புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 5:57 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 1:34 pm

First topic message reminder :

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 5 Healthy-food

விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன



தலைப்பைப் பார்த்தவுடன், ‘இதைத்தான் தினம்தினம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் பார்க்கிறோமே... நீங்க என்ன புதுசாச் சொல்லப்போறீங்க’ என்று நீங்கள் கேட்கலாம்.

* இந்த உணவைச் சாப்பிட்டால் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகும்!

* இதை எங்கே பார்த்தாலும் உடனடியாக வாங்கிச் சாப்பிடுங்கள்... உங்கள் வம்சத்துக்கே சர்க்கரை நோய் வராது!

* இந்த நான்கையும் அரைத்துச் சாப்பிட்டால் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், இதய பலவீனம் எல்லாமே சரியாகிவிடும்!

* இறைவனின் அரிய படைப்பான இந்த விதையை மட்டும் அரைத்துச் சாப்பிட்டால் 48 மணி நேரத்தில் புற்றுநோய் குணமாகிவிடும்!

வாட்ஸப்பைத் திறந்தாலே இப்படியான செய்திகள் வந்து கொட்டுகின்றன. எதையுமே யோசிக்காமல் இதையெல்லாம் பத்து குரூப்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டு, ஏதோ பெரும் சேவை செய்ததாகத் திருப்தி அடையும் வாட்ஸப் டாக்டர்கள் அதிகம் உண்டு நம்மிடையே!

உணவு பற்றிக் காலம் காலமாகப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இன்று யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு இளைஞர்கள் சவர்மா, பக்லாவா பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றால், சங்க காலக் கவிஞர்கள் ஊன்சோறு எனப்படும் பிரியாணி வரைகூட நிறைய பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவர்கூட, ‘சரியான உணவைச் சாப்பிட்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை’ என்று சொல்கிறார். உடல் ஆரோக்கியமாக இயங்கவும், மனம் உற்சாகமாகச் செயல்படவும் உணவே அடிப்படையாக இருப்பதால்தான் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணவு பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கிறோம். சமீப காலங்களில் அடுத்தடுத்து வந்து தாக்குகிற வைரஸ் நோய்களில் இருந்து மீளவும் தற்காத்துக்கொள்ளவும் ஆயுதமாகவும் கேடயமாகவும் இருக்கிறது உணவு. அதனால்தான் வாட்ஸப்பிலும் சமூக ஊடகங்களிலும் வருகிற உணவு பற்றிய செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்புகிறோம்.

பிரச்னை என்னவென்றால், விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. அதுபற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான் இந்தத் தொடர்.

புதிது புதிதாக உணவுப்பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கிரீன் டீ; இன்னொரு பக்கம் நாம் பார்த்தும் சுவைத்தும் அறிந்திராத வண்ண வண்ணப் பழங்கள்; வெளிநாடுகளிருந்து வந்திறங்கும் ஓட்ஸ், பெனோவா, கிரனோலா போன்ற பேக்கிங் உணவுகள்; புரோட்டீன் பவுடர்கள், வைட்டமின் மாத்திரைகள் என உணவு, உணவு சார்ந்த பொருள்கள் சந்தைகளில் விதவிதமாகக் குவிகின்றன. இவற்றைப் பற்றி வசீகரமாகவும், ஆரோக்கியம் பற்றிய ஆசை அல்லது அச்சத்தைத் தூண்டும் விதத்திலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இன்னொரு தரப்பினர், மரபு சார்ந்த நம் பாரம்பர்ய உணவுகளைத் தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களும், ‘இந்த உணவில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது’, ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் வராது’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் நவீன உணவுகள், இன்னொரு பக்கம் பாரம்பர்ய உணவுகள்... இவற்றைப் பற்றி வெளிவரும் செய்திகள் உண்மைதானா என்று அறிவியல்பூர்வமாக அலசி ஆராய்வதும் இந்தத் தொடரின் நோக்கம்.

‘டாக்டர், சரியோ தவறோ... எல்லாமே உணவுகள்தானே! அவற்றைச் சாப்பிடுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது’ என்று நீங்கள் கேட்கலாம். ஓர் உணவு ஒரு நோய்க்கு மருந்தாகும் என்ற நம்பிக்கையில், அது மருந்தாக இல்லாவிட்டாலும்கூட சாப்பிடுவதால் எந்த பாதிப்புமில்லைதான். பிரச்னை எங்கேயென்றால், ஒரு நோய் இருக்கிறது. அதற்காக மருந்து சாப்பிடும் ஒருவர், அந்த மருந்தையே கைவிட்டுவிட்டு இந்த உணவுக்கு மாறுவது கண்டிப்பாக உடலியக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மலை விளிம்பில் தொங்கியபடி உயிர்ப் போராட்டம் நடத்தும் ஒருவர், வலுவான கிளையை விட்டுவிட்டு செடியைப் பிடித்துக்கொண்டு தப்பிக்க நினைப்பது போன்ற அபத்தம் இது!

நம் உடல் பற்றிய கற்பிதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். கூடுதலாக ஒரு உணவை எடுத்துக்கொண்டால் நோய் குணமாகிவிடும் என்று நம்புகிறார். அதற்காக புதிய உணவுப்பழக்கத்துக்கு மாறுகிறார் என்றால் பெரிய பாதிப்பு இல்லை.

தீவிரமான இதய நோய் இருக்கும் ஒருவர், வாட்ஸப்பில் ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இதய நோய் குணமாகிவிடும்’ என்று ஒரு தகவலைப் பார்க்கிறார். அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராயாமல் நோய்க்கு இதுவரை எடுத்து வந்த சிகிச்சையை நிறுத்திவிட்டு வாட்ஸப்பில் வந்த பரிந்துரையைப் பார்த்துப் புதிய உணவு அல்லது டயட்டுக்கு மாறுகிறார் என்றால், அவர் விபரீதமான பாதையில் செல்கிறார் என்று அர்த்தம். ஒருவேளை, அந்த உணவோ டயட்டோ அந்த நோயைக் குணமாக்கும் தன்மை கொண்டிருந்தால் பிரச்னையில்லை. அவை அந்த நோய்க்கு பலனளிக்காமல்போனால் அவரது இதயநோய் தீவிரமாகலாம். இறப்புகூட நேரலாம்.

சிலர், தான் கேள்விப்பட்ட, படித்த செய்திகளை எல்லாம் மற்றவர்களுக்குப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். உறுதியாக நோய் குணமாகும் என்று சில உதாரணங்களையெல்லாம் சொல்லி மற்றவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றிவிடுவார்கள். எதையும் தன்னளவில் பரிசீலித்துப் பார்க்காமல் மற்றவர்களுக்கு அள்ளிவிடுவார்கள். இந்த மூன்றாவது வகையினர்தான் இருப்பதிலேயே ஆபத்தானவர்கள். இது மிகப்பெரிய சமூகப் பிரச்னை.

உதாரணத்துக்கு நாட்டுச் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம். ‘வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். நாட்டுச்சர்க்கரை எவ்வளவு சாப்பிட்டாலும் எதுவும் ஆகாது. ஐந்து டீஸ்பூன் போட்டு டீ குடிக்கலாம்’ என்று ஒரு கருத்து நம் மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

வெள்ளைச் சர்க்கரை கொஞ்சம் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது; நாட்டுச் சர்க்கரை சற்று இயற்கையானது என்பதைத்தவிர, சுக்ரோஸ் என்று சொல்லப்படுகிற மூலக்கூறு இரண்டிலும் ஒரேயளவுதான் இருக்கிறது. பாலீஷ் செய்யப்படுவதுதான் வித்தியாசம். ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதால் வெள்ளைச் சர்க்கரை 100 சதவிகிதம் கெடுதல் என்றால் நாட்டுச் சர்க்கரை 90 சதவிகிதம் கெடுதல். இதுதான் உண்மை.

இதுமாதிரி பல உணவுப்பொருள்கள் பற்றி மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உணவையே மருந்தாக நினைக்கும் மனநிலை அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் இதைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

நம் உணவு வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால், இப்போது பயிற்றுவிக்கப்படுகிற உணவுப்பழக்கங்கள், நம்பிக்கைகள், டயட்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பது தெரியவரும். உணவு என்பது, உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்துக்கான சக்திக்கும் உதவும் பொருள். அவ்வளவுதான்.

கற்கால மனிதர்களுக்கு உணவு என்பது ஆடம்பரம். தினம் தினமெல்லாம் அவர்களுக்கு உணவு கிடைக்காது. காட்டுக்குப் போய் உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடினால்தான் உணவு. அல்லது விலங்குகள் நடமாடும் காட்டில் கிழங்குகள், பழங்களைத் தேடித் திரிந்து பறித்துவந்து சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் தேடல்தான். அன்று உணவு கிடைக்கவில்லையென்றால் பட்டினி. ‘இந்த உணவு விஷம்; இந்த உணவைச் சாப்பிட்டால் உயிர் போகாது’ என்ற அளவில்தான் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. உணவுக்கான தேடல்தான் மனிதர்களை நாகரிகமடையச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் வேளாண்மையைக் கண்டறிந்தார்கள். ஆற்றங்கரையோரங்களில்தான் அறிந்த உணவுகளைத் தன் தேவைக்கு விளைவித்துக்கொண்டார்கள்.

இப்போது உணவில் நமக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிட முடிகிறது. உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டு கப்பலில் வந்திறங்குகின்றன. உலகத்தின் வகைவகையான உணவுகள் நம் வீட்டுக்கு அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன.

அடித்தட்டு மக்கள் முதல் ஆடி காரில் பயணிப்போர் வரை எல்லோருமே உணவு விஷயத்தில் தேடல் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்ய இங்கே விதவிதமான உணவுகள் இருக்கின்றன. யூடியூபில் வரும் வீடியோக்கள் தினம் தினம் புதுப்புது உணவுகளை அறிமுகம் செய்கின்றன. இந்தச் சூழலில் உணவு குறித்த சரியான விழிப்புணர்வு ரொம்பவே முக்கியம்.

இன்னொரு பக்கம், ‘இதெல்லாம் நம் பாரம்பரிய உணவுகள். இதைச் சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் பலசாலிகளாக இருந்தார்கள்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுப் பரிந்துரைக்கப்படும் பல உணவுகள் எளிய மக்கள் வாங்கமுடியாத விலையில் இருக்கின்றன.

உணவு என்பது தனி மனிதர்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, தேசத்தின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது. புதிதாக ஒரு சமையல் எண்ணெய் அறிமுகமாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அது இந்த இந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகும், இதயத்தைப் பாதுகாக்கும்’ என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. அதனால் மக்கள் அதைத் தேடி வாங்குகிறார்கள். ஆனால், அந்த எண்ணெய் தயாரிப்பதற்கான விதை இந்தியாவில் விளைவதில்லை என்றால் இன்னொரு நாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும். நம் நாட்டில் கிடைக்கும் வளங்களையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிப் பயன்படுத்துவதால் நம்மூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம். அந்நியச் செலாவணி இழப்பு இன்னொரு பெரிய பாதிப்பு.

இந்தியாவில் 135 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும். அதற்கான உணவுச்சந்தை என்பது பிரமாண்டமானது. அதேபோல உணவைச் சார்ந்த மருத்துவச் சந்தையும் மிகப்பெரியது. உணவுக்குப் பின்னால் மிகப்பெரிய வணிகமும் சர்வதேச அளவிலான அரசியலும் இருக்கிறது. அதனால் உணவைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

‘ட்ரெயிலர் எல்லாம் ஓகே... படம், பார்க்கும்படி இருக்குமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இந்தத் தொடரில் எதையெல்லாம் பேசப்போகிறோம் என்பதை இந்த இடத்திலேயே சொல்லிவிடுகிறேன். இது நல்லது, இது கெட்டது, இது ஆரோக்கியமானது என்று எதையும் ஒற்றை வரியில் உங்களுக்குப் பரிந்துரைக்கப் போவதில்லை. உணவு குறித்த நம்பிக்கைகள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

சர்க்கரை நோய் ஏன் சிலருக்கு வருகிறது; ஏன் சிலருக்கு வருவதில்லை; அந்த நோயின் உண்மையான இயல்பு என்ன; எந்தெந்த உணவில் சர்க்கரை நோய்க்கான ஊக்கிகள் அதிக அளவில் இருக்கின்றன; எவற்றையெல்லாம் குறைவாக உட்கொண்டால் சர்க்கரையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்?

புதிது புதிதாக உப்புகள் அறிமுகமாகின்றன. பொதுவாக உப்பில் என்னதான் இருக்கிறது?

எண்ணெய்களில் என்ன இருக்கிறது; அவற்றை உட்கொள்வதால் என்ன பயன்; என்ன இழப்பு?

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப்பொருள்களையும் பகுத்தறியப்போகிறோம். நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த புரட்டுகளையும்கூட நாம் பேசலாம். உணவின் அறிவியலை மட்டுமல்ல, வரலாறு, புவியியல், கணிதம், அரசியல் என எல்லாவற்றையும் பேசுவோம்.

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். குழந்தைகள் நலன், வாழ்வியல் நோய்கள், உணவுப்பழக்கங்கள் குறித்து சர்வதேச இதழ்களில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். இயல்பிலே உணவு குறித்துத் தேடல் கொண்ட இவர், உடல் பருமன், சர்க்கரை, அதீத ரத்தக் கொழுப்பு, குழந்தையின்மை போன்ற நோய்களை உணவுமுறை மூலமாகவே கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கிவருகிறார். சர்வதேச அளவில் உணவு அறிவியல், அரசியல் குறித்து மருத்துவர்களுக்கான பல்வேறு மாநாடுகளில் உரையாற்றியுள்ள இவர், பொதுவெளியில் இருக்கும் உணவு பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்.


விகடன்


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 2:34 pm


1980-களில் ஆன்செல் கீஸின் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நிறை கொழுப்புகள்(saturated fats) அதிகம் இருக்கக்கூடிய உணவுகள் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன என்றும் அவை மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும் என்றும் கூறப்பட்டது. அதற்குப் பிறகுதான் நிறைகொழுப்புகளை ‘கெட்ட கொழுப்பு' என்றும் நிறையுறா கொழுப்புகளை ‘நல்ல கொழுப்பு' என்றும் மருத்துவ உலகம் பாகுபாடு காட்டத்தொடங்கியது. பால், அசைவ உணவுகளில் இருப்பவை நிறை கொழுப்புகளின்கீழ் வரும். ஆனால் நிறைய பேர் அசைவ உணவுகளில் இருப்பவை வெறும் நிறை கொழுப்புகள்தான் என்று தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் அசைவத்தில் மேலே கூறிய மூன்று வகை கொழுப்புகளும் சமநிலையில் இருக்கும், அதிலும் முக்கியமாக மருத்துவ உலகம் மிகவும் நல்லது என்று கருதும் MUFA வகை கொழுப்புகளே அசைவத்தில் அதிகம். இந்த உண்மை பலருக்குத் தெரிவதில்லை. தாவரங்களில், இதன் அளவு நிறைய மாறுபட்டிருக்கும். உதாரணத்துக்கு தேங்காய் எண்ணெயில் 87% நிறை கொழுப்பு இருக்கிறது. நிறையுறா கொழுப்பு வெறும் 8% மட்டுமே. வெண்ணெய் மற்றும் நெய்யில் 67% நிறை கொழுப்பு இருக்கிறது. பனை எண்ணெயில் 49% நிறை கொழுப்பு.

ஆலிவ் எண்ணெய் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். காரணம், அதில் இதயத்துக்கு நல்லது என்று சொல்லப்படும் MUFA நிறைய இருக்கிறது என்பதும் ஒரு கருத்து. அந்த வகை Fatty Acid கிட்டத்தட்ட அதே அளவு இருக்கும் இன்னொரு பொருள் நிலக்கடலை. வெஜிடபிள் ஆயில் என்று நாம் சொல்லும் கார்ன் ஆயில், ரைஸ் ப்ரான் ஆயில் போன்றவற்றில் PUFA வகை நிறையுறா கொழுப்புகள் அதிகமாகவும் நிறை கொழுப்புகள் மிகக் குறைவாகவும் MUFA நடுத்தர அளவிலும் இருக்கின்றன. நிறை கொழுப்புகள் மோசம் என்றும் நிறையுறா கொழுப்புகள் நல்லது என்றும் 1980-களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் முன்வைக்கப்பட்டதால் நிறை கொழுப்புகள் இருக்கக்கூடிய எண்ணெய் முதலிய உணவுப் பொருள்கள் அனைத்தும் கெட்டது என்று மாறுகிறது. தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், அசைவ உணவுகள் என அனைத்தும் கெட்டதாகிவிடுகிறது.

1980-களுக்குப் பிறகு தேங்காய் எண்ணெய் தொடங்கி அனைத்தையும் விட்டு ஓடத் தொடங்குகிறோம். அதற்கு பதில் PUFA அதிகம் இருக்கக்கூடிய வெஜிடபிள் எண்ணெய் முதலிய உணவு வகைகள் இதயத்துக்கு நல்லது, கொலஸ்ட்ராலுக்கு நல்லது என்று முன்வைக்கப்பட்டன. பாரம்பரிய எண்ணெய்களை விட்டுவிட்டு, மிக அருமையாக மார்க்கெட்டிங் செய்யப் படுகிற இந்த வகை எண்ணெய்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறோம்.

நான் முன்பு சொன்னதுபோல கடந்த 30-40 வருடங்களில் மாரடைப்பு 2-3 மடங்கு அதிகமாகி யிருக்கிறது. மேலும் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமனும் அதிகரித்துள்ளது. உடல்நலனுக்காகக் கொழுப்பு வகைகளை மாற்றினோம். ஆனால், நோய்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதில் ஏதோ சிக்கல் இருப்பது தெரிகிறது. இதனால் அந்தப் பழைய ஆராய்ச்சி முடிவுகள் தூசி தட்டிப் பார்க்கப் படுகின்றன.

அப்போது இந்த நிறையுறா கொழுப்புகளிலும் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. நிறையுறா கொழுப்புகளில் PUFA, MUFA என இரண்டு வகை இருப்பதாகச் சொன்னோம். இதில் MUFA ஓரளவுக்கு நல்லது என்றும் பிரச்னைகள் இல்லை என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் இந்த PUFA-வில் சில சிக்கல்கள் இருக்கின்றன. PUFA வகையில் உள்ள அனைத்துமே நல்லது கிடையாது. அதில் சில ஆரோக்கியம் இல்லாதவை. PUFA கொழுப்புகளை Omega-3 மற்றும் Omega-6 Fatty Acids என்று கூடுதலாகப் பிரிக்கிறோம்.

இதில் Omega-3 எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் ரத்தக் குழாய்களுக்கு நல்லது. ரத்தக்குழாய்களில் உள்காயங்களைத் தடுக்கும் தன்மை வாய்ந்த (Anti-inflammatory) கொழுப்பு வகை அது. ஆனால், Omega-6 வகை கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் ஏற்படும் காயங்களை அதிகமாக்கும் தன்மை உடையவை. பாரம்பரிய எண்ணெய் வகைகளில் இருந்து சூரிய காந்தி முதலிய எண்ணெய்களுக்கு மாறியபோது கொலஸ்ட்ரால் அளவு குறைந்தாலும் மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறையாமல் மற்ற நோய்கள் அதிகரித்ததற்கான முக்கிய காரணம் இதுதான். இந்த எண்ணெய்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை மட்டும் குறைத்தாலும் உள்காயங்களை அதிகப்படுத்துகின்றன.

அதனால்தான், நாம் சாப்பிடும் உணவுகளில் Omega-3 மற்றும் Omega-6 ஆகியவற்றின் விகிதம் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் 1 மடங்கு Omega-3 வகை கொழுப்பு இருந்தால் நான்கு மடங்கு Omega-6 வகை கொழுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் omega-6 வகை கொழுப்புகள் அதிகரித்தால் ரத்தக் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற விஷயம் தற்போது முன்வைக்கப்படுகிறது. Omega-3 வகை கொழுப்புகள் பெரும்பாலும் அசைவ உணவுகள் அதிலும் குறிப்பாக மீன் வகைகள்... அதேபோல தீவனம் போடாமல் இயற்கையாக புற்களை மேய்ந்து வளரும் ஆடு, கோழியின் இறைச்சிகளில் கிடைக்கும். சைவ உணவுகளில் Flax விதைகளிலும், வால்நட் போன்ற ஒன்றிரண்டு நட்ஸ் வகைகளிலும் இது கிடைக்கிறது.

ஆனால் இந்த உணவுகள் சாமானியன் சாப்பிடக்கூடியவை அல்லவே! உண்மையைச் சொன்னால், இந்த இரண்டு வகை கொழுப்புகளின் விகிதத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள, சூரியகாந்தி எண்ணெய் போன்ற வெஜிடபிள் எண்ணெய் வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலே போதுமானது.



T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 23, 2023 10:06 pm

ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு ஸ்பூன்தான் பயன்படுத்தப்போகிறோம் என்றால் அந்த 15-20 மி.லி, நம் உடலில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்துவிடாது என்பதே உண்மை.

நிறை கொழுப்பு, நிறையுறாக் கொழுப்பு பற்றி அலசிக்கொண்டிருக்கிறோம். நிறை கொழுப்புகளைக் கெட்டவை என்று கூறியிருந்தோம் அல்லவா... இந்தச்சூழலில் டால்டா, வனஸ்பதி பற்றியும் பேசியாக வேண்டும். நிறையுறாக் கொழுப்புகளை (Unsaturated fats) செயற்கையான முறையில் நிறைகொழுப்பாக (Saturated fats) மாற்றுவதே வனஸ்பதி (டால்டா).

நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை மிக அதிகம் என்பதால் 1970-80 காலகட்டத்தில் வனஸ்பதி போன்ற பொருள்கள் எல்லா உணவுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. நெய், வெண்ணெய் முதலிய நிறைகொழுப்பு உணவுகளைச் சாப்பிட்டவர்களைவிட, செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த வனஸ்பதிப் பொருள்களைச் சாப்பிட்டவர்களுக்கே அதிக பிரச்னைகள் உண்டாயின. ஆனால் நெய், வெண்ணெய், வனஸ்பதி எல்லாவற்றையும் ஒரே பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். சண்டை நடந்துகொண்டிருக்கும் இடத்திற்குச் செல்லும் போலீஸ், ரவுடிகளோடு சேர்த்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களையும் அள்ளிக்கொண்டு வருமே அதுபோல!

உண்மையில், இந்தச் செயற்கை நிறை கொழுப்புகளால்தான் மாரடைப்பு அதிகமாகிறது. அதேபோல, பாலில் இருந்து எடுக்கப்படும் சீஸ் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சீஸ் நல்லதுதான். ஆனால் அதை மாவுப்பொருள்களோடு சேர்த்து பீட்ஸா, பர்கர் என மோசமான ஒரு குப்பை உணவாக மாற்றிச் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் பழியைச் சீஸ்மீது போடுவோம்.

ஒரு பக்கம் வனஸ்பதி போன்ற உணவில் சேர்க்கப்படும் பொருள்கள், மறுபக்கம் நிறைகொழுப்போடு சேர்த்துச் சாப்பிடும் குப்பை உணவுகள் எல்லாம் சேர்ந்து, ஏதோ நிறைகொழுப்புகள்தான் மாரடைப்பை அதிகரிப்பது போன்ற பிம்பத்தை உண்டாக்கியுள்ளன.

சரி, பால் மற்றும் தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு நல்லதா, கெட்டதா?

பாலுக்கும் தேங்காய் எண்ணெய்க்கும் சிறிதளவு கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் தன்மை இருந்தாலும், இவை LDL கொலஸ்ட்ராலை மட்டும் அதிகப்படுத்தாமல் HDL என்று சொல்லக்கூடிய நல்ல கொலஸ்ட்ராலையும் அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை. அதுமட்டுமல்லாமல், Triglycerides எனப்படும் ஒரு பிரதான கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மையும் தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது. வெறுமனே LDL-ஐ அதிகப்படுத்துவதை மட்டும் வைத்துக்கொண்டு அதை வில்லன் என்று சொல்லிவிடமுடியாது. தேங்காய் எண்ணெயில் MCT எனப்படும் மீடியம் செயின் triglyceride கொழுப்புகள் மிகவும் அதிகம். இதை ஜீரணிக்க பித்த நீர் மற்றும் கல்லீரல் உதவி தேவையில்லை. சிறுகுடலில் இருந்து நேராக உடலில் கலந்து நமக்கு எளிதாக எரிசக்தி தரும். குறைந்த எடை உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு முக்கிய உணவாகப் பயன்படும். Modified ketogenic diet எனும் வலிப்பு நோயைப் போக்கக்கூடிய உணவு முறையில்கூட தேங்காய் எண்ணெய்க்கு முக்கியப் பங்கு இருக்கிறது. Famililal hypertriglyceridemia போன்ற தீவிர கொழுப்புக்குறைபாடுகள் உள்ளவர்களுக்குக்கூடத் தேங்காய் எண்ணெய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் லாரிக் ஆசிட் (lauric acid) இருக்கிறது. இது அருமையான கிருமிநாசினி. தாய்ப்பாலுக்கு நிகராக லாரிக் அமிலம் அதிகம் இருக்கக்கூடிய இன்னொரு உணவு தேங்காய் எண்ணெய்தான். இறுதியாக, அதன் முழுமையான விளைவை மொத்தமாக வைத்துப் பார்த்தால் அது நல்ல பொருள் என்றே கூறலாம். LDL-ன் அளவு சிறிதளவு அதிகமாவதால், அதுவே மாரடைப்பையும் அதிகமாக்குகிறது என்று கூறுவது சரியல்ல. ஏனென்றால், பல கூட்டாராய்ச்சிகளில் ‘தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் போன்ற பொருள்களை எடுத்துக்கொள்வதால் LDL அதிகமானாலும், ஒட்டுமொத்த மாரடைப்பு ஏற்படுத்தும் விகிதம் அதிகமாவது இல்லை’ என்றே முடிவுகள் வெளிவந்துள்ளன. எனவே நிறைகொழுப்புகளை வில்லன் ஆக்கியது வனஸ்பதி போன்ற பொருள்கள்தான்.

நிறையுறாக் கொழுப்புகளை நிறை கொழுப்புகளாகச் செயற்கையாக மாற்றும்போது அதில் Trans Fat என்ற ஒரு வகை கொழுப்பு உருவாகிறது. இந்த Trans Fat கொழுப்பை நம் உடலால் ப்ராசஸ் செய்ய இயலாது. இது நம் உடலுக்குள் நுழைந்துவிட்டால், ரத்தக்குழாயில் காயம் ஏற்படுத்துவதைத்தவிர வேறு எந்த வேலையையும் செய்யாது. மிகவும் செயற்கையான பொருள் என்பதால் இதை எப்படி ப்ராசஸ் செய்வது என்பதே நம் உடலுக்குத் தெரியாது என்பதுதான் பிரச்னை. உண்மையில், இருப்பதிலேயே மிக மோசமான கொழுப்பு என்றால் அது இந்த Trans Fat தான். அதனால்தான் வனஸ்பதி போன்ற பொருள்களுக்கு நாம் தடை கோருகிறோம். மிருதுத்தன்மை ஏற்படுத்துவதற்காக பிஸ்கட், கேக், ஸ்வீட் போன்ற உணவுகளிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. நம்மையறியாமல் இவை பல்வேறு பொருள்களின் வழி நம் உடலுக்குள் செல்கின்றன.

செயற்கையாக உருவாக்கப்பட்ட இதுமாதிரியான நிறைகொழுப்புகளே நாம் உண்மையில் தவிர்க்க வேண்டியவை. மற்றபடி இயற்கையான நிறை கொழுப்புகளை நாம் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

பாமாயிலில் நிறைகொழுப்பு இருந்தாலும் அதைப்பற்றிப் பேசாதது ஏன் என்ற கேள்வி எழலாம். இயற்கையாகக் கிடைக்கும் பாமாயில் அப்படியே நமக்கு வருவதில்லை. மிக அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலே இங்கு வருகிறது. அதிலுள்ள கொழுப்பின் தன்மை அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும், அது ப்ராசஸ் செய்யப்பட்டு வரும் முறை காரணமாக குறைவாகப் பயன்படுத்துவதே நல்லது. எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது மிகவும் ப்ராசஸ் செய்யப்பட்ட நிறையுறாக் கொழுப்புகள் அதிகம் இருக்கக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றிலிருந்து விலகி, நம் முன்னோர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவதே நல்வாழ்வுக்கு வழி.


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 23, 2023 10:06 pm


தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் சரி... நல்லெண்ணெய் எப்படி?

அதையும் பார்த்துவிடுவோம். நல்லெண்ணெயில் நிறையுறாக் கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது MUFA மற்றும் PUFA என இரண்டுமே கிட்டத்தட்ட சம விகிதத்தில் இருக்கின்றன. எனவே சுத்திகரிக்காமல் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயும் நல்லதுதான்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இதுவரை நாம் பார்த்தது, கொழுப்பின் வகைகளை வைத்து! எண்ணெய்களின் சுத்திகரிப்பு முறையும் ரொம்பவே முக்கியம். சூரியகாந்தி முதலிய எண்ணெய்கள் MUFA வகை கொழுப்புகளை அதிகம் கொண்டிருப்பவைதான். ஆனால், சுத்திகரிக்கப்பட்டுப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் அவற்றைக் கெடுதல் என்கிறோம். இருப்பதிலேயே ஆலிவ் எண்ணெயில்தான் MUFA கொழுப்புகள் அதிகம் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்த லிஸ்ட்டில் இருப்பது சூரியகாந்தி எண்ணெய்தான். கார்ன் ஆயில், சோயா ஆயில் போன்ற மற்ற வெஜிடபிள் எண்ணெய்களில் PUFA வகை கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றன. பின்னர் ஏன் சூரியகாந்தி எண்ணெயைக் கெட்டது என்கிறோம்? இதுபோன்ற பெரும்பாலான நவீன எண்ணெய்களை வேண்டாம் என்று கூறுவதற்கு முக்கிய காரணம், அவற்றின் சுத்திகரிப்பு முறை.

செக்கில் ஆட்டிய எண்ணெய்மீது இப்போது மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. புதிது புதிதாகச் செக்கு எண்ணெய்கள் சந்தைக்கு வருகின்றன. அவை எப்படி?

வித்துகளைப் பிழிந்து பெரிய அளவில் சூடாகாமல் இயற்கையாக வடிகட்டிப் பயன்படுத்துவதுதான் செக்கு எண்ணெயின் சிறப்பு. ஆனால், தற்போது எண்ணெய்களைச் செக்கில் பிரித்தெடுப்பது கடினமான ஒன்று. அதனால் அவற்றை கெமிக்கல் மற்றும் மெக்கானிக்கல் முறையில் சுத்திகரிப்பு செய்கிறார்கள். அதாவது வித்துகளை அதிக அழுத்தமுள்ள எந்திரத்தில் போட்டு ஆட்டி, பிழிந்து, கெமிக்கல்களைக் கொண்டு சுத்திகரிப்பார்கள். அல்லது அதை மிக அதிக வெப்பத்தில் சூடாக்கி Distillation முறையில் கழிவுகளை அகற்றுவார்கள்.

இதுபோன்ற சுத்திகரிப்பு முறைகளை மேற்கொள்ளும் போது அதில் Trans Fat உருவாகிறது என்று சொல்கிறார்கள். செக்கில் பிழிந்த, இயற்கை முறையில் உருவான சூரியகாந்தி எண்ணெய் ஒருவேளை நல்லதாக இருக்கலாம். ஆனால் ப்ராசஸ் செய்யக்கூடிய முறைகள் பிரச்னைக்குரிய விதத்தில் இருப்பதால்தான் அவற்றிலிருந்து விலகி நிற்கச் சொல்கிறேன்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, பெரிய அளவில் சூடுபடுத்தப்படாத, செக்கில் ஆட்டிய எண்ணெய்கள், அதிலும் நாம் வெகுகாலமாகப் பயன்படுத்திவரும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் முதலிய எண்ணெய்களை எடுத்துக்கொள்வது பிரச்னையே கிடையாது. மேலும் நெய், வெண்ணெய் பயன்படுத்துவதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எந்த எண்ணெயாக இருந்தாலும் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். காரணம், எண்ணெய் என்பதே உணவில் சுவையைக் கூட்டுவதற்கும், அதைச் சமைப்பதற்கும் சேர்க்கப்படும் ஒரு கூடுதல் பொருள். எண்ணெயை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.

ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு ஸ்பூன்தான் பயன்படுத்தப்போகிறோம் என்றால் அந்த 15-20 மி.லி, நம் உடலில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்துவிடாது என்பதே உண்மை. அதனால், எண்ணெய்கள் மேல் அதிக கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும். தேங்காய், நட்ஸ் வகைகள், நிலக்கடலை, பால் போன்றவற்றின் வாயிலாகக் கொழுப்பை சைவ உணவாளர்கள் எடுத்துக்கொள்ளலாம். அசைவம் சாப்பிடு பவர்கள் சிக்கன், மட்டன், மீன், முட்டைகள் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

உண்மையில், Trans Fats வகைகளைத் தவிர மற்ற எதையும் கெட்ட கொழுப்பு என்று ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாம் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில் 30 சதவிகிதம் கொழுப்பிலிருந்து வரவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமே கூறியிருக்கிறது. ஒரு நபர் சராசரியாக 2,000 கலோரிகள் எடுத்துக்கொள்கிறார் என்றால், அதில் 600 கலோரி வரை கொழுப்பிலிருந்து வரவேண்டும். அதற்கு நாம் 60-70 கிராம் கொழுப்பை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்துகளை 10-20 சதவிகிதம் குறைத்துக்கொண்டு, நல்ல கொழுப்புகள் உள்ள உணவை இன்னும் 10-20 சதவிகிதம் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம் என்று நான் பரிந்துரைப்பேன். ஆனால், உலக சுகாதார நிறுவனம் கூறும் அந்த 30 சதவிகித அளவைக்கூட நாம் எடுத்துக்கொள்வதில்லை. அதாவது கொழுப்புகளைப் பார்த்து ஒட்டுமொத்தமாக பயந்து ஒதுங்கிவிடும் நாம், 80-90 சதவிகிதம் மாவுச்சத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். கொழுப்பு, புரதங்களை ஓரமாய் ஊறுகாய்போல எடுத்துக் கொண்டி ருக்கிறோம். இது மாற வேண்டும்.

புரதம் பற்றி நாம் ஏற்கெனவே பேசியுள்ளோம். எனவே புரதம், கொழுப்பு ஆகியவற்றை தலா 30 சதவிகிதம் அளவுக்கு அதிகப்படுத்தி, மாவுச்சத்தை 40 சதவிகிதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக்கொண்டாலே இன்சுலின் எதிர்ப்புத் தன்மை போன்ற பெரும்பாலான பிரச்னைகள் கட்டுக்குள் வரும். இதை விட்டுவிட்டு ‘கொழுப்பைக் குறைக்கிறேன் பேர்வழி’ என மாவுச்சத்தை அதிகமாகச் சாப்பிட்டு, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாகி, உடல் பருமன் உண்டாகி, மாரடைப்பு, சர்க்கரை, Fatty Liver, PCOD போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாவதெல்லாம் அவசியமா என்று யோசியுங்கள்.

உண்மையில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை என்பது கொரோனவைவிடப் பெரிய நோய். கொழுப்பை சரியான அளவில் எடுத்துக்கொள்வதே அதற்குத் தீர்வு. கொழுப்பு மீது உள்ள பயம் நீங்கினால் மட்டுமே இதை நம்மால் செய்ய முடியும்.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 23, 2023 10:19 pm

நோய்களை இப்படிப் பிரிப்பது போலவே சூட்டுத்தன்மையுள்ள உணவுகள், குளிர்ச்சித்தன்மையுள்ள உணவுகள் எனப் பிரிக்கிறார்கள்

சாதாரணமாக உணவு விஷயத்தில் நம் வீடுகளில் ஒலிக்கும் வார்த்தைகள் `குளிர்ச்சி', `சூடு'. ‘இது சூடுப்பா, இதைச் சாப்பிட்டா வயித்துல எரிச்சல் ஏற்படும்'. `இது குளிர்ச்சி, இது சாப்பிட்டா சளிப்பிடிச்சுக்கும்' என எல்லா உணவுகளையும் பெரியவர்கள் வகைப்படுத்துவார்கள். குளிர்ச்சி, சூட்டை மையமாக வைத்து நிறைய நோய்களைத் தொடர்புபடுத்தும் வழக்கமும் இருக்கிறது.

ஒரு குழந்தைநல மருத்துவராக, சளி காய்ச்சலுடன் வரும் பல குழந்தைகளை தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். “நல்லாத்தான் டாக்டர் இருந்தா. சொல்லச் சொல்லக் கேட்காம கொய்யாப்பழம் சாப்பிட்டா... குளிர்ச்சி... சளிப்புடிச்சுக்கிச்சு’’, “சாத்துக்குடி ஜூஸ் குடிச்சான், அதுல இருந்தே சளியும் காய்ச்சலுமா இருக்கு”, “ரெண்டு மாம்பழம் ஒண்ணா சாப்பிட்டான்... சூடு, வயித்துவலியைக் கிளப்பிருச்சு’’ என்றெல்லாம் என்னிடம் வரும் பெற்றோர் சொல்வார்கள். அறிகுறிகளைச் சொல்வதைவிட எதனால் ஏற்பட்டது என்று சொல்லி அதற்கான தீர்வுகளைக் கேட்பார்கள். அந்த அளவுக்கு நோய்களை நாம் சூடு, குளிர்ச்சி ஆகிய இரண்டோடு தொடர்புபடுத்தி வைத்திருக்கிறோம்.

சூடு, குளிர்ச்சி போன்றவை உண்மையில் நோய்களைத் தீர்மானிக்கின்றனவா? இவை நம்மூர் மருத்துவ முறைகளில் மட்டும்தான் இருக்கிறதா? அல்லது, பிறநாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் உண்டா? குளிர்ச்சியான, சூடான உணவுகள் எவை, அவற்றை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பதையெல்லாம் அலசுவோம்.

இந்திய மருத்துவ முறைகளான சித்தாவும் ஆயுர்வேதமும் குளிர்ச்சி, சூடு பற்றிப் பொதுவான செய்திகளையே கூறுகின்றன. ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், கபம் என நோய்களை மூன்றாகப் பிரிக்கிறார்கள். சித்த மருத்துவத்திலும் இதுபோன்ற பிரிவினைகள் இருக்கின்றன. பித்தத்தைச் சூடு சார்ந்தும்; வாதம், கபம் இரண்டையும் குளிர்ச்சி சார்ந்தும் வகைப்படுத்துகிறார்கள்.

சூடு என்றால் வெறும் காய்ச்சல் என்ற பொருள் மட்டும் கிடையாது. எவையெல்லாம் எரிச்சல், வலி ஆகியவற்றைத் தருகின்றனவோ அவையெல்லாம் பித்த நோய்கள்; கண் எரிச்சல், சிறுநீர் மலம் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல்கள், வயிற்று எரிச்சல், கடும் வியர்வை, தோல் வெடிப்பு, வெயில் புண், காமாலை, வாய்ப்புண் போன்றவற்றைப் பித்த நோய்களாக வகைப்படுத்துகிறார்கள். குளிர்ச்சியை வாதம் என்று சொல்கிறோம். பெரும்பாலும் தசை, எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்னைகள், பக்கவாதம் போன்ற நரம்பியல் பிரச்னைகள், மலச்சிக்கல், இதயத் துடிப்பு சார்ந்த பிரச்னைகள், பல்வலி, காதுவலி, நடுக்கம் ஆகியவை வாதம் என்ற வகைக்குள் வரும். அடுத்தது கபம். சளி, இருமல், சோர்வு, உடல் பருமன் போன்றவை கபத்தில் அடங்கும்.

நோய்களை இப்படிப் பிரிப்பது போலவே சூட்டுத்தன்மையுள்ள உணவுகள், குளிர்ச்சித்தன்மையுள்ள உணவுகள் எனப் பிரிக்கிறார்கள். இரண்டிலும் அடங்காத நியூட்ரல் வகை உணவுகளும் உண்டு. முட்டை தொடங்கி பெரும்பாலான அசைவ உணவுகள் சூடு வகையில் வருகின்றன. மீன் மற்றும் எருது இறைச்சி இதில் விதிவிலக்கு. மேலும் காரமான மசாலாப் பொருள்கள், மிளகாய், பூண்டு, வெங்காயம், புளிப்புத் தன்மையைக் கொடுக்கும் பொருள்கள், பயறு வகைகள் ஆகியவையும் இந்த வகையில் அடங்கும். உலர் திராட்சை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றைத் தவிர பெரும்பாலான இனிப்புத்தன்மையுடைய, நீர்த்தன்மை அதிகமுள்ள பழங்கள் குளிர்ச்சியைத் தருபவை. காய்கறிகளும் குளிர்ச்சி வகைதான். தயிர், மோர், பால் போன்ற உணவு வகைகள், நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் சோறு, கோதுமை, சர்க்கரை ஆகியவையும் இந்த வகைதான். ஆட்டுப்பால், கல் உப்பு, பச்சைப் பயிறு, பழைய அரிசி, பொரி ஆகியவற்றைச் சூடு, குளிர்ச்சி வகைகளில் சேராத உணவுப்பொருள்கள் என்று வகைப்படுத்தலாம்.

சூடு அல்லது பித்தம் அதிகமாவதால் ஏற்படும் நோய் வயிற்றுப்போக்கு என நம்பப்படுகிறது. காரமான உணவுகள் பேதியை உண்டாக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. அதுபோல சளி என்பது, பழங்கள், சர்க்கரை, தயிர், மோர் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு எனச் சொல்லக் கேட்டிருப்போம். அதேநேரம் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கூர்ந்து கவனித்தால் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள முடியும். சூட்டினால் ஏற்படும் பேதியை குளிர்ச்சியான உணவுகளைக் கொடுத்து சரி செய்வார்கள். குளிர்ச்சியால் ஏற்படும் சளி போன்ற பிரச்னைகளுக்குக் காரமான சூப் மற்றும் அசைவ உணவுகளைச் சாப்பிடத் தருவார்கள். வெயில் தாக்கத்தால் ஏற்படும் புண் போன்ற பிரச்னைகளுக்கு இளநீர், மோர் குடித்து உடலைக் குளிர்ச்சியாக்க முயல்வார்கள்.

நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் போலவே உலகின் அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இந்தச் சூடு, குளிர்ச்சி கான்செப்ட் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம். TCM என்று சொல்லக்கூடிய Traditional Chinese Medicine என்பது உலகின் முதன்மை மருத்துவ முறைகளில் ஒன்று. அதில் யின், யாங் என உணவுகளையும் நோய்களையும் இரண்டாகப் பிரிக்கிறார்கள். யின் என்பது குளிர்ச்சி, யாங் என்பது சூடு. நம்மூரில் செய்வதுபோல யின் வகை நோய்களுக்கு யாங் வகை உணவுகளைக் கொடுத்தும், யாங் வகை நோய்களுக்கு யின் வகை உணவுகளைக் கொடுத்தும் சரி செய்கிறார்கள். ஈரான் நாட்டின் பெர்ஷிய மருத்துவமுறையான யுனானி மருத்துவத்திலும் மெஜஸ் என்ற பெயரில் இதே கான்செப்ட்தான் பின்பற்றப்படுகிறது. கரீபியன், தென் அமெரிக்க நாடுகளிலும் இப்படித்தான்.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 23, 2023 10:20 pm


ஆனால் சில வித்தியாசங்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, நாம் மாம்பழத்தைச் சூடு என்கிறோம். சீன மருத்துவத்தில் குளிர்ச்சி என்கிறார்கள். மீன்களை நாம் குளிர்ச்சி என்கிறோம். ஆனால், சீனாவில் இது யாங் என்று வகைப்படுத்தப்படுகிறது. பயிறு வகைகளை நாம் சூடு என்று சொல்ல, அவர்கள் இதை நியூட்ரல் வகையில் சேர்த்திருக்கிறார்கள். எனவே இந்தச் சூடு, குளிர்ச்சி கான்செப்ட் பெரும்பாலான மருத்துவ முறைகளில் இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று சின்னச் சின்ன மாறுதல்களைக் கொண்டிருக்கிறது. அந்தந்த நாடுகளின் தட்பவெப்பம், அங்கு விளையும் உணவுப்பொருள்களின் தன்மைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து.

இப்போது நோய்கள் பற்றிய நம்முடைய புரிதல் மாறியிருக்கிறது. `சூடு என்றால் என்ன, எதனால் சூடு என்று சொல்கிறோம், அந்த உணவுகளுக்கு ஏதேனும் பொதுவான தன்மை இருக்கிறதா' போன்ற கேள்விகளுக்கான பதில் தெரிய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்களா என்றால், இந்தியாவில் இதுகுறித்து எந்தவித ஆராய்ச்சிகளும் நடத்தப்படவில்லை என்பதுதான் சோகம்.

மிகவும் தீவிரமாகத் தேடிப் பார்த்ததில், 1969-ல் ஹைதராபாத்தில் உள்ள National Institute of Nutrition-ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மட்டுமே இருந்தது. அவர்கள் சூடான உணவுகளையும் குளிர்ச்சியான உணவுகளையும் கொடுத்து சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா என்பதையும் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களையும் ஆராய்ச்சி செய்ய முயன்றுள்ளார்கள். ஆனால், அது முழுமையான ஆராய்ச்சியாக இல்லை. சில வித்தியாசங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்களே தவிர, பெரிதாக எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை. ஆனால், நிறைய சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நவீன மருத்துவக் கருத்துகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்வதற்கு முயற்சியெடுத்திருக்கிறார்கள்.

நவீன மருத்துவக் கோட்பாடுகளின்படி, நாம் உணவுகளை உடலுக்கு எரிசக்தி தரக்கூடிய மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்துகளை Macro nutrients என்றும் வைட்டமின் சத்துகள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, உப்புச்சத்து போன்றவற்றை Micro nutrients என்றும் பிரிக்கிறோம். இந்தச் சத்துகளுக்கும் சூடு குளிர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ச்சி செய்ய மேலை நாடுகளில் நிறைய முயற்சி எடுத்திருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சிகளில் என்ன மாதிரியான பதில்கள் கிடைத்திருக்கின்றன?

இதில் சில விஷயங்களை நம் பொதுஅறிவின் வழியே புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, எல்லாவிதமான மசாலாப் பொருள்கள், மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் ‘Pungent’ என்று சொல்லப்படும் எரிச்சல் உண்டு பண்ணும் தன்மை இயற்கையாகவே இருக்கிறது. அதனால் அந்த உணவுகளைச் சூடு என்று சொல்வதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதேபோல, பெரும்பாலான பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகளைக் குளிர்ச்சியானவை என்றும் நாம் இயல்பாக அறிவோம்.

ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை, புரதங்கள் அதிகம் இருக்கக்கூடிய உணவுகள் சூடு என்று சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு பயிறு வகைகளைச் சொல்லியிருந்தேன், ஒன்றிரண்டு தவிர பெரும்பாலான அசைவ உணவுகள், முட்டை இவற்றிலெல்லாம் புரதங்கள் இருப்பதால் சூடான உணவு என்று சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், புரதங்களைச் செரிமானம் செய்ய உடலுக்குக் கூடுதல் ஆற்றல் தேவைப்படும். இதை Thermogenic effect of Proteins என்று சொல்வோம். இதனால்தான் பல குளிர்ச்சியான நாடுகளில் புரதங்கள் நிறைந்த உணவான அசைவம் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. புரதத்தின் செரிமானம் உடலின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாகவே அந்தக்காலத்தில் பயிறு வகைகள் போலவே புரதம் அதிகமுள்ள உணவுகள் சூடு உணவுகள் என்று நம்மால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. Acidity எனப்படும் அமிலத்தன்மை அதிகமுள்ள உணவுகள் சூடு உணவுகளின்கீழ் வருகின்றன.


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 23, 2023 10:21 pm


Alkalinity என்று சொல்லும் காரத்தன்மை அதிகம் உள்ள உணவுகள் குளிர்ச்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, சிறுநீரில் Alkaline-ஐ அதிகப்படுத்தும் தன்மை கொண்ட ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவையெல்லாம் குளிர்ச்சியான உணவுகளின்கீழ் வருகின்றன.

Inflammation பற்றி கடந்த வாரம் பேசியிருந்தோம். Inflammation-ஐ அதிகரிக்கும் தன்மை சில வகையான சூடு உணவுகளுக்கு இருக்கிறது என்றும் Inflammation-ஐக் குறைக்கும் தன்மை சில வகையான குளிர்ச்சி உணவுகளுக்கு இருக்கிறது என்றும் உறுதி செய்திருக்கிறார்கள். ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மை சூடு உணவுகளுக்கு இருக்கிறது. ரத்தக் குழாய்களைச் சுருக்கும் தன்மை குளிர்ச்சியான உணவுகளுக்கு இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள். Sympathetic Nervous System என்று சொல்வோம். படபடப்பு, வியர்வை சுரப்பு ஆகியவற்றைத் தூண்டக்கூடிய தன்மை சில சூடு உணவுகளுக்கு இருக்கிறது; குளிர்ச்சியான உணவுகளுக்கு அந்தத் தன்மை இல்லை என்று சில ஆராய்ச்சிகளில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த முடிவுகளை மட்டுமே வைத்து இந்தக் குறிப்பிட்ட காரணிகள் இருந்தால் சூடு உணவு; இந்தக் காரணிகள் எல்லாம் இருந்தால் குளிர்ச்சியான உணவு என்று நாம் பொதுவாக வகைப்படுத்தமுடியாது. இதில் இன்னும் அதிகப்படியான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக் கருத்துகள் நவீன உணவு பற்றிய கோட்பாடுகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன என்று தெரியவரும். அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் அப்போதைய மருத்துவ முறைகளுக்கும் சாதன வசதிகளுக்கும் ஏற்ப நோய்களையும் உணவுகளின் தன்மைகளையும் கடினப்பட்டு வகைப்படுத்தியிருக்கிறார்கள் ஆனால் இதன் தற்போதைய தாக்கம் என்ன என்று பார்த்தால், சில முக்கியமான விஷயங்களை நாம் மறுபடியும் நினைவுபடுத்தவேண்டும்.

நோய்கள் எதனால் வருகின்றன... வாதம், பித்தம் பற்றியெல்லாம் பார்த்தோம். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட வகைப்பாடு. அவ்வளவு அருமையாக அத்தனை நோய்களையும் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த நூறு அல்லது இருநூறு ஆண்டுகளில் அறிவியல் முறைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. அவற்றோடு நம் பாரம்பரிய அறிவையும் கொண்டு நோய்களுக்கான காரணங்களை நாம் கண்டறிந்திருக்கிறோம். உதாரணமாக, பேதி என்றால் சூடு என்று மட்டும் சொல்லாமல், அது எந்தவிதமான பாக்டீரியாவால் வருகிறது, அந்த பாக்டீரியா உருவாக்கும் எந்த நச்சுப்பொருள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்றெல்லாம் பரிசோதனைகளின் வழியே கண்டறியும் இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். சளிப்பிடிக்கிறது என்றால், குளிர்ச்சியான உணவே காரணம் என்று சொல்லாமல் அதற்குக் காரணம் ஒரு வைரஸ் என்று நாம் அறிந்திருக்கிறோம். உதாரணமாக கொரோனாவை எடுத்துக்கொண்டால், அது பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கையாள்கிறோம். இதுபோல ஒவ்வொரு நோய் குறித்த கூடுதல் புரிதலும் கண்டுபிடிப்புகளும் இன்றைய முன்னேறிய மருத்துவத்தில் இருக்கின்றன. மிகவும் கடினமான PCR பரிசோதனை என்பது சாதாரணமாக ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை போல இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சியில் மாறிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் உணவுகளின் சூடு, குளிர்ச்சி குறித்த கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. என்னைப் பொறுத்தவரை, சில விஷயங்களில் ஏற்றுக்கொள்ளலாம் சில விஷயங்களில் ஏற்றுக்கொள்ளமுடியாது.

உதாரணமாக, வாந்தி பேதி என்று எடுத்துக்கொண்டால் அது சூட்டின் காரணமாக ஏற்படும் நோய்; அதற்கு நிறைய நீர்ச்சத்து உட்கொள்ளவேண்டும்; அதுதான் உயிரைக் காப்பாற்றும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர், மோர் போன்றவற்றைத் தருவார்கள். இதில் நீர்ச்சத்து மட்டுமல்லாமல் உப்புச்சத்து, குளுக்கோஸ் சத்தும் சேர்ந்திருப்பதால் இரண்டும் இணைந்து உப்புச்சத்துக் குறைபாட்டை நீக்கி உயிரைக் காப்பாற்றும். எனவே வாந்தி, பேதிக்கு நீர்ச்சத்து நிறைந்த இளநீர், மோர் குடிக்கவேண்டும் என்பது மிகவும் அருமையான அறிவியல்பூர்வமான விஷயம்தான். அதேபோல, சளிப்பிடித்திருந்தால் காரமான சூப் அல்லது மிளகுப் பால் குடிக்கச் சொல்கிறோம். இது நோயைக் குணப்படுத்துமா என்றால், கிடையாது. ஆனால் தொண்டைக் கரகரப்பை நீக்கி நமக்கு இதம் கொடுக்கும். இதுபோன்ற விஷயங்களை ஏற்றுக்கொள்ளலாம்.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8424
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 5 1571444738 உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 5 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:06 am

ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை வெயிலில் வைத்தால் அது சிறிது நேரத்திலேயே சூடாகிவிடும். அதுபோல நம் உடலும் வெயிலில் இருக்கும்போது சூடாகும்தான்

சூடு, குளிர்ச்சி பற்றிய உண்மைகள், கற்பனைகளை கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இன்னொரு முக்கிய விஷயத்தை இந்த வாரம் பார்க்கலாம். தண்ணீரில் தொடங்கி, இளநீர், ஜூஸ் எனப் பலவித நீர்ச்சத்து உணவுகளை நாம் எடுத்துக் கொள்கிறோம். அவற்றில் எது நல்லது? எதற்கு உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை இருக்கிறது?

மனிதர்களைப் போல கோடானுகோடி உயிரினங்கள் இங்கே உண்டு. ஆனால் வெயில் காலத்தில் அவை மோர், இளநீர், பழச்சாறு என்றெல்லாம் சிறப்பு நீர்ச்சத்து உணவுகளைத் தேடி ஓடுகின்றனவா என்றால், இல்லை என்பதே பதில். பிறகு எப்படி அந்த உயிரினங்கள் தங்களின் சூட்டைக் குறைத்து நீர்ச்சத்தை சரியான அளவில் வைத்திருக்கின்றன? இந்தக் கேள்வியோடு தண்ணீரைப் பற்றிய தவறான புரிதல்கள் குறித்தும் நாம் பேசலாம்.

உடலைக் குளிர்ச்சியாக்குவதற்குச் சிறந்த உணவு எது என்பதைப் பார்க்கும்முன் உடல் குளிர்ச்சியாதல் என்பதன் அடிப்படை அறிவியலைப் பற்றிப் பார்க்க வேண்டும்.

விலங்குகளில் இரண்டு வகை உண்டு. ஹோமியோதெர்மிக் (Homeothermic), பாய்கிலோதெர்மிக் (Poikilothermic). நம் சுற்றுச்சூழலின் வெப்பத்திற்கேற்ப நம் உடலின் வெப்பமும் மாறிவிடுவது பாய்கிலோதெர்மிக். உதாரணத்திற்கு, பல்லி, பாம்பு ஆகிய விலங்குகளின் வெப்பம் சுற்றத்தின் வெப்பத்தை வைத்து மாற்றமடையும். சிறிய விலங்குகள் பலவும் இந்தவகையில் சேரும். மனிதர்கள் ஹோமியோதெர்மிக் வகை. வெளிப்புறம் எந்த மாதிரியான வெப்பம் இருந்தாலும் நம் உடல் குறிப்பிட்ட வெப்ப அளவிலேயே இருப்பதுதான் ஹோமியோதெர்மிக். நீங்கள் சஹாரா பாலைவனத்தில்கூட இருக்கலாம், ஆனால் நம் உடலின் வெப்பம் 37 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். அதேபோல நீங்கள் குளிர்ச்சியான அண்டார்ட்டிகாவில் இருந்தாலும் உங்கள் உடலின் வெப்பம் 37 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட வெப்பத்தில்தான் நம் உடலின் ஹார்மோன்கள் முதல் என்சைம்ஸ் வரை அனைத்தும் சரியாக வேலை செய்யும். அதிக சூட்டிலும் சரி, குளிர்ச்சியிலும் சரி, நம் உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்யாது.

ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை வெயிலில் வைத்தால் அது சிறிது நேரத்திலேயே சூடாகிவிடும். அதுபோல நம் உடலும் வெயிலில் இருக்கும்போது சூடாகும்தான். அந்தக் கூடுதல் சூட்டை வெளியேற்ற நம் உடல் பல்வேறு செயல்முறைகளைக் கொண்டிருக்கிறது. இதேபோல பனிக்காலத்தில் சுற்றத்தின் வெப்பம் மிகக்குறைவாக இருக்கும். ஆனால் அப்போதும் நம் உடலின் வெப்பம் 37 டிகிரியில் சீராக இருக்கவேண்டும். அந்தநேரத்தில் நம் உடல் தானாகவே சூட்டை உருவாக்கி வெப்ப அளவைச் சீராக வைத்துக் கொள்ளும். இதுவே ஹோமியோதெர்மிக் விலங்குகளில் உடற்செயல் முறை.

வெளி வெப்பத்தைக் கணக்கிட நாம் தெர்மாமீட்டரைப் பயன்படுத்துவதைப் போல நம் உடலுக்குள்ளும் ஒரு தெர்மாமீட்டர் உண்டு. நம் மூளையின் ஒரு முக்கியமான பகுதி ஹைப்போதலாமஸ். அப்பகுதியில் வெப்பத்தைக் கணக்கிடும் ஒரு தெர்மாமீட்டர் இயற்கையிலேயே உள்ளது. வெப்பத்தை வெளி யேற்றவேண்டுமா அல்லது அதிகரிக்க வேண்டுமா என்பதை அந்த மீட்டர்தான் முடிவு செய்கிறது. அதற்காக நம் ரத்தக் குழாய்களுக்குச் சில சிக்னல்களைக் கொடுக்கிறது இந்த ஹைப்போதலாமஸ்.

நம் தோல்பகுதியின் வியர்வை நாளங்களில் உள்ள ரத்தக் குழாய்களுக்கு இந்தச் சிக்னல்கள் செல்கின்றன. உடனே அங்கிருக்கக்கூடிய ரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. வியர்வை நாளங்களுக்கான ரத்த ஓட்டம் அதிகரித்து நீர் வியர்வையாய் வெளியேறுகிறது. அதோடு சிறிதளவு சோடியம் குளோரைடு, பொட்டாசியம் முதலிய உப்புச் சத்துகளும் வெளியேறுகின்றன.

எதற்காக இந்த நீர் வெளியேறுகிறது?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:06 am


12-ம் வகுப்பு இயற்பியல் பாடம் உங்களில் எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது? எப்போதெல்லாம் நீர் ஆவியாக மாறுகிறதோ அங்கு ஒருவித குளிர்ச்சி உண்டாகும் என்பது அறிவியல். இந்த `Evaporation causes Cooling'-கைத்தான் நம் உடலும் செய்கிறது.

அதாவது, நம் ரத்த நாளங்கள் அனைத்தும் விரிவடைந்து நம் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையாக வெளியேறு கிறதல்லவா, அந்த வியர்வை ஆவியாகும்போது குளிர்ச்சி உண்டாகிறது. எனவே உடலில் சேரக்கூடிய இந்தக் கூடுதல் வெப்பம் குளிர்ச்சியால் மீண்டும் குறைந்துவிடும்.

இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு குளிர்சாதனப்பெட்டியுடன் (AC) ஒப்பிட்டுப் பார்ப்போம். ஏசியில் ‘தெர்மோஸ்டாட்’ என்று ஒரு கருவி இருக்கும். அறையின் உஷ்ணத்தைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல், கண்டன்சர் என்னும் பகுதி மூலம் அந்த உஷ்ணத்தை வெளியேற்றும். நமது மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியை ஏசியின் தெர்மோஸ்டாட் உடன் ஒப்பிடலாம். நமது வியர்வை நாளங்களை ஏசியின் கண்டன்சர் உடன் ஒப்பிடலாம்.

வெயில்காலத்தில் ரத்தக் குழாய்கள் எப்படி விரிவடைகிறதோ, அதேபோல குளிர்காலத்தில் சுருக்கமடைகின்றன. சுருக்கமடைவதால் வியர்வை நாளங்களுக்கான ரத்த ஓட்டம் பெரிய அளவில் இருக்காது. அதனால் வியர்வை வெளியேறாது. உடல்சூடும் குறையாது.

இதுமட்டுமல்லாமல், அந்தத் தருணத்தில் நம் உடலின் பெரிய தசைகள் பலவும் ஆக்டிவேட் செய்யப்படுகின்றன. அப்படிச் செய்கையில் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சூடு உண்டாகிறது. குளிர்காலத்தில் நம் உடல் நடுக்க மடைவது இதனால்தான். இவைதான், வெப்பத்தை முறைப்படுத்த நம் உடல் கடைப்பிடிக்கும் செயல் திட்டங்கள். இதைப் புரிந்து கொண்டால்தான் உடலைக் குளிர்ச்சி அடையச் செய்வதற்கு என்ன நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் புரியும்.

வெயில் காலத்தில் மிக அதிக அளவில் வியர்வை வெளியேறுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். பொதுவாக சிறுநீரில் உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள் வெளியேறும். தேவையான அளவு சிறுநீர் உடலில் இருந்து வெளியேறாதபோது, அந்தக்கழிவுகள் மிக அடர்த்தியான அளவில் வெளியேறும். அப்போது சிறுநீர்ப் பாதையில் மிகுந்த எரிச்சல் ஏற்படும். இதை `Strangury' என்று சொல்வோம். உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிதான் இது. இது ஒருபுறம் இருக்க, நம் உடலால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சாத்தியங்களும் சில நேரம் உருவாவதுண்டு. அந்தத் தருணங்களில் நம் உடலின் ஏசி மெக்கானிசம் வேலைசெய்யாமல் போய்விடும். இதை Heat Exhaustion அல்லது Heat Stroke என்று சொல்கிறோம். இந்த நிலை மிக ஆபத்தானது. காரணம், உடலின் வெப்பம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்கும்போது அதை நம் உறுப்புகளால் தாங்கிக்கொள்ள இயலாது. சுயநினைவை இழத்தல், வலிப்பு, உறுப்புகள் செயலிழப்பு தொடங்கி நம் உயிருக்கேகூட ஆபத்தாக அமையக்கூடும்.

இதைத் தவிர்ப்பதற்கு என்ன வகை உணவுகளை எடுத்துக்கொள்வது என்பதைப் பார்க்கலாம்.

ஏசி எந்திரத்தில் சென்ஸார் மற்றும் கன்டன்ஸரைப் போல `கூலண்ட்' என்ற மற்றொரு பொருளும் இருக்கும். உஷ்ணத்தைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது அதுதான். அதைப்போல நம் உடலுக்கும் `கூலண்ட்' இருக்கிறது. அதுதான் தண்ணீர். நம் உடல் அதிக அளவிலான வெப்பத்துக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு அடிப்படை தண்ணீர் என்ற கூலண்ட்தான். நிறைய தண்ணீர் குடிக்கக் குடிக்க அதிக அளவிலான வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதனால் நம் உடலும் குளிர்ச்சியாகவே இருக்கும். ஒரு அளவுக்குமேல் நீர்ச்சத்து குறைந்துபோனால் நம் உடலின் ரத்த ஓட்டம் குறையும். வியர்வையை வெளியேற்றுவதைவிட மூளை, இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு ரத்தத்தைச் செலுத்துவதே முக்கியம் என அவற்றுக்கு திசை திருப்பி விட்டுவிடும் நம் உடல். வியர்வை வெளியேறாமல் வெப்பம் அதிகரிக்கும். எனவே, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதுதான் நம் உடல் உஷ்ணம் ஆகாமல் இருப்பதற்கான சிறந்த வழி.

தண்ணீரை அப்படியே குடிப்பதா, அல்லது, பானை, ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்ச்சியாகக் குடிப்பதா என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அதெல்லாம் ஒன்றுமே தேவையில்லை. சாதாரண தண்ணீரை நிறைவாகக் குடித்தாலே உஷ்ணம் ஆகாமல் நம் உடலைப் பாதுகாக்கலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:06 am


வியர்வை வெளியேறும்போது அதோடு சில உப்பு வகைகளும் சேர்ந்தே வெளியேறும். பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் மூலமாகவும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலமாகவுமே நமக்குத் தேவையான உப்புச் சத்துப்கள் கிடைத்துவிடும். அதனால், உடல் குளிர்ச்சியாக இருக்க தண்ணீர் மட்டுமே போதுமானது. சிலநேரங்களில் நாம் அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த நேரத்தில் வியர்வையோடு அதிக அளவு உப்புச்சத்தும் சேர்ந்து வெளியேறும். அப்போது இழப்பு ஏற்படும். உடலில் இருக்கும் உப்பின் அளவு போதாது. அந்த நேரத்தில் உப்புச்சத்தையும் சேர்த்து நாம் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தச்சூழலில், தண்ணீரையும் தாண்டி சில நீர் ஆகாரங்களை நாம் எடுத்துக்கொள்வது நல்லது. அந்தத் தருணத்துக்கேற்ற உணவாக இளநீர் மற்றும் உப்பு கலந்த மோர் ஆகியவற்றை நான் பரிந்துரைப்பேன். காரணம், தண்ணீரோடு சேர்த்து அவற்றில் நமக்குத் தேவையான உப்புகள், சிலவகை சர்க்கரைகளும் சேர்த்துக் கிடைக்கின்றன.

நீர்ச்சத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள செயற்கையான முறையில் சிறந்த வழி ORS. ‘Oral Rehydration Solution' என்று சொல்லக்கூடிய இவை வாந்தி, பேதி சமயங்களில் மட்டுமன்றி, மிகுந்த வெயிலில் நம் உடலைப் பாதுகாக்க உதவிகரமாய் இருக்கும். இதில் தண்ணீரோடு சேர்த்து உப்பு, சர்க்கரைச் சத்துகளும் இருக்கின்றன. உப்புச் சத்தோடு சேர்த்து சர்க்கரைச் சத்தும் இருந்தால்தான் உப்புகளை நம் குடல் சரியாகக் கிரகித்து ரத்தத்தில் சேர்க்கும். எனவேதான், உப்புச்சத்தும் சர்க்கரைச் சத்தும் சரி சம அளவில் இருக்கும் இளநீர் மோர் மற்றும் ORS போன்ற நீர்ச்சத்து உணவுகளை நாம் வெயில் காலத்திற்கு ஏற்ற சிறந்த நீர்ச்சத்து உணவுகளாகப் பரிந்துரை செய்கிறோம்.

உப்புச்சத்தைச் சரியான அளவில் எடுக்காவிட்டால் தசைப்பிடிப்பு, நடக்கவே முடியாத நிலை ஏற்படும். ஏன், மூளையின் செயல்பாடுகூட மங்கிப்போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், உப்புச்சத்துக்காக மேற்சொன்ன உணவுப்பொருள்களை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டுமா என்றால், கிடையாது. ஓரளவுக்கு இளநீர், மோர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மீதம் சாதாரண தண்ணீரை மட்டும் குடித்தாலே போதும்.

வெயில்காலத்தில் நீர்ச்சத்துக்காகப் பழ ஜூஸ், கூல்ட்ரிங்ஸ் குடிப்பார்கள். சிலர் எலக்ட்ரோலைட் (Electrolyte) போன்ற பானங்களையும் குடிப்பதுண்டு. பழ ஜூஸ் இயற்கையான ஒன்று என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. பழங்களில் இனிப்புச் சத்து நம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். ஆனால் உப்புச்சத்து பெரிய அளவில் இருக்காது. எனவே, சர்க்கரை போட்டோ, போடாமலோ கிடைக்கும் பழ ஜூஸில் இருந்து நமக்கு நீர்ச்சத்தும் சிறிதளவு பொட்டாசியம் சத்தும்தான் கிடைக்குமே தவிர சோடியம் குளோரைடு உப்பு நமக்குக் கிடைக்காது. குறிப்பாக சர்க்கரைச் சத்தே அதிகம் கிடைக்கும். இதுவே குளிர்பானங்கள் குடித்தால் இந்தப் பொட்டாசியம் சத்தும் கிடைக்காமல் போய்விடும். அவற்றில் வெறும் தண்ணீர் மற்றும் சர்க்கரை மட்டுமே நம் உடலுக்குக் கிடைக்கின்றன. மிகுந்த தாகமாக இருக்கும்போது வெறும் சர்க்கரைச் சத்தை மட்டுமே எடுத்துக் கொள்கையில் அது நம் தாகத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

வெயில் நேரத்தில் தண்ணீர், இளநீர், மோர் குடித்தால் தாகம் தணியும். இதே சர்க்கரை போட்ட பழ ஜூஸ் அல்லது குளிர்பானங்கள் குடிக்கையில் அந்த நேரத்திற்கு தாகம் தணிந்ததுபோலத் தோன்றுமே தவிர மீண்டும் மீண்டும் தாகம் எடுக்கும். காரணம், நம் தாகத்தைத் தணிப்பதற்கான அடிப்படை விஷயம் உப்புச் சத்தே. அதை எடுக்காமல் விடும்போது நம் தாகம் மேலும் மேலும் அதிகரிக்கும். பழங்களில்கூட பொட்டாசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன. ஆனால் செயற்கை பானங்களில் இவை எதுவும் கிடையாது. தாகத்தைத் தணிக்காமல் மேலும் அதிகப்படுத்தி நம்மைச் சோர்வடையச் செய்பவை அவை. அதனால் மிகுந்த தாகமாக இருக்கும் பொழுது வெறும் பழச்சாறு அல்லது கூல்ட்ரிங்ஸ் வகைகளைக் குடிப்பது நல்லதல்ல. லெமன் ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்கையில்கூட சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

எலக்ட்ரோலைட் பானத்தைப் பொறுத்தவரை சர்க்கரைச் சத்து அதிக அளவிலும் உப்புச்சத்து குறைந்த அளவிலும் இருக்கும். இவை சரிசமமாக இருக்கும் பானங்களின் விலை அதிகம். இந்த அடிப்படையான சத்துகளை எடுத்துக்கொள்ள நூற்றுக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. வீட்டில் நீங்களே உப்பையும் சர்க்கரையையும் தண்ணீரில் போட்டுக் குடிக்கலாம். அதற்கு ORS-கூடத் தேவையில்லை.

சாதாரண தண்ணீர், இளநீர், உப்பு போட்ட மோர், ORS... நம் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டு நீர்ச்சத்து, உப்புச்சத்து ஆகியவற்றையும் குறையாமல் பார்த்துக்கொள்வதற்கு இவையே போதும். இந்த நீராகாரங்கள் தாண்டி நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவை ஓரளவுக்கு நல்லது என்றாலும் அவற்றோடு சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது.

ஆக, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எளிமையான தீர்வு நம் கையிலேயே இருக்கிறது என்று தெரிந்துகொண்டிருப்பீர்கள்.


Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக