புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
60 Posts - 48%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
17 Posts - 2%
prajai
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
4 Posts - 1%
jairam
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்துமதம்


   
   

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 11:36 am

First topic message reminder :

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I


1. உறவு


அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Kanari10

‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.

கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளை கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.

முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு இரவுக்கு மட்டுமே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 06, 2018 1:20 am

அர்த்தமுள்ள இந்துமதம் - கனவுகள்-கவியரசு கண்ணதாசன்

ஆண்டாள் கனவு காண்கிறாள்; அற்புதமான கனவு; இனிமையான கனவு. கலியாணமாகாத ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் காணுகின்ற கனவு. நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கனவு காண்பதிலே தான் எவ்வளவு சுகம்!

இந்தக் கனவுகளிலே பலவகை உண்டு. அரைகுறைத் தூக்கத்தில் வரும் கனவு, நினைவின் எதிரொலி.

பகல் தூக்கந்தான் பெரும்பாலும் அரைகுறை தூக்கமாக இருக்கிறது. ஆகவேதான், `பகல் கனவு பலிக்காது’ என்கிறார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு பெரும்பாலும் பலிக்கிறது. ஆழ்ந்த தூக்கம் என்பது அதிகாலையில் தான் வருகிறது. ஆகவே, `காலைக் கனவு கட்டாயம் பலிக்கும்’ என்கிறார்கள். ஆண்டாள் காண்பதோ காலைக் கனவுமல்ல; பகல் கனவுமல்ல. அது ஆசையின் உச்சம்; பக்திப் பெருக்கு; பரவசத் துடிப்பு. கண்ணனை மணவாளனாகக் காண்கிறாள் கோதை.    `உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று தன்னை அவன் கையில் தருகிறாள் நாச்சியார். கண்ணாடி முன் நிற்கிறாள். பூச்சூடி, குழல் முடித்து, பொட்டிட்டு நின்று, தன் திருமுகத்தைத் தானே பார்க்கிறாள். ஆண்டாளின் ஸ்தூலத்திற்குக் கண்ணாடியில் தெரியும் அவளது உருவமே தோழியாகிறது. “அடி தோழி!

நான் கனவு கண்டேன். வாரண மாயிரம் சூழ வலம்வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்.”

- “எல்லே இளங்கிளியே! என் கனவைக் கேட்டாயா?

ஆயிரம் யானைகள் சூழ நாரண நம்பி வந்தான்;

அவன் வரும்போது பூரண கும்பங்கள் எழுந்தன;

தோரணங்கள் நாட்டப்பட்டன. கதிரொளி தீபம் கலசமுட னேந்தி சதிரிள மங்கையைர் தாம்வந் தெதிர்கொள்ள மதுரையார் மன்னர் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான். – ஆம்!

ஒளி மிகுந்த தீபங்களைக் கையிலேந்திக் கொண்டு சதிராடும் இளமங்கையர் வந்தார்கள். அவனை எதிர்க்கொண்டார்கள். அந்த மதுரையார் மன்னர், மாயக் கண்ணன், எனது பாதத்திலிருந்து உச்சிவரை உடம்பே அதிர்ந்து போகுமாறு புகுந்ததாகக் கனவு கண்டேன். அந்த மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனவு கண்டேன். அடி தோழி! என் கனவு நனவாகும்.”

- ஆம், ஆண்டாளின் கனவு, அவளது ஆசையின் விரிவு! ஏக்கத்தின் இலக்கியம்!

இத்தகைய கனவுகளைப் பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது. கனவுகள் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால், அவை பலிக்கும் என்கிறது. சிலப்பதிகாரத்தில் `கனாத்திறம் உரைத்த காதை’ வருகிறது. `முத்தொள்ளாயிர’ நாயகிகளும் கனவு காண்கிறார்கள். திருக்குறளிலும் கனவுக் குறிக்கப் பெறுகிறது. கனவு என்பதை இறைவன் விடும் முன்னறிவிப்பு என்றே நான் கருதுகிறேன்.



அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 06, 2018 1:22 am

இந்துக்களுக்கு கனவு நம்பிக்கை அதிகம். எனக்கு மிக அதிகம். காரணம், நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் பலித்திருக்கின்றன. 1948-ஆம் ஆண்டு நான் சேலத்தில் வேலை பார்த்தபோது அரிசிப்பாளையத்தில் தங்கியிருந்தேன்.

என்னோடு பூந்தோட்டம் திருநாவுக்கரசு என்ற நண்பரும், சாந்தி மா. கணபதி என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அவர்களில் பூந்தோட்டம் திருநாவுக்கரசு இப்பொழுது சிங்கப்பூரில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். சாந்தி மா. கணபதி என்ற நண்பர், 1960-ல் காலமானார். ஒருநாள் காலையில், காந்தியடிகளைச் சுட்டுக் கொன்று விட்டதாக எனக்கொரு கனவு வந்தது. காலையில் எல்லாரிடத்திலும் அதைச் சொன்னேன். “சீ சனியனே! உன் கருநாக்கை வைத்துக்கொண்டு சும்மாயிரு. எதையாவது உளறித் தொலைக்காதே” என்று எல்லாரும் என்னைக் கோபித்துக் கொண்டார்கள். அன்று மாலை வானொலி கண்ணீரோடு ஒரு செய்தியைச் சொன்னது, “காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று. எனது நண்பர்கள் திகைத்துப் போனார்கள்; என்னை எச்சரித்தார்கள். “இதோ பார்! நீ கனவு கண்டதாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டாகள். இதிலே உனக்கும் சம்பந்தமிருப்பதாகச் சொல்லிவிடுவார்கள். ஆகவே, வாயை மூடிக் கொண்டு சும்மாயிரு” என்றார்கள். எனக்கு, அந்தப் பயம் தெளியவே வெகு நாளாயிற்று. சில கனவுகள் ஆணியடித்தாற்போல் எதிர்மறை பலன்களைக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, என் கனவில் மலம் வந்தால் மறுநாள் எங்கிருந்தாவது பணம் வருகிறது. நூற்றுக்கணக்கான முறை அந்தக் கனவைக் கண்டு மறுநாளே பலனடைந்திருக்கிறேன். பல் விழுவதாகக் கனவு கண்டால், மறுநாளே என்மீது கோர்ட்டில் புது வழக்கு வருகிறது. இருபது வருடங்களாக அடிக்கடி நான் படிப்பது போலக் கனவு காண்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் அந்தக் கனவு வந்த பிறகு என் புகழ் உயர்ந்து வந்திருக்கிறது. பல தடவை ரயிலுக்குப் போகும்போது ரயிலைத் தவற விடுவதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவதொரு நல்ல சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். உயரமான இடத்தில் ஏறி இறங்க முடியாமல் தத்தளிப்பதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் வாழ்க்கையில் ஏதாவது சிக்கல் வந்து தீர்க்க முடியாமல் கலங்கியிருக்கிறேன்.

ஏறிய உயரத்திலிருந்து மளமளவென்று இறங்கி வருவது போலக் கனவு கண்டால், வந்த சிக்கல் தீர்ந்து விடுகிறது. கனவில் வெள்ளம் வந்தால், காலையில் பணம் வருகிறது. அந்த வெள்ளம் வடிந்து போவது போல் கனவு கண்டால், பணம் செலவழிந்து போகிறது. 1967- ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் தோற்றுப் போவதையே கனவில் கண்டேன். ஒரு கோட்டை!

நானும் மற்ற காங்கிரஸ் நண்பர்களும் அங்கே நிற்கிறோம். மூவேந்தர் காலத்து ஆடை அணிந்து, தி.மு. கழக நண்பர்களெல்லாம் படைகள் போல வந்து, அந்தக் கோட்டையைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.அந்தக் கனவைப் பற்றி அப்பொழுதே எனது நண்பர்கள் பலரிடமும் கூறினேன்; அது பலித்து விட்டது. 1971- ஆம் ஆண்டுத் தேர்தலில் யானை என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்து, எனக்கு மாலை போடுவது போலக் கனவு கண்டேன். அந்தத் தேர்தலில் நான் சார்ந்திருந்த இந்திரா காங்கிரசுக்குப் பலத்த மெஜாரிட்டி கிடைத்தது. இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மலை மீது நான் சுற்றி வருவதாகவும், அந்த மலையில் எங்கும் நாமம் போட்டிருக்கவும் கனவு கண்டேன். திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தேன். பல தொல்லைகள் மளமளவென்று தீர்ந்தன. அதன் பிறகுதான், “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா” என்ற பாட்டை எழுதினேன். என் கனவில் கண்ணன் அடிக்கடி வருகிறான்; ஆனால் என்னோடு பேசுவதில்லை. ஒருவேளை இது என் நினைவின் எதிரொலியாக இருக்கலாம். தி.மு.க. விலிருந்து நான் பிரிந்த பிறகு, நானும் சம்பத்தும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் பெங்களூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றோம். மத்தியானம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, நான் கூட்டத்திற்குச் செல்வதாகவும், அங்கே கல்லெறி நடப்பதாகவும், என் கார்க் கண்ணாடி உடைந்ததாகவும் கனவு கண்டேன். அது பகல் கனவுதான், என்றாலும் ஆழ்ந்த தூக்கத்தில் வந்த கனவு. என்ன ஆச்சரியம்! நான் கண்ட கனவு அன்று மாலையே அப்படியே நடந்தது. காரில் எந்தக் கண்ணாடி உடைந்ததாகக் கனவு கண்டேனோ அதே கண்ணாடி உடைந்தது. கனவில் வந்த முகங்களே என் கண் முன்னாலும் காட்சியளித்தன. வாய் நிறைய ரோமம் இருப்பதாகவும், அது இழுக்க இழுக்க வந்து கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.

அப்பொழுதெல்லாம் தொல்லை மாற்றித் தொல்லை வரும்.

சிவனடியார்களின் கனவில் ஆண்டவன் வந்து, `இந்த இடத்துக்கு வா’ வென்று சொன்னதாகவும் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று அமைதி கொண்டதாகவும் செய்திகள் படிக்கிறோம். அவை பொய்யல்ல என்றே நான் நினைக்கிறேன். `நிர்மலமான தூக்கத்தில் களங்கமற்ற உள்ளத்தில் தோன்றும் கனவுகள் பலிக்கின்றன’ என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தக் கனவுகளை நாம் வரவழைக்க முடியாது. அவை ஆண்டவன் போட்டுக் காட்டும் படங்கள்.




அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:31 am

அர்த்தமுள்ள இந்துமதம் - ஏன் இந்த நம்பிக்கை

“தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும், அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆம், பலவீனத்திலும் பயத்திலுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்றமளிக்கிறது. இந்து சமயமன்றிப் பிற சமயங்களும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் கேட்டதாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாணவியைப் பார்த்துக் கேட்கிறார்:

“கடவுள் எங்கே இருக்கிறார்?”

மாணவி சொல்லுகிறாள்:

“தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்.”

“இல்லை; அது பழங்கதை. வாழ்க்கை நன்றாக இருக்கும் போது கடவுள் இல்லை; வறுமை வரும்போது அவர் உடனே வருகிறார். வெற்றி பெற்றவனுக்குக் கடவுள் இல்லை; தோல்வியுற்றவன் நெஞ்சில் உடனே தோற்றமளிக்கிறார்” என்றார் ஆசிரியர். ஆம்; பாவம் செய்யும்போது கடவுள் இல்லை. அதற்குரிய தண்டனையை அனுபவிக்கும் போது கடவுள் இருக்கிறார். ஒலியிலே தோன்றாத கடவுள், எதிரொலியில் தோன்றுகிறார். சிலையிலே காணமுடியாத தெய்வம், சிந்தையிலே சாட்சிக்கு வருகிறது.

`கடவுள் நம்பிக்கை என்பது ஏதாவதொரு வடிவத்தில் எல்லோருக்கும் இருந்தே தீருகிறது’ என்பது இந்துக்கள் முடிவு. `உயர்ந்தனவோ தாழ்ந்தனவோ அனைத்திலுமே நான் இருக்கிறேன்’ என்றே கண்ணன் சொல்கிறான்.

அர்ஜுனனிடம் கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜுனா, தேவர் கூட்டங்களும், முனிவர்

களும் என் உற்பத்தியை உணரமாட்டார்கள்; ஏனென்றால், அவர்களுக்கு முற்றிலும் முதற்காரணம் நானே. ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகிற்குக் தலைவன் என்றும், என்னை அறிகிறவன் மனிதர்களுள் மயக்கமில்லாதவன். புத்தி, ஞானம், தெளிவு, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்சை, மனத்தின் நடுநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி அனைத்துமே என்னிடத்திலிருந்தே உண்டாகின்றன. வேதங்களுள் நான் சாம வேதம்; தேவர்களுள் இந்திரன்; இந்திரியங்களுள் நான் மனது; உயிர்களில் நான் உணர்வு. புரோகிதர்களுள் நான் பிரகஸ்பதி; சேனாதிபதிகளில் நானே தேவசேனாதிபதியாகிய முருகன்; நீர் நிலைகளில் நான் கடல். ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் காமதேனு; தம்பதிகள் நடுவே நான் மன்மதன்; பாம்புகளில் நான் வாசுகி. நாகங்களில் நான் அனந்தன்; மழைத் தேவதைகளில் வருணன்; அடக்கியாள்வோர்களில் நான் எமன். விலங்குகளில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன். தூய்மை தருவனவற்றுள் நான் காற்று; ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ராமன்; மீன்களிலே நானே மகர மீன்; நதிகளில் நானே கங்கை. அர்ஜுனா! சிருஷ்டிப் பொருளுக்கு முதல், இடை, கடையாகிய மூன்றும் நானே. வித்தைகளில் நானே ஆத்ம வித்தை. வாதம் செய்பவர்களிடம் நானே வாதம். பெண்மையில் நானே புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறுமை. காலங்களில் நானே வசந்தம்; மாதங்களில் நானே மார்கழி; தருக்களில் நானே தேவதாரு. வாசகர்களின் சூதாட்டம் நானே; அழகும், மனத் தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்தவர்களிடத்தில் அனைத்தும் நானே!

தண்டிப்பவர்களிடத்தில் நானே செங்கோல் ஆகிறேன்; வெற்றி வேண்டுவோரிடத்தில் நானே நீதி. ரகசியங்களில் நானே மவுனம்; ஞானிகளுடைய ஞானமும் நானே. அர்ஜுனா அனைத்துக்கும் வித்து எதுவோ அது நானே”.

- இது கண்ணனின் திருவாய் மொழி. எல்லாம் நானே என்று சொல்ல வந்த பரந்தாமன், எவை எவை உயர்ந்தவையோ, எவை எவை பிரச்சினைக்குரியவையோ, அவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த அகிலத்தில் தான் யார் என்பதை விளங்க வைக்கிறான். ஸ்தூலமாகக் காட்சி தரும் அழகிய கண்ணன் நிலை, இவை அனைத்தையுமே உள்ளடக்கியது. தெளிவு, மயக்கம் இரண்டிலுமே திரண்டு நிற்கும் அந்த இறைவனைக் கர்மத்தைவிட ஞானமே அதிகமாக அறிகிறது. கர்மத்தின் விளைவாக வரும் ஞானம், அதைவிட விரைவாகப் புரிந்து கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியும் உலகத்தைவிட கண்ணுக்குத் தெரியாத சூட்சம உலகம் பல மடங்கு பெரிதாக இருக்கிறது. அவை அனைத்தையும் இயக்கும் மூலப் பொருளை அனுபவம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறது. கடவுள் நம்பிக்கையல்ல. விஞ்ஞானிகூட விளக்கம் சொல்ல முடியாத ரகசியம் இறைவனின் சிருஷ்டியில் இருக்கிறது. உலகத்தில் இருநூறு கோடி மனிதர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இருநூறு கோடியிலும் ஒருவரே போல் காட்சியளிக்கும் இன்னொருவர் இல்லை. ஒருவருக்கொருவர் பத்துக்கு ஒன்பது ஒற்றுமை இருந்தால், ஒன்றாவது மாறுபட்டு நிற்கும். நூற்றுக்கு நூறு உடலமைப்பும், குரலமைப்பும் உள்ள இருவரை நீங்கள் காண முடியாது. இரட்டைப் பிள்ளைகளாகப் பிறப்பவரிடையே கூட ஏதாவதொரு வித்தியாசத்தைக் காணமுடியும். குணங்களிலும் ஒருவருக்கொருவர் கொஞ்சமாவது மாறுதல் இருந்தே தீரும்.




அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:31 am

என் தந்தை குடிக்க மாட்டார்; வேறு பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்; ஆனால் சீட்டாடுவார்.

நானோ, சீட்டு மட்டும் ஆடமாட்டேன். ஆகவே, இருநூறு கோடிக்கும் தனித்தனி `டிசைன்’ செய்தவன் இறைவன். இது மனிதனால் ஆகக்கூடியதா?

மனித முயற்சியால் நடக்கக் கூடியதா?

உலகமெங்கும் நீதித் துறையினர் குற்றவாளிகளின் கைரேகை

களைப் பதிவு செய்கிறார்களே, ஏன்?

ஒருவனின் கைரேகை போல் இன்னொருவனின் ரேகை இருக்காது என்பது ஒரு நம்பிக்கையாகும். விஞ்ஞானமும் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. இருநூறு கோடி கைகளுக்கும் தனித்தனி `டிசைன்’ போட்டிருக்கிறான் இறைவன். படிப்பறிவில்லாதவர்களைக் கைரேகை வைக்கச் சொல்வதற்குக் காரணம் இதுதான். குறுக்கெழுத்துப் போட்டியில், ஒரு எழுத்தை மாற்றினால் ஓரு கூப்பன் அதிகமாவது போல், ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொரு ரேகையை மாற்றுகிறான் இறைவன். வியக்கத்தக்க அவனது சிருஷ்டியிலேயே அவனைக் கண்டுகொள்ள முடிகிறது.

அப்படியும் கண்டு கொள்ளாதவர்கள், தங்கள் பலவீனத்தால் ஏற்பட்ட துன்ப அனுபவங்களிலே கண்டு கொள்ளுகிறார்கள்.

விஞ்ஞான ரீதியாக இன்று சொல்லப்படும் உண்மைகளை இந்து மதம் எப்போதோ சொல்லி விட்டது. இந்து மதத்தின் தனிச்சிறப்பு அதுதான். சிலை வழிபாட்டு நிலையையும் அது ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கு அப்பாற்பட்டு மனத்துள்ளே கடவுளைக் காணும் நிலையையும் `மேல்நிலை’ என்று கூறுகிறது. சிலையை வெறும் கல் என்று சொல்லும் நாஸ்திகனுக்கும், மனம் என்னும் ஒன்று இருக்கிறது. அது மரணப்படுக்கையிலாவது கடவுளைப் பற்றிப் பேச வைக்கிறது. பிறப்புக்குத் தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே. இவ்வளவு எலும்புகளும், நரம்புகளும் ரேகைகளும் எங்கிருந்து வந்தன?

மண்டையோட்டை அறுத்துப் பார்த்தால் உள்ளே ரோமம் இல்லை. இந்த ரோமம் வளர்வது எப்படி?

நாம் வளர்வது எப்படி?

குழந்தைப் பருவத்தில் விழுந்த பல் முளைப்பது எப்படி?

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் உள்ளே இருக்கும் காற்று உலாவிக்கொண்டே இருப்பது எப்படி?

இவை அறிவு போடும் கேள்விகள். ஆனால் அனுபவம் காட்டும் உண்மைகள், இவற்றை விட அதிகமாகக் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. இறைவனின் அஸ்திவாரம் என்ன என்பதனை முதலிலேயே கண்டுகொண்டவர்கள் இந்துக்கள்தான். இரக்கம், அன்பு, கருணையைக் காட்டிய பௌத்தமதம் கடவுள் ஒன்றைக் காட்டவில்லை. ஆனால், கடவுள் என்று ஒன்றைக் காட்டிய இந்து மதம் இரக்கம், அன்பு, கருணையை விட்டுவிடவில்லை. பௌத்த மதத்தை இந்து மதம் ஜீரணித்து விட்டதற்குக் காரணம் இதுதான். வாழ்க்கையைக் `கர்ம காண்டம்’, `ஞான காண்டம்’ என்று பிரித்தது இந்து மதம் தான்.

கர்ம காண்டத்தின் தொழில்கள் காரணமாக ஜாதி உண்டு. ஞான காண்டத்தில் ஜாதி இல்லை; யாவரும் சந்நியாசி ஆகலாம். லௌகீக வாழ்க்கையையும், தெய்வ நம்பிக்கையையும் ஒன்றாக இணைத்தது இந்து மதம். உணவு, மருத்துவம், தொழில் அனைத்திலும் பாவ புண்ணியங்களைக் காட்டுவது இந்து மதம். உடல் இன்பத்தைக் ஒப்புக்கொண்டது இந்து மதம். அதற்கு மேற்பட்ட துறவு நிலையிலும் ஆதிக்கம் செலுத்துவது இந்து மதம். இன்பங்களுக்குச் சடங்குகள் செய்வது இந்து மதம். துன்பங்களுக்கு ஆறுதல் சொல்வது இந்து மதம். ஆகவேதான், எந்த நிலையிலும் ஒரு இந்துவுக்குக் கடவுள் நம்பிக்கை எழுந்துக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைகளுக்குத் தப்ப முடியாது. `ஆஸ்தி’ என்றால் சொத்து. `நாஸ்தி’ என்றால் பூஜ்ஜியம். `நாஸ்திகன்’ ஒன்றுமில்லாத சூனியம். இந்துவின் கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக்கிறான். ஆகவே, நாஸ்திகனும், இந்துவே; ஆஸ்திகனும் இந்துவே. இரண்டு பேரும் கடவுளைப் பற்றியே பேசுகிறார்கள்.



அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:32 am

அர்த்தமுள்ள இந்துமதம் - இந்து மங்கையர்

இந்துக்களின் குடும்ப வாழ்க்கை பலவித சம்பிரதாயங்களைக் கொண்டது.

அந்தச் சம்பிரதாயங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எப்படி இருந்தன என்பதை, சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் சொற்பொழிவுகளால் அறிய முடிகிறது.

சுவாமி கூறுகிறார்:

“இந்தியாவில் லட்சியப் பெண்மணி, தாய். அன்னையே முன்னறி தெய்வம். இறுதியாக, அறியப்படுவதும் அன்னையே. `பெண்’ என்ற சொல் இந்தியனுக்கு எண்ணத்தில் தாய்மையையே நினைவுபடுத்துகிறது. ஆண்டவனையே அவர்கள் `அன்னை’ என்றுதான் வணங்குகிறார்கள். குழந்தைப் பருவத்திலே, நாங்கள் ஒவ்வொரு நாளும் விடியற்காலத்தில் சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று அன்னையின் முன் வைப்போம். அவள் அதிலே தன் காற் பெருவிரலைத் தோய்ப்பாள். அந்நீரை நாங்கள் பருகுவோம். மேலை நாட்டிலே பெண் என்றால் மனைவி. பெண்மை என்னும் லட்சியம், இங்கே மனைவியாகக் குவிந்திருக்கிறது. இந்தியாவில் பாமரன் கருத்துப்படி பெண்மணியின் முழுச் சக்தியும் தாய்மையில் ஒருமுகப்பட்டுள்ளது. மேல் நாட்டிலே மனைவி, வீட்டை ஆள்கிறாள். இந்தியக் குடும்பத்திலே வீட்டை ஆள்பவள் தாய். மேலை நாட்டுக் குடும்பத்தில் ஒரு தாய் ழைந்தால் அவர் மனைவிக்கு அடங்கியே இருக்க வேண்டும். ஆனால், எங்கள் நாட்டிலே மனைவிதான் தாய்க்கு அடங்க வேண்டும்.

மனைவி என்ற இடத்தில் இந்தியப் பெண்மணி வகிக்கும் நிலை என்ன? இன்னும் என்னை ஈன்றெடுத்துப் புகழுக்கெல்லாம் பாத்திரமாகிய அன்னையின் நிலை என்ன? ஒன்பது மாதம் என்னைக் கருவிலே காத்த அவள் நிலை யாது? தேவைப்பட்டால் இருபது தடவையானாலும் எனக்காகத் தன் உயிரைத் தரக்கூடிய அவள் எங்கே? நான் எவ்வளவு தீயவனானாலும் தன் அன்பு என்றும் மறவாத தாயின் நிலை எது? ஒரு சிறிது யான் அவளைத் தவறாக நடத்தியதும் உடனே மணமுறிவு வேண்டி நீதிமன்றம் செல்லும் மனைவியோடு ஒப்பிடுங்கால் அந்தத் தாய் எங்கே? ஓ! அமெரிக்க மங்கையரே! அவள் எங்கே?

எங்கள் தாய்! அவளுக்கு முன்னால் நாங்கள் இறப்பதாயினும் அவள் மடியிலே தலைவைத்தே இறக்க ஆசைப்படுகிறோம். `பெண்ணென்பது உடலோடு உறவு ஏற்படுத்தக்கூடிய பேர்தானா! இந்துக்கள் அந்தப் பெயரை நிரந்தரமாகப் புனிதமாக்கி விட்டார்கள். `காமம்’ என்பதே என்றும் அணுகாத, தீய நினைவுகளே என்றும் நெருங்காத ஒரு பெயர், தாய் எனும் ஒன்றைத் தவிர வேறு எது?

எங்கள் நாட்டிலே ஒவ்வொரு பெண்ணையும், `தாயே’ என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். சிறுமியைக் கூட `அம்மா’ என்றுதான் அழைக்கிறோம்.

இங்கே அமெரிக்கப் பெண்களை நான் `தாயே’ என்று அழைத்தபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். எனக்குக் காரணம் புரிந்தது. தாய் என்றால் வயது முதிர்ந்தவர்கள் என்று இங்குள்ளவர்கள் எண்ணுகிறார்கள். எங்கள் நாட்டில் பெண்கள் அனைத்துமே தாய்மை.

தாய்தான் முதலில்; பின்புதான் மனைவி; நான் மணம் புரிந்துகொண்டிருந்தேனாயின், என் மனைவி, என் அன்னையை வருத்தப்படுத்தத் துணிந்தால் நான் அவளை வெறுப்பேன். ஏன், நான் என் தாயை வணங்கவில்லையா? அவளுடைய மருமகள் ஏன் அவளை வழிபடலாகாது? நான் வழிபடும் ஒருவரை அவள் வழிபட்டால் என்ன? என் தலைமேலே ஏறிக்கொண்டு என் தாயை அதிகாரம் செய்ய அவள் யார்? தாய்மையிலிருந்தே பெரும் பொறுப்பு ஏற்படுகிறது. அதுதான் அடிப்படை! அங்கிருந்து முன்னேறுங்கள்”.

ஆம், இந்துவின் குடும்பம் என்பது தாய்மையையே தலையாகக் கொண்டது.

அங்கிருந்துதான் ஒவ்வொரு கிளையும் தொடங்குகிறது.

தாயை மகன் நேசிப்பதுபோல், மருமகளும் நேசித்தாக வேண்டும்.

தன் தாயை நேசிக்காத மனைவியை, கணவன் தான் நேசிக்கக் கூடாது.

தாய் வேர்.

மகன் மரம்.

அந்த மரக்கிளையில் வந்தமரும் பறவையே மனைவி.

தன்மீது விளையாட அந்தப் பறவைக்கு மரம் இடம் கொடுத்ததால் மரத்தின் வேரை அது கொத்தித் தின்ன முடியாது.

இந்துக் குடும்பத்தில் மருமகள் என்பவளின் அந்தஸ்து வீட்டுக்கு ராணி என்னும் அந்தஸ்தல்ல; தாய் என்னும் ராணியின் தோழி என்னும் அந்தஸ்தே.

கணவன் தன்னிடம் பெறும் சுக அனுபவங்களுக்காகவும், சந்தோஷங்களுக்காகவும், அவனது தாயை அவள் விலையாகக் கேட்க முடியாது.

எவள் இல்லையென்றால் இந்தப் பூமியில் அவன் ஜனித்திருக்க முடியாதோ, அவளேதான் எல்லோரையும்விட உயர்ந்தவள்.

அந்தத் தாயின் அந்தஸ்தை ஒப்புக்கொண்ட மருமகள்தான், தனக்கு வரப் போகும் மருமகளிடம் அந்த அந்தஸ்தை எதிர்பார்க்க முடியும்.

மருமகளும் ஒரு நாள் மாமியார் ஆகத்தான் போகிறாள்.

ஆகவே, குடும்பக் கோவிலின் கோபுரம் அன்னையே.

இந்துக்கள் பொருளாதாரத் திலும் அதே நிலையை வைத்திருந்தார்கள்.

மகன், தான் தனியாகச் சம்பாதிக்கிற பணத்தைத் தாய் தந்தைக்குத் தெரியாமல் மனைவியிடம் கொடுக்க முடியாது.

மகனையும், மருமகளையும் அதே அளவிலே கட்டுப்படுத்துவதற்குத்தான், `பாட்டனின் சொத்து பேரனுக்கு’ என்ற சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார்கள்.

தன் தகப்பன் சொத்தை மகன் விற்றுவிட்டால், பேரன் கோர்ட்டுக்குப் போனால், அந்த விற்பனை செல்லுபடியாகாது.

இந்துக்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் இதிலே அடங்கியிருக்கிறது.

`தாயின் தனி உடைமைகள் பெண் மகளுக்கே’ என்பது இந்துக்களின் சம்பிரதாயம். மகனது குடும்பத்துக்குப் பாதுகாப்புக்காக, `தகப்பன் சொத்துப் பேரனுக்கு’ என்றும், பெண் மக்களுக்குப் பாதுகாப்பாகத் `தாயின் சொத்து பெண் மக்களுக்கு’ என்றும் வகுத்தார்கள்.




அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:32 am

அதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய் வழியில் சொத்து வருகிறது.

அவளது பிள்ளைக்குப் பாட்டன் வழியில் சொத்து வருகிறது.

மகன் சம்பாதிப்பது அவனது பேரனுக்குப் போகிறது.

ஆகவே, ஒவ்வொரு தலைமுறைக்கும் சொத்துப் பாதுகாப்பு இருக்கிறது.

இதிலே இன்னும் ஒரு கௌரவத்தை இந்து மகன் தாய்க்கு அளித்தான்.

அதாவது, தாயின் முன்னிலையில் மனைவியோடு பேசுவதில்லை.

இன்று காலம் மாறிவிட்டது.

சம்பிரதாயங்கள் மீறப்படுகின்றன.

தாயின் முன்னிலையில் மனைவியின்மீது கைபோடுவதுகூட வேடிக்கையாகி விட்டது.

போன தலைமுறை வரை நமது இந்து சமுதாயம் கண்டிப்பான சம்பிரதாயங்களை அனுஷ்டித்தது.

தாய் தகப்பன் விழித்துக் கொண்டிருக்கும் போது கணவனும் மனைவியும் தனியறைக்குள் செல்ல மாட்டார்கள்.

கணவன் பெயர் `சங்கரன்’ என்றிருந்தால் இதே சங்கரன் என்ற பெயரில் அவனுக்கொரு தம்பியோ வேலைக்காரனோ இருக்கலாம்.

அவனை, `டேய் சங்கரா?’ என்று அழைக்க நேரிடலாம்.

அது கணவனை அவமானப்படுத்துவதாக அமையலாம்.

ஆகவேதான், கணவன் பெயரைச் சொல்லக் கூடாது என்று வைத்தார்கள்.

பெண்ணுக்கு அடக்கம் போதிக்கப்பட்டது.

சத்தம் போட்டுச் சிரிப்பது இழிவான பெண்களின் குணம் என்று கருதப்பட்டது.

அதனால், `நகுதல் – நகைத்தல’ என்று மெல்லச் சிரிப்பதை, அது பெண்ணுக்கு வலியுறுத்தியது.

அந்தச் சிரிப்பையும் அவள், பிற ஆடவர் முன்னிலையில் சிரிக்கக் கூடாது.

காரணம், எவனாவது ஒரு ஆடவன் அந்தச் சிரிப்பைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.

“பொம்பிளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது பழமொழி.

நேருக்கு நேராக அவள் யாரையும் பார்க்கக் கூடாது.

இந்தப் பார்வை, சிரிப்பு – இரண்டையும் ஒரு குறளில் சொன்னான் வள்ளுவன்.

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

ஆம், பாராத போது பார்க்கும், மெல்ல நகும். அவ்வளவுதான்.

காதல் உணர்ச்சியில் அவள் உடலில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்படும்.

அவள் உள்ளம் கொதிக்கும். ஆனால், அப்போதும் அவள் ஊமையாகவே இருப்பாள்.

`நாணம்’ என்பது தமிழ்ச் சொல்தான்; என்றாலும், இமயமுதல் குமரிவரையிலே உள்ள இந்துப் பெண்களுக்கு அது பொதுச் சொல் ஆகும்.

இந்துக்கள் இந்த நாணத்தை மனப் பழக்கமாகத் தொடங்கி, உடற் பழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.

இந்துப் பெண்களுக்கு நாணம் சொல்லித் தெரியவேண்டிய கலையல்ல; அது அவள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.

சாந்தி முகூர்த்தத்தன்று, மணமகளை இரண்டொரு மங்கல மங்கையர் அழைத்துக் கொண்டு போய் பள்ளியறையில் உட்கார வைக்கும் பழக்கம் இந்துக்களிடையே உண்டு. ஏனிந்தப் பழக்கம்?

காமத்தால் துடித்தும், நாணத்தால் நடக்க முடியாமலிருக்கும் அந்தப் பெண்ணை, நாலுபேர் நடத்திக் கொண்டு போவதாக ஐதீகம்.

இதைத் `தனியறை சேர்த்தல்’, `அமளியிற் சேர்த்தல்’ என்று இதிகாசங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன.

இவையனைத்தும் பலமான கட்டுக்காவற் சம்பிரதாயங்கள்.

இவற்றை மீறுவோர் உண்டு. தவறுவோர் உண்டு.

இவர்கள் சமுதாய அங்கவீனர்கள்.

இவர்கள் நற்குடிப் பிறவாதவர்கள்.

வள்ளுவன் தெளிவாகவே சொன்னான்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின்

அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும், என்று.

`ஒருவன் அல்லது ஒருத்தியின் நடத்தை தவறாயின் அவர்களது குலமே சந்தேகத்திற்குரியது’ என்றான் வள்ளுவன்.

இன்னும் மணமாகாத இந்து இளைஞன், தனது சம்பிரதாயங்களின்படி அமையப்பெற்ற ஒரு பெண்ணோவியத்தைப் தேர்ந்தெடுத்தால், அவனது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

நீண்ட நாள் கணவனைப் பிரிந்திருந்தாலும், நெறிமுறை பிறழாது, உலை மூச்சைப்போல அனல் மூச்சை ஜீரணித்து உப்பைக் குறைத்துச் சாப்பிட்டும், குளிர்ந்த நீராடியும் காம உணர்ச்சியே இல்லாமல் வாழும் ஓர் இந்துப் பெண் கிடைப்பதுபோல், கணவன் பெறக்கூடிய பெரும்பேறு வேறு எதுவுமே இல்லை.

கண்களையும் கவர்ச்சிகளையும் நம்பி, கட்டுப்பாடற்ற பெண்ணின் வலையில் விழுவோர் ஒன்று பைத்தியமாவார்கள்; அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள்.

இந்துச் சட்டங்கள் மட்டுமல்லாது, சம்பிரதாயங்களும்கூட, சகல வழிகளிலும் செம்மையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கின்றன.

வாழ்க்கை என்பது உடல் இச்சை மட்டுமன்று.

அதனையும் மீறிச் சில சுகங்களும் பெருமைகளும் உண்டு.

உடல் இச்சை மட்டும் மூல ஆதாரமாக இருந்து விட்டால், பெண்ணைத் தேர்வதில் இளைஞன் தவறி விழுவான்.

தாய்க்கும் தனக்கும், அடங்கிய பெண்ணுக்கு அழகு தேவையில்லை.

அவள் அழகில்லாதவளானாலும், அவளுக்குத் தெய்வமும் நிகரில்லை!




அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:34 am

அர்த்தமுள்ள இந்துமதம் - அங்காடி நாய்

மனத்தை `அங்காடி நாய்’ என்கிறார் பட்டினத்தார். கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகின்ற நாயைப்போல், மனமும் ஓடுகிறது என்றார். மனிதனின் துயரங்களுக்கெல்லாம் காரணம் மனந்தானே!

`பேயாய் உழலும் சிறுமனமே’ என்கிறார் பாரதியார். மனத்தின் ஊசலாட்டத்தைப் பற்றி அவரும் கவலை கொள்கிறார். பயப்படக்கூடிய விஷயங்களிலே, சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது.

துணியவேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது.

காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய்விடுகிறது. பசுமையைக் கண்டு மயங்குகிறது. வறட்சியைக் கண்டு குமுறுகிறது. உறவினருக்காகக் கலங்குகிறது.

ஒரு கட்டத்தில் மரத்துப்போய் விடுகிறது.

ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது.

ஆசாபாசங்களில் அலைமோதுகிறது. விரக்தியடைந்த நிலையில், தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொள்ளும் வலிமையைத் தன் கைகளுக்குக் கொடுத்துவிடுகிறது. கொலை, திருட்டு, பொய், இரக்கம், கருணை, பாசம் எல்லாவற்றுக்கும் மனமே காரணம். மனத்தின் இயக்கமே மனித இயக்கம். எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனத்துக்கு வரும்?

`எல்லாம் மாயையே’ என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும். கீதையிலே கண்ணன் கூறுகிறான்:

“என்னைப் பரம் எனக் கொள்க; வேறொன்றில் பற்றையழித்து என்னைத் தியானித்து வழிபடுக. இறப்பும் பிறப்புமாகிய கடலிலிருந்து உன்னை நான் கைதூக்கி விடுவேன்”.

நல்லது; அப்படியே செய்து பார்ப்போம். ஆனாலும் முடியவில்லையே!

நெருப்புக்குத் தப்புகிறோம்; நீரில் மூழ்குகிறோம்.

நாய்க்குத் தப்புகிறோம்.

நரியின் வாயில் விழுகிறோம். ஒன்றை மறந்தால், இன்னொன்று வருகிறது. புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப் போடப்போய், வெற்றிலைப் போட்டுக்கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவதுபோல், மறக்க முயன்றவற்றை மறக்கமுடியாமல், புதிய நினைவுகளும் புகுந்துக்கொண்டு விடுகின்றன. கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனைச் சிறையில் தள்ளினார் களாம். அவன் சிறையில் இருந்துக் கொண்டே கள்ள நோட்டைத் தயாரித்தானாம்! இனி அவனை எங்கே கொண்டு போய்த் தள்ளுவது?

மனத்துக்கு, மனைவியைவிட மற்றொருத்தியே அழகாகத் தோன்றுகிறாள். கைக்குக் கிடைத்துவிட்ட மலரில் வாசம் தெரிவதில்லை. கிடைக்காத மலர்கள் கற்பனையில் எழுந்து மனத்தை இழுக்கின்றன. நிறைவேறிவிட்ட ஆசைகளில், மனது பெருமிதப்படுவதில்லை. நிறைவேறாத ஆசைகளுக்காகவே இது மரண பரியந்தம் போராடுகிறது. மகாலட்சுமியே மனைவியாகக் கிடைத்தாலும் சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும் ரசிகனைப்போல், உள்ளவற்றைவிட இல்லாதன குறித்தே மனம் ஏங்குகிறது.

பிறர் புகழும்போது நெக்குருகுகிறது. இகழும்போது கவலைப்படுகிறது. ஓராயிரம் பின்னல்கள்; ஓராயிரம் சிக்கல்கள்!

சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்குத்தான் தெரியும். இந்தச் சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத்தான் தெரியும். கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு. அலை இல்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும்போது சலனமில்லாத மனம் ஒன்றும் உருவாகி விடும். `மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்பார்கள். `எப்போது ஊற்றுவான்?’ என்று மனம் ஏங்குகிறது. சலனமும், சபலமும், கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்?




அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:34 am


செத்துப்போன தன் குழந்தையை உயிர் மீட்டுத் தரும்படி, புத்த தேவனிடம் ஒரு தாய் கெஞ்சினாளாம். “சாவே நிகழாத வீட்டில் சாம்பல் எடுத்துவா, மீட்டுத் தருகிறேன்” என்று புத்தர் சொன்னாராம். தாய், நாடெல்லாம் அலைந்து, “சாவு நிகழாத வீடே இல்லையே!” என்றாளாம். “இந்தக் கதையும் அதில் ஒன்றுதான்”, என்று கூறிப் புத்தர் அவளை வழியனுப்பினாராம். கவலையே இல்லாத மனிதன் என்று ஒருவனை நான் பார்த்துவிட்டால், நான் கவலைப்படுவதில் நியாயம் உண்டு. எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி. அவனைவிடக் குறைவாகத்தானே இருக்கிறேன். எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை. ஒருவனுக்குத் துயரம் மனைவியால் வருகிறது. ஒருவனுக்கு மக்களால் வருகிறது. ஒருவனுக்கு நண்பனால் வருகிறது. ஒருவனுக்கு எதிரியால் வருகிறது.

ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனாலோ வருகிறது. கடலில் பாய்மரக் கப்பல்தான் காற்றிலே தள்ளாடுகிறது. எதிலும் கெட்டிக்காரனாக இருப்பவனுக்குத்தான் அடிக்கடி சஞ்சலம் வருகிறது. காகிதக் கப்பலுக்கு என்ன கவலை?

மனம் காகிதம்போல மென்மையாக இருக்கட்டும். சுகதுக்கங்கள், கோடை, பனி, மழை – அனைத்தையும் தாங்கட்டும். மனதுக்கு வருகின்ற துயரங்களைப் பரந்தாமனிடம் ஒப்படைத்து விடு. பிறர்க்குத் தொல்லையில்லாமல் உன் மகிழ்ச்சியை நீ அனுபவி. சாவைத்தான் தவிர்க்க முடியாது; சஞ்சலத்தைத் தவிர்க்க முடியும். சிறு வயதில் எனக்குத் தாய், தந்தையர்கள் சாவார்கள் என்று எண்ணும்போது தேகமெல்லாம் நடுங்கும். ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள். நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கிவிட்டது. “ஐயோ, இது நடந்துவிடுமோ?” என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு. “நடக்கத்தான் போகிறது” என்று முன்கூட்டியே முடிவு கட்டிவிட்டால், அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது. தர்மனும் அழுதான், பீமனும் அழுதான், ராமனும் அழுதான், ராவணனும் அழுதான். நெஞ்சத்தின் பதைப்பை, `கடன்பட்ட நெஞ்சம்’ என்றான் கம்பன். பட்ட கடன் ஒன்றானால், பத்திரத்தைத் தீர்த்து வாங்கிவிடலாம். ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும், வட்டி பாக்கி நிற்கிறது. மழை நின்று விட்டாலும், துவானம் தொடர்கிறது. மரண பரியந்தம் மனம் தன் வித்தையைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. மனத்துக்கு இப்படியெல்லாம் சுபாவங்கள் உண்டு என்று இருபது வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டால், பிறகு வருவனவெல்லாம் மாயையே என்று வைராக்கியம் பிறந்துவிடும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள். மனம் அங்காடி நாய்போல் அலைவதை அடக்குங்கள். சாகப்போகும் கட்டைக்குச் சஞ்சலம் எதற்கு?

செத்தார்க்கு நாம் அழுதோம்.

நாம் செத்தால் பிறரழுவார். அதோடு மறந்து விடுவார்.

மனத்துக்கு நிம்மதியைக் கொடுங்கள்.

பகவான் கிருஷ்ணனின் காலடிகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குங்கள்.

இங்கே இருந்தாலும் அவன்தான் காரணம்; அங்கு சென்றாலும் அவன்தான் காரணம். இங்கிருந்து அவன் கொண்டு போகும் தூதுவனுக்குப் பேர்தான் மரணம். அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயிக்கட்டும்.



அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:35 am

அர்த்தமுள்ள இந்துமதம் - ஆண்டாள், தமிழை ஆண்டாள்!


தமிழிலே காதல் இலக்கியங்கள் ஏராளம். அவற்றில் மனிதனைக் காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் பல.

அரசனைக் காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் சில.

அவையெல்லாம் ஆடவனைப் பெண் காதலிக்கும் இலக்கியங்கள்.

ஆனால், ஆண்மையில் பெண்மை கண்டு, அதை `நாயகி பாவ’மாகக் கொண்டு, இறைவனை நாயகனாக விவரிக்கும் சமய இலக்கியங்கள் தனிச்சுவை வாய்ந்தவை.

ஆணைப் பெண் காதலிக்கும் போது வருகின்ற உருக்கத்தைவிட, ஆணே பெண்ணாகும் உருவகத்தில் உருக்கம் அதிகம்.

காதலுக்குச் சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் அந்த ஆணாகப் பிறந்த பெண் உருவங்கள் எப்படி எப்படி கையாளுகின்றனர்.

அப்படிக் கையாளும்போது நமது தமிழ் மொழிக்கு இந்து சமயம் வழங்கியுள்ள வார்த்தைகள்தான் எத்தனை!

அவற்றில் `நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை’ப் புதிய தமிழ்ச் சொற்களின் அகராதி என்றே அழைக்கலாம்.

பெண்மையின் காதல் அவஸ்தையைச் சித்தரிக்கும் முத்தொள்ளாயிரப் பாடல்களோ, மற்றச் சங்க காலத்து அகநூல்களோ, ஏன், கம்பராமாயணமோ கூடக் காட்டாத வாண வேடிக்கைகளைப் பிரபந்தம் காட்டுகிறது.

தூதும் மடலும், உலாவும் பிரபந்தமும் தமிழுக்குப் புதியவையல்ல.

ஆனால், பக்திச் சுவையை இலக்கியச் சுவையாக்கித் தமிழ் நயமும், ஓசை நயமும், பொருள் நயமும் கலந்து படிப்பவர்களுக்குத் தெய்வீக உணர்ச்சியையும், லெளகீக உணர்ச்சியையும் ஒன்றாக உண்டாக்குவது திவ்வியப்பிரபந்தம்.

இதை `தமிழுக்கு இந்து மதம் செய்த சேவை’ என்று சொல்வதிலே தவறென்ன?

தமிழ் அகத்துறையில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற குணங்களும், விரக வேதனையால் அங்கங்களில் ஏற்படும் மாறுதல்களும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

தமிழ் படிக்கும் ஒருவன், எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் இந்த ஒரே ஒரு விஷயம் வேறு வேறு விதமாகச் சொல்லப்படுவதை அறிவான்.

அகநூல் விதிப்படி, நாணிக் கண்புதைத்தல், நெஞ்சோடு கிளத்தல் என்றெல்லாம் பகுத்துக்கொண்டு, எழுதப்பட்ட நூல்கள் உண்டு.

தனித் தனிப் பாடல்களாக விரக வேதனைகளைப் பல்வேறு வகையில் காட்டும் பாடல்களும் உண்டு.

அவற்றிலெல்லாம் காதல் என்பது கற்பியலிலும் முடியும்; இல்லை, களவியலிலும் முடியும்.

அந்த இலக்கியங்களுக்குச் காதலை மிகைப்படச் சித்தரிப்பதைத் தவிர, வேறு நோக்கம் கிடையாது.

ஆனால், சமய இலக்கியத்தில் காதலுக்கும் பக்தியே மூலநோக்கமாகும்.

தேனிலே மருந்து குழைப்பதுபோல், காதலிலே பக்தியைக் குழைத்தால், சராசரி மனிதனை அது வசப்படுத்துமென்றே சமய இலக்கியங்கள் அவ்வாறு செய்தன.

நாமும் வெறும் நாமாவளிகளைவிட இந்தச் சுவையையே பெரிதும் விரும்புகிறோம்.

உலகத்தில் எல்லாமே இறைவனுடைய இயக்கம்.

ஆண் – பெண் உறவு இதற்கு விதிவிலக்கல்ல.

அந்தச் சுவை மிகைப்படப் போயினும் தவறில்லை.

அது ஞானியை இறைவனிடமும், நல்ல மனிதனை மனைவியிடமும் சேர்க்கிறது.

அந்த வகையில் பிரபந்தம் காட்டும் திரு
மொழிகள் அளவிட முடியாத உணர்ச்சிக்
களஞ்சியங்கள்.

நாச்சியார் திருமொழியில் பல தமிழ் வார்த்தைகள் எனக்கு வியப்பளித்தன.

ஆண்டாள் என்றொரு பெண்பாற் பிறப்பு இல்லை என்றும், அது பெரியாழ்வார் தமக்கே கற்பித்துக் கொண்ட பெண்மை என்றும் சிலர் கூறுவர்.

ஆனால், வடக்கே ஒரு மீராபாயைப் பார்க்கும் தமிழனுக்குத் தெற்கே ஓர் ஆண்டாளும் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வரும்.

அது எப்படியாயினும், நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அரிய கலைச் செல்வம்.

நானும் என்னைக் காதலியாக்கிக்கொண்டு, கண்ணனை நினைத்து உருகியிருக்கிறேன்.

கண்ணன் என்னும்
மன்னன் பெயரைச்
சொல்லப் சொல்ல
கல்லும் முள்ளும்
பூவாய் மாறும்
மெல்ல மெல்ல…

-என்றும்,

கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே

- என்றும், இசைக்காக ஏதேதோ புலம்பியிருக்கிறேன்.

ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்’தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது.

அந்தச் சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமியரை கூர்வேல் கொடுந்தொழிலனிடம் – நந்தகோபாலன் குமரனிடம் – ஏகாந்த கன்னி யசோதை இளஞ்சிங்கத்திடம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தானிடம் அழைத்துச் செல்வது, தமிழில் அற்புதமான பாவைக் கூத்து.

`நாம் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்’ என்கிறார் நாச்சியார்.

`அவன் ஓங்கி உலகளந்த உத்தமன்.’

ஆகா; எவ்வளவு அற்புதமான உருவகம்? அங்கு நீங்காத செல்வமாக நிற்பன எவை தெரியுமா?

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்களாம்!

பசுவுக்கு `வள்ளல்’ என்ற பட்டத்தை, பக்தியின்றி எது சூட்டும்?

ஓர் உருவகத்தைச் கேளுங்கள். அதுவும் விஞ்ஞான உண்மை.




அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:35 am

மழை பெய்வதை நாச்சியார் கூறுகிறார்:

ஆழி மழைக் கண்ணா
ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு
முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன்
உருவம்போல் மெய்கருத்துப்
பாழியந் தோளுடைப்
பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்!

… கடலிலே புகுந்து நீரை எடுத்து, ஊழி முதல்வன் உருவம் போல் உடம்பு கருத்து மேகமாகி, அந்தப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, சங்குபோல் முழங்கி, வில்லிலிருந்து பொழிந்த அம்பு மழைபோல் மழை பெய்யக் கோருகிறார் நாச்சியார்.

அந்தக் கண்ணன் மாயன், வடமதுரை மைந்தன்!

`வீங்கு நீர் இலங்கை’ என்றானே கம்பன், இங்கே நாச்சியார் `தூயபெருநீர் யமுனைத் துறைவன்’ என்கிறார்.

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனே- எவ்வளவு புதிய சொல்லாட்சி!

அதோ வருகிறான் கண்ணன்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமன் மகளே, மணிக்கதவம் தாள் திறவாய்; மாமீர்! ஏ, மாமிமார்களே; அவளை எழுப்பீரோ!

நாற்றத் துழாய்முடி நாராயணன் வந்திருக்கிறான்! நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியன் அவன். குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! சிற்றாதே – நீ அசையாதே, பேசாதே, நீ செல்லப் பெண்டாட்டி!

வார்த்தை வந்து விழுகிறதே நாச்சியாருக்கு!

புள்ளினம் புலம்புகிறது. நீ குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் பள்ளிக்கிடத்தியோ! அடப்பாவி! உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாளியுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்புதடி!

எல்லே! (இது பாண்டி நாட்டு வழக்கு)
இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
ஐயோ, இதென்ன; கண்ணனும் தூங்குகிறானோ?

அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

அம்மா, யசோதா!

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி! உன் மகனுக்குக் கொஞ்சம் சொல்லம்மா.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனல்லவா! அவனை அருத்தித்து வந்திருக்கிறோம்.

ஏ, கண்ணா!

ராசலீலை மறந்தாயா! குத்துவிளக்கெரியக் கோட்டிக்கால் கட்டிலின் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்!

அடியம்மா, நப்பின்னை!

நீ உன் மணவாளனை விட்டு எந்த நேரமும் எழுந்துவர மாட்டாயா?

எந்த நேரமும் பிரிவு பொறுக்க மாட்டாயா?

நல்லது!

இது தத்துவமல்ல; தகவுடையதுதான்!

ஏ, கப்பல் (நடுக்கம்) தவிர்க்கும் கலியே! வெப்பம் கொடுக்கும் விமலா!

நாங்கள் ஆற்றாது வந்துன் அடி பணிகின்றோம். எழுந்து வா!

கிண்கிணியாய்! செய்ய தாமரைப் பூப்போல உனது செங்கண் சிறுகச் சிறுக எங்கள் மேல் விழிக்காதோ!

அன்று இந்த உலகை அளந்தாயே! சென்று தென்னிலங்கை வென்றாயே!

கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றைக் குடையாக எடுத்தாயே!
மாலே மணிவண்ணா!
கோல விளக்கே, கொடியே, விதானமே!
ஆலிலையில் துயில் கொள்ளும் ஐயா!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
எழுந்துவர மாட்டாயா?

சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் மற்றும் பல்வேறு நகைகளும் நாம் அணிவோம்.

ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிந்துவரக் கூடியிருந்து உண்போம்.

ஆகா!

சோற்றையே மூடுகிற அளவுக்கு நெய்யாம்! அதை அள்ளி உண்ணும்போதும் முழங்கை வழியாக வழியுமாம்!

மேலும் சொல்கிறார் நாச்சியார்:

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

அறியாத பிள்ளைகள் அழைக்கிறோம்; கோபப்படாதே! வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா, எழுந்து வா! வா வா!

நாச்சியாருக்குப் பெருக்கெடுத்த காதல் நமக்கும் பெருக்கெடுக்கிறது.

அவர் காதல் மட்டுமா கொண்டார்; கடிமணமும் செய்து பார்த்தார்.

வாரணம் வந்ததாம்; பூரண பொற்குடம் வந்ததாம்; தோரணம் நாட்டினார்களாம்; வாழை, கமுகு தொங்கவிட்ட பந்தலாம்; இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருக்கிறார்களாம்; நாச்சியார் மந்திரக் கோடிப் பட்டு உடுத்தி வந்தாராம்; மாயவன் மணமாலை சூட்டினானாம்!

நான்கு திசையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்களாம்; பார்ப்பனப் பெரியவர்கள் பல்லாண்டு பாடினார்களாம்.

கதிர் போன்று ஒளிவிடும் தீபத்தை, கலசத்தோடு ஏந்தியபடி, சதிரிள மங்கையர் வந்து எதிர் கொண்டார்களாம்; மத்தளம் கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம்.

முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பந்தலில், மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றினானாம்!

அவன் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையல்லவா! அவன் நன்மையுடையவன் அல்லவா!

ஆகவே, செம்மையுடைய திருக்கையால் பாதம் பற்றி அம்மி மிதிக்க வைத்தானாம்!

அவன் எப்படி?

ஏ, வெண் சங்கே; நீ சொல்!

அவன் வாய் இதழில் கற்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்ச சன்னியமே!
அவன் இதழ்ச் சுவையை எனக்குச் சொல்ல மாட்டாயா!
ஏ, மேகங்காள்!
விண்ணில் மேலாப்பு விரித்தாற் போன்ற மேகங்காள்!
மாமுத்த நீர் சொரியும் மாமுகில்காள்!
களங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்!
கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள்!
மதயானை போலெழுந்த மாமுகில்காள்!
வேங்கடத்தைப் பதியாக வைத்து வாழும் மேகங்காள்!
எனக்குப் பதியாகி, என் கதியாக அவன் கருதவில்லையா!
ஒரு பெண் கொடியை வதைசெய்தால், இவ்வைகயகத்தார் மதிப்பாரா?

-நாச்சியார் துடிக்கிறார்; நாமும் துடிக்கிறோம்!
நாச்சியார் உருகுகிறார்; நாமும் உருகுகிறோம்!
நாச்சியார் கெஞ்சுகிறார்; நாமும் கெஞ்சுகிறோம்!
நாச்சியார் கொஞ்சுகிறார்; தமிழும் கொஞ்சுகிறது!




அர்த்தமுள்ள இந்துமதம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக