதும் எளிதல்ல ! விடை கூறுவதும் எளிதல்ல ! பெரியவர்கள்கூட இதில் தவறு செய்கின்றனர் !


நீங்கள் ஒன்றைக் கேட்பீர்கள் , அவர் வேறு ஒன்றைக் கூறுவார் ! அவர் வேண்டுமென்று கூறுகிறாரா , இல்லை தெரிந்தலட்சணம் அவ்வளவுதானா என்று நீங்கள் குழம்புவீர்கள் !

இன்றைய நிலையே இப்படியாயின் 3000 ஆண்டுகளுக்கு முன் ?
அதனால்தான் தொல்காப்பியர் விதி கூறவேண்டிய நிலை ஏற்பட்டது !

நச்சினார்க்கினியர் , இந் நூற்பாவுக்கு உரை எழுதும்போது , இருவகை விடைகள் உள்ளன என்கிறார் ! :-

1 . நேரடி விடை ( ‘செவ்வன் இறை’)
2 . மறைமுக விடை ( ‘இறை பயப்பது’)

சட்டைத்துணி நிறம் பிடித்திருக்கிறதா ? – வினா .

“பிடித்திருக்கிறது” – நேரடி விடை .

“அடுத்த கடையில் பார்க்கலாமே ?” – மறைமுக விடை .

நச்சர் மூன்றுவகை வினாக்கள் உள்ளன என்கிறார் ! : -

1 . அறியான் வினா
2 . ஐய வினா
3 . அறிபொருள் வினா

இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் !:-

1 . “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லவேண்டுமானால் அனுமதி வேண்டுமா ?” – அறியான் வினா .

இங்கே கேட்டவன் அறியா நிலையில் உள்ளான் !

2 . “பப்பாளியைச் , சர்க்கரை நோய் உள்ளவரும் உண்ணலாமாமே , சரியா?” –ஐய வினா .
கேட்டவனுக்குச் செய்தி தெரிந்துள்ளது ; ஆனால் ஐயம் இருக்கிறது !

3 . தற்போதைய பிரதமருக்கு முந்தைய பிரதமர் யார் ? – அறிபொருள் வினா .

கேட்டோன் , கேட்கப்பட்டோனைச் சோதிக்கிறான் அல்லது தன் கருத்தைச் சரிபார்க்கிறான் !
மேல் தொல்காப்பியர் நூற்பாவின்படி , வினாவைப் பொருத்தமாக விடுக்கவேண்டும் !

‘குதிரைக்குக் கொம்பு ஒன்றா இரண்டா ? ’ – என்று கேட்கக் கூடாது !

இதைப்போல , விடையும் பொருத்தமாகக் கூறவேண்டும் என்று தொல்காப்பியர் அதே நூற்பாவில் கூறியுள்ளார்!

“பழனிக்கு எப்படிப் போகவேண்டும் ? ” – எனக் கேட்டால் , “என் மாமியாருக்கு வலது காது கேட்காது” என்று பதில் கூறக்கூடாது !

இன்னும் தொல்காப்பியர் தொடர்கிறார் !:-
1 . “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” (கிளவியாக்கம் 14)

“ஹாக்கி விளையாடுவாயா ?” என்று கேட்டால் , “ஏன்? நான் விளையாட மாட்டேனா ?” என்று எதிர்க்கேள்வி கேட்டாலும் அதுவும், தொல்காப்பியர் கருத்துப்படி, ஒரு விடைதான் !

2 . “ செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான“ (கிளவியாக்கம் 15)

விடையை நேரடியாகப் பட்டுக் கத்தரித்ததுபோலக் கூறாதுபோயினும் , ஒரு வகையில் பொருளை உணர்த்துகிற வகையில் இருந்தால் அதைக் கணக்கில் சேர்க்கலாம் ; ஆனால் வினாவைத் தவறாகக் கேட்டால் , அதனால் பயனில்லை !

“கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா ?” – வினா .

“நேற்றுக்கூட இருபது பக்கம் கம்பராமயணப் பாடல்கள் பற்றிக் கட்டுரை எழுதினேன் ” – விடை .

நேரடி விடை இங்கு இல்லையெனினும் , மறைமுக விடை உள்ளது ! இதை ஒத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

“இளங்கோவடிகள் லண்டன் போனது எப்போ ?” – இம்மாதிரியான வினாவை ஏற்க முடியாது என்கிறார் தொல்காப்பியர் ! சரிதானே ?

(3) கடைசியாகச்,

“செப்பினும் வினாவினும் சினைமுதல் கிளவிக்கு
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே” (கிளவியாக்கம் 16)

என்றார் தொல்காப்பியர் !

எடுத்துக்காட்டுகள் மூலமாக இவற்றை விளக்கலாம் !:-

(அ) ‘இவளின் கை விரல்கள் அவளின் விரல்களைவிட அழகானவை ’
உறுப்போடு (சினையோடு) உறுப்பு ஒப்பிடப்பட்டு , வேறுபாடு (உறழ்ச்சி) காட்டிய விடை !

(ஆ) ‘இவள் கண் , அவள் கண்ணைப் போல அழகானது’
உறுப்போடு உறுப்பு ஒப்பிடப்பட்டு , ஒத்திசைவு (துணை) சுட்டிய விடை !
(இ) ‘உங்க கணவர், என் கணவரைப்போலச் சுறுசுறுப்பு உள்ளவரோ ?’
முதலோடு (கணவர் என்ற முழுப்பொருளோடு ) , முதலை (இன்னொரு ஆளை) ஒப்பிட்டு வேறுபடுத்திக் கேட்ட வினா !

(ஈ) ‘அந்தச் சமையல்காரரும் இந்தச் சமையல்காரரைப் போலச் சுறுசுறுப்பு , அப்படித்தானே ?’

முதலையும் முதலையும் ஒப்பிட்டு ஒத்திசைவுபடக் கேட்கும் வினா !

(உ) ‘அவரின் பேச்சு , என் சுண்டுவிரலைப்போல அழகானதா ?’

முதலும் சினையும் ஒப்பிடப்பட்டு வேறுபாடு (உறழ்ச்சி) காட்டிய வினா ! தவறானது !

இவ்வாறு - செப்பு , வினா , முதல் ,உறுப்பு , உறழ்வு , துணை ஆகியன எவ்வாறு பொருந்தச் செல்லவேண்டும் என்று காட்டியவர் தொல்காப்பியர் !

இந்த விரிவான ஆய்வு , நமக்கு ஒரு பேருண்மையைக் காட்டுகிரது !

அஃதாவது , தொல்காப்பியர் இலக்கணம் போதித்த ஒரு தமிழாசிரியர் ! கையில் பனையோலைச் சுவடியை வைத்துக்கொண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தியவர் ! அதனால்தான் மாணவர்களுக்கு வினா – விடை பற்றி இவ்வளவு நுணுக்கமாக எழுதியுள்ளார் ! ஆசிரியர் – மாணவர் என்றால் , வினா – விடை இல்லாமலா ?
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 24, 2013 10:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (54)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

குற்றியலுகரம் பற்றிப் பேசிய தொல்காப்பியர் , “அல்வழிப் புணர்ச்சி ஆயினும் சரி , வேற்றுமைப் புணர்ச்சி ஆயினும் சரி , புணர்ச்சியில் ஈடுபட்ட நிலைமொழிச் சொல்லின் ஈற்று உகரமானது முற்றியலுகரமாகவே நிற்கும் ! ” என்று தெளிவுபடுத்துகிறார் ! :-

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகரம் நிலையும் ” (குற்றியலுகரப் புணரியல் 3)

அல்லது கிளப்பினும் – அல்வழிப் புணர்ச்சியாக இருப்பினும் .

காசு + வந்தது = காசு வந்தது

இஃது அல்வழிப் புணர்ச்சி .

எப்படி ?
காசை வந்தது , காசுக்கு வந்தது , காசால் வந்தது – என்றெல்லாம் வேற்றுமை உருபுகளுக்கு இடம் தராத புணர்ச்சிதானே இது? எனவே , வேற்றுமை அல்லாத வழியில் புணர்ந்துள்ளதால் , இஃது அல்வழிப் புணர்ச்சி !


அல்வழி – அல்லாத வழி (= வேற்றுமை அல்லாத வழி)

வேற்றுமைக் கண்ணும் – வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும் .

காசு + பாட்டு = காசுப் பாட்டு

இது வேற்றுமைப் புணர்ச்சி .

‘காசின் மீதோ , காசுக்காகவோ பாடும் பாட்டு ’ என்று பொருள்பட்டு வேற்றுமைப் பொருள் தந்துள்ளதால் , இது வேற்றுமைப் புணர்ச்சி !

‘காசு வந்தது’ – இதிலுள்ள ‘காசு’ என்பதன் ஈற்று உகரம் முற்றியலுகரமே !அல்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டதால் குற்றியலுகரம் , முற்றியலுகரமாக ஆகிவிட்டது !

இதைப் போன்றே , ‘காசுப் பாட்டு’ என்பதிலுள்ள ‘காசு’ என்பதன் ஈற்று உகரமும் முற்றியலுகரமே ! இங்கே வேற்றுமைப் புணர்ச்சியில் ஈடுபட்டதால் , குற்றியலுகரம் முற்றியலுகரமாக மாறிவிட்டது !

இந்த நூற்பாவுக்கு ஒரு நூற்பாவுக்கு முன்பு , ‘உகரம் குறுகிடன்’ என்று குற்றியலுகரத்தைச் சொன்னார் தொல்காப்பியர் ; இங்கு , ‘உகரம் நிலையும்’ என்கிறார் ! அஃதாவது , குறுகாது , முழுமையாக – முற்றுகரமாக- நிலைக்கும் என்பது கருத்து !

‘காசு’ – என்று தனியாக உச்சரிக்கும்போது , ஈற்றுச் ‘சு’வை முழுமையாக( =‘சூ’ ஒலியில் முக்கால் அளவு ) உச்சரிக்க முடியாது ! எனவேதான் இந்த உகரத்தைக் குற்றியலுகரம் என்கிறோம் !

அதேபோன்று , ‘காசு வந்தது’ (இஃது அல்வழிப் புணர்ச்சி) எனச் சொல்லிப் பாருங்கள்? ‘காஸ் வந்தது’ என்றா சொல்கிறோம்? இப்படிச் சொல்ல முடிந்தால்தான் , ‘சு’விலுள்ள உகரத்தைக் குற்றியலுகரம் எனக் கூறமுடியும் ! ஆனால் , நாம் ‘சு’க்குச் , ‘சூ’வின் முக்கால் பங்கு ஒலியைக் கொடுத்து உகரத்தை முழுமையாக உச்சரிக்கிறோம் ! முழுமையாக உச்சரித்தால் அதுதானே முற்றியலுகரம் ?
குற்றியலுகரப் புணரியலின் முதலிரு நூற்பாக்களில் குற்றியலுகரத்தை ஓதினார் தொல்காப்பியர் ! ஆனால் . இதற்காகப் புணர்ச்சிகளின் இடையே வரும் உகரத்தைக் குற்றியலுகரம் எனக் கருதிவிடாதீர்கள் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு வந்ததால் , மூன்றாம் நூற்பாவில் மேலைக் கருத்துகளை அமைத்தார் !

‘காசு பெரிது’ (அல்வழிப் புணர்ச்சி)
‘நாட்டு வரும்படி’ (வேற்றுமைப் புணர்ச்சி)

இந்த இரு சொற்றொடர்களையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘காஸ் பெரிது’ என்று உச்சரிக்கிறீர்களா? இல்லை , உகரத்தை முழுதாக்கிக் ‘காசு பெரிது’ என்று உச்சரிக்கிறீர்களா ?

நீங்கள் சொல்லும் விடைதான் தொல்காப்பியர் கூறவந்தது !

‘காசு பெரிது’ , ‘நாட்டு வரும்படி’ – இங்கெல்லாம் , ‘சு’ , ‘டு’க்களை முழுமையாகத்தான் உச்சரிக்க வேண்டும் !

உங்களுக்கு இதில் குழப்பம் இருந்தால் மேலும் விளக்கலாம் !

‘வரு ’– இதிலுள்ள உகரம் குற்றியலுகரமா ? முற்றியலுகரமா?

குற்றியலுகரம் !

ஆனால் , இதை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் மலையாளிகள் பேசும்போது கவனியுங்கள் ! ‘இங்ஙோட்டு வரு’ என்று , ‘ரு’வை ‘ரூ’ வின் முக்கால் பங்கு ஒலியில் உச்சரிப்பார்கள் ! அதுதான் சரியான முற்றியலுகரம் !

மிகப் பழந்தமிழின் எச்சங்களை நாம் மலையாள மொழியில் காணலாம் என்பதற்கு இந்த இடம் ஒரு சான்று !

இந்தத் தெளிவுடன் மேலை ஆய்வைப் பார்த்தால் உங்களுக்கு எல்லாமே விளங்கும் !

================




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:35 pm

அருமையிருக்கு

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Mar 26, 2013 1:08 pm

அருமையான விளக்கம் அய்யா, அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு, பயன்படுத்தி கொள்ளுங்கள் .

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed Mar 27, 2013 9:14 am

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் , சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம் , இந்த வேறுபாடு எவ்வாறு வருகின்றது. இதை தெளிவுப்படுதவும் .
நன்றி .

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 29, 2013 2:50 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (55)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘அவருக்குத் தந்த விருது ’
‘அவருக்கு வந்த கடிதம்’
‘அவரிடம் ஒருவர் வந்தார் ’
‘ அவருக்கு அரசு உதவித் தொகை தந்தது ’
‘என்னிடம் புத்தகம் கொடுத்தான் ’
‘ உன்னிடம் பூமாலை கொடுத்தாள் ’
‘அவளிடம் ஒருவன் வந்தான் ’
‘உன்னிடம் வழக்கறிஞர் சென்றார் ’

-இந்தத் தொடர்களை இன்று எல்லோரும் வழக்கமாக எழுதுகிறோம் !

ஆனால் ,இந்தத் தொடர்கள் யாவுமே பிழையானவை !

நான் சொல்லவில்லை !

தொல்காப்பியர் கூறுகிறார் ! :-


I . “அவற்றுள்
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த ” (கிளவியாக்கம் 29)

II . “ ஏனை இரண்டும் ஏனை இடத்த ” (கிளவியாக்கம் 30)

இவற்றை விளக்குவோம் !

I . ‘தருசொல் ’ – ஒரு பொருளைத் தருதலைக் குறிக்கும் சொல் .

தந்தான் , தருகிறான் , தருவான் – இவை தருசொற்கள் !

‘வருசொல் ’ – ஒருவரோ ஒன்றோ வருவதைக் குறிக்கும் சொல் !

வந்தான் , வருகிறான் , வருவான் – இவை வருசொற்கள் !

தருசொல்லானாலும் , வருசொல்லானாலும் இவை இரண்டுமே தன்மை (First person)இடத்தும் ,முன்னிலை (Second person)இடத்தும் மட்டுமே வரவேண்டும் ; படர்க்கைக்குச் (Thirdperson)செல்லக் கூடாது !

இந்த விதியினைப் பயன்படுத்தி வருமாறு தொடர்களை எழுதவேண்டும் ! :-

1. ‘என்னிடம் விளக்கைக் கொடுத்தான்’ ×
‘என்னிடம் விளக்கைத் தந்தான் ’ √

2 . ‘என்னிடம் பேச வருவான் ’ √
‘என்னிடம் பேசச் செல்வான் ’ ×

3 . ‘ உங்களிடம் கேட்கப் போவான் ’ ×
‘ உங்களிடம் கேட்க வருவான் ’ √

4 . ‘ உன்னிடம் காசு கொடுப்பான் ’ ×
‘ உன்னிடம் காசு தருவான் ’ √

II . இரண்டாம் நூற்பாவில் , ‘ஏனை இரண்டும்’ என்று தொல்காப்பியர் குறித்தவை , ‘செலவு’ம் , ‘கொடை’யும் ஆகும் !

இதனைச் ,

“செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப ” !

- என்ற நூற்பாவால் அறிகிறோம் !

1 . ‘செலவு’ - செல்லுதல் .
சென்றான் , செல்கிறான் , செல்வான் – என்பவை செலவைக் குறித்தவை !

2 . ‘கொடை ’ – கொடுத்தல் .
கொடுத்தான் , கொடுக்கிறான் , கொடுப்பான் – இவை கொடை குறித்தவை !

செல்லுதலையும் கொடுத்தலையும் படர்க்கை இடத்தில்தான் கூறவேண்டும் என்பது தொல்காப்பியர் விதி !

இவ் விதிப்படி , வருமாறு தொடர்கள் அமைய வேண்டும் ! :-

1. . ‘அவளிடம் ஒருவன் வந்தான் ’ ×
‘ அவளிடம் ஒருவன் சென்றான்’ √

2 . ‘அவனுக்குப் பாலைத் தந்தாள்’ ×
‘அவனுக்குப் பாலைக் கொடுத்தாள்’√

3 . ‘எனக்குப் பால் கொடுத்தாள்’ ×
‘எனக்குப் பல் தந்தாள்’ √

4 . ‘அவரிடம் அவள் சென்றாள்’ √
‘அவரிடம் அவள் வந்தாள்’ ×

மேலே கண்ட இரு விதிகளும் அற்புதமானவை ! தமிழின் சிறப்பைக் காட்ட வல்லவை ! நல்ல காரண காரியத் தொடர்பு (Logic) பெற்றவை !

ஆனால் தமிழறிஞர்கள் இந்தத் தெளிவைக் கைவிட்டுவிட்டார்கள் !

எப்போது கைவிடப்பட்டன ?

நன்னூலார் காலத்திற்கு (கி.பி. 1300) முன்பே , நாம் மேலே பார்த்த தொல்காப்பிய விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன !

இதற்குக் கீழ்வரும் நன்னூல் நூற்பா சான்று ! :-

“தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை” (நன்னூல் 381)

இனிமேலாவது மேலைத் தொல்காப்பிய விதிகளை நாம் பின்பற்றலாம் என்பதே எனது கருத்து !

தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் இதனைச் செவிமடுக்க வேண்டும் !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 30, 2013 2:34 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (56)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

வண்ணச் சினைச் சொல் ’ – என்பது , தொல்காப்பியர் காட்டும் ஒரு புதிய இலக்கணக் கலைச் சொல் ( Grammatical technical term) !

‘முரசுக் கால் யானை’ – இஃது ஒரு வண்ணச் சினைச் சொல் !

இதற்குத் தொல்காப்பிய நூற்பா ! :-

“அடைசினை முதலென முறைமூன்றும் மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்” ! (கிளவியாக்கம் 26)

மேல் எடுத்துக் காட்டில் ‘

‘முரசு ’ – அடை (Adjective)
‘கால்’ – சினை (உறுப்பு)
‘யானை’ – முதல் (உறுப்பைக் கொண்டுள்ள உடல் ; முதன்மைச் சொல் ; Head word)

‘முரசுக் கால் ’ – இதுவே வண்ணச் சினைச் சொல் !

‘முரசு’ என்பதில் வண்ணம் எங்கே உள்ளது என்கிறீர்களா ?

‘வண்ணம் ’ எனத் தொல்காப்பியர் கூறியது நிறத்தை மட்டும் அல்ல !

வண்ணம் – குணம் ; பண்பு ; வகை

‘அவ் வண்ணமே கோரும் ’ ; ‘நல்ல வண்ணம் வாழலாம்’ ; ‘கை வண்ணம் அங்குக் கண்டேன்’ – ஆகிய தொடர்களில் ‘வண்ணம்’ என்பதற்கு இப் பொருள்கள் உள்ளதைக் காணலாம் !

நிறத்தைக் குறிக்கும் சொல்லும் அடையாக வரலாம் ; வேறு பண்புளைக் குறிக்கும் சொற்களும் அடையாக வரலாம் !

கருங் குருவி – நிறம் அடையாக வந்தது .
சிட்டுக் குருவி – சிறுமைப் பண்பு அடையாக வந்தது .

‘முரசுக் கால் யானை’யில் வந்துள்ளது போன்றே அடை , சினை , முதல் மூன்றும் இதே வரிசையில் வரவேண்டும் என்பதே தொல்காப்பியர் விதி !

இந்த முறையை ( Sequence ) மாற்றினால் அது பிழை ! :-

யானைக் கால் முரசு ×
கால் முரசு யானை ×
முரசு யானைக் கால் ×

சங்கப் புலவர்களின் பெயர்களை ஆராய்ந்தால் , தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வண்ணச் சினைச் சொற்கள் தமிழில் நிரம்ப இருந்தமையை அறியலாம் ! :-

பெருந் தலைச் சாத்தனார்
தாமப் பல் கண்ணனார் (தாமப் பல் - ஒழுங்கான வரிசைப் பல்)
குண்டு கட் பாலியாதனார்
கடுந் தோட் கரவீரன்
நெடும் பல் இயத்தை
நெடுங் கழுத்துப் பரணர்
நரை முடி நெட்டையார்

- இப் புலவர்கள் பெயர்களில் வண்ணச் சினைச் சொல் பயின்றுள்ளமையைக் காணலாம் !

இன்றும் கிராமங்களில் கேலியாக ,

ஆந்தைக் கண் மீனா
திக்கு வாய் மணி
சட்டி மண்டை பாலு
கோணக் காலி ராமாயி

- என்றெல்லாம் வண்ணச் சினைச் சொற்களைப் பயன்படுத்தக் காணலாம் !

இதனால் தொல்காப்பியர் விதிகள் கற்பனை உலகுக்கானவை அல்ல ; உண்மைத் தமிழ் உலகுக்கே என்பதை உணரலாம் !

மேலே நாம் கண்ட புலவர் பெயர்களின் ஈற்றில் , ‘ஆர்’ விகுதி வந்துள்ளதல்லவா ? இதனை மரியாதைப் பன்மை விகுதி அல்லது மதிப்புப் பன்மை விகுதி (Honorific suffix) என்பர் !

இத்தகைய மதிப்புப் பன்மை வரலாமே அல்லாமல் , பன்மைப் பொருள்பட ஒருமைப் பெயரை எழுதக் கூடாது ! :-

நக்கீரர் படைத்தார் √
நக்கீரர் படைத்தனர் ×
நக்கீரர் படைத்தார்கள் ×

ஔவையார் படினார் √
ஔவையார் பாடினார்கள் ×
ஔவையார் பாடினர் ×


குதிரை ஓடிற்று √
குதிரை ஓடின ×
குதிரையார் ஓடினார் √

குருவி பறந்தது √
குருவி பறந்தன ×
குருவியார் பறந்தார் ×

இதற்குத் தொல்காப்பியர் விதி ! :-

“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கினாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல” ! (கிளவியாக்கம் 27)

இதில் , “உயர்வுக்காக ,வழக்கில் , ஒருமையைப் பன்மையாகப் பேசுகிறார்கள் ; நான் அறிவேன் ! ஆனால் , இஃது இலக்கணப்படி தவறு !” என்ற தொல்காப்பியர் குரல் ஒலிக்கிறதல்லவா ?

அதை நாம் காது கொடுத்துக் கேட்டால் என்ன ?

=============




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 30, 2013 2:57 pm

மோகு அவர்களுக்கு நன்றி ! நல்ல கேள்வி !
இரும்பு , இருப்பு என்றும் கரும்பு, கருப்பு என்றும் விகாரப்பட்டு வருவது போலவே, முதலில் சிலம்பு, சிலப்பு என விகாரப்பட்டு நிற்கிறது ! அதன் பின் , சிலப்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் ஆகிறது ! இங்கே விதி- “ உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் “ என்பதாகும் .
சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம் என்பதில் , சிலம்பு எந்த விகாரமும் அடையாமல் அப்படியே நிற்கிறது ; அதன் பின் மேலை இலக்கண விதிப்படிச் சிலம்பாட்டம் ஆகிறது !
நாமிருவரும் சிறிது நேரம் தமிழ்ச் சிலம்பாட்டம் ஆடியதில் மகிழ்ச்சிதானே ?
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 8 of 84 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 46 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக