புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
3 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
3 Posts - 3%
manikavi
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
216 Posts - 42%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
6 Posts - 1%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 12 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:33 pm

உமக்குக் கல்யாணம் ஆச்சுதா ?

தெலுங்கனைப் பார்த்துக் கேட்டான் சங்கரன்.

இன்னும் இல்லை. அடுத்த வருஷம் செய்யணும் என்று என் தாயார் முரண்டு பிடிக்கிறாள்.

நாலு தம்பிடி பொடி கொடும் சாயபு.

வந்து நின்ற ஆள் வஸ்தாது போல இருந்தான். பீங்கான் ஜாடியில் இருந்து நேர்த்தியாகப் பொடியைக் கரண்டியால் எடுத்து அதை வாழைமட்டையில் அடைத்துக் கொண்டிருந்த கருத்தானைப் பார்த்தபடிக்கு, கல்யாணம் என்று சொல்லி ஒரு மாசம் ரெண்டு மாசம் வராமல் தெலுங்கு பிரதேசத்துக்குச் சவாரி விட்டுடுவீரா என்று தெலுங்கனைக் கேட்டான் சங்கரன்.

உத்தியோகம் இங்கே நிச்சயம் என்ற திருப்தி முகத்தில் தெரிய, அதெல்லாம் இல்லே சார், எல்லாம் இங்கேயே தான். என்ன ரெண்டு மூணு நாள் லீவு எடுக்க வேண்டி வரும் என்றான் தெலுங்கன்.

லீவு என்றால் என்ன என்று தெரியவில்லை சங்கரனுக்கு. தெலுங்கனுக்கு இங்கிலீஷ் அத்துப்படி ஆயிருந்ததில் அவனுக்குக் காரணமில்லாமல் அசூயை வந்தாலும் அவன் தன்னை சார் என்று விளித்ததில் ஏகப் பெருமை.

அஸ்ஸலாம் அலைகும்.

ஜவ்வாதும், அரகஜாவுமாக மூக்கைத் துளைத்தது. கருத்தானை விட ரெண்டு மடங்கு பெரிய ஆகிருதியோடு சரிகைக் குல்லாய் வைத்துக் கொண்டு ஒரு துருக்கன் கருத்தானுக்கு சலாம் சொன்னான்.

இரண்டு பக்கத்துப் பலகையையும் பார்த்துவிட்டு, அவன் தெலுங்கு பிராமணன் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அவன் கொஞ்சம் தள்ளி உட்கார, துருக்கனும் அதே விதம் தள்ளிப் போனபடி சிரித்தான்.

ஏன் அய்யரே ஓடறே. உன்னோட வியர்வை என்னைக் கஷ்டப்படுத்தாது.

தெலுங்கன் இந்த மாதிரித் தருணங்களில் மெளனமாக இருப்பதே நல்லது என்பதுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு பொடி வாங்க அடுத்து வந்த ஒரு சிப்பாய் இடுப்பில் செருகி இருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

சிப்பாய் கடன் சொல்லிப் பொடி வாங்கிப்போக, அவன் போன பிறகு சைத்தான் கா பச்சா என்றான் கருத்தான்.

கொடுக்க மாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே பாய் ? கொட்டையையா நெறிச்சுடுவான் ?

வந்த துருக்கன் பலமாகச் சத்தம் போட்டுக் கேட்டான். தெருத் திரும்பிக் கொண்டிருந்த சிப்பாய்க்கு அது கேட்டிருக்கலாம் என்று சங்கரனுக்குச் சந்தேகமாக இருந்தது.

சுலைமான், வாயை மூடிட்டு இருக்க மாட்டியா ?

கருத்தான் அவனைக் கடிந்து கொண்டான்.

இல்லே மாப்பிள்ளே. இவனுஹள ஒரு மட்டத்துலே வைக்கணும். பயந்தா கொருமா பண்ணித் தின்னுடுவான் நம்மளை.

அந்தச் சனியன் பிடிச்சவனை விடு. இவுஹ தான் அய்யர்சாமி. நம்ம வாப்பா தோஸ்த் இல்லே அரசூர் பெரிய அய்யர்சாமி அவரோட மகன்.

துருக்கன் ஏழடி நாலடியாகக் குனிந்து சங்கரனுக்கு சலாம் சொன்னான்.

நம்ம பாகஸ்தரா ? வாரே வா தோஸ்த். சுலைமானுக்கு ரொம்ப சந்தோசம் உன்னைப் பாத்ததுலே.

கருத்தான் சங்கரனிடம் ஏற்கனவே சுலைமானைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். இந்த வியாபார அபிவிருத்தியில் மூன்றாவது பாகஸ்தன். கருத்தானின் குப்பி அதாவது அத்தை மகன். அவனும் அவன் அப்பனும் ஊரில் ஏகப்பட்ட தொழில், வியாபாரம் என்று பார்க்கிறார்கள். கப்பலில் வந்து இறங்கும் வெள்ளைக்காரர்களைக் கரைக்குக் கூட்டி வந்து அவர்கள் செளகரியத்தைக் கவனித்துக் கொள்வதிலிருந்து, மூக்குப்பொடி, தோல் செருப்பு, இடுப்பு வார், உலர்ந்த திராட்சைப் பழம் விற்பது என்று ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை.

அடுத்த வாரம் சரக்கு வரது. சுலைமான் காக்கா கிட்டப் பணம் கொடுத்து விட்டுடலாம் என்று சொல்லியிருந்தான் கருத்தான்.

சங்கரன் கையில் பிடித்திருந்த சஞ்சியிலிருந்து செட்டியார் கடை தரிசன உண்டியலை எடுத்தான்.

மன்னிக்கணும். இந்தக் கருத்தான் கடன்காரன் தம்புச்செட்டி தெருவிலே உண்டியலை மாத்தி ரொக்கமாக்க இன்னிக்குப் போகலாம் நாளைக்குப் போகலாம்னு சொல்லிண்டே இருக்கான். பிருஷ்டம் வணங்க மாட்டேங்கறது அதுக்கு. எப்படியும் நாளைக்கு மாத்தி சரக்கு பிடிக்கப் பணம் கொடுத்துடறேன்.

சங்கரன் சொல்லி முடிப்பதற்குள் தெலுங்கன் குறுக்கே புகுந்தான்.

அதெதுக்கு சார் ? நீங்க இவாளுக்கு இண்டார்சு பண்ணிக் கொடுத்திட்டாப் போறது. தரிசன உண்டிதானே ? இவாளே மாத்திக்கலாம். இல்லே இவா சரக்கு வாங்கற எடத்துலே அவா பேர்லே இன்னொரு இண்டார்சு பண்ணினாத் தீர்ந்தது விஷயம். பேரேட்டிலே உண்டியலுக்கு ஒண்ணும், காசு வசூல், வரவு செலவுக்கு ஒண்ணுமாக் கணக்கு எழுதி அப்புறம் வரவு செலவு நிலுவை எடுத்தாப் போதும். நீங்க சப்ளை பண்ணப் போறவா கிட்டேயும் உண்டியலாவே வாங்கிண்டா ராஜாங்கத்துக் கட்ட வேண்டிய வரியும் மிச்சமாகுமே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:34 pm

அவன் கண்ணுக்கு முன் தான் அற்பப் பதராகக் குறுகிப் போனதாக சங்கரனுக்குத் தோன்றியது. கிணறு வெட்ட வெட்ட பூதமும் புதையலும் வருகிறது போல, தெலுங்கனிடம் கோணிச்சாக்கில், துணிப்பையில், மடிசஞ்சியில், சருவப் பானையில், குண்டானில், குவளையில் எல்லாம் பிடித்து வைத்தாலும் தீராத விஷய ஞானம் இருக்கிறது. துரைத்தன பாஷை சரிக்குப் பேச வராவிட்டாலும் அர்த்தமாகிறது. மட்டுமில்லை. சரியான நேரத்தில் சரியான பிரயோகத்தை வாக்கில் கொண்டு வந்து நிறுத்துகிற சரஸ்வதி கடாட்சம் வேறே இவனுக்குப் பூரணமாக இருக்கிறது. தவிர, துரைகள் திட்டம் செய்து வைத்தது போல கணக்கு எழுதக் கூடியவன்.

சுலைமானும் கருத்தானும் அந்த வத்தல்காச்சித் தெலுங்கனைப் புது மரியாதையோடு பார்த்தார்கள்.

சாமி, நாளைக்குக் காலையிலே வந்துடுங்க. நாள் எல்லாம் நல்லாத் தானே இருக்கு ?

கருத்தான் தெலுங்கனுக்கு மாசாமாசம் ஐந்து ரூபாய் கொடுக்க சம்மதித்துவிட்டான்.

சம்பளம் தவிர வெள்ளிக்கிழமை பகலுக்கு மேல் கருத்தான் தொழுகைக்குப் போகிறபோது வாரம் அரை நாள் கடை அடைப்பு. அமாவாசைக்கு முழு அடைப்பு. ரம்ஜான், தீபாவளிக்குக் கடைக்கு வர வேண்டாம்.

தெலுங்கன் அந்த இரண்டு துருக்கர்களுக்கும், தமிழ்ப் பிராமணனுக்கும் தனித்தனியாக நமஸ்காரம் சொல்லி, கையில் ஐந்து ரூபாய் முன் பணமாக வாங்கிக் கொண்டு கிளம்பிப் போனான்.

கம்பேனி காரியஸ்தன்னா கெளரதையான உடுப்பு வேணும். நாளைக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டு, புதன்கிழமை வரேன். நாள் நல்லா இருக்கு அன்னிக்குத்தான்.

அவன் சொன்னதற்கு யாருமே மறுப்புச் சொல்லவில்லை.

நெறைய விஷயம் தெரிஞ்சவனா இருக்கான். ஒரு விதத்துலே நல்லது.

சுலைமான் சொன்னான்.

வேறே எதாவது விதத்துலே நல்லது இல்லியா ?

சங்கரன் கேட்டான்.

அது நாம நடந்துக்கறதைப் பொறுத்த விஷயம் தோஸ்த்.

சங்கரனுக்கு என்ன என்று சொல்ல முடியாத நிம்மதி.

கருத்தா, இருட்டிண்டு வரதே. கடையை எடுத்து வச்சுட்டு வா. சமுத்திரக் கரையிலே காலாற நடந்துட்டு வரலாம்.

அவன் கூப்பிட்டபோது சுலைமான் வேண்டாம் என்று கையைக் காட்டினான்.

கருத்தான் போவட்டும். பீவி வாயும் வயறுமா நிக்கிறா அவனுக்கு. நீ வா. கப்பலுக்குப் போகலாம். மத்தியானம்தான் வந்து நங்கூரம் போட்டுச்சு.

நானா ? கப்பலுக்கா ?

ஏன் அய்யரே, கப்பல்லே ஏறினா தீட்டுப் பட்டுப் போயிடுவியா ? கடல்லே சவாரி போனாத்தானே உங்க ஆளுகளுக்குத் தீட்டு ? நீ அதும் போயிட்டு வந்ததாச் சொன்னானே கருத்தான் ?

தீட்டுக்கு இல்லே. நான் கப்பல்லே வந்து என்ன பண்ணப் போறேன் ?

நாலு மனுஷாளைப் பார்க்கலாம் சாமிகளே.

கருத்தான் கடைக்குள் இருந்து சுண்ணாம்புக் கட்டியால் என்னமோ குறித்திருந்த பலகைகளை எடுத்து வந்து வாசலில் வைத்தபடி சொன்னான்.

சங்கரனுக்குக் கப்பலில் ஏறி உள்ளே போய் யந்திரங்களை, பிரயாணமாக வந்தவர்களை, அவர்களுக்கு வாய்த்த வசதிகள், செளகரியம் எல்லாம் பார்க்க இஷ்டம் தான். ஆனால் இருட்டிக் கொண்டு வருகிறதே.

ஏன் கவலைப்படறே தோஸ்த். பக்கத்துலே தான் வூடு. வண்டியை ஒரு விரட்டு விரட்டினா பத்து நிமிசத்துலே ஆர்பர். அப்புறம் கட்டு மரத்துலே இன்னொரு பத்து நிமிசம் கடல்லே போனா கப்பல். ஏறிப்பாத்துட்டு ராத்திரி ஒம்பது மணியைப் போல வந்துடலாம். நொங்கம்பாக்கத்துக்கு உன்ன வண்டியிலேயே கொண்டு விட்டுடறேன். ஆளு அம்பு ஆனை குருதை அல்லாம் இருக்கு நம்ம கிட்டே படச்சவன் கிருபையிலே.

ஒரு கவலையும் இல்லை. கப்பலில் ஒண்ணுக்குப் போக எல்லாம் சவுகரியம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆபத்துக்குப் பாவம் இல்லை. சுலலமான் வீட்டிலேயே காதில் பூணூலை மாட்டிக் கொண்டு தோட்டத்துக்குப் போய் அற்ப சங்கையை தீர்த்துக் கொண்டு, ஜலம் வாங்கிக் கைகால் கழுவிக் கொண்டால் ஆச்சு. துருக்க வீட்டில் நுழைந்தால் ஜாதிப் பிரஷ்டம் பண்ணுவதாக பட்டணத்து வைதீகன் எவனாவது சொன்னால் ?

அவனுக்கு ஒரு கவலையும் இல்லை. பட்டணத்து வைதீகன் எல்லாம் மயிலாப்பூரில் மூத்திரச் சந்தில் கிரஹணத்தை விரட்ட மந்திரம் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கட்டும். அரசூர் வைதீகர்களுக்கு சங்கரன் பட்டணத்தில் எக்கேடு கெட்டு யாரோடு சுற்றித் திரிந்தாலும் ஒரு கவலையும் இல்லை. அவன் திரும்பிப் போய், ஆவணி அவிட்டத்துக்குப் பூணூல் மாற்றிக் கொண்டு தட்சணை கொடுத்து அபிவாதயே சொல்லி நமஸ்காரம் பண்ணினால் போதும்.

கிளம்பலாம் என்றான் சங்கரன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:38 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்தைந்து


கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும்.

கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை மணல் ஒட்ட நடந்தாலும், வியர்வை மின்னும் நாலு கருப்புத் தோளில் பல்லக்கு ஏறிக் கெத்தாக நகர்ந்தாலும், மனுஷ நெரிசல் அடர்த்தியாகக் கவிந்த பாதையில் குதிரைக்கும், எதிர்ப்படுகிற கருப்பனுக்குமாகச் சவுக்கைச் சுழற்றி வீசி சாரட்டில் ஓடினாலும் வெள்ளைத் தோலுக்குள்ளும் வெளியிலும் பிதுங்கி வழிகிற திமிர் அது.

வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்

வந்தாண்டா வந்தாண்டா தாயோளி

பக்கத்துக் கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் பாடுகிறான். சுலைமான் அவன் அம்மாளையும் அக்காவையும் தீர்க்கமாக வைகிறான். பாடினவனும் மற்றவர்களும் ஏகத்துக்குச் சிரிக்கிறார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வருகிறது. பளிச்சென்று முகத்தில் அறைகிறதுபோல் தண்ணீரை வீசிப் போகிறது வந்த அலையொன்று. சுலைமான் திரும்ப வைகிறான். தமிழில் இருக்கப்பட்ட வசவு எல்லாம் போதாதென்று இந்துஸ்தானியிலும் திட்டுகிறான். அதில் நாலைந்து கேட்க ஏக ரசமாக இருக்கிறது சங்கரனுக்கு. வைத்தி சாரோ அந்தத் தெலுங்கு பிராமணனோ இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்றால் இந்துஸ்தானியில் மனதுக்குள்ளாவது திட்டிக் கொள்ளலாம்.

ஊரில் கொட்டகுடித் தாசிக்கு இந்துஸ்தானி குருட்டுப் பாடமாகத் தெரியும். அவளுக்கு வெண்பாவும், தரவு கொச்சகக் கலிப்பாவும், விருத்தமும் கூட இயற்றத் தெரியும். கூளப்ப நாயக்கன் காதல் பாட்டுக்கு அபிநயம் பிடிக்கத் தெரியும். புகையிலை போடமாட்டாள். போட்டால் பல் கருத்துப் போய் தொழில் நசித்து விடும் என்ற பயமாம். சங்கரன் கடையில் அவளுக்கு வாங்க ஒன்றும் இல்லை. வாங்காட்டப் போறது. சுவர் கே பச்சே அப்படான்னா என்ன ?

அய்யரே, ஒரு சிமிட்டா பொடி மூக்குலே தள்றியா ?

சுலைமான் தந்தத்தால் ஆன சம்புடத்தைக் காற்றுக்கு அணைவாகக் கைக்குள் வைத்துத் திறந்தபடி கேட்டான்.

பெண்பிள்ளைகள் இதைப் போடுவாங்களோடா சுலைமான் ?

அய்யரே, உனக்கு என்ன எப்பப் பாத்தாலும் அங்கேயே போவுது புத்தி ?

சுலைமான் அவன் பிருஷ்டத்தில் ஓங்கித் தட்டினான்.

மூணு மணி நேரத்துக்குள் கருத்தானைவிட நெருக்கமான சிநேகிதனாகி இருந்தான் சுலைமான். பணம் புரளும் சீமான் என்பதாலோ என்னமோ அவனையறியாமலேயே அதட்டலும், கிண்டல், கேலியுமாகப் பழகக் கை வந்திருந்தது. கருத்தான் ஒரு எல்லைக்கு மேல் போக மாட்டான். அவனுடைய அய்யர் சாமி அழைப்பு சங்கரனுக்குப் பாதுகாப்பாக இருந்தது. சுலைமானுக்கு அவன் வெறும் அய்யர்தான். சீக்கிரமே டேய் சங்கரா என்றும் கூப்பிடக் கூடும். சங்கரனை விடப் பத்து மடங்கு காசும் பணமும் கப்பலில் வரும் வருமானமும் அவனுக்கு ஆகிருதியைக் கூட்டிக் காட்டுகிறது.

அவன் வாப்பா தஸ்தகீர் ராவுத்தருக்கும் தான்.

விசாலமான வீட்டு வாசலிலே குரிச்சி போட்டு உட்கார்ந்து வெற்றிலைக்குள் புகையிலையோ வேறு எதோ கலந்து சுருட்டிக் கிராம்பு வைத்து அடைத்த பொட்டலத்தைச் சதா மென்று படிக்கத்தில் துப்பிக்கொண்டு இருந்த அவர் பார்வையில் சங்கரன் பட்ட கொஞ்ச நேரத்திலும் பணத்தைப் பற்றித்தான் பேசினார்.

மதுரைப் பட்டணத்திலே, திருச்சிராப்பள்ளியிலே, தஞ்சாவூரிலே, புதுக்கோட்டையிலே எல்லாம் பாக்குச் சீவல் விற்கவும், வாசனை விடயம் விற்கவும், மூக்குத்தூள் போல் சீக்கிரமே பிரக்யாதி ஏறிக் கொண்டிருக்கிற இலைச் சுருட்டு விற்கவும் யாரெல்லாம் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களின் பணம் வந்த விதம், அவர்களுக்கு எங்கெல்லாம் வைப்பாட்டிமார், எப்படிச் செலவாகிறது பணம் அந்த விஷயமாக, எவ்வளவு அண்டஞ் சேர்கிறது என்று பட்டியல் ஒப்பித்தபடி, பக்கத்தில் நிரம்பி வழிகிற படிக்கத்தில் துப்பியபடி இருந்தார் அவர்.

வீட்டுக் கூரை மேலும், மேல்தளத்திலும், வாசல் முகப்பிலும் சுவாதீனமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மேலே எச்சம் இடாமல் தோளை அப்படியும் இப்படியும் நகர்த்திக்கொண்டு அவன் மரியாதைக்கு இதைக் கேட்டுக் கொண்டிருந்க, மாடிக்குப் போன சுலைமான் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி சங்கரய்யரே சங்கரய்யரே என்று உரக்க விளித்தான்.

செருப்பாலடி படுவா. பெயரைச் சொல்றான் துருக்கன். எல்லாம் பணம் பண்ற வேலை என்று நினைத்தபடி சங்கரன் படியேறிப் போனாலும் அடுத்த நிமிடம் மனம் மாறிப் போனது.

தோஸ்த், இங்கேயே அடைப்பைத் தொறந்து வுடு.

கடன்காரன் மாடியிலேயே கழிப்பறை வைத்திருக்கிறான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:39 pm

என்னடா சுலைமான், வீட்டுக்குள்ளேயே இப்படி.

அடக்க மாட்டாமல் சிரித்தான் சங்கரன்.

அட என்னாபா நீ, கக்சுக்குள்ளே போய்க் குடித்தனம் நடத்தப் போறமா இல்லே பிரியாணி சாப்பிடப் போறோமா. அது பாட்டுக்கு அது ஒரு ஓரமா. இது பாட்டுக்கு இது நடுவுலே.

அவன் காட்டிய மகா விசாலமான மண்டபத்தில் கம்பளம் விரித்து வெல்வெட் உறை மாட்டிய திண்டும் தலகாணியுமாகக் கிடந்தது. நீக்கமற நிறைந்த அத்தர் வாடை.

அற்ப சங்கைக்கு வீட்டுக்குள்ளேயே அமைத்திருந்த இடமும் வெள்ளைப் பளிங்கினால் பாதம் அமைத்த மாதிரி நேர்த்தியாக, உள்ளே சுகந்த பரிமள மணம் சதா வீசுமாறு இருந்தது.

காசு கூடிப் போனால் மூத்திரம் கூட வாசனையடிக்கும் போல என்று நினைத்தபடியே சங்கரன் போன காரியம் முடிந்து வரும்போது கவனித்தான் அந்த அறைக்குள்ளேயே ஸ்நானம் கூட முடிக்க வசதி இருக்கிறதென்று.

அய்யரே கிளம்பலாமா. நாலஞ்சு கொடம் வச்சிருப்பே போலேருக்கே..

திண்டில் சாய்ந்து ஒரு துணிச் சஞ்சிக்குள் ஏதோ அடைத்துக்கொண்டிருந்த சுலைமான் சத்தமாகச் சொன்னது கீழ் வீட்டில் முட்டாக்குப் போட்டபடி நடமாடிக் கொண்டிருந்த பெண்பிள்ளைகள் காதிலும் விழுந்திருக்கும்.

அவனோடு கூடப் படியிறங்கிக் கீழே வந்தபோது, தஸ்தகீர் ராவுத்தர் தோளுக்கொன்றாகப் புறா உட்கார்ந்திருக்க, முகம்மதிய சுல்தான் போல் நீள ஹூக்காவுக்குள் தண்ணீர் களக் களக் என்று புரளப் புகைவிட்டுக் கொண்டிருந்தார்.

அரே முன்னா, கப்பல்லே வந்திருக்கிற ஒரு ஆத்மி விடாம விவரம் கேட்டு வச்சுக்க. காலையிலே ஏற்பாடு எல்லாம் செஞ்சுட்டு நான் போகணும். பணமுடை யாருக்குன்னு விசாரிக்க விட்டுடாதே. இந்த அய்யர் பச்சாவுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சா உபயோகமா இருக்கும். பரவாயில்லே. ஆள் கட்டுக் குடுமியும் ஜிமிக்கியுமா நல்லாத்தான் இருக்கான். வெள்ளைக்காரனுக்கு இப்படிப் பார்ப்பாரப் பிள்ளை, பாம்புப் பிடாரன், இந்திரஜால மந்திரவாதின்னு பாத்தாத்தான் கடல்லே இருந்து நிலத்துலே கால் வைப்பான்.

ராவுத்தர் தன்னை புகையிலை வியாபாரி, இப்போ புது வியாபாரத்தில் கொடி நாட்டிப் பிரக்யாதி பெற வந்த, வியாபார நெளிவு சுளிவு தெரிந்த அரசூர்ச் சங்கரய்யராகப் பார்க்காமல் குடுமியும் கடுக்கனுமாக வெள்ளைக்காரன் கண்ணில் பட்டு சந்தோஷப்படுத்த வேண்டி ஜன்மம் எடுத்த விநோதப் பிறவியாகப் பார்த்ததில் சங்கரனுக்குக் குறைச்சல் தான்.

நாளைக்கு அவனும் நிறையச் சேர்த்து வைத்தி சார் போல், அதைவிடப் பெரிதாக தஸ்தகீர் ராவுத்தர் போல் சமுத்திரக் கரையிலிருந்து வந்து காற்று சாயந்திரங்களில் பேசிவிட்டுப் போகும் அரண்மனை மாதிரி வீடு கட்டுவான். வீட்டுக்குள்ளேயே மாடியில் ஒரு கழிப்பறை ஏற்பாடு செய்ய வேண்டும். சுப்பிரமணிய அய்யரும், சுந்தர கனபாடி மாமாவும் கச்சேரி ராமநாதய்யரும் அவருடைய அவசர அவிழ்ப்பில் தெறித்த சுக்லத்திலிருந்து வழுக்கையும் தொந்தியும் தொப்பையுமாக வடிவெடுத்து வந்த வைத்தி சாரும் எல்லாம் அஸ்துக் கொட்டுவார்கள். சுப்பம்மா அத்தை வாயில் இருந்து மூத்த குடிப் பெண்டுகள் வேறே ஆயிரத்தெட்டு நொட்டச் சொல் சொல்லிப் பாட்டாகப் பாடி முட்டுக்கட்டை போடுவார்கள். ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் யந்திரம் ஸ்தாபித்துக் கொடுத்தால் சரியாகிவிடும் எல்லாம். அற்ப சங்கை செய்தபடிக்கே கீழே குளிக்கிற ராணியைப் பார்க்கலாம். அவள் இங்கே எங்கே வந்தாள் ?

கள்ளுக் குடித்தமாதிரித் தாறுமாறாக ஓடிய இரட்டைக் குதிரைகளின் காலுக்கு நடுவே மிதிபடாமல் தாவிக் குதித்து ஓடிய பட்டணத்து ஜனங்கள் அசிங்கமாகத் திட்ட சுலைமான் சந்தோஷமாகச் சிரித்தபடியே வண்டியை ஓட்டம் ஓட்டமாக விரட்டி வந்து துறைமுகத்தை அடைந்தபோது, இவனுக்கு எதற்கு வண்டிக்காரன் என்று தோன்றியது சங்கரனுக்கு. வண்டிக்காரன் அழுக்கு முண்டாசும், கடைவாயில் அடக்கிய புகையிலையுமாக, வண்டிக்குப் பின்னால் கால் வைத்து ஏறும் இடத்தில் காலடி மண்ணுக்கும் தோல் செருப்புக்கும் நடுவிலே திருப்தியாக உட்கார்ந்திருந்தான்.

ஹராம் கோட். வண்டியைப் பாத்துக்கோ பத்திரமா. குருதைக்குப் புல்லுப் போடு. தூங்கிடாதே கஸ்மாலம்.

அவன் கட்டுமரத்தில் ஏறும்போது வண்டிக்காரனுக்குப் பிறப்பித்த உத்தரவை ரொம்ப ரசித்து மனதில் சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான் சங்கரன். பட்டணத்தில் ஒரு வருஷம் ஜாகை அமைத்து இருந்தால் அவனுக்கும் இதெல்லாம் நாக்கில் வெள்ளமாக வரும்.

அஹோய் அஹோய்.

கப்பலின் மேல்தளத்தில் நின்றிருந்த வெள்ளைக்காரன் நீளக் குழலைப் பிடித்து அதன் மூலம் பார்த்தபடி கூவியது கட்டுமரத்தில் கேட்டது.

லண்டன்லேயும் இப்படி சமுத்திரக் கரை இருக்காடா சுலைமான் ?

சங்கரன் அப்பாவியாகக் கேட்டான்.

அங்கே ஏது சமுத்திரம். பக்கத்துலே டோவருக்குப் போகணும்பாரு வாப்பா. அவருக்குப் பூகோளம் எல்லாம் அத்துப்படி. அது கிடக்கட்டும். இவன் இங்கிலீசுக்காரன் இல்லே. அமெரிக்காக் கண்டத்து வெளுப்பான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:40 pm

அப்படான்னா ?

அது ஒரு புது தேசம்பா. நூறு வருசச் சொச்சமா இருக்காம். இங்கிலீசுக்காரன் தான்.நம்ம ஆளு லங்கைக்குப் போறான் பாரு அப்படித் தனியாப் போய்ட்டவனுங்க.

தான் இங்கிலீஷ் காரர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கப் போவதில்லை என்பதில் சங்கரனுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் என்ன ? கப்பலில் வந்த துரை துரைதான். மூத்திரக் கொல்லையிலே பிறந்து வந்தவனாக இருந்தாலும்.

இன்னும் நாலைந்து வெள்ளை மூஞ்சிகள் கப்பல் மேல்தளத்தில் இப்போது பிரத்யட்சமாயின. குண்டோதரன் போல் ஒருத்தன். கொக்கு மாதிரி மெலிந்து உயர்ந்த இன்னொருத்தன். அப்புறம் ஒரு தாடிக்காரன். நீளப் பாவாடையும், தலையில் பெரிய தொப்பியுமாக சில வெள்ளைக்காரப் பெண்கள்.

வெள்ளைக்காரி வாசனை புடிச்சிருக்கியா தோஸ்த் ?

சுலைமான் சங்கரன் தோளில் கைவைத்து விசாரித்தான்.

உள்ளூர் ஸ்திரி வாடையே தெரியாதுடா நேக்கு. புகையிலை வாடையும் இப்ப நீ மூக்குலே போட்டுத் தும்மினியே அந்த மூக்குத் தூள் வாடையும் தான் தெரியும்.

கப்பல்லே வா. அப்பாலே எல்லாம் அத்துப்படியாயிடும்.

சொன்னபடிக்கு துணி சஞ்சியில் இருந்து ஏதோ குப்பியை எடுத்து சங்கரனின் மேல் விசிறித் தெளித்தான் சுலைமான்.

ஐயயோ, என்னடா இது எனக்கும் துருக்க வாசனை பூசிட்டே இப்படி.

சங்கரன் சங்கடப் பட்டுக் கொண்டாலும் அந்த வாசனை பிடித்துத்தான் இருந்தது. பகவதிக் குட்டிக்கும் இது பிடிக்கலாம்.

கப்பல் மேலே இருந்து நீளக் குழல் பிடித்த வெள்ளைக்காரன் ஏதோ கத்தினான். பதிலுக்குக் கையை வாய்க்குப் பக்கம் வைத்துக் குவித்து சுலைமானும் கத்தினான். வெள்ளைக்காரன் கையை அசைத்தான் வாவா என்று கூப்பிடுகிறது மாதிரி சைகையோடு.

சீமைச் சாராயம் கிடைக்குமான்னு கேக்கறான் தாயோளி. இவனுக வந்ததுமே இதைத்தான் தேடுவாங்கன்னு சஞ்சியிலே கொணாந்திருக்கேன்.

சுலைமான் சொல்லிக் கொண்டிருந்தபோதே பெரிய அலை ஒன்று கட்டுமரத்தை மூழ்கடிப்பதுபோல் மேலே உப்புத் தண்ணீரை வீசி எறிந்து போனது. உடுப்பெல்லாம் தொப்பமாக நனைந்து போனது சங்கரனுக்கு.

கண்டுக்காதே. ரெண்டு ஜதை உடுப்பு எடுத்தாந்திருக்கேன். உனக்கு வேணும்னா சொல்லு.

சுலைமான் கவலைப் படாமல் சிரித்தான்.

அவன் விழுத்துப் போட்ட இடுப்புத் துணியையும் அங்கியையும் தரிப்பதைவிட ஈரமான உடுப்போடேயே சங்கரன் நாள் முழுக்க இருக்கத் தயார். அரசூர்ப் பிராமணன் அந்நிய ஜாதி மனுஷ்யன் வஸ்திரத்தை உடுக்கிற அளவுக்கு இன்னும் போய்விடவில்லையாக்கும்.

ஏணியைப் பிடித்துக் கப்பலில் ஜாக்கிரதையாக ஏறுவதற்குள் சங்கரனுக்கு உயிர் போய்த் திரும்ப வந்தது. கீழே அலையடித்துக் கிடந்த கருநீல சமுத்திரத்தைப் பார்க்கப் பயம் கொண்டு, முன்னால் ஏணியில் ஏறிக் கொண்டிருந்த சுலைமானின் பிருஷ்டத்திலேயே பார்வையைப் பதித்தபடி அவன் பாதம் எடுத்து வைத்து மேலே போனான்.

கப்பலில் அவன் காலடி எடுத்து வைத்ததும் கலகலவென்று சிரித்துக் கொண்டு ஏழெட்டு வெள்ளைக்காரிகள் ஓடி வந்தார்கள்.

கொஞ்சம் தேவதைகள் எல்லோரும். சோகை பிடித்த வெளுப்பு முகத்தில் அப்பினாலும், மதர்த்து நின்ற மார்பும் சிறுத்த இடுப்புமாக சரீரத்தை சட்டம் போட்டுக் காட்டுகிற நீளப் பாவாடை அணிந்து நிற்கிற சுந்தரிகள். ஊருணித் தண்ணீர் போல் செம்மண் நிறத்தில் தலைமுடியும் எதையோ குழைத்துப் பூசி சிவந்து போன கன்னமுமாக நிற்கிறவர்கள்.

ஒருத்தி அவன் கையைக் குலுக்கி எதோ கேட்டாள்.

பாம்பு கொணாந்திருக்கியான்னு கேக்கறா.

சுலைமான் சொன்னான்.

நான் அரசூர்ச் சங்கரன். புகையிலை வியாபாரி. பாம்பாட்டி சங்கரன் இல்லே.

சங்கரன் வினயமாகச் சொல்ல, ஒருத்தி அவன் குடுமியைப் பிடித்து இழுத்துச் செல்லமாகக் குட்ட, இன்னொருத்தி ஏதோ சொல்ல மற்றவர்கள் நெருக்கமாக நின்று சிரித்தார்கள்.

கொஞ்சம் வியர்வை நெடி கலந்து அடித்தாலும் வெள்ளைக்காரி வாசனை போதையேற்றுகிறதாகத்தான் இருந்தது சங்கரனுக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:42 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்தாறு



பிறந்த நாள் முதல் கொண்டு இந்த வெள்ளைக்காரக் கூட்டத்திலேயே புகுந்து புறப்பட்டு பங்காளி தாயாதியாக இழைகிறது போல் சுலைமான் சுபாவமாக அவர்களோடு கலந்து விட்டான்.

அவனுக்கு பாஷை ஒரு தடையாக இல்லை. இந்துஸ்தானியும், தமிழும், பரங்கிப் பேச்சுமாக ஒரு கலவை. முக ஜாடை. கை ஜாடை.

சங்கரனைச் சூழ்ந்து நின்ற இளவயசுப் பெண்பிள்ளைகளை அவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அவன் வெள்ளைக்காரர்களை ஒருத்தர் ஒருத்தராகத் தேடிப் போனதை சங்கரன் ஓரக் கண்ணால் பார்த்தபடி இருந்தான்.

இந்த லங்கிணிகள் விட்டால் கொஞ்சம் மூச்சு வாங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டு அப்புறம் ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்கலாம். அவர்கள் ஊரில் ஆண்பிள்ளை குடுமி வைத்திருக்க மாட்டான்கள் தான். ஆனால் தாடியும் மீசையும் அது பாட்டுக்கு செழித்து வளர்ந்து கிடக்குமே மழித்துக் கொள்ளாவிட்டால். என்னத்துக்கு சங்கரன் கன்னத்தைத் தடவி, முதுகில் தட்டி, இடுப்பு வேட்டியை அவிழ்த்து விடப் போகிறது போல் போக்குக் காட்டி, காது கடுக்கனை இழுத்துப் பார்த்து இந்தக் கூத்தடிக்கிறதுகள் என்று அவனுக்குப் புரியவில்லை.

சுலைமான் பவ்யமாகப் பின் தொடர ஒரு கிழட்டு வெள்ளைக்காரன் மெல்ல நடந்து வந்தான். வெள்ளை உடுப்பும் தொப்பியுமாக இருந்த அவன் தொப்பியைக் கழற்றிப் போலியாக வணங்கியபடி அந்தப் பெண்களைப் பார்த்து ஏதோ சொன்னான். அவர்கள் முன்னைக்கு இப்போது அதிகமாகச் சிரித்து கப்பலின் உள்ளறைகளுக்குள் செருப்பு மரத் தளத்தில் சப்திக்க ஓடினார்கள்.

கேப்டன். திஸ் இஸ் பிராமின். மை பாதர் ஆபீஸ் கிளார்க். ஸீ டப்ட். ஸீ த்ரெட். பிராமின் க்ளார்க்.

அவன் ஏதோ வினோத மிருகம் போல் சங்கரனைக் காட்டி வர்ணித்துச் சொன்னான்.

வைத்தி சார்தானே கிளார்க் ? அதென்ன, நேவிகேஷன் டிபார்ட்மெண்ட். மறந்து போச்சு எல்லாம். ஆனால் என்ன ? துருக்கன் சங்கரனைப் பெரிய மனுஷன் என்று துரையிடம் அறிமுகப் படுத்தியிருக்கிறான். சங்கரனுக்குத் தானும் நாலு வார்த்தை இங்கிலீஷ் படித்திருந்தால் இன்னேரம் சுலைமான் போல் துரை கூட, இடுப்புச் சிறுத்த துரைசானிகள் கூட கால தேச வர்த்தமானம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று தோன்றியது.

துரை தலையைச் சாய்த்து அவனைப் பார்த்து ஏதோ கேட்டான்.

பாதர் கம்மிங் டுமாரோ. கிளார்க் கமிங்க நெள.

சங்கரனுக்கு ஒரு எழவும் புரியவில்லை. துரை சிரித்துக் கொண்டான்.

தோளில் மாட்டியிருந்த சஞ்சியிலிருந்து ஒரு பெரிய கண்ணாடி புட்டியை எடுத்துத் துரை கையில் வைத்தான் சுலைமான்.

தாங்க் யூ. தாங்க் யூ சோ மச்.

துரை என்னத்துக்காக இப்படி உணர்ச்சிவசப்பட்டான் என்று சங்கரனுக்கு அர்த்தமாகவில்லை. இவன்கள் எல்லாம் சாராயத்துக்கு அடிமை போல் இருக்கிறது. கருப்பன் கொடுத்தாலும் சிவப்பன் கொடுத்தாலும் அதைப் ப்ரீதியோடு ஏற்றுக் கொண்டு கடாட்சம் பொழியச் சித்தமானவர்கள்.

வைத்திசாரும் நித்யப்படிக்கோ, அமாவாசை பெளர்ணமிக்கோ இப்படிக் குப்பியைச் சுமந்து போய்க் கோட்டையில் துரைகள் முன்னே தெண்டனிட்டுத் தான் சம்பளம் வாங்கி ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானமும், வெங்காய சாம்பாரும், பகல் தூக்கமுமாக பெரிய வீடு கட்டிக் கொண்டு அனுபவிக்கிறானோ ?

துரை போத்தலைக் கோழியைத் தூக்கிப் போகிறவன் போல் கழுத்தைப் பிடித்துத் தூக்கிப் போக சுலைமான் சங்கரனிடம் சொன்னான் -

இவர் தான் காப்டன் துரை. கப்பலை ஓட்டற மாலுமிக்கெல்லாம் எஜமான். நாளைக்கு வாப்பா வந்ததும் இவர் கையெளுத்து தான் மொதல்லே வாங்கணும். கப்பல் இங்கே இருக்கற மட்டும், மாமிசம், கறிகாய், பழம், முட்டை, சீமைச்சாராயம் எல்லாம் காசுக்கு வாங்க இவருதான் உத்தரவு தரணும்.

அந்தப் பெண்பிள்ளைகளும் சுக்கான் பிடித்துக் கப்பல் ஓட்டுவார்களோ ?

சங்கரன் சந்தேகத்தோடு கேட்டான்.

அய்யரே, வெள்ளைத் தோலை மோந்து பார்த்து மயங்கிட்டே போ. அவங்க, ஊரு சுத்திப் பாக்க வந்தவங்க. இந்தக் கப்பல்லே இருக்கப்பட்ட முன்னூறு பேர்லே இருபது முப்பது பேர்தான் இதுலே வேலை பார்க்கறவங்க. மத்தபடிக்கு எல்லாரும் குஷியா ஊர் உலகம் எல்லாம் பாத்துக்கிட்டுப் போகத்தான் காசு கொடுத்து சீட்டு வாங்கி கப்பல்லே ஏறியிருக்காங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:43 pm

அது சரிதாண்டா சுலைமான். ஆனா இப்படிக் கன்னிப் பொண்ணுங்க எல்லாம் பெத்தவா துணையில்லாம தனியா வருவாளா என்ன ?

அவங்க வந்தது சுத்திப் பாத்துட்டுப் போறதுக்கு மட்டுமில்லே. இங்கே பட்டணத்துலே துரைமார் இருக்கற வேலை ஸ்தலத்துலே, ஆஸ்பத்திரியிலே எல்லாம் ஏதாவது வேலை இருந்தா அதிலே சேர்ந்துப்பாங்க. இல்லே இவங்களைக் கட்டிக்கணும்னு எவனாவது தொரை நினச்சா உடனே விரலை நீட்டுவாங்க. மோந்தரம் போட்டா அப்புறம் பொஞ்சாதிதான். இங்கேயிருந்து கல்கத்தா, ரங்கூன், கொழும்புன்னு போறதுக்கும் தயாரா வந்திருப்பாங்க.

கூட்டமாக வந்த வெள்ளைக்காரர்கள் சுலைமானிடம் ஏதோ கேட்பதற்குள் மற்ற கட்டுமரம் எல்லாம் வந்து சேர்ந்து, அதிலிருந்தவர்கள் ஓணான் போல் ஏணியைப் பிடித்துக் கொண்டு கப்பலில் ஏறிக் கொண்டிருந்தார்கள். எல்லார் முதுகிலும் பெரிய கோணிப்பை. சீமைச் சாராயம் என்று அது குலுங்கிய தினுசிலிருந்து சங்கரனுக்குத் தெரிந்தது.

பாதர் கம்மிங் டுமாரோ. டாக்குமெண்ட் சைனிங் மார்னிங். டேக் ரெஸ்ட். டேக் பிராண்டி.

சுலைமான் ஒவ்வொருத்தரிடம் சொல்லி, பாட்டிலை நீட்டி, மறக்காமல் காசையும் வசூலித்துக் கொண்டான். அவன் நீளமான குப்பாயத்தில் திணித்துக் கொண்டிருந்த காகிதப் பணத்தில் ஒன்றை வாங்கி கப்பல் மேல்தட்டு வெளிச்சத்தில் பார்த்தான் சங்கரன். தாடியும் மீசையும் ஒட்டின கன்னமுமாக ஒரு மனுஷன் ரிஷி மாதிரி அதில் இருந்தான்.

லிங்கன். பிரசிடெண்ட்.

ஒரு வெள்ளைக்காரன் சங்கரனிடம் சொன்னபடி அந்தக் காகிதத்துக்கு என்னத்துக்கோ முத்தம் கொடுத்தான்.

சங்கரனுக்கு நொங்கம்பாக்கத்து முச்சந்தியில் பிரஜாபதி பற்றிப் பேசிக்கொண்டிருந்த மனுஷன் நினைவு வந்தான். அவன் பிரஜாபதியின் சித்திரப் படத்தை, தாயார் படத்தை எல்லாம் காட்டப் போவதாகச் சொன்னபோது தான் நித்திரை கொள்ளப் போனதற்காக இப்போது லிங்கப் படத்தை இந்த வெள்ளைக்காரன் காட்டுகிறதாக நினைத்தான். சத் விஷயம். வெள்ளைக்காரனாக இருந்தால் என்ன, சுந்தர கனபாடியாக இருந்தால் என்ன ? அந்த மரத்தடி மனுஷ்யன், என்னமோ ஆண்டியாக இருந்தால் என்ன ? எல்லாம் ஒண்ணுதான் போலிருக்கிறது.

சங்கரன் பயபக்தியோடு அந்தக் காகிதத்தைப் பார்த்து விட்டு சுலைமானிடம் கொடுக்க, அவன் அதை இடது கையால் வாங்கிக் குப்பாயத்தில் திணித்துக் கொண்டான்.

சரியான பிரம்மஹத்தி இவன் . சங்கரனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

இன்னும் ஏழெட்டுக் கட்டுமரம். அதிலிருந்தும் ஒன்றும் இரண்டுமாக மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு ஆட்கள்.

அய்யரே, நீயும் கொஞ்சம் ஒத்தாசை பண்ணேன்.

என்ன பண்ண வேண்டும் என்று தீர்மானமாகச் சங்கரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இது பாரு. ஒரு டாலர். ரெண்டு டாலர் ஒரு துரைத்தனத்து ரூபாய்க்கு சமம். இந்த புட்டி மூணு கொடுத்தா அவன் ஒரு டாலர் கொடுப்பான். அம்புட்டுத்தான். சரக்கை எடுத்துக் கொடுத்துட்டு காசை வாங்கி மடியிலே முடிஞ்சுக்க. அப்புறம் நான் வாங்கிக்கறேன்.

அரசூர் சுப்பிரமணிய அய்யர் புத்திரன் சாராயம் விற்கிறான். சுப்பம்மா நாவில் இருக்கிற பரதேவதைகளே, நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள். திவசத்துக்கு இறங்கி வரும் பித்ருக்களே. ஒரு ரசத்துக்குத்தான் இதெல்லாம். நீங்கள் பாட்டுக்கு எள்ளும் தண்ணீரும் இரைக்க திருப்தியாகத் திரும்பிப் போங்கள். சாமிநாதன் உங்களோடு இருந்தால் சொல்லுங்கள். அவனுக்கு இது ரொம்பவே பிடிக்கும். எத்தனை நாளைக்குத்தான் சும்மா புகையிலை விற்கிறது ?

சங்கரன் இயந்திர கதியில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது, வருடக் கணக்காக இந்தத் தொழில் செய்கிற லாவகம் வந்து விட்டிருந்தது.

பின்னால் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது காலடியில் காலிச் சாக்கு. சுலைமான் இருக்கும் இடம் தெரியவில்லை. அவன் காலடியில் சுலைமானின் சஞ்சி இருந்தது. திறந்து பார்த்தான். உடுதுணி மட்டும் மிச்சம் இருக்க, அதிலும் குப்பி எதுவும் இல்லாமல் தீர்ந்திருந்தது.

கப்பலுக்குள் உத்தேசமாக இங்கே இருப்பான் என்று அவன் பாதி இருட்டில் சுலைமானைத் தேடியபோது, ஓவென்று கூச்சலோடு அந்தக் குட்டிகள் அவனைப் பாதி இருட்டான ஒரு அறைக்குள் ஓடிவந்து இழுத்துப் போனார்கள்.

இதென்ன, இந்த வெள்ளைக்காரிகளும் சோமபானம் பண்ணிக் கொண்டு ? கலி முத்திப் போச்சு என்பது இதுதானோ ?

சங்கரன் அவசரமாகத் திரும்ப முற்பட, ஒருத்தி எழுந்து போய் அறையின் கதவை அடைத்து விட்டு வந்தாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:44 pm

அங்கே போய் உட்கார்.

இப்படித்தான் இங்கிலீஷில் சொல்லியிருப்பாள் என்று புரிய, கை விரலை நீள நீட்டியபடி அவள் அதட்ட, சங்கரன் அங்கே இருந்த குரிச்சியில் பட்டும் படாமல் உட்கார்ந்தான்.

குப்பியில் இருந்து ஒரு கண்ணாடிக் கோப்பையில் நிறைத்து இன்னொருத்தி அவனிடம் நீட்டினாள்.

வேண்டாம்டாயம்மா. உனக்குப் புண்ணியமாப் போறது. பகவதிக்குட்டிக்குத் தெரிஞ்சா அருவாமணையிலே வச்சு நறுக்கிடுவா.

சங்கரன் குடுமியைப் பின்னாலிருந்து பிடித்து இழுத்தார்கள். அவன் வாயை உலோகக் கரண்டி கொண்டு வலுக்கட்டாயமாகத் திறந்தார்கள். ஒருத்தி அவன் மடியில் கால் வைத்து உட்கார்ந்து, குழந்தைக்குச் சங்கில் விளக்கெண்ணெய் புகட்டுகிறமாதிரி அந்தத் திராவகத்தைப் புகட்டினாள். அக்னி இறங்கித் தொண்டைக் குழி வழியே மாரில் புகுந்து போய்க் கொண்டிருக்கிறது. சங்கரன் மாரைப் பிடித்தபடி தவித்தான். என்னமோ சுகமாக இருந்தது. ரொம்பவே பயமும் கூட எட்டிப் பார்த்தது.

அந்தப் பெண்பிள்ளை அவன் மடியில் உட்கார்ந்தபடிக்கு அவன் நெஞ்சைத் தடவி விட்டது இதமாக இருந்தது. இப்படிப் புகட்டினால் அவன் கட்டுமரத்தில் கொண்டு வந்த சாராயம் எல்லாவற்றையும் ராத்திரி விடிகிறதுக்குள்ளே குடித்துத் தீர்க்கத் தயார். அப்புறம் இவளுடைய மாரில் தலை சாய்த்து உறங்கிப் போவான்.

அதற்கு முன் இந்த நாற்காலி சுகப்படவில்லை. தரையில் உட்கார வேணும். இந்தப் பெண்கள் வேண்டுமானால் நாற்காலியில் உட்காரட்டும். அவன் மாரிலும் முதுகிலும் மெத்துமெத்தென்று காலால் மிதிக்கட்டும். அப்சரஸ்கள் எல்லாரும். பகவதிக்குட்டி. அவள் கிடக்கிறாள். இப்போ என்னத்துக்கு அவள் நினைப்பு. பிழைச்சுக் கிடந்தால் பார்த்துக்கலாம். அந்த நூதன வண்டிக் களவாணிகள் சொன்னார்களே. சாமா கூட கிரகணச் சூரியனில் இருந்து, புகைபிடித்த கண்ணாடிச் சில்லுக்குள் எட்டிப் பார்த்துச் சொன்னானே. போகம். இதுதான் போலிருக்கிறது. மாடியில் அந்தக் கண்ணாடிச் சில்லை அப்படியே போட்டது சாயந்திரம் உலர்ந்த வஸ்திரம் எடுக்கப் போகிற கோமதி மன்னி காலில் குத்துமோ. அதைப் பற்றி இப்போ என்ன ? தரையில் சரிந்து உட்கார்ந்தா சுகமாத்தான் இருக்கு. கப்பல் வேறே கூடவே கள்ளுக் குடிச்ச மாதிரி ஆடறது. இப்படி உக்காந்தாப் போதாது, படுன்னு இவள் என்னத்துக்கு இழுக்கறா ? கோமதி மன்னி தங்கை இவ மாதிரித்தான் பெரிய மாரோட இருப்பாளோ ? இருடி கழுதே. மாரைத் தொட்டாக் கத்திக் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டுவியா ? கூளப்ப நாயக்கன் காதல் தெரியுமோ ? அபிநயம் இப்படித்தான் பிடிக்கணும். சிரிக்காதேடா லண்டி முண்டே. இன்னும் கொஞ்சம் குப்பியிலே ஊத்திக் கொடுடா. இன்னிக்கு கிரகணம். உன் நட்சத்திரத்துலே வந்தா ஓலையிலே பட்டம் கட்டிக்கணும். பட்டணத்து வைதீகனுக்குத் தட்சணை கொடுக்கணும். நான் வைதீகனும் இல்லே. பாம்பாட்டியும் இல்லே. புகையிலையும் மூக்குப் பொடியும் விக்கற பிராமணன். பிராமணன் இதெல்லாம் பானம் பண்ணப்படாது. ஆனா, காப்பி சாப்பிடலாம். அதுக்குத் தீட்டுக் கெடயாது. நீ காப்பி கலப்பியோ ? எச்சலை ஏண்டி என் உதட்டுலே தடவறே கடங்காரி ? அசுத்தம். போறது கோவிச்சுக்காதே. நன்னாத்தான் இருக்கு. இது என்ன வாழக்காயா ? ஏன் குடலைப் பிடுங்கறாமாதிரி நாறித் தொலயறது ? நீ ஊட்டினா எல்லாம் நன்னாத்தான் இருக்கும். கோமதி மன்னி முட்டக்கோசுப் பொரியல் பண்றமாதிரி. இது அதைவிட ருஜிதான். சுலைமான். எங்கே போய்த் தொலஞ்சான் ? போலாண்டா கட்டேலே போறவனே. நொங்கம்பாக்கம் போகணும். செட்டியார் தரிசன உண்டியலை மாத்தணும். தெலுங்கன் கிட்டே ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு கருத்தானை. வேஷ்டியை உருவாதேடி. நீ குளிக்கறச்சே மேலே இருந்து பாத்திருக்கானா யாராவது ? கிரகணத்துக்குக் குளிச்சியோ ? அத்தரோ அரகஜாவோ சீமை திரவியமோ, ஒண்ணும் வேணாம். இந்த உடம்பு வாடைதான் ஆகர்ஷணம். குப்பியை எடுடி மூதேவி. படுத்துண்டே குடிக்கறேன். இப்படி மேலே ஈஷினா எப்படிப் பானம் பண்ணுவான் மனுஷன் ? என்னத்துக்கு சிரிக்கறேள் எல்லாரும் ? கொட்டகுடித் தாசிக்குத் தெரிஞ்ச மாதிரி கொக்கோகம் யாருக்குத் தெரியும் ? நீ அவளுக்கே சொல்லிக் கொடுப்பேடி ராஜாத்தி. அது கட்டில். எனக்குத் தெரியும். நீ சொல்ல வேணாம்.

பழுக்காத்தட்டு சங்கீதம் இருந்தால் இன்னும் சுகமாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:45 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்தேழு


நடுராத்திரிக்கு ஒரு காற்று புறப்பட்டது. ஆழப் பாய்ச்சி இருந்த கப்பலின் நங்கூரத்தைக் கெல்லி அது சளைக்காமல் அலைக்கழித்துப் பார்த்தது. நீலக் கருப்பில் கடல் அலைகள் வேறு உக்கிரமான காற்றுக்கு ஒத்தாசை செய்தபடி இருந்தன. எனக்கென்ன போச்சு என்று பவுர்ணமிக்குப் பக்கத்து மூளி நிலா சிரித்தபோது கப்பலின் மேல்தட்டில் நக்னமாக நடந்துகொண்டிருந்த சங்கரன் எனக்கும் தான் என்ன போச்சு என்றான்.

அவனுக்கு நேரம் மட்டுப்படவில்லை. பட்டு என்ன ஆகப் போகிறது ? சமுத்திரம் போடும் இரைச்சலுக்கு மேலே தலைக்குள்ளே தேவதை, பிசாசு, பூதம், யட்சி, பசுமாடு, நாகநாதப் புள் என்று எல்லாம் கலந்து ஏதோ சத்தம். போதாக் குறைக்கு பிச்சை ராவுத்தன், சுந்தர கனபாடிகள், பகவதிக்குட்டியின் தமையன் கிட்டாவய்யன், காரியஸ்தன் தாணுப்பிள்ளை, தெலுங்கு பிராமணன் என்று புருஷர்கள் வேறே அவன் இடுப்புக்குக் கீழே கையைக் காட்டிக் காட்டி ஆவேசமாகக் கத்துகிறார்கள்.

உடுப்பை விழுத்துப் போட்டுட்டு அலையாதேடா அரசூர்ச் சங்கரா.

சங்கரனுக்கு உடுத்துக் கொள்ள ஆசைதான். இன்னொரு தடவை படுத்துக் கொள்ளவும் கூடத்தான். சீமைச் சாராயத்தை எவளோ தன் வாயில் அதக்கிக் கொப்பளித்து அவன் வாயைத் திறந்து தாம்பூல எச்சலாகத் துப்பி லகரி ஏற்றுவாள். போதும்டா விடு என்று அவன் மன்றாடுவான். சாமிநாதன் போதாதுடா கபோதி, ஊஞ்சல் இருக்கான்னு பாரு. அதுலே கிடந்தாலும் கிடத்தினாலும் அம்சமாத்தான் இருக்கும் என்று அத்தியாயனம் பண்ணுகிறதுபோல் கணீரென்று சொல்வான். கப்பலுக்குக் கீழே சமுத்திர உப்புத் தண்ணீரில் குளித்தபடி மார்க்குவட்டில் தேமலோடு அந்த ராணிப் பெண்பிள்ளை அசூசையோடு பார்ப்பாள். அண்ணாசாமி ஐயங்காரின் யந்திரம் பழுக்காத்தட்டு போல் சுழன்று வைத்தி சார் குரலில் போகம் போகம் என்று உருவேற்றும். அதைக் காதில் வாங்கிக் கொண்டு கிடக்க வேணும் இன்னும் கொஞ்ச நேரம்.

எங்கே அப்படிக் கிடந்தது ? கொஞ்ச தூரம் நடந்து இடது பக்கமோ வலது பக்கமோ இறங்கி அப்புறம் நீண்ட ஒழுங்கையில் ஈரவாடையை முகர்ந்தபடி கடந்தது எப்போது ? மெழுகுதிரிகள் எரிகிற, அணைந்து புகைகிற வாடையும், சாராய வாடையும், மாமிச வாடையும் வெள்ளைத் தோல் வாடையுமாக அந்தக் குட்டிகளோடு சல்லாபித்தபடி கிடந்ததெல்லாம் சொப்பனமா என்ன ?

கனவு என்றால் இடுப்பு வேட்டி எங்கே போனது ? சுவாசத்தில் ஏறி அடித்துக் குடலைப் பிரட்டிக் கொண்டு மேலெழும்பி வருகிற நெடியெல்லாம் அவன் வயிற்றில் ஒரு சேரக் கனம் கொண்டு இறங்கினது எப்போது ? தேகம் ஒரு நிமிடம் சோர்ந்தும் அடுத்த நிமிடம் பெளருஷத்தோடு விதிர்த்தும் மனதை, புத்தியைச் செலுத்திப் போவது எப்போதிலிருந்து ?

அரசூரில் புகையிலை விற்கிற சங்கரன் இல்லை இந்த கப்பல் தளத்தில் அம்மணமாக நிற்கிறவன். இவன் சித்த புருஷன் இல்லை. சாமிநாதன் போல் வேதவித்தாகப் பரிமளிக்கப் பிறந்தவன் இல்லை இவன். மூக்குத்தூள் விற்க வந்தவன். காப்பி குடிக்கப் பழகிக் கொண்டவன். இந்துஸ்தானியில் நாலு வார்த்தை வசவும்.

காப்பியும் இந்துஸ்தானியும் மூக்குத் தூளும் அவனைக் கொண்டு செலுத்தவில்லை. சொன்னது கேட்காமல் அடங்காது ஆடிய தேகம் தான் அதைச் செய்கிறது. இப்போது உடுத்துக் கொள்ளவேண்டும் என்ற சுரணை கூடப் போய்விட்டது அதற்கு.

கப்பல் இன்னும் கல்பகோடி காலம் இப்படியும் அப்படியும் அசைந்தபடி இருட்டில் நிற்கும். அது நிற்கும் மட்டும் சங்கரன் இந்தத் தளத்தில் காற்றுக்கும், சமுத்திர அலைக்கும் பதில் சொல்லிக் கொண்டு நிற்பான். தரிசன உண்டியல், புகையிலைக் கடை, பகவதிக்குட்டி, வீட்டில் செருப்பு விடும் இடத்தில் அழுக்குப் பழுப்புச் சிலந்தி, கூடத்து ஊஞ்சல், வரலட்சுமி முகம் வரைந்த சுவர் எல்லாம் அவனுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்.

சங்கரன் காலில் இருட்டில் ஏதோ இடறியது. அவனை மாதிரி யாரோ முட்டக் குடித்து சீலம் கொழித்துப் போதும் என்று தோன்றாமல் புணர்ந்து இடுப்புத் துணியும் இல்லாமல் அங்கே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறவனாக இருக்கும்.

சங்கரனும் கொஞ்ச நேரம் மெய்மறந்துதான் கிடந்தான். தூக்கத்தில் இருக்கும்போதே அந்தப் பரதேவதைகள் அவனை கப்பல் மேல்தளம் ஏறும் படிகளுக்குப் பக்கமாக மீன் கழுவிய ஜலம் தேங்கிக் கொண்டிருந்த இடத்தில் கிடத்திப் போயிருந்தார்கள். இல்லை, அவனாகத்தான் எப்போது அரைகுரையாக விழிப்பு வந்து, உடம்பு வாசனை மூச்சு முட்ட அப்பிய அந்தக் கட்டிலை விட்டு இறங்கிக் காற்றோட்டமாகப் படுத்து நித்திரை போனானோ தெரியவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:47 pm

கீழே காலில் தட்டுப்பட்டது அவன் போல் கருப்பு மனுஷ்யன் என்றால் எழுப்பி விடாமல் புரட்டித் தள்ளினால் போதும். தூக்கத்தில் அவனுக்காவது ஆசுவாசம் கிட்டட்டும்.

ஆனால் இது மனுஷன் இல்லை. பொதி. பிரிமணை போல் சுற்றி உள்ளே எதையோ திணித்த பொதி. சங்கரன் குனிந்து கையில் எடுத்தபோது அத்தர் வாடை அடித்தது.

சுலைமானின் சஞ்சியில்லையா இது ? அவன் விழுத்துப் போட்ட உடுப்பு. விழுத்துப் போட்டுத் துவைத்து எடுத்து உடுத்தி மறுபடி விழுத்துத் துவைத்து. துவைக்காவிட்டால்தான் என்ன குறைந்தது ? உடுப்பு உடுக்கத்தான். அவிழ்க்கத்தான்.

இருட்டில் எங்கோ யாரோ கட்டைப் பாதரட்சை சப்திக்க நடந்து வருகிறது போல் சத்தம். பாதிரியா ? பட்டணப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைக் கண்ணாடிச் சில்லைக் கருப்பாக்கிக் கிரகணச் சூரியனை தரிசிக்கச் செய்த பிற்பாடு, சமுத்திரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிற கப்பலைத் தேடி வருகிறார்களா ? மாரிடம் பெருத்த துரைசானிகளும் மற்றவர்களும் கெட்டுச் சீரழிந்து போகாதபடிக்குக் கன்னம் இடுங்கிய மகரிஷிகளைக் காண்பித்துக் கொடுத்து கரையேற்றச் சுற்றி வருகிறார்களா ?

பாதிரிக்கு முன்னால் வெற்றுடம்போடு நிற்க முடியாது. மாரில் துணி இல்லாவிட்டால் பாதகம் இல்லை. பூணூல் போதும். ஆனால் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, நீதி பரிபாலனம் செய்ய, பாவத்தை மன்னிக்க வந்தவன் பாவாடைக்காரப் பாதிரியாக இருந்தாலும் தோளில் புறாவும் மடியும் காசும் கனக்க தஸ்தகீர் ராவுத்தராக இருந்தாலும் இடுப்பில் துணி இல்லாமல் முன்னால் போய் நிற்பது மரியாதை இல்லை.

பூணூல் ?அது எங்கே போச்சு ? அந்த வெள்ளைக் குட்டிகளில் எவள் ஸ்தனத்தைச் சுற்றி மாலையாகப் புரண்டு கிடக்கிறதோ ? பிழைத்துக் கிடந்து, அடுத்த ஆவணி அவிட்டத்துக்கு பாடசாலை சிரவுதிகள் பூணூல் மாற்றும்போது எங்கே போச்சுதடா என்பார். வெள்ளைக்காரி முலையைப் பற்றி அவரிடம் அவசியம் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் சங்கரனுக்கு இடுப்பில் வஸ்திரம் ஏற வேண்டியிருக்கிறது.

அவன் இருட்டில் துணி சஞ்சியைத் திறந்து உத்தேசமாகத் துழாவி எடுத்து இடுப்பில் வைத்துப் பார்த்தான். இது இடுப்புக்குக் கீழே தழைய விடுகிற விஷயமாகத் தெரியவில்லை. தோளில் வழிய வழியத் தொங்கும் துருக்கக் குப்பாயம். குப்பாயத்துக்குக் கீழே சுருட்டி வைத்திருக்கிற துணி தான் இடுப்பில் கட்டுகிறது போல் இருக்கிறது.

பத்தாறு வேட்டிக்கு நடுவே கருப்புப் பட்டணத் தையல்காரன் வேலை மெனக்கெட்டு ஊசியில் நூலை ஓட்டி ஓட்டி மூட்டித் தைத்த சமாச்சாரம் அது.அப்படியே தட்டுச் சுத்தாகக் கட்டிக் கொள்ள முடியாது. காலுக்கு ஒன்றாக நுழைத்து உயர்த்தினால் இடுப்புக்கு எழும்பி வரும்.

அதை மாட்டிக் கொண்ட போது இடுப்பில் நிற்காது நிலத்தில் விழுந்து தொலைத்தது. அப்புறம் அதில் ஒட்டித் தைத்திருந்த நாடா கைக்குக் கிடைத்தது. இடுப்பைச் சுற்றி அதை முடி போட, துருக்கன் இடுப்பு வியர்வையும் மற்றதும் படிந்து பழகிய துணி சங்கரய்யன் அரையோடு ஒடுங்கிப் போனது. நானும் வரேன் என்று அந்தக் குப்பாயமும் மணக்க மணக்கத் தோள் வழியே இறங்கிக் குளிர அடித்த காற்றைப் போய்ட்டு அப்புறம் வா என்றது பிரியமாக.

சஞ்சிக்குள் வேறே என்னமோ கூட இருந்தது. எடுத்துப் பார்க்கப் பொறுமை இல்லை சங்கரனுக்கு. அவனுக்குத் தூக்கம் மறுபடி கண்ணைச் சுழற்றியது.

பாதிரி வந்த தடமே காணோம். இனிமேல் வந்தாலும் கவலை இல்லை. அவன் முழுக்க உடுத்த மனுஷன். சங்கரய்யர் இல்லை. பூணூல் இல்லை.. அவன் சுலைமான் ராவுத்தன். குடுமி அவிழ்ந்து தோளைத் தொட்டுத் தொங்க அத்தரும் அரகஜாவுமாக நிற்கிறான். அய்யனும் ராவுத்தனும் எல்லாம் ஒரு அடையாளத்துக்குத்தான். நாலு பேருக்குச் சொல்லி ஆசுவாசம் தரவும் தனக்கே கொடுத்துக் கொள்ளவும் தான். வெள்ளைக்காரிகளுக்கு அந்த அடையாளம் வேண்டியதில்லை. சங்கரனுக்கும் அதெல்லாம் இல்லாமலேயே ஏகத்துக்கு ஆசுவாசம் கிட்டியாகிவிட்டது. இப்போது கொஞ்சம் தூங்கினால் மிச்சமும் கிட்டும். தூங்கும்போதே பாதிரி அவனுக்கும் பாவாடை கட்டிவிட்டுப் போனாலும் பாவத்தை மன்னிக்காமல் போனாலும் பாதகமில்லை.

சுள்ளென்று கண்ணில் சூரியன் குத்த சங்கரன் விழித்துக் கொண்டபோது கப்பல் தளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். தய்யரத் தய்யர என்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த சத்தம் கீழே இருந்து சீராக வந்து கொண்டிருந்தது. கட்டுமரக்காரர்களின் பாட்டு அது.

சங்கரன் எக்கிப் பார்க்க, பத்துப் பதினைந்து கட்டுமரங்கள், விரட்ட விரட்ட நெருங்கி வயிற்றைத் தொட்டுக் காட்டிப் பிச்சை கேட்கும் தரித்திரவாசிக் குழந்தைகள் போல் கப்பல் பக்கம் சுற்றிச் சுற்றி வந்தபடிக்கு இருந்தன.

முதல் கட்டுமரத்தில் தொப்பியும், வயிறும், வாயில் சிவந்து வழிகிற தாம்பூலமும், மிடுக்குமாகத் தஸ்தகீர் ராவுத்தர். அவருக்குத் துணிக்குடை பிடித்தபடி பின்னாலேயே ஒருத்தன். காகிதத்தை அடுக்கி ஒரு பிரப்பம்பெட்டியில் வைத்துக் கையில் பிடித்தபடி ஒல்லியான இன்னொருத்தன் அடுத்த கட்டுமரத்தில் நின்றிருந்ததும் கண்ணில் பட்டது.

சுலைமான் எங்கே ? அவனும் நேற்று இங்கே களேபரமாகி விழுந்து கிடக்கிறானா ? துணிக்கு என்ன செய்தான் ? சங்கரன் வேஷ்டி அவனிடம் சிக்கியிருக்குமா ? பூணூல் ?

தஸ்தகீர் ராவுத்தர் குளித்து விட்டு வருகிறார். வெள்ளை வஸ்திரம் தரித்துத் தோல் செருப்புச் சப்திக்க நடக்கிற கப்பல் காரர்களும் குளித்திருக்கலாம். கீழே ஏதோ அறைகளுக்குள் இருக்கப்பட்ட வெள்ளைக் குட்டிகளும் சிரமம் பாராமல் குளித்து முடித்து தலையை வேடு கட்டிக்கொண்டு இஷ்ட தேவதைகளுக்கு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும். குளியலும் காலைப் பொழுதில் சுறுசுறுப்பான இயக்கமும், நல்ல சிந்தனைகளும், கடந்து போன ராத்திரி எத்தனை அசுத்தமானதாக இருந்தாலும் எல்லாவற்றையும் அலம்பித் துடைத்துத் துப்புரவாக்கி விடும்.

Sponsored content

PostSponsored content



Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக