புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
34 Posts - 52%
heezulia
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
17 Posts - 2%
prajai
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
9 Posts - 1%
Jenila
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
4 Posts - 1%
jairam
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதையல் தீவு Poll_c10புதையல் தீவு Poll_m10புதையல் தீவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல் தீவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:16 pm

புதையல் தீவு

- பா.ராகவன்



"ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல்" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னதுமே பாலுவுக்கு அழுகை வந்துவிட்டது. அடக்கடவுளே! ரெண்டு இட்லியும் ஒரு வடையும் ஒரே வாயில் உள்ளே போய்விடும். ஒரு கரண்டி பொங்கல் என்பது உள்ளே போவதுகூடக் கஷ்டம். பல்லுக்கு மட்டும்தான் அது போதுமானது! அப்புறம் பசி எங்கிருந்து அடங்கும்?

சின்னப்பையன்களுக்குக் கச்சாமுச்சாவென்று பசிக்காது என்று யார் இந்த மகாலிங்க வாத்தியாரிடம் சொன்னது? அதுவும் தன்னைப்போல பீமபுஷ்டிப் பையன்கள் ஐயோ பாவம் என்று ஏன் இவருக்குத் தோன்றவே தோன்றுவதில்லை?

அவனுக்கு அன்றைய காலை மெனுவைக் கேட்டதுமே அழுகை அழுகையாக வந்துவிட்டது. குறைந்தபட்சம் பத்து இட்லிகள் வேண்டும். பொங்கல் என்றால் மூணு ப்ளேட். வடைக்கு லிமிட் உண்டா என்ன? எத்தனை ஆனாலும் சம்மதமே.

"குண்டா! கொஞ்சம் சாப்பாட்டைக் குறைக்கணும்டா. ஸ்கவுட்ல இருக்கற பையன் இவ்ளோ குண்டா இருந்தா எப்படி ஓடி ஆடி வேலை செய்யமுடியும்?" என்று கேட்டார் வாத்தியார்.

பாலுவுக்கு சிரிப்பு வந்தது. அவன் குண்டுதான். செம குண்டு! பின்னால் நின்று வேறு யாராவது இறுக்கிப் பிடிக்கப் பார்த்தால், அவன் தொப்பை ஒருபோதும் இரு கைகளுக்கு அடங்காது! மூக்கில் வழுக்கி வழுக்கி விழும் கண்ணாடியும் அவன் தொப்பையும், வாரவார அடங்காமல் தூக்கிக்கொண்டு முன்னால் நிற்கும் தலைமுடியும் சேர்ந்து அவனை வகுப்பறையில் ஒரு கார்ட்டூனாகத்தான் எப்போதும் காட்டும். ஆனால் யாரும் அவனை கிண்டலுக்காக 'குண்டா' என்று கூப்பிடமாட்டார்கள். அது ஒரு செல்லப்பெயர்.

"க்ளாஸுக்கு ஒரு புள்ளையார் இருந்தா நல்லதுதானே சார்" என்பான் பக்கத்து டெஸ்க் பத்மநாபன்.

"இவர் கொழுக்கட்டை சாப்பிடற பிள்ளையார் இல்லே... கொழுக்கட்டையாவே இருக்கற பிள்ளையார்!"

"அதுவும் சாதாரண கொழுக்கட்டை இல்லே.. ஜம்போ கொழுக்கட்டை!"

வகுப்பறையே சிரிப்பில் வெடிக்கும். பாலுவும் சேர்ந்து சிரிப்பான். அவனது உருவத்தைப் பற்றி யார் பேசினாலும் அவனுக்குக் கோபமோ, வருத்தமோ வராது. எல்லாமே அன்பால் செய்யப்படும் தமாஷ் என்றுதான் எடுத்துக்கொள்ளுவான். குறிப்பாக மகாலிங்க வாத்தியார். அப்பா! எப்பேர்ப்பட்ட கிண்டல் பேர்வழி! அதுவும் பாலுவைச் சீண்டுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சே, கொழுக்கட்டை சாப்பிடுவது மாதிரி.

கிண்டல் முடிந்த சூட்டிலேயே அவர் இன்னொன்றும் சொல்லுவார். அதுதான் அவரிடம் பாலுவுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

"பாருங்கடா! நம்ம புள்ளையாருக்கு உடம்பு மட்டுமில்லை... மூளையும் பெரிசு. இன்னி வரைக்கும் க்ளாஸ்லே அவனளவுக்கு வேற யார் மார்க் வாங்கியிருக்காங்க, சொல்லுங்க பாப்போம்? ஒரு எக்ஸாம்லயாவது ௬பர்ஸ்ட் ரேங்க்கைத் தவிர வேற வாங்கியிருக்கானா? நாம சாப்பிடற இட்லியெல்லாம் உடம்புல கீழ் நோக்கிப் போவுது... நம்ம புள்ளையாருக்கு மட்டும்தான் உள்ள போற எல்லாமே மேல்நோக்கிப் போவுது" என்பார்.

பாலுவுக்குப் பரம சந்தோஷமாக இருக்கும். மனசுவிட்டு ஒரு வாத்தியார் இப்படி அத்தனை மாணவர்களூக்கு எதிரில் பாராட்டுவதைவிட வேறென்ன வேண்டும்? இதற்காகவே இன்னும் நன்றாகப் படிக்கலாம்! இதற்காகவே இன்னும் பத்து இட்லி கூடுதலாகச் சாப்பிடலாம்!

அவன் அம்மாவுக்குத்தான் அந்த விஷயம் கவலையளித்தது. பார்க்கிற டாக்டர்களிடமெல்லாம் தவறாமல் கேட்டுக்கொண்டிருப்பாள். "என் பிள்ளை ஏன் டாக்டர் இவ்ளோ குண்டா இருக்கான்?"

என்னமோ சில ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதனால்தான் குண்டர்கள் குண்டாக இருக்கிறார்கள் என்று எல்லா டாக்டர்களும் சொன்னார்கள்.

"டயட்ல இருக்கணும். தினமும் வாக்கிங் போகணும். சின்னப்பையந்தானே... பதினாறு, பதினெட்டு வயசாறதுக்குள்ள இளைச்சுடுவான்" என்பார்கள்.

ஆனால் பாலுவுக்கு இளைக்கிற உத்தேசமே இல்லை! எதற்கு இளைக்க வேண்டும்? குண்டாக இருப்பதிலும் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ரொம்ப முக்கியம், அத்தனைபேரின் கவனத்தையும் சுலபமாகக் கவரமுடிகிறது. வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி. யாரும் அதிகமாக வேலை வாங்குவதில்லை. சும்மா இருக்கிற நேரங்களில் உட்கார்ந்து உருப்படியாக நிறையப் படிக்க முடிகிறது. செஸ் விளையாட முடிகிறது. வம்புச் சண்டைக்கு வரும் பையன்களைச் சமாளிப்பதும் ரொம்ப சுலபம்! கையைக்காலை ஆட்டி அடித்து உதைக்கவே வேண்டாம். தொபுக்கட்டீர் என்று மேலே விழுந்து அப்படியே படுத்துக்கொண்டுவிட்டால் போதும்! ஐயோ, அம்மா என்று அலறி, தம் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடுவார்கள்!

இப்படியான காரணங்கள் மட்டுமில்லை. இயல்பிலேயே அவனுக்கு நொறுக்குத்தீனி என்றால் ரொம்பப் பிடிக்கும். கட்டுப்படுத்தமுடியாத ஒரே பெரிய கெட்ட பழக்கம் அது. வறுத்த வேர்க்கடலை, பொறித்த அப்பளம், சமோசா, ப௬ப், பஜ்ஜி, வடை, பூரி கிழங்கு என்று எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம் ஏனோ உடம்புக்குப் பிடிப்பதில்லை. நாக்குக்கும் உடம்புக்கும் அப்படியென்ன ஜென்மப்பகையோ? ஐ டோண்ட் கேர்! என் ஓட்டு நாக்குக்குத்தான் என்று தெளிவாக இருந்தான் பாலு.

"நல்லா படிக்கறே. கெட்டிக்காரனா இருக்கே. கொஞ்சம் தீனியைக் குறைச்சுக்கோடா பாலு" என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மகாலிங்க வாத்தியாரும் அதையேதான் எப்போதும் சொல்லுவார். "பாலு, இன்னிக்கு மத்தியானம் மட்டும் நீ உண்ணாவிரதம் இரேன்!"

"ஓயெஸ். இருக்கேன் சார். அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாப்டுட்டு வந்துடறேனே. கொஞ்சம் தெம்பா இருக்கலாமே!" என்பான் அதே நகைச்சுவையுடன்.

"குண்டா! குண்டா! புள்ளையாரே!" வாத்தியார் செல்லமாக அவன் தொப்பையில் குத்துவார்.

அத்தனை தூரம் அவனைப்பற்றி நன்கு அறிந்த வாத்தியார்தான் இன்றைக்கு இப்படி இரக்கமே இல்லாமல் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல் என்று சொல்லுகிறார்! அடுக்குமா இது! பாவம், அவன் வயிறு என்ன பாடுபடும்?

"புள்ளையாரே! நாம ஸ்டீம் போட்டுல போகப்போறோம். அந்தத் தீவுல ஆசுபத்திரியெல்லாம் ஒண்ணும் கிடையாது. உடம்புக்கு ஒண்ணுன்னா ரொம்பக் கஷ்டமாயிடும். லிமிட்டா சாப்பிடறதுதான் நல்லது. தவிர, கடல் பயணத்தின்போது நிறைய சாப்பிடறதும் நல்லதில்லை" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:18 pm

கடல் பயணம்!

அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் பாலு அந்தக் கொடுமையைச் சகித்துக்கொண்டான். எத்தனை நாள் கனவு அது! கடலுக்குப் பக்கத்திலேயே இத்தனை வருஷமாக வாழ்ந்து வந்தாலும் படகு ஏறிப் போகிற கனவு மட்டும் நனவாகாமலேயே இருந்தது. பல பையன்கள் லாகவமாக நீச்சல் அடிப்பார்கள். பொங்கி எழுந்து வரும் அலையின்மீது தாவிக்குதித்து ஒரு மீன் மாதிரி துள்ளி எழுவார்கள். பாலுவுக்குப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். குண்டாக இருப்பதில் இதுதான் மிகப்பெரிய பிரச்னை! யாரும் அவனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்கக் கூட முன்வரமாட்டேன் என்கிறார்கள்.

"ஐயய்யோ. உன்னைத்தூக்கித் தண்ணில போட்டா, மூழ்கிடுவியேடா குண்டா" என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.

"ப்ளீஸ் சார். எனக்கு நீச்சல் சொல்லிக்குடுங்க சார்" என்று அவன் பலமுறை மகாலிங்க வாத்தியாரிடம் கேட்டிருக்கிறான். "நீ ஒரு அஞ்சு கிலோ எடை குறைச்சுக்காட்டு. அப்புறம் சொல்லித்தரேன். நீச்சல்ங்கறது உடம்பை ட்ரிம்மாவும் ஆரோக்கியத்தை சீராவும் வெச்சிருக்க உதவுற ஒரு கலை. நீ நீச்சல் கத்துக்கிட்டு வீட்டுக்குப் போய் இருபது இட்லியும் நாப்பது வடையும் அமுக்கினேன்னா என்ன பிரயோஜனம்?" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார் வாத்தியார்.

எத்தனையோ பையன்கள் மிகச்சிறிய வயதிலேயே நீச்சலில் சூரர்களாக இருப்பதை பாலு பார்த்திருக்கிறான். ஆனால் ஆறாங்கிளாஸ் வந்தபிறகும் தன்னால் நீச்சல் அடிக்க முடியாமல் இருக்கிறதே என்று வெட்கமாக இருந்தது அவனுக்கு. சரி, நீச்சல்தான் முடியவில்லை; படகிலாவது ஏறிப் போகலாம் என்றாலும் மீனவர்கள் சுத்தமாக மறுத்துவிடுவார்கள். "படகுல போறதுக்கும் கொஞ்சம் நீச்சல் தெரிஞ்சிருக்கறது அவசியம் தம்பி" என்று சொல்லிவிட்டார்கள்.

இதென்ன அக்கிரமம்? வேண்டுமென்றே தன்னை ஒதுக்குகிறார்கள் என்று அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

ஆனால் பள்ளியில் சாரணர் வகுப்பில் இருக்கிற மாணவர்களை கடற்படை அதிகாரிகள் துணையுடன் பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் இருக்கிற பன்றித்தீவுக்கு அழைத்துப் போகிறார்கள் என்கிற நல்ல சேதி வந்ததுமே பாலு பரவசமாகிவிட்டான். அவந்தான், அந்தப் பள்ளிக்கூடத்தில் சாரணர் படை லீடர். கொஞ்சமாவது உடம்பைக் குறைக்கவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கிக்கொண்டுதான் மகாலிங்க வாத்தியார் அவனை லீடர் ஆக்கியிருந்தார். உடம்பு குறையாவிட்டாலும் லீடர் பதவி அப்படியேதான் இருந்தது என்பதால் அவனும் ஸ்டீம் போட் ஏறி பன்றித்தீவுக்குப் போவது ஒருவழியாக உறுதியாகிவிட்டது.

அதிகாலை ஆறு மணிக்கு மாணவர்கள் அத்தனைபேரும் கடலோரக் காவல்படையின் அலுவலகத்துக்கு வந்து குழுமிவிட்டார்கள். மகாலிங்க வாத்தியார் காக்கி பேண்ட், சட்டையில், சாரணர் தொப்பி அணிந்து, பார்க்க கம்பீரமாக இருந்தார். காவல்படை அதிகாரிகள் வெள்ளை வெளேரென்று உடை உடுத்தி, மாணவர்களுக்கு சுடச்சுட தேநீர் அளித்தார்கள். பாலுவுக்கு அந்த அனுபவமே புதிதாகவும் பரவசமாகவும் இருந்தது. என்ன புண்ணியம் செய்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள்! கடல் அலை தொடும் தூரத்தில் ஆபீஸ்! மரத்தில் சிறு பாலம் கட்டி ஆபீஸின் பின்புறக் கதவைத் திறந்து அப்படியே காலாற நடந்து பத்தடி போனால் படகுகள் காத்திருக்கின்றன. போரடித்தால் ஜாலியாக ஏறி ஒரு ரவுண்டு அடித்துவிட்டுத் திரும்பிவிடலாம்!

எப்பேர்ப்பட்ட வாழ்க்கை இது! அடடா, நான் பெரியவனானால் நிச்சயம் ஒரு கடற்படை அதிகாரியாகத் தான் ஆகவேண்டும்!

"பாய்ஸ்! ஒரு மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரணும்னுதான் பன்றித்தீவுக்கு சாரணர்களைக் கூட்டிக்கிட்டுப் போக ஏற்பாடு செஞ்சோம். இந்த முயற்சிக்கு ஒத்துழைச்ச கடலோரக் காவல்படையினருக்கு நம்மோட நன்றிகளை முதல்ல சொல்லிடணும். பன்றித்தீவு இங்கேருந்து ஆறு கடல்மைல் தொலைவுல இருக்கு. உங்கள்ள சிலர் கட்டுமரம் ஏறிப் போயிருப்பீங்க. ஆள் நடமாட்டம் இல்லாத பன்றித்தீவுல பன்றிகளும் கிடையாது! அப்புறம் எதுக்கு அந்தப் பேர் வந்ததுன்னு இனிமேத்தான் ஆராய்ச்சி பண்ணணும். அந்த வேலையை அப்புறம் வெச்சுக்கலாம். நாம இப்ப எதுக்கு அங்க போறோம் தெரியுமில்லையா?"

"தெரியும் சார். தீவை ஸ்டடி பண்ணணும்னு சொல்லியிருக்கீங்க. அங்க என்னென்ன தாவரங்கள் இருக்கு,மண் எப்படி இருக்கு, என்னென்ன பறவைகள், உயிரினங்கள் நிறைய இருக்கு... இதையெல்லாம் கவனிக்கணும். அப்புறம், நம்ம ஊரைவிட தீவு எப்படி, எதனால, ஏன் சுத்தமானதா இருக்குங்கறதைப் பத்தி ஒரு கட்டுரை எழுதணும்...."

"வெரி குட் பாலு. எல்லாரும் கேட்டுக்கிட்டீங்களா? புறப்படுவோமா?"

பையன்கள் ஹோவென்று உற்சாகக் குரல் எழுப்பியவண்ணம், அந்தக் கடலோரக் காவல்படை அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறிய போட் ஜெட்டியின் மரப்பாலத்தின்மீது திமுதிமுவென்று ஓடி, தயாராக நின்றிருந்த ஸ்டீம் போட்டில் ஏறினார்கள்.

"பாத்து!பாத்து! மெதுவா ஏறுங்க" என்றார் வாத்தியார்.

"டோண்ட் ஒர்ரி சார். எங்க சார்ஜண்ட்ஸ் அங்க இருக்காங்க. அவங்க பாத்துப்பாங்க" என்று சொன்னார் வெள்ளை வெளேரென்று உயரமாக, ட்ரிம்மாக இருந்த கடற்படை அதிகாரி.

"தேங்க்யூ வெரிமச் கேப்டன் நாராயணமூர்த்தி! நாங்க கிளம்பறோம்" என்று அவரிடம் விடைபெற்று வாத்தியாரும் வந்து படகில் ஏறிக்கொண்டார். படகு சிறு உறுமலுடன் புறப்பட்டது.

கொஞ்சதூரம் வரை கரை தெரிந்தது. தாங்கள் படகு ஏறிய இடம் கண்ணுக்குப் புலப்பட்டது. சட்டென்று எல்லாம் மறைந்து, நாலாபுறமும் நீலம் பரவி, உலகமே நீராலானது போலத் தோன்றியதை வியப்புடனும், விழிப்புணர்வுடனும் கவனித்துக் குறித்துக்கொண்டான் பாலு.

"கடல்லே எப்படி திசை தெரியும் சார்?" அவன் கேட்பதற்காகக் காத்திருந்தமாதிரி, ஒரு கடற்படை அதிகாரி அவனை அழைத்துக்கொண்டு எஞ்சின் ரூமுக்குப் போனார்.

"பாய்ஸ்! எல்லாரும் வாங்க" என்று அழைத்து, அங்கே படகு ஓட்டுநருக்கு முன்னால் இருந்த திசைகாட்டும் கருவியைச் சுட்டிக்காட்டினார்.

"இதை வெச்சுத்தான் கண்டுபிடிப்போம். இது ஒரு அறிவியல்! சயன்ஸ்! கடல் இயல்னு தனி சப்ஜெக்ட் இருக்கு. கடல் அறிவியல் வேற, கடல் இயல்வேற! ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். உங்கள்ள எத்தனை பேருக்கு கப்பல் கேப்டன் ஆகணும்னு லட்சியம் இருக்கு?" என்று கேட்டார் அந்த அதிகாரி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:18 pm

பல பையன்கள் கையைத் தூக்கினார்கள்.

"வெரி குட். தண்ணீர்ங்கறது ஒரு சக்தி. மிகப்பெரிய, பிரும்மாண்டமான சக்தி. பாக்கறதுக்கு சாது மாதிரி இருக்கில்லையா? ஆனா அதனோட சக்தி அபரிமிதமானது. கடல் பொங்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கிங்களா?..."

"ஆமா சார். புயல் வீசும்போது..."

"கரெக்ட். அப்ப தண்ணில உற்பத்தியாகிற சக்தி மின்சாரத்தைவிடப் பலமடங்கு பெரிசு. நாம கடலைப் புரிஞ்சுக்கணும்னா, ஒண்ணு தண்ணியாவே மாறணும் மனசுக்குள்ள. அல்லது மீனா மாறணும்"

"மீனா மாறுவதா! அதெப்படி?" என்றான் பாலு.

"முதல்ல உடம்பைக் குறைச்சு நீச்சல் கத்துக்கணும் புள்ளையாரே!" என்றார் வாத்தியார். பையன்கள் சிரித்தார்கள்.

பாலு திரும்பிப் பார்த்து முறைத்தான். "நீங்க சொல்லுங்க சார்" என்றான்.

"தண்ணீரோட சூட்சுமம் புரிஞ்சுக்கறது கொஞ்சம் கஷ்டம். படிக்கணும். பெரியவனானதும் மெரைன் பயாலஜி படிச்சீங்கன்னா புரியும்." என்றவர், அங்கே எடுத்துவந்திருந்த ஒரு குண்டு புத்தகத்தைப் பிரித்து பாலுவிடம் காட்டினார். கொட்டை கொட்டை எழுத்துகளில் கடலின் இயல்புகளை இரண்டு இரண்டு வரிகளில் அழகாக, மாணவர்களுக்குப் புரியும்விதத்தில் அதில் விளக்கி எழுதப்பட்டிருந்தது. கூடவே அழகழகாக நிறையப் படங்களும் இருந்தன.

பாலு ஆர்வமுடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு தனியே போனான். அவன் அதைப் புரட்டத் தொடங்கியதும் ஒரு கப்பல் பணியாளர் வந்து அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் சுடச்சுடத் தேநீர் அளித்தார்.

"எனக்கு ரெண்டு தம்ளர் வேணும்" என்றான்பாலு.

சிரித்துக்கொண்டே அவனுக்கு இரண்டு கிளாஸ் தேநீர் அளித்தவர், "அங்க நிறைய டீ இருக்கு. எவ்ளோ வேணுமோ எடுத்துக் குடிக்கலாம்" என்று சொன்னார்.

"ரொம்ப தேங்ஸ் சார். ஒரு விஷயம். என்னைமாதிரி குண்டு பையன்கள் நீச்சல் கத்துக்கிட்டு கடலைப் புரிஞ்சுக்க முடியாதா?"

அவர் கனிவாக அவன் தலையைக் கோதிவிட்டு, "தாராளமா முடியும். ஆனா முதல்ல கடல்ல நீச்சல் பழகக் கூடாது. ஸ்விம்மிங் பூல்லெ போய்க் கத்துக்கணும். தொடர்ந்து நீச்சல் அடிச்சா உடம்பு தானா குறையும். அப்புறம் கடல் நீச்சலுக்கு வரலாம்"

பாலுவுக்கு இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தது.

முக்கால் மணிநேரக் கடல் பயணம். அவனுக்குப் பரவசம் பிய்த்துக்கொண்டு போனது. எப்பேர்ப்பட்ட அனுபவம்! நாலாபுறமும் கடல். எல்லையற்ற கடல்வெளி. மீன்கள் உள்ளே ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு யார் நீச்சல் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்? கடலின் வேகத்தை எதிர்த்துக் கப்பல்களும் படகுகளும் போகின்றன. சாதிக்க முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன? சரியான முனைப்புதான் வேண்டும். அது இருந்துவிட்டால், கடலை வெல்லுவது மிகச் சுலபம்!

இப்படித் தோன்றியதுமே அவனுக்குப் புத்துணர்ச்சி உண்டாகிவிட்டது.

சரியாக ஐம்பது நிமிடம் ஆனபோது எதிரே கரை தென்பட்டது.

"பாய்ஸ்! பன்றித்தீவு வந்தாச்சு. இறங்கணும்" என்று மகாலிங்க வாத்தியார் குரல் கொடுத்தார். மீண்டும் பையன்கள் ஓவென்று உற்சாகக் குரல் கொடுத்துக்கொண்டு தத்தம் பைகளை எடுத்துக்கொண்டு தயாராகப் படகின் விளிம்புக்கு வந்து நின்றார்கள்.

இன்றைய தினத்தை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது என்று பாலு நினைத்துக்கொண்டான். அவனுக்கு அப்போது தெரியாது. அன்றைய தினம் மட்டுமல்ல; அடுத்து வரப்போகிற பத்து நாட்களையும் கூட அவனால் உயிருள்ளவரை மறக்கமுடியாமல் இருக்கப் போகிறது என்று!

மகிழ்ச்சியுடன் அவன் பன்றித்தீவில் கால் வைத்தான். அங்கே அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:19 pm

பன்றித்தீவில் இறங்கியதுமே பாலுவுக்கு உற்சாகம் பெருகிவிட்டது. வெண்ணெய் மாதிரி இருந்தது அந்தத் தீவின் மணல். கால் புதையப் புதைய நடந்துகொண்டும் ஓடிக்கொண்டுமே இருக்கலாம் போலிருந்தது. பத்தடிக்கு ஒரு காட்டு மரமும் பறந்தோடும் சிறு குருவிகளும் தொலைவில் மட்டுமே தென்படும் வெண்நாரைகளும் கடலின் இரைச்சலுமாகச் சேர்ந்து அவன் பரவசத்தை அதிகரித்துக்கொண்டிருந்தன. அடடா, வாழ்ந்தால் இந்தமாதிரி ஒரு ஊரில் அல்லவா வாழவேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் தீவில் மனிதர்கள் யாரும் வாழ்வது மாதிரியே தெரியவில்லை. மகாலிங்க வாத்தியார் சொன்னார்: "இங்க பொதுவா வீடுகள் கிடையாது. சில மீனவர்கள் மத்தியான நேரங்கள்ள இளைப்பாற வருவாங்க. சாப்பிட்டுப் படுத்துத் தூங்கிட்டுப் போவாங்க. மத்தபடி ஆள் நடமாட்டமில்லாத தீவு இது"

"அப்ப நாம எதுக்கு சார் வந்திருக்கோம்?" என்று கேட்டான் பன்னீர் செல்வம்.

"சும்மா ஒரு சேஞ்சுக்குன்னு வெச்சிக்கங்க. ஆள் நடமாட்டம் இல்லாத தீவு எப்படி இருக்கும்னு நீங்க தெரிஞ்சிக்க வேணாமா?"

"ஆமா சார், ஆமாசார்" என்று பலபேர் குரல் கொடுத்தார்கள்.

இரண்டு மணிநேரம் சாரணர் வகுப்புகள் மிகத் தீவிரமாக நடந்தது. ஓடச் சொல்லியும் குதிக்கச் சொல்லியும் உடற்பயிற்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார் மகாலிங்க வாத்தியார்.

"குண்டா! நல்லா ஓடுடா. வேத்துவிடணும். மூச்சு இறைக்கணும். அப்பத்தான் இளைப்பே. அப்பத்தான் நீச்சல் கத்துக்க முடியும். அப்பத்தான் நீஞ்சியே இங்க நீ அடிக்கடி வரவும் முடியும்" என்றார்.

"சான்ஸே இல்லை சார். இந்தத் தீவு கடலோர காவல்துறை கட்டுப்பாட்டுல இருக்காம். யாரும் சுலபமா வர முடியாதாம்" என்றான் பாலு.

"உனக்கு எப்படிடா தெரியும்?"

"வரும்போது அந்தப் படகுல வந்தாரே ஒரு ஆபீசர், அவர்கிட்டே கேட்டேன்"

"அடடே, வெரிகுட். தகவல்களை சேகரிக்கறது நல்ல பழக்கம்." என்றார் மகாலிங்க வாத்தியார்.

சாரணர் பயிற்சி வகுப்புகள் ஒருவாறு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு சுடச்சுட மதிய உணவு வழங்கப்பட்டது. புளியோதரைப் பொட்டலங்களும் தயிர்சாதப் பொட்டலங்களும். கீழ இரைக்காம சாப்பிடணும் பசங்களா" என்றார் வாத்தியார்.

"மண்ணுதானே சார்!"

"மக்கு. மண்ணுதான். ஆனா எவ்ளோ சுத்தமா இருக்குப் பாரு. இதுல சாதத்தைக் கொட்டினா உனக்கே பார்க்க அசிங்கமா இருக்காது!"

"அது... ஆமா சார்."

பாலு நைஸாக இரண்டு இரண்டு பொட்டலங்கள் எடுத்துக்கொண்டு சாப்பிடத் தனியாகப் போனான். கடலோர மணல் வெளியைத் தாண்டியதுமே வரிசையாக நிறைய காட்டு மரங்கள் வரத்தொடங்கியிருந்தன. அடர்ந்த, அடிப்பகுதி பருத்த மரங்கள்தான் அனைத்துமே. "இந்தத் தீவுல இருக்கற பல தாவரங்கள் மருத்துவ குணம் மிக்கவை. அதுங்களைப் பராமரிக்கறதுக்காகத்தான் இதை பாதுகாக்கப்பட்ட பகுதியா அரசாங்கம் வெச்சிருக்கு" என்று கடலோர காவல்துறை அதிகாரி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

பாலுவுக்கு அந்தத் தீவை முழுவதுமாகச் சுற்றி வரவேண்டும் என்று விருப்பம் எழுந்தது. மொத்த பரப்பளவே ஒன்றரை கிலோமீட்டர்தான் என்று சொல்லியிருந்தார்கள். கடற்கரை ஓரமாகவே சுற்றி வந்தால் ஐம்பது நிமிடத்தில் சுற்றிவிடலாம் என்று கேள்விப்பட்டிருந்தான். ஒரு ரவுண்டு போகலாமா என்று நினைத்தான். வாத்தியார் உதைப்பார் என்று பயமாகவும் இருந்தது. யாராவது நாலு பசங்கள் உடன் வந்தால் தைரியமாகப் போகலாம். அல்லது மகாலிங்க வாத்தியாரையே கூட அழைத்துப் போகச் சொல்லலாம். அவர் கூட வருகிற பட்சத்தில் கடலோரமாக என்ன, மரங்களின் ஊடே புகுந்தே போகலாம். காட்டுக்குள் பயணம் செய்வதுஎப்பேர்ப்பட்ட அனுபவம்!

இவ்வாறு நினைத்துக்கொண்டே சுமார் இருபதடி தூரம் நடந்திருப்பான். சட்டென்று சூரிய வெளிச்சம் மிகவும் மங்கி, மரங்கள் மிகவும் அடர்த்தியாக மூடியிருப்பதை உணர்ந்தான். எங்காவது புலி, கரடி என்னவாவது வந்துவிடுமோ என்று ஒருகணம் அச்சமாக இருந்தது. உடனே 'சேச்சே. அந்தமாதிரி இடத்துக்கெல்லாம் அழைத்துவரமாட்டார்கள்' என்றும் நினைத்துக்கொண்டான். திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்த வேளையில் இடைவேளை நேரம் இன்னும் நிறையவே மிச்சமிருக்கிறது என்பதும் நினைவுக்கு வந்தது. நடந்தவாக்கிலேயே சாப்பிட்டு வந்தவனுக்கு, பொட்டலங்கள் தீர்ந்ததும் தண்ணீர் வேண்டும்போலிருந்தது. அடடே, தண்ணீரை மறந்துவிட்டோமே என்று நாக்கைக் கடித்துக்கொண்டான்.

வேறு வழியில்லை. திரும்பித்தான் ஆகவேண்டும் என்று அலுத்துக்கொண்டே திரும்பியவனுக்கு சடாரென்று இன்னொரு யோசனையும் உதித்தது. என்னதான் தீவு என்றாலும் கடலுக்கு நடுவே இருப்பதென்றாலும் இத்தனை தாவரங்கள், மூலிகைகள் முளைக்கும் இடத்தில் தண்ணீர் இருக்காதா என்ன? ஒரு பத்து நிமிஷம் மேற்கொண்டு சுற்றிவிட்டுத் திரும்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு மேலே நடந்தான்.

நடக்க நடக்க கானகம் மிகவும் இருண்டுகொண்டே வந்தது. வெளிச்சம் துளியும் இல்லாமல் வெறும் கடலின் இறைச்சல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு லாங்-ஜம்ப் செய்தால் கடல் வந்துவிடும் என்றுதான் நினைத்தான். ஆனால் அக்கம்பக்கத்தில் மரங்கள்தான் கூடிக்கொண்டு வந்தனவே தவிர கடலைக் காணோம். ஒரு வினாடி நின்று திரும்பிப் பார்த்தான். வந்த பாதை சரியாகவே தெரிந்தது. ம்ஹும். ப்ரச்னை இல்லை. எப்படியும் பத்திரமாகத் திரும்பிவிடமுடியும்!

ம்மே என்று குரல்கொடுத்துக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி அவனைத் தாண்டி, தாவிப்போனது. சில பறவைகளின் குரல் க்ரீச்க்ரீச்சென்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. ரசித்தபடியே மேலும் நடந்தவன் சற்று தூரம் போனதும் வலப்புறம் கொஞ்சம் தள்ளி தொலைவில் ஒரு பாழடைந்த வீடு இருப்பதைக் கண்டான். உடனே அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. மனிதர்களே இல்லாத தீவில் வீடு மட்டும் எப்படி இருக்கிறது? யார் கட்டியிருப்பார்கள்? எப்போது கட்டியிருப்பார்கள்?

ஆவல் அதிகரிக்க, அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அது மிகப்புராதனமான வீடு போலிருந்தது. முன்புறம் பாதிக்கு மேல் உடைந்து, உதிர்ந்திருந்தது. பழுப்பாகிப்போன கருப்புப் பலகை ஒன்று உடைந்து ஒரு ஓரமாகக் கிடைந்தது. அதில் 'கடலோர..' என்கிற வார்த்தை மட்டும்தான் படிக்கும்படி இருந்தது. மற்றதெல்லாம் அழிந்திருந்தது. ஓஹோ, இது அரசாங்கக் கட்டடம்தான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். ஆனால் யாரும் உள்ளே இருந்து வேலை பார்ப்பதாகத் தெரியவில்லை. கதவு பூட்டப்பட்டிருந்தாலும் ஜன்னலெல்லாம் முழுவதுமாக உடைந்து கட்டடத்தின் உள்புறம் முழுவதுமே பார்க்கும்விதத்தில் இருந்தது.

கிட்டே போய் எட்டிப்பார்த்தான். நின்று கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி, அந்தப் பாழடைந்த கட்டடத்தை ஒருமுறை சுற்றி வந்தான். ஒரு ஆபீஸ் இங்கே இருந்திருக்கிறது என்றால் ஒரு குழாய் இருக்காதா என்ன? ஆபீஸ் இல்லாவிட்டாலும் அந்தக் குடிநீர்க் குழாய்க்கு இப்போது உயிர் இருக்காதா என்ன?

அவன் எதிர்பார்த்தபடியே அந்தக் கட்டடத்தின் பின்புறம் சுவரை ஒட்டியபடி ஒரு பிளாஸ்டிக் பைப் அழுக்கேறிக் கிடந்தது. பைப்பின் மறுமுனை ஒரு குழாயில் சொருகப்பட்டிருந்தது! அப்படிப்போடு! அவன் ஆர்வமுடன் குழாயைத் திறந்துபார்த்தான். ஆஹா, தண்ணீர் வருகிறதே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:19 pm

ஆனால் குடிக்க முடியாதபடி நீர் உப்பாக இருந்தது. எனவே, அவன் வெறுமனே கைகளை மட்டும் கழுவிக்கொண்டு, முகத்தையும் தண்ணீர் அடித்து புத்துணர்ச்சி ஏற்றிக்கொண்டான். மறுபடியும் குழாயை மூடியபோதுதான் அந்தச் சத்தம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

யாரோ பேசுவது போலல்லவா இருக்கிறது? இந்த இடத்தில் யார் இருப்பார்கள்? அதுவும் பாழடைந்த பழைய அலுவலகம்!

இரண்டு அடுக்குகளாக இருந்த அந்தக் கட்டடத்தின் மாடிக்குப் போகும் படிகள் உடைந்து சிதிலமாகியிருந்ததை முன்புறத்தில் நின்றபோதே அவன் கவனித்திருந்தான். ஆனால் மாடியிலிருந்து இப்போது பேச்சுக்குரல் வருகிறது! யாராக இருக்கும்? பூட்டிக்கிடக்கும் கட்டடத்துக்குள் எப்படி அவர்கள் நுழைந்து, உடைந்த மாடிப்படி ஏறி மேலே போயிருக்க முடியும்? ஜன்னல் வழியாகப் போக முடியும்தான். ஆனால் கதவைத் திறக்காமல் ஜன்னல் வழியே எகிறிக்குதித்து உள்ளே போய், மாடி ஏறி ரகசியமாகப் பேசுபவர்கள் நிச்சயம் கடலோரக் காவல்படை அதிகாரிகளாக இருக்கமுடியாது!

என்ன செய்யலாம்? அவனுக்குக் கொஞ்சம் திகிலாகவும் அதே சமயம் ஆர்வமூட்டும் விதமாகவும் இருந்தது மாடியிலிருந்து வந்த அந்த கிசுகிசுப்புப் பேச்சு. திரும்பிப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால் அப்படி என்னதான் அவர்கள் பேசுகிறார்கள்? நின்று கேட்டால்தான் என்ன என்றும் தோன்றியது.

ஒரு முடிவுக்கு வந்தவனாக விறுவிறுவென்று அந்தக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு முன்புறம் போனான். உடைந்து கிடந்த ஜன்னலில் ஏறி உள்ளே குதித்தான். கீழே தரை உடைந்து மண்ணும் சிமெண்டுமாக இருந்தது. பழையகால மேசை நாற்காலிகள் இரண்டும் உடைந்து ஒரு ஓரத்தில் கிடந்தன. மாடிப்படியோரம் போய் நின்றவன், மேலே ஏறலாமா என்று யோசித்தான். அது மரப்படி. ஏறினால் சத்தம் வரும் என்பதால் அங்கேயே நின்று காதைத் தீட்டிக்கொள்ள முடிவு செய்தான். இரண்டு நிமிடங்கள் அமைதி காத்ததும் பேச்சு துல்லியமாகக் கேட்டது. மாடியில் இரண்டு பேரல்ல; மூன்று பேர் இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது!

"இன்னிக்கு ராத்திரி நாம கிளம்பறோம். திரும்பி வர சரியா அஞ்சு நாள் ஆகும். அதாவது அடுத்த புதன்கிழமை நாம திரும்பி இங்க வரோம். அதுக்குள்ள நமக்கு இங்க புதையல் இருக்கற இடத்தோட ப்ளூ - ப்ரிண்ட் கிடைச்சுடும். அடுத்த புதன்கிழமைங்கறது அமாவாசை தினம். அன்னிக்கு ராத்திரியே தோண்டி எடுத்துக்கிட்டு படகு பிடிச்சா, விடியற நேரம் அங்க போய்ச் சேர்ந்துடலாம்..."

ஒருத்தன் பேசிக்கொண்டிருக்க, மற்ற இருவரும் 'உம்' 'உம்' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாலுவுக்கு மூச்சிறைத்தது. இதென்ன, கதைகளில் வருவது மாதிரி, புதையல், அமாவாசை என்று என்னென்னவோ பேசுகிறார்கள்! யார் இவர்கள்? கொள்ளைக்காரர்களா? இந்தக் காலத்தில் புதையலெல்லாம் கூட இருக்குமா என்ன? யார் புதைத்து வைத்திருக்கிறார்கள்? அந்த விவரம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அதென்ன அஞ்சு நாள் கணக்கு?

குழப்பமும் பயமும் அவனைக் கவ்விக்கொண்டன. மிகவும் வியர்த்தது. சாப்பிட்ட இரண்டு பொட்டலம் புளியோதரையும் ஜீரணமாகிவிட்ட மாதிரி இருந்தது. இங்கிருந்து முதலில் போய்விடலாம் என்று நினைத்தான். அவன் திரும்பியபோது தோளில் ஒரு கை விழுந்தது.

அதிர்ந்து திரும்பிய பாலுவுக்குத் தன்னைத் தொட்டவனைப் பார்த்ததும் அதிர்ச்சி இருமடங்கானது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:20 pm

"நீயா?" என்றான் பாலு. அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை. அந்தப் பாழடைந்த அலுவலகக் கட்டடத்தின் மாடிப் பகுதியில் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஏற்கெனவே பயத்திலிருந்தவனுக்கு, சட்டென்று தோளில் கை வைத்து அழைத்தவன் - தன் உயிர் நண்பன் குடுமிநாதன் என்கிற பத்மநாபனே என்று தெரிந்தும் அதிர்ச்சி அத்தனை சீக்கிரம் நீங்கவில்லை.

"நீ எப்படிடா இங்க வந்தே?" என்று ரகசியக் குரலில் கேட்டான் பாலு.

"உன்னைத் தேடித்தான் வந்தேன். சட்டுனு காணாம போயிட்டியே. வாத்தியார் தேடறார்" என்றான் அவன்.

"சரிவா" என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே பாய்ந்து, இருபதடி தூரம் ஓடியபின் தான் நின்று மூச்சு விட்டான்.

"என்னடா பண்ணே அங்கே? ஏன் இப்படி பயந்து ஓடிவரே? அங்க யார் இருக்கா? நீ எதைப் பார்த்தே?" என்றான் குடுமி.

"பயங்கரம்டா குடுமி. யாரோ பெரிய கொள்ளைக்காரங்க போலிருக்கு. இந்தத் தீவுல ஒரு பெரிய புதையல் இருக்காம். அடுத்த புதன்கிழமை ராத்திரி அதைத் தேடி எடுக்கப் போறாங்களாம். என்னவோ ப்ளூ ப்ரிண்ட் வேறா வருதாம் - புதையல் இருக்கற இடத்தைக் காட்ட! சினிமா மாதிரி பேசறாங்க. நம்பவே முடியலை"

"என்னடா சொல்றே?" என்று கத்தினான் குடுமி.

"உஷ்! உரக்கப் பேசாதே. நிஜம்தான் சொல்றேன். அவங்க பேசிட்டிருந்ததை நான் கேட்டேன். ஆளே இல்லாத இந்தத் தீவுல எதுக்கு மூணு நாலுபேர் அந்தப் பாழடைஞ்ச வீட்டு மாடில உக்காந்து பேசணும்? யாரும் வரமாட்டாங்கன்ற நம்பிக்கைலதான் அவங்க உரக்கப் பேசிட்டிருந்தாங்க. எப்படியோ அது என் காதுல விழுந்துடுச்சி..."

"புதையலா? என்ன புதையல்?"

"தெரியலை. கதை மாதிரி இருக்கில்ல? நாம முத்து காமிக்ஸ்ல படிப்போமே? அந்த மாதிரி போல இருக்கு. ஆனா இது கதை இல்லை. நெஜமாவே பேசிட்டிருந்தாங்க. அடுத்த புதன்கிழமை ராத்திரி இங்க இவங்க திரும்ப வரப்போறாங்க.புதையலைத் தோண்டி எடுக்கப் போறாங்களாம்...."

சிறிதுநேரம் நண்பர்கள் இருவரும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார்கள். நடந்த சம்பவத்தை அவர்கள் இருவராலுமே நம்ப முடியவில்லை. ஆனால் இது கதையல்ல. பாலு கதை விடுபவன் அல்ல என்று குடுமிநாதனுக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவன் முகம் பேயறைந்தது மாதிரி இருண்டு கிடப்பதையும் கவனித்தான். பயங்கரமாக ஏதோ சதி நடக்கப்போவதை பாலு கண்டுபிடித்திருக்கிறான்! இனி என்ன செய்வது?

"பேசாம நம்ம மகாலிங்க வாத்தியார் கிட்ட சொல்லிடலாமாடா?" என்று கேட்டான் குடுமி.

"சேச்சே" என்று சட்டென்று மறுத்துவிட்டான் பாலு. "நீ ஏன் அங்கல்லாம் போனன்னு நம்மை உதைப்பாருடா. பேசாம இரு. நாம கொஞ்சம் யோசிப்போம்" என்று சொன்னான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்தக் கடலோர காவல்படை அதிகாரி மிகவும் நல்லவராகத் தெரிகிறார். பேசாமல் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டால் என்ன? எப்படியும் அந்தக் கொள்ளைக்காரர்கள் தீவில் தான் இருப்பார்கள், இருட்டும் வரை. பகலில் அவர்கள் படகு ஏறிக் கிளம்பமாட்டார்கள். கிளம்பினால், கடலோரக் காவல் படையிடம் சிக்கிக்கொள்ள நேரும். அதற்குள் அதிகாரியிடம் சொல்லி, இப்போதே அவர்கள் அங்கே போய் பிடித்துக்கொள்ளச் செய்துவிட்டால் என்ன?

குடுமிநாதன் சொன்னான்: "ம்ஹும். அதுவும் கஷ்டம்டா. ஒருவேளை நீ அவர்கிட்ட சொல்லி, அவர் போய் பிடிக்கறதுக்குள்ள அவங்க போயிட்டாங்கன்னா? உன்னைத்தானே திட்டுவாங்க?"

"எப்படிடா போகமுடியும்? இது சின்னத்தீவு தானே?"

"மக்கு. தப்பிக்கத் தெரியாமலா கொள்ளைக்காரங்க இங்க வருவாங்க. உனக்கும் எனக்கும்தான் இந்த இடம் புதுசு. அவங்களுக்கு பழகின இடமா இருக்கும்" என்றான் குடுமி.

ஒரு வகையில் அவன் சொல்லுவதும் சரிதான் என்று பாலுவுக்குத் தோன்றியது. இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. ஒருத்தர் மேல் புகார் சொல்லி பிடித்துக்கொடுப்பது என்றால் அவரைப் பற்றிய முழு விவரங்களும் முதலில் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் வேறெதாவது பேசிக்கொண்டிருந்துவிட்டு, தாம் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால்? எத்தனை அவமானமாகிவிடும்! மேலும் அவர்கள் கொள்ளைக்காரர்களாகவே இருந்து, கடற்படை அதிகாரியிடம் இம்முறை தப்பித்துவிட்டால் நாளைக்கு நம்மை வந்து உதைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? துரத்தினால் ஓடக்கூட முடியாது, இந்த குண்டு உடம்பை வைத்துக்கொண்டு! போட்டு மொத்து மொத்தென்று மொத்தி கடலில் வீசி விட்டால்? ஐயோ!

வேண்டாத வேலைதான் என்று தோன்றியது. "இப்ப வெளில மூச்சு விடவேணாம்டா. கொஞ்சம் யோசிப்போம். அப்புறம் முடிவு பண்ணலாம்" என்று குடுமிநாதனிடம் சொன்னான்.

இருவரும் பேயறைந்தவர்கள் மாதிரி திரும்பி வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சக மாணவர்கள் "எங்கடா போயிட்டிங்க ரெண்டுபேரும்? வாத்தியார் கோபமா இருக்கார்" என்றார்கள்.

இதுவேறு! ஹும். அவரை முதலில் சமாளித்தாக வேண்டும்.

மகாலிங்க வாத்தியார் கடலோரத்தில் கோபமூர்த்தியாக இருந்தார். பாலுவைப் பார்த்ததும் "குண்டா! எங்கடா காணாமப் போன?" என்று கேட்டார்.

"ஒண்ணுமில்ல சார். காடு அழகா இருக்கேன்னு சும்மா கொஞ்சம் சுத்திப்பாக்கப் போனேன். வழி மறந்துபோச்சு" என்றான் சட்டென்று.

மனத்துக்குள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. வாத்தியாரிடம் போய் பொய் சொல்லுவதா? கடவுளே. நான் ஒரு கெட்ட பையன் ஆகிக்கொண்டிருக்கிறேனா என்ன?

"டேய் குண்டா! வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்? பொய்மையும் வாய்மை உடைத்து. எப்பொ? எதாவது நல்லது நடக்கும்னா. நீ இப்ப உண்மைக்காரணத்தை உளறிவெச்சன்னா, ஏகப்பட்ட பிரச்னை வரும். ஒழுங்கா இன்னிக்கி வீடு போய் சேர முடியாது. பின்னால நிதானமா வாத்யார்கிட்டயே விளக்கி சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கலாம். போட்டுக் குழப்பிக்காத" என்று அவன் மனச்சாட்சி சொன்னது.

அன்று பிற்பகல் ஒரு மணி நேரம் தான் சாரணர் வகுப்பு நடந்தது. அதன்பின் மகாலிங்க வாத்தியார், மாணவர்களை அழைத்துக்கொண்டு தீவைக் கொஞ்சம் சுற்றி வந்தார். ரொம்ப உள்ளே போகாமல் ஓரளவு காட்டைச் சுற்றிப் பார்த்து இது என்ன மரம், அது என்ன கொடி, இந்தத் தழையைப் பார், அந்தப் பறவையைப் பார் என்று சொல்லிவிட்டு மீண்டும் கடற்கரைக்கே வந்து அமர்ந்தார்கள். கொஞ்சநேரம் அலையில் நின்று பையன்கள் களித்தார்கள்.

"குண்டா, நீ தண்ணில எவ்ளோதூரம் வேணா நடந்து போகலாம்டா. கடல் அலையால உன்னைத் தள்ளமுடியாது!" என்று வாத்தியார் ஜோக்கடித்தார்.

பாலுவுக்கு மனமெல்லாம் காலை அந்தப் பாழடைந்த வீட்டில் கேட்ட பேச்சுதான் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. திரும்பத்திரும்ப அவர்கள் பேசியதை அவன் நினைவு கூர்ந்து பார்த்தான். பேச்சு துல்லியமாகத்தான் மீண்டும் காதுகளில் ஒலித்தது. அடுத்த புதன்கிழமை மீண்டும் வருவோம். அன்று அமாவாசை. அதற்குள் ப்ளூ ப்ரிண்ட் வந்துவிடும். புதையலை எடுத்துக்கொண்டு போய்விடலாம் - இதுதான் அவர்கள் பேசியது. சந்தேகமே இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:20 pm

"என்னடா?" என்று கேட்டான் குடுமிநாதன்.

"டேய் குடுமி. எனக்கு சந்தேகமே இல்லடா. நிச்சயம் அவங்க பேசினது ஏதோ திருட்டுக் காரியமாத்தான். பிரமையெல்லாம் இல்லை. தெளிவாவே இருக்கேன். ஏதோ பெரிய சதி பண்றாங்க. அவங்க யாரு? என்ன சதி? இங்க என்ன புதையல் இருக்கு? அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சது? எப்படி கடற்படை அதிகாரிகளுக்குத் தெரியாம போச்சு? இவங்க இங்க அடிக்கடி வருவாங்களா? இதையெல்லாம் நாம கண்டுபிடிக்கணும்டா" என்றான் தீவிரமாக.

"என்னடா சொல்ற?" அதிர்ந்தே போனான் குடுமி.

"ஆமாடா. நாமே கண்டுபிடிப்போம். முதல்ல நான் காதால கேட்டதெல்லாம் உண்மைதானான்னு தெரிஞ்சுக்கணும். அவங்க என்ன பண்றாங்க, எப்படிப் பண்றாங்கன்னு ஒளிஞ்சு இருந்து பாக்கணும். நிச்சயமா தப்புகாரியம்தான் பண்றாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் வாத்தியார் கிட்ட சொல்லி, கடற்படை ஆபீசர்கிட்ட சொல்லிடுவோம். அப்புறம் அவங்க பாத்துப்பாங்க" என்றான் பாலு.

"அதுசரி. நீ எப்படி கண்டுபிடிப்பே? விளையாடறியா? அடுத்த புதன்கிழமை நீ இங்க வரப்போறியான்ன?" என்றான் குடுமி.

"நான் மட்டும் இல்லே. நீயும் வரே. நாம ரெண்டுபேரும் சேர்ந்தே கண்டுபிடிப்போம்!" என்று சொன்னான் பாலு.

குடுமிநாதனுக்கும் அந்த விஷயம் திகிலூட்டும் பரவசமாகத்தான் இருந்தது என்றாலும் எப்படி மீண்டும் பன்றித்தீவுக்கு வரமுடியும்? கடற்படைப் படகு உதவி இல்லாமல், உடன் அதிகாரிகள் வராமல் இங்கு எப்படி வருவது? நீச்சலடித்துக்கூட வரமுடியாதே! ரொம்ப தூரமாச்சே, கரையிலிருந்து? சரி, நீச்சலடித்தே வரலாம் என்றாலும் தன்னால் முடியும். இந்த குண்டனால் எப்படி முடியும்? அவனுக்கு நீச்சல் கூடத் தெரியாதே! தண்ணியில் தூக்கிப் போட்டால் உருளைக்கிழங்கு மாதிரி அமுங்கிவிடுவானே.

தன் சந்தேகத்தை அவன் பாலுவிடம் சொன்னபோது அவன் கொஞ்சம் யோசித்தான். பிறகு, "தெரியலைடா. ஏதாவது வழி கண்டுபிடிப்போம். ஆனா நாம கண்டிப்பா அடுத்த புதன்கிழமை இங்க வந்தே ஆகணும். என்னதான் நடக்கப்போகுதுன்னு பார்த்தே தீரணும். ஒரு கொள்ளைக்கூட்டத்தைப் பிடிச்சிக் குடுக்கறதுன்னா சாதாரணமான விஷயமா? நாம அதை செஞ்சே ஆகணும். ஒரு தப்பு நடக்கும்போது பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக்கூடாது. ஏதாவது வழி கண்டுபிடிப்போம்" என்றான்.

மாலை அவர்கள் மீண்டும் கரைக்குத் திரும்ப சரியாக நான்கு மணிக்குக் கடற்படை ஸ்டீம்போட் வந்துவிட்டது. புதிதாக வேறு சில அதிகாரிகள் இம்முறை படகில் வந்தார்கள். மகாலிங்க வாத்தியாருடன் கை குலுக்கி, மாலைவேளைத் தேநீர் அருந்தி, பிஸ்கெட் சாப்பிட்டு, எல்லா மாணவர்களுக்கும் ஒரு சான்றிதழ் வழங்கி சின்னதாக ஒரு விழாவே நடத்திவிட்டார்கள்!

போட் புறப்பட்டதும் பாலுவும் குடுமியும் நேரே டிரைவரிடம் போனார்கள். "வணக்கம் சார். என் பேர் பாலு. இவன் என் ௬ப்ரெண்ட் பத்மநாபன். ரெண்டுபேரும் எய்த் ஸ்டாண்டர்ட் படிக்கறோம்" என்றான் பாலு.

"அப்படியா?" என்றார் டிரைவர். இவர் காலை அழைத்துவந்த டிரைவர் இல்லை.வேறு ஒருவர்.

"நீங்க இந்தத் தீவுக்கு அடிக்கடி வருவிங்களா டிரைவர் சார்?" என்றான் குடுமி.

"எப்பனாச்சும் வருவோம் தம்பி. இங்கல்லாம் எங்களுக்கு வேலை கிடையாது. இதைத் தாண்டி இன்னும் நாலு மைல் போனா மைனா தீவுன்னு ஒண்ணு இருக்கு. அங்க நம்ம ஆபீஸ் இருக்குது. அங்க அதிகாரிங்க போவாங்க. அப்ப போவறதுதான்" என்றார் டிரைவர்.

"இங்க கூட உங்க ஆபீஸ் ஒண்ணு இருக்கே" என்றான் பாலு.

"இருந்தது. இப்ப இல்ல. ஒரு பில்டிங் இருக்குமே? முன்ன அங்க சிப்பி எடுக்கறவங்க வருவாங்க. அங்கியே மீன் கொள்முதல் பண்றதும் நடக்கும். போன வருசத்துலேருந்து அங்க மீன் வரத்து நின்னுபோச்சி. ஒண்ணும் சரியா கெடைக்கறதில்லை. அதனால எல்லாரும் மைனா தீவு பக்கம் போக ஆரம்பிச்சிட்டாங்க..." என்றார் டிரைவர்.

ஓ என்று கேட்டுக்கொண்டு இருவரும் இஞ்சின் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

"இப்ப என்னடா பண்றது? " என்றான் குடுமி.

"எதுக்கு?"

"நாம அங்க திரும்பப் போகறதுக்கு?"

"அதுவா. அதுக்கு நான் ஏற்கெனவே ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேனே?" என்று குறும்பாகச் சிரித்தான் பாலு.

"என்ன வழி?" உடனே பரபரப்பானான் குடுமிநாதன்.

"சொல்றேன். ஆனா இப்ப இல்ல!" என்று கண்ணடித்தான் பாலு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:22 pm

அமாவாசை அன்று இரவு பன்றித்தீவுக்கு மீண்டும் எப்படிச் செல்வது?

தீவிலிருந்து புறப்பட்ட வினாடியிலிருந்தே பாலுவுக்கு இதே சிந்தனைதான். நண்பன் குடுமிநாதனும் அதே விஷயத்தை ஒரு பிரச்னையாக எழுப்பியபோது, அவனது யோசனை இன்னும் தீவிரமடைந்தது. ஒப்புக்கு, தன்னிடம் ஒரு வழி உள்ளதாக அவன் தன் நண்பனிடம் சொல்லியிருந்தாலும் அந்த வழி பலனளிக்குமா என்பது அவனுக்கு சந்தேகம் தான்.

கடற்கரையிலிருந்து சற்று உள்ளடங்கி, பிரதான சாலையின் இடதுபுறம் கிளை பிரியும் ஒற்றையடிப்பாதையின் முடிவில் உள்ள ஓம் முருகா நகரில் பாலுவின் வீடு இருந்தது. மூச்சுப்பிடித்து ஒரு ஓட்டமெடுத்தால் ஐந்தாவது நிமிடத்தில் கடற்கரையை அடைந்துவிடக்கூடிய தூரம் அது. அவனது வகுப்புத் தோழர்கள் பலரும் அங்கேயேதான் இருந்தார்கள் என்கிற படியால் விளையாடுவதெல்லாம் கூட அந்த வீதிகளிலேயேதான் அவனுக்கு சாத்தியம். கடலோர கிராமம் என்றாலும் கடற்கரைக்குப் போகவெல்லாம் அவனது பெற்றோர் அவ்வளவாக அனுமதிக்க மாட்டார்கள். நீச்சல் தெரியாத குண்டுப்பையனை எந்தப் பெற்றோர் தனியாக கடற்கரைக்கு அனுப்புவார்கள்? மேலும் அவனது சோடாபுட்டிக் கண்ணாடி ஒரு பெரும்பிரச்னை. அதைக் காரணம் காட்டியே அவனது அப்பா அவனை வீட்டைவிட்டு இறங்கக்கூடாது என்று எப்போதும் சொல்லுவது வழக்கம்.

ஆனாலும் பாலுவுக்கு டில்லிபாபு என்கிற மீனவச் சிறுவனுடன் ஓரளவு பழக்கம் இருந்தது. டில்லிபாபு, பாலுவின் பள்ளியில் படித்தவன் தான். திடீரென்று ஒருநாள் போதும் படித்தது என்று அவனது பெற்றோர் அவனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். இது, பாலு உட்பட பள்ளியில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. யாராவது படிக்கிற பையனைப் பாதியில் நிறுத்துவார்களோ? ஆறவேயில்லை அவனுக்கு.

அன்றுமாலை அவன் நடந்ததை வீட்டில் சொன்னபோது, " என்ன பண்ணறது? சில பேரண்ட்ஸ் இப்படித்தான் ஏதாவது தப்புத்தப்பா செஞ்சிடுவாங்க. படிக்கிற பசங்களை ஸ்கூலுக்குப் போகவிடாம செய்யறதைவிடப் பெரிய கொடுமை வேற இல்லை. பிறக்கும்போதே சம்பாதிக்க ஆரமிச்சிடணும்னு நினைக்கறாங்க." என்றார் பாலுவின் தந்தை.

"அவன் சுமாரா படிப்பாம்பா. எப்படியும் முப்பத்தஞ்சு, நாற்பது மார்க்ஸ் வாங்கிடுவான். புக்ஸ் வாங்க முடியலைன்னு நிறுத்தறாங்களாம். சொல்லி அழுதான்" என்றான் பாலு.

"நாம வேணா புக்ஸ் வாங்கித் தரலாம்டா கண்ணா. நீ சொல்லேன்" என்றாள் பாலுவின் அம்மா.

பாலுவுக்கு டில்லிபாபுவைத் தெரியுமே தவிர, அவன் '௬ப்ரெண்ட்' அல்ல. டில்லிபாபு எப்போதும் வகுப்பில் கடைசி பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பான். பெரும்பாலான வகுப்புகளில் அவன் கொர்ர் என்று குறட்டை விட்டபடி தூங்க ஆரம்பித்துவிடுவான். வாத்தியார்கள் எழுப்பி பெஞ்ச் மேல் நிற்கவைத்துக் கேட்டால் "நைட்டு கடலுக்குள்ளாற போயிட்டேன் சார். அதான்" என்பான்.

பாலுவுக்கு அதுவே பெரிய அதிசயமாக இருக்கும். தன் வயதொத்த பையன் தான். தினசரி கடலுக்குள் மீன்பிடிக்கப் போய், ஓய்வு நேரத்தில் பள்ளிக்கும் வருகிறான்! எப்படித்தான் இவர்களெல்லாம் இப்படிச் செய்கிறார்கள். தைரியமாக எப்படியொரு சிறு பையனைக் கடலுக்கு அனுப்புகிறார்கள் அவனது பெற்றோர்?

யோசித்து யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு விடை தோன்றாது.

"எலேய், நீ கடலுக்கு வேணா போ, நெலவுக்கு வேணா போ. க்ளாசுக்கு வந்தா ஒளுங்கா படிக்கணும். இங்க வந்து தூங்கறவேலை வெச்சிக்கிட்டே, முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!" என்று வாத்தியார்கள் எச்சரித்தால் "சரி சார்" என்று விழித்துக்கொள்ளுவான். ஆனாலும் அடுத்த வகுப்பில் மீண்டும் கொர்ர் கொர்ர் தான்!

பலநாள் டில்லிபாபு குளிக்காமல்தான் பள்ளிக்கு வருவான். ஒரே சட்டையை ஒருவாரம் போட்டுக்கொள்வான். முகத்தில் எண்ணெய் வழிவதை ஒருபோதும் துடைக்க மாட்டான். யாருடனும் பழகாமல் வகுப்பில் தனியே அமர்ந்திருப்பது அவன் வழக்கம்.

பாலுவின் அம்மா, 'நாம் வேண்டுமானால் அவனுக்கு புக்ஸ் வாங்கித் தரலாமே' என்று சொன்னதையொட்டி, டில்லிபாபுவின் பெற்றோரிடம் பேச ஒருநாள் பாலு கடற்கரையை ஒட்டியுள்ள மீனவர் குடியிருப்புக்கு அவனைத் தேடிக்கொண்டு போனான்.

டில்லிபாபுவின் பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னபோது "ரொம்ப நல்ல மனசு தம்பி உனுக்கு. ஆனா, டில்லி இனிமேங்காட்டியும் பள்ளியோடத்துக்கு வரமாட்டான்னா வரமாட்டான் தான்... எனுக்கு வயசாயிரிச்சி. கடலுக்குள்ளாறப் போவ ஒரு தொணை வேண்டியிருக்கு. அந்த டில்லிக்களுதைக்கும் படிப்பு வரமாட்டேங்குது. எலவசமா சோறு போட்டு படிப்பு சொல்லித்தாராங்கன்னு சொல்லித்தான் போனான். இப்ப என்னான்னா, அஞ்சக்குடு, பத்தக்குடுன்னு அப்பப்ப உசிரை வாங்கறான். முடியலை தம்பி..." என்றார் அவனது அப்பா.

"அவன் கொஞ்சம் கஷ்டப்பட்டா நல்ல மார்க் வாங்கலாம்ங்க. நீங்கதான் கொஞ்சம் உதவி செய்யணும்.. நைட்டுல படிக்க முடியாம கடலுக்குப் போனா எப்பிடி மார்க் வரும்? ஒரு நாலஞ்சு வருஷம் அவனை ஒழுங்கா படிக்க விட்டிங்கன்னா, தேறிடுவானே" என்றான் பாலு.

"அதெல்லாம் சரிப்படாதுப்பா. நீ போ. அவன் வரமாட்டான்" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார் டில்லிபாபுவின் அப்பா.

தோல்வியுடன் வீடு திரும்ப வேண்டியதாகிவிட்டது. எப்போதாவது மார்க்கெட்டில் பிறகு அவன் டில்லிபாபுவைப் பார்ப்பான். பார்த்ததும் சிரித்துவிட்டு, ஓரிரு வார்த்தைகள் பேசுவான். பிறகு "நா வரேண்டா. அம்மா தேடும்" என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவனுக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தது. ரொம்ப ஆர்வம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் தட்டிக்கொட்டினால் தேர்வுகளில் பாஸாகிவிடக்கூடிய பையன் தான். ஏனோ படிப்பை நிறுத்திவிட்டார்கள்.

பாலுவுக்கு இப்போது அந்த டில்லிபாபுவின் நினைவுதான் வந்தது. நீச்சல் தெரிந்த டில்லிபாபு. கட்டுமரம் ஏறிக் கடலுக்குள் மீன்பிடிக்கப் போகும் டில்லிபாபு. தைரியசாலியான டில்லிபாபு. பள்ளிக்கூடத்துக்கு வராவிட்டால் என்ன? அவனுக்கு கடலின் இயற்கை தெரியும். எப்போது சீறும், எப்போது தணியும், என்னென்ன பிரச்னைகள் வரும், எது வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று எல்லாம் தெரியும். அவனிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டால் என்ன?

இதுதான் பாலுவுக்கு வந்த யோசனை. நண்பனிடம் அதை அவன் சொல்லவில்லை. மாறாக, தானே டில்லிபாபுவிடம் பேசி, அவன் ஒப்புக்கொண்டதும் சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டான்.

அன்று மாலை சாரணர் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக கரைக்குத் திரும்பி, மகாலிங்க வாத்தியாரிடம் விடைபெற்று அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். வாத்தியாரும் மீனவக் குடியிருப்போரம் நிறுத்தியிருந்த தன் சைக்கிளில் ஏறிக் கிளம்பிவிட்டார். கடலோரப் பாதுகாப்புப்படை ஆபீஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் டில்லிபாபுவின் குடிசை இருந்தது. பாலு ஒருகணம் யோசித்தான். நேரே டில்லிபாபுவைப் போய்ப் பார்த்துவிட்டே வீட்டுக்குப் போவது என்று முடிவு செய்து, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:23 pm

இருட்டத் தொடங்கியிருந்த நேரம். கடலோரக் காற்று சும்மா ஜிலுஜிலுவென்று அள்ளிக்கொண்டு போனது. தென்னை மரங்களின் தாலாட்டு மிகவும் சுகமாக இருந்தது. மாவு மாதிரி காலடியில் மிதிபட்ட மணல் நடப்பதற்குப் பரம சுகமாக இருந்தது. ஓடத்தொடங்கினால் கால் புதைந்தது. அது ஒருவிதமான அனுபவமாக இருந்தது. இயற்கைதான் எத்தனை அற்புதங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது!

பாலு, டில்லிபாபுவின் வீட்டை அடைந்து, வாசலில் இருந்த வேலிப்படலைத் தள்ளித் திறந்து உள்ளே போய் குரல் கொடுத்தான்.

மூன்று முறை அழைத்ததும் எழுந்து வந்த டில்லிபாபு தூங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. பாலுவைக் கண்டதும் "இன்னாடா, இந்நேரத்துல? எப்பிடி இருக்கே?" என்றான் அவன்.

"உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் டில்லி. கொஞ்சம் வெளில வரியா?" என்றான் பாலு.

"சொல்லு. நேத்திக்கு கடலுக்குள்ளாற போயி, இப்பத்தான் திரும்பி வந்தோம். ரெண்டுநாளா தூங்கலை. மீனும் இன்னிக்கு அத்தனை நல்லா அகப்படலை" என்றான்.

"உங்கப்பா இருக்காரா?" என்றான் பாலு.

"சாராயக்கடைக்குப் போயிருக்காரு" என்று சாதாரணமாகச் சொன்னான்.

திக்கென்றது பாலுவுக்கு. எத்தனை இயல்பாகச் சொல்லுகிறான்! கடவுளே! கெட்ட விஷயங்கள் கூட பழகிவிட்டால் சாதாரணமாகிவிடுமா என்ன?

"டில்லி. நான் சொல்லவந்ததுக்கு முன்னால் உனக்கு ஒண்ணு சொல்லிடறேன். நீ மீன் பிடி. தப்பில்லே. ஆனா பெரியவனானதும் நீயும் இந்தமாதிரி சாராயமெல்லாம் குடிக்க ஆரம்பிச்சிடாதே. உடம்புக்கு ரொம்பக் கெடுதல் அது. நீயும் நேத்து வரைக்கும் ஸ்கூலுக்கு வந்து படிச்சவன் தானே. "

"சேச்சே. எனக்கு அந்த வாடையே பிடிக்காதுரா. ஆனா எங்கப்பாவைத் திருத்த முடியாது. எங்கம்மாவே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு" என்றான் டில்லி.

இருவரும் வெளியே நடந்தார்கள். இருபதடி தூரம் தள்ளியிருந்த மாதாகோயிலின் பின்புறத்திண்ணையில் போய் அமர்ந்ததும் பாலு நேரே விஷயத்துக்கு வந்தான்.

"டில்லி. ஒரு முக்கியமான விஷயம். இன்னிக்கு ஸ்கவுட்ஸ் எல்லாரும் பன்றித்தீவுக்குப் போயிருந்தோம், மகாலிங்க வாத்தியார் அழைச்சிக்கிட்டுப் போனார்" என்று ஆரம்பித்து, மதிய உணவு நேரத்தில் தான் மட்டும் தனியாக காட்டுக்குள் போனதையும் அங்கிருந்த பாழடைந்த கட்டடத்தில் கேட்ட இரு குரல்கள் பற்றியும் எதிர்வரும் அமாவாசை தினத்தன்று அவர்கள் புதையல் தோண்டி எடுத்து, ஸ்டீம் போட் ஏறித் தப்பிக்க இருப்பது பற்றியும் விரிவாகச் சொன்னான்.

"என்னாடா சொல்லுறே?" என்றான் டில்லி.

"ஆமடா. அத்தனையும் உண்மை. நானே என் காதால கேட்டேன். வாத்தியார்கிட்டே சொல்லிடலாம்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா சின்னபசங்க எதையாவது பாத்துட்டு உளறுவாங்கன்னு நினைச்சிடுவாரோன்னு பயம். ஆனா எனக்கு சந்தேகமே இல்லை. அவங்க அப்படித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. நான் கேட்டது சத்தியம்!" என்றான் பாலு.

ஒருகணம் மிகத்தீவிரமாக யோசித்த டில்லிபாபு, "நா ஒண்ணு சொன்னா நம்புவியா?'' என்றான்.

"சொல்லு."

" நீ சொன்னேபாரு, ரெண்டுபேரு, அம்மாவாசை அன்னிக்கு வரப்போறாங்க, புதையல் எடுக்கப்போறாங்க அப்பிடின்னு... அதே ரெண்டு ஆளூக, அதே அமாவாசை பேச்சு பேசி நா கேட்டிருக்கேன்!" என்று கண்ணடித்தான்.

"என்னது?" அதிர்ந்துபோனான் பாலு.

"ஆமாடா. அதே பன்றித்தீவுலதான்... ஒருநாள் மீன்பிடிக்கப் போனபோது அங்க இறங்கி சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். உன்னியமாதிரியே நானும் காட்டுக்குள்ளாற சும்மா நடந்து போனேன். அந்தக் கட்டடம்... முன்னாடி எப்பவோ நேவி ஆபீசா இருந்திருக்கு. ஆளுக வந்து போயிக்கிட்டு இருந்திருக்காங்க. அப்புறம் அங்கிருந்து ஆபீசை இடம் மாத்திட்டாங்க. இப்ப நரித்தீவுல இருக்குது ஆபீசு. இங்க கட்டடத்தை சும்மா பூட்டுபோட்டு வெச்சிருக்காங்க. யாரும் வரதில்ல. ஏன்னா, மீனவருங்க இந்தப் பக்கம் போவுறது கம்மி. மீன் வரத்து எந்தப் பக்கம் அதிகமோ, அங்கத்தான் போவாங்க. யாருமே போவாத ஏரியாங்கறதால, இங்க செயல்பாடுங்க நின்னுபோச்சி. தப்பித்தவறி அன்னிக்கு ஒருநாள் நானும் எங்க சேக்காளிகளும் இந்தப் பக்கம் போகவேண்டியதாயிருச்சி. அப்பத்தான் கேட்டேன்.... இதே மேட்டருதான். இன்னாடா இது என்னென்னவோ பேசறானுங்களேன்னு நினைச்சேன். எங்க அப்பாராண்ட கூட சொன்னேன். அதெல்லாம் நீ பேசாத; நமக்கு அதெல்லாம் வாணாம், வேலயப்பாருன்னு சொல்லிட்டாரு..."

"அடப்பாவி! இப்படியாடா விடறது? தீவுல அப்ப ஏதோ மர்மம் கண்டிப்பா இருக்குது!"

"ஆமாடா. அதுல சந்தேகமே இல்ல. நாலஞ்சு பேரு அங்க அடிக்கடி போறாங்க. எங்காளுங்க சிலர் மீன் பிடிக்க போவசொல்ல பாத்திருக்காங்க. பேண்ட் போட்ட ஆளுக எதுக்காக அந்தத் தீவுக்குப் போவணும், என்னா பேசறாங்க, என்ன திட்டம் எதும் புரியல. ஆனா ஒண்ணு. புதையலெல்லாம் எதும் அங்க இருக்கும்னு நான் நினைக்கல. இவனுங்க புதையல்னு ரகசிய வார்த்தைதான் சொல்லுறாங்க. வேற எதோதான் மேட்டரு" என்றான் டில்லிபாபு.

ரகசிய வார்த்தை! எனில், புதையல் என்று அவர்கள் குறிப்பிடுவது எதை? பாலுவுக்குப் பதற்றம் அதிகரித்தது.

"எதுவா இருந்தா என்னடா? சட்டவிரோதமாத்தான் அவங்க செயல்படறாங்க. விஷயம் நேவி ஆபீசர்களுக்குத் தெரியும் முன்னாடி நமக்குத் தெரிஞ்சது ஏன்னு கடவுளுக்குத்தான் தெரியும். நாமதான் இதுக்கு ஏதாவது செய்யணும். கண்டும் காணாமலும் விடறது தப்பு. ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சப்புறமும் சும்மா இருந்தா அதுதான் பெரிய தப்பு!" என்றான் பாலு.

"நானும் இப்பிடித்தாண்டா நினைச்சேன். ஆனா சின்னப்பையன் நான். நான் என்ன பண்ணமுடியும்? எங்கப்பாவே சும்மா இருடான்னு சொல்லிட்டாரு..."

" அப்பவே நீ எங்கிட்ட சொல்லியிருக்கலாம்..." என்ற பாலு, சே, அதெப்படி சொல்லுவான்? தானே ஒரு தேவை ஏற்பட்டபோதுதானே இவனிடம் சொல்ல வந்தேன் என்றும் நினைத்துப்பார்த்தான்.

"சரி, இப்ப உன் திட்டம் என்ன?"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:24 pm

பாலு ரகசியக் குரலில் சொன்னான். "நான் தீர்மானமே பண்ணிட்டேன் டில்லி. இதை சும்மா விடக்கூடாது. எப்படியாவது அவங்க யாரு, அவங்க திட்டம் என்னன்னு நாம கண்டுபிடிச்சே ஆகணும். சின்னப்பசங்களால முடியாதுன்னு எதுவும் கிடையாது. நல்ல காரியங்களை செய்ய சின்னப்பசங்க, பெரிய ஆளுங்கன்னு பிரிச்சிப்பாக்கறது அவசியம் இல்லை. நம்மால எல்லாமே முடியும். தைரியம் தான் வேணும்" என்று சொல்லி நிறுத்தினான்.

உத்வேகம் கொண்ட டில்லிபாபு "சொல்லுடா. என்ன செய்யலாம். நானும் உனக்குத் துணைக்கு இருக்கேன். என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்?" என்றான் ஆர்வமுடன்.

உற்சாகமடைந்த பாலு தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான்.

"எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு. உனக்கு படகு ஓட்டத்தெரியுமா?"

"ம்ஹும். போனதில்லை. ஆனா கட்டுமரம் தள்ளத்தெரியும்." என்றான் டில்லி.

"ஒரு அவசரம்னா உன்னால என்னையும் இன்னொருத்தனையும் வெச்சி கட்டுமரத்துல பன்றித்தீவுக்கு கூட்டிக்கிட்டுப் போகமுடியுமா?"

"முடியுமே! அந்த ரூட்டுல ஆழம் கம்மிடா. பயம் வேணாம்" என்றான் டில்லிபாபு.

"எனக்கு நீச்சல் தெரியாது. பரவாயில்லியா?"

"பரவாயில்ல. நான் பாத்துக்குவேன்"

"அப்ப தயாரா இரு. வர அமாவாசை அன்னிக்கு சாயங்காலம் நீ, நான், இன்னொருத்தன் மூணுபேரும் பன்றித்தீவுக்குப் போறோம்!" என்றான் பாலு.

"யாருடா அந்த இன்னொருத்தன்?" என்று ஆர்வத்தை அடக்கமாட்டாமல் கேட்டான் டில்லிபாபு.

"பொறுமை! பொறுமை! அமாவாசை அன்னிக்குத் தெரியும்!" என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, "நான் வரேண்டா" என்று கிளம்பி ஓடிப்போனான் பாலு.

அந்த அமாவாசைக்கு முதல் நாள் மாலை பாலு மீண்டும் டில்லிபாபுவைப் போய்ச் சந்தித்தான். இரண்டுபேரும் கடற்கரை மணலில் அமர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனத்துக்குள் கொஞ்சம் பயமும் மேலான சாகச உணர்வும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது இருவருக்குமே.

"சமூகவிரோதிகளை அடையாளம் கண்டு பிடிச்சிக்குடுக்கறது நல்லகாரியம் தாண்டா பாலு. ஆனா நாமளோ சின்னப்பசங்க. எசகுபிசகா மாட்டிக்கிட்டா என்ன செய்யறது?" என்றான் டில்லிபாபு.

"பயப்படாத டில்லி! கண்டிப்பா மாட்டிக்க மாட்டோம். நம்ம ப்ளான் என்ன? ரகசியமா நாளைக்கு ராத்திரி பன்றித்தீவுக்குப் போறோம். யார் கண்ணுலயும் படாம ஒளிஞ்சு இருந்து அவங்க என்ன பண்றாங்கன்னு பாக்கப்போறோம். அவங்களோட சதி என்ன, அந்தப் புதையல் என்னது, அதை எப்படித் தேடி எடுக்கறாங்கன்ற விஷயங்களை கவனமா பார்த்துவெச்சிக்கறோம். முடிஞ்சா கையும் களவுமா அவங்களை மடக்கப் பாக்கறது. அது எப்படி முடியும்னு தெரியலை. ஒரு வேளை முடியலைன்னா, மறுநாள் காலை கடற்படை அதிகாரிகள் கிட்ட விஷயத்தைச் சொல்லிடறது..நாம பார்த்ததுக்கு சாட்சியா போட்டோவேற எடுக்கப்போறோமே!"

"போட்டோவா? நீ என்ன சொல்றே? அது எப்படி முடியும்? ௬ப்ளாஷ் அடிச்சா தெரிஞ்சுடுமே:" என்று கவலைப்பட்டான் டில்லிபாபு.

"ஆமா. கொஞ்சம் ரிஸ்குதான். ஆனாலும் செஞ்சுதான் ஆகணும். இதுபத்தித்தான் இன்னிக்குக் காலைல குடுமிநாதன்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்" என்ற பாலு, சட்டென்று பல்லைக் கடித்துக்கொண்டான்.

"ஓ, அவந்தான் அந்த மூணாவது ஆளா!" என்று அட்டகாசமாகச் சிரித்தான் டில்லிபாபு.

"சே. நாளைக்கு வரைக்கும் உனக்கு சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு நினைச்சேன். நான் ஒரு தவளை!" என்று செல்லமாகத் தன் தலையில் தானே குட்டிக்கொண்டான் பாலு.

"சொன்னதும் ஒரு வகைல நல்லதுதாண்டா. அவனையும் அழைச்சிக்கிட்டு வா. மூணுபேருமே சேர்ந்து பேசி முடிவு பண்ணுவோம்" என்றான் டில்லி.

இருட்டத்தொடங்கிய நேரம் பாலு, குடுமிநாதன் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி அவனையும் கடற்கரைக்கு அழைத்து வந்தான். டில்லியும் அவனும் சில நிமிடங்கள் பழைய கதைகள் பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தார்கள்.

"கேட்டுக்கங்கடா. இதான் ப்ளான். நாளைக்கு நைட் நீங்க ரெண்டுபேரும் வீட்டுல ஏதாவது சொல்லிட்டுக் கிளம்பி வரீங்க. கரெக்டா இந்த மாதாகோயில் பின்புற சுவர்கிட்ட வந்து நிக்கணும். ஒன்பது மணிக்கு நான் வந்துடுவேன். ஒன்பதரைக்கு இங்க வெளிச்சம் சுத்தமா போயிடும். மாதா கோயில் வாசல்ல இருக்கற ஒரே ஒரு பல்பு மட்டும்தான் அப்ப எரியும். யார் கண்ணுலயும் படாம நாம கட்டுமரம் ஏறிடணும். கட்டுமரத்தைக் கடலுக்குள்ள தள்ள எனக்கு குடுமி உதவி பண்ணணும். பாலு, உன்னால முடியாதுன்னு எனக்குத் தெரியும்! நீ உன் உடம்பை பத்திரமா எடுத்துக்கிட்டு வந்து கட்டுமரத்துல ஏத்தினாலே பெரிய விஷயம்!" என்று சொல்லிவிட்டு டில்லி சிரித்தான்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக