Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

ருத்ராட்சம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Admin | Published on the thu Jan 26, 2023 2:30 am | 242 Views

ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர்.


திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம்


(ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே!


ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார்.


இவ்வுலகில் பிறந்த அனைவரும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.


ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம் பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது.


முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.


அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம், தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார்.


அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். பக்தியுடன் அதை அணிபவரை எப்பொழுதும் கண்போலக் காப்பாற்றுவார் . எனவே அனைவரும் ஒரு ஐந்து முகம் ருத்ராட்சம் கழுத்தில் எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.


அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா?


ஆமாம்! ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.


சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.

பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்..


எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.


சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?


குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா! நோய் உள்ளவனுக்குத்தான் மருந்து தேவைப்படுகிறது நோய் இல்லாதவருக்கு மருந்து தேவையில்லை. அது போல வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், சிரமங்களில் தவிப்பவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்,


திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், பிரச்சனைகளில் உலாவி கொண்டே இருப்பவர்கள், நாம் எதற்காகப் பிறந்தோம் என்று வேதனைப்பட்டு கொண்டிருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், (ஊனமுற்றோர்) மனநிலை, பாதித்தவர்கள், இவர்கள் அனைவரும் ருத்ராட்சம் அணியவேண்டும். இவர்களுக்காக தான் ருத்ராட்சம் இறைவனால் அருளப்பட்டது.


ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும் எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு உடனே ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடவேக்கூடாது).


ருத்ராட்சம் அணிந்தது முதல் 10008 நாட்களுக்குள் முழுவதுமாக விட்டுவிட வேண்டும். சுத்த சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும் அதுவே உத்தமமானது.


ருத்ராட்சதில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்?


ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.


அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதாக, மிகமிக சகாயமான விலையில் சகல மானோரும் அணிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் ஐந்து முக ருத்ராட்ஷத்தையே இறைவன் அதிகமாக விளைச்சல் (படைக்கின்றார்) விளைவிக்கிறார் அனைவரும் ஒரு ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே சிறந்தது அதுவே போதுமானது. பகவான் சிவபெருமான் திருமுகம் ஐந்து, நமசிவாய ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), நமது கை கால் விரல்கள் ஐந்து, புலன்கள் ஐந்து. இப்படி ஐந்தை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம் ஐந்திற்கும் இவ்வுலகிற்கும் அதிகமான சம்பந்தம் உண்டு மற்றும் சிவபெருமான் புரியும் கரும (தொழில்) காரியங்கள் ஐந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஆகையால் ஐந்து முக ருத்ராட்சத்தையே நமக்காக மிக மிக அதிகமாக படைக்கின்றார். ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.


பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?


பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்?


நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும்.


மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.


எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?


பெண்கள், தங்களுடைய தாலிக் (கொடியில்) கயிற்றில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்ற வற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?


இவற்றைப் போல் ருத்ராட்சத்தையும் தாலி கயிற்றில் கோர்த்து கட்டிக்கொண்டு எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிந்து இருக்க வேண்டும். ருத்ராட்சம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல.


நமது  உயிரின் ஆன்மாவிற்காகவே நாம் அனைவரும் பிறவிப்பயன் அடைய வேண்டியே சிவபெருமானால் அருளப்பட்டது.


ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?


ஆம் இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக கழுத்தில் ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே பிறந்துள்ளோம்.


நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், துன்பம், துயரம், துக்கம், வேதனை, வலி கஷ்டம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் ருத்ராட்சம் அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும். ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம்.


ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் வேதனையையும் கொடுப்பாரா?. நம்மை நல்வழிப் படுத்துவதற்காக வலியுறுத்துவாரே தவிர நம் வாழ்வைக் கெடுக்க மாட்டார் அதனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும். ருத்ராட்சதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய தினந்தோறும் 108 முறை சொல்லி வந்தாலே போதுமானது.


நீத்தார் கடன் (திதி), இறப்பு வீடு, பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்ய நேரங்களில் ருத்ராட்சம் அணியலாமா?


கண்டிப்பாக அணியலாம்

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் திதி போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்சம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் இறந்தவர்களின் ஆன்மா மோட்சம் பெரும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போதும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து இருக்கலாம் அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.


சரி ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?


நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.


மேலும் ருத்ராட்சம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஆனந்தமும் கிடைக்கும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.


இது மட்டுமல்ல ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.

எனது அனுபவத்தில் நானும் 100% கண்ட உண்மை எனவே தூங்கும்போது கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க கூடாது.


திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் பிரார்த்தனை வைப்பவர்களும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தினந்தோறும் ஓம் நமசிவாய என்று 108 முறை எழுதியும். காலை தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மனதினுள் 1008 முறை ஓம் நமசிவாய சொல்லியும் வந்தால் மேற்கூறிய பிரார்த்தனைகள் கண்டிப்பாக 1008 நாட்களுக்குள் நிறைவேறும். இது என் அனுபவத்தில் கண்டு அனுபவித்த உண்மை.


இறைவனின் கருணையால் அடியேன் 1993 முதல் 25 வருடங்களாக இன்றுவரை தினந்தோறும் 108 முறை ஓம் நமசிவாய எழுதி வருகிறேன். இதே போன்று நீங்களும் எழுதி வாருங்கள் நமது உடம்பின் சக்தியை (பேட்டரியை சார்ஜ்) அதிகப்படுத்தி கொள்ளுங்கள்


ருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?


சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இறைவன் சிவபெருமான் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட ஓம் நமசிவாய நம்மால் சொல்ல முடியும்.


அப்படியிருக்க நாம் பிறவிப்பயன் அடைய வேண்டி நமக்காக ருத்ராட்சத்தை அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்சம் அணிதல், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் இம்மூன்றும் ஒருவர் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவது உறுதி இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) நமக்கு நன்மையே செய்யும் தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.


ருத்ராட்சம் அணிந்திருக்கும் வேளையில் ஒருவர் உயிர் பிரிந்தால் அவர்கள் சிவபெருமானின் திருவடியையே அடைவார்கள் நற்கதி முக்தி எற்படும்.


பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், எந்திரம் இவை அனைத்தும் ருத்ராட்சம் கழுத்தில் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. மாறாக அவர்களுக்கு நன்மையே செய்யும் ஆகையால் ஒவ்வொருவரும் பயம் கொள்ளாமல் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியலாம்.


நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.


இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்சம் அணியத் தயங்குகிறார்களே?


உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்சம் மற்றும் நமசிவாய என்ற நாம ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நமக்கு நன்மை செய்கின்றார்கள் அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களை சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.


ருத்ராட்சம் அணிந்த பின் அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.


ருத்ராட்சம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ஒரு வினாடி நேரம் கூட ருத்ராட்சதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்சம் அணியவில்லை என்றால் அவர்கள் பிறந்தும் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஐந்து முக ஒரு ருத்ராட்சம் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொண்டே இருக்க வேண்டும்.


தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

About the author