புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
306 Posts - 42%
heezulia
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
6 Posts - 1%
prajai
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகுடபதி - அமரர் கல்கி Poll_c10மகுடபதி - அமரர் கல்கி Poll_m10மகுடபதி - அமரர் கல்கி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:25 am

முதல் நாள் கோயமுத்தூரில் பிரசித்தி பெற்ற ஒரு காங்கிரஸ் தொண்டர், தம்பதி சமேதராய்ச் சத்தியாக்கிரகம் செய்தார். அவர்களைப் போலீஸார் காங்கிரஸ் ஆபீஸ் வாசலிலேயே கைது செய்து கொண்டு போனார்கள்.

அதற்குப் பிறகு நகரின் முக்கிய தெருக்களில் போலீஸ்-'மார்ச்' நடந்தது.

மறுநாள் ஆறு தொண்டர்கள் காங்கிரஸ் ஆபீஸிலிருந்து கிளம்பினார்கள். கிளம்பி, 'வந்தேமாதரம்' முதலிய கோஷங்களைச் செய்து கொண்டு கடைத்தெரு வரையில் சென்றார்கள். வேடிக்கை பார்ப்பதற்கு ஏக ஜனக் கூட்டம் கூடிவிட்டது.

அப்போது பலமான போலீஸ் படை அங்கு வந்து சேர்ந்தது. முன்னால் போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்குப் பின்னால் குண்டாந்தடி சகிதமாக சாதாரண போலீஸ் ஜவான்கள் - அவர்களுக்குப் பின்னால் துப்பாக்கி சகிதமாக மலபார் ஸ்பெஷல் போலீஸ் - இப்படியாக அந்தப் போலீஸ் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. தொண்டர்கள் நின்ற கடைத் தெரு முனைக்கு வந்ததும், தலைமைப் போலீஸ் அதிகாரி பயங்கரமான குரலில் போலீஸ் படையைப் பார்த்து உத்தரவுகள் போட்டார். நாலாபுறமும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்ததும் ஏதோ சொன்னார். அவர் சொன்னது இன்னதென்று யாருக்கும் தெரியவில்லை. கூட்டத்திலிருந்தவர்களில் பொறுப்பற்ற இளம் பிள்ளைகள் சிலர் போலீஸ்காரர்களைப் பரிகசிக்கும் பாவனையாகக் கூச்சலிட்டார்கள்.

அடுத்த நிமிஷம் போலீஸ் குண்டாந்தடி கைவரிசையைக் காட்டத் தொடங்கிற்று.

சில போலீஸ் ஜவான்கள் தொண்டர்களைச் சூழ்ந்து கொண்டு அடிக்கத் தொடங்கினார்கள். அடி ஆரம்பமான போது, தொண்டர்கள் கூட்டத்திலிருந்து 'வந்தேமாதரம்' என்று கிளம்பிய வீர கோஷத்தின் ஸ்வரம் வர வரக் குறைந்து வந்தது. ஒவ்வொரு தொண்டராகக் கீழே விழுந்து வந்தார்கள். சிலருக்கு உணர்வு தப்பிவிட்டது.

தொண்டர்களைச் சாதாரணப் போலீஸார் ஒரு புறம் கவனித்துக் கொண்டிருக்கையில், மலபார் ஸ்பெஷல் போலீஸ் வீரர்கள், சுற்றுமுற்றும் கூடியிருந்த ஜனங்களை ஸ்பெஷலாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். பயங்கரமான ஊளைச் சத்தம் போட்டு அவர்கள் பாய்ந்துவந்து ஜனங்களைக் குண்டாந்தடியினால் விசாரிக்கத் தொடங்கவே, ஜனங்கள் நாலாபுறமும் ஓடினார்கள். அப்படி ஓடினவர்களைத் தொடர்ந்து ஜவான்கள் துரத்தினார்கள். துரத்தப்பட்டவர்களில் சிலர் கடைகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் நுழைந்தார்கள். போலீஸார் அவர்களுக்குப் பின்னால் புகுந்து தாக்கினார்கள்.

தெருவிலே போனவர்கள், வந்தவர்கள் வண்டிக்காரர்கள், வீட்டுக்காரர்கள், கடைக்காரர்கள், கடைக்கு வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள், பார்க்காமல் ஓடியவர்கள் ஆகிய சகலரும் பட்சபாதமின்றி அன்றையத் தினம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் மகத்துவத்தை மண்டையிலும் முதுகிலும் தோள்பட்டைகளிலும் முழங்கால் சில்லுகளிலும் அனுபவித்தார்கள்.

கடைத்தெருவில் சில கடைகளுக்குள் போலீஸார் புகுந்த செய்தியைக் கேட்டதும், எல்லாக் கடைகளும் மளமளவென்று சாத்தப்பட்டன.

இதற்குள் செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. மலபார் போலீஸார் வீதியில் யாரைக் கண்டாலும் அடிக்கிறார்களென்றும், அடிக்கப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர் இறந்து போனார் என்றும் வதந்தி பரவியது. இதனால் நகரம் முழுவதும் கதிகலங்கிப் போய்விட்டது.

சற்று நேரத்திற்கெல்லாம் நகரின் வீதிகளில் போலீஸார், 'மார்ச்' செய்துகொண்டு போனதனால் ஜனங்களின் பீதி அதிகமாயிற்று. யாரும் வெளியில் தலைகாட்டத் துணியவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய வீடுகளுக்குள் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு முனிசிபல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால், அவையும் பயத்தால் மங்கலாகப் பிரகாசித்தது போலவே தோன்றின.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:26 am

இந்த மங்கிய வெளிச்சத்தில் அனுமந்தராயன் தெருவில், சுமார் இருபது பிராயமுள்ள ஓர் இளைஞன் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே விரைவாகப் போய்க் கொண்டிருந்தான். அனுமந்தராயன் தெரு மிகவும் குறுகலான தெரு. இதில் வீடுகளைக் காட்டிலும், வியாபாரிகள் சாமான்களை நிரப்பி வைக்கும் கிடங்குகள் தான் அதிகமாயிருந்தன. ஆதலால், சாதாரணமாகவே இந்தத் தெருவில் அஸ்தமித்த பிறகு ஜன நடமாட்டம் குறைவாக இருக்கும். இப்போதோ, அந்தத் தெரு முழுவதும் சூனியமாகவே காணப்பட்டது. ஆனாலும் அந்த வாலிபன், தான் யாருடைய கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற கவலையுடன் ஒளிந்து ஒளிந்து போவதாகத் தோன்றியது. களை பொருந்திய அவன் முகத்தில், பயத்தின் அறிகுறி தென்பட்டது. அவனுடைய உடையைச் சற்றுக் கவனித்தோமானால், அவன் அவ்விதம் பயந்துகொண்டு செல்வது நமக்கு ரொம்பவும் ஆச்சரியமளிக்கும். அவன் கதர் உடை தரித்து, தலையிலும் கதர்க் குல்லா வைத்திருந்தான். அவன் தேசத்தொண்டில் ஈடுபட்டவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்தத் தேசத்தொண்டன் அவ்விதம் பயத்துடன் ஒளிந்து ஒளிந்து செல்வதேன்? போலீஸ் தடியடிக்குப் பயந்து ஓடி வந்தவனோ? ஆனால், தடியடி உற்சவந்தான் சாயங்காலமே தீர்ந்து போய் விட்டதே? இப்போது என்னத்திற்காக அவன் இவ்விதம் பயப்பட்டு ஒளிய வேண்டும்?

அதே சமயத்தில் அனுமந்தராயன் தெரு முனையை நாம் அடைந்தோமானால், மேற்படி மர்மத்தை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். ஆமாம்; அந்த முனையில் இரண்டு தடியர்கள் வீதி ஓரத்தில் நின்று மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தோற்றத்தில் தடியர்களாயிருந்ததுடன், கையிலும் தடி வைத்திருந்தார்கள்.

"இந்தச் சந்திலேதான் புகுந்தான்" என்று ஒருவன் சொன்னான்.

"அப்படியானால், வா! அவனை இன்றைக்குத் தீர்த்தேயாக வேண்டும்."

இப்படிப் பேசிய தடியர்கள் இருவரும் தெருவுக்குள் நுழைந்தார்கள்.

அச்சமயம் தெருவின் மத்தியில் போய்க்கொண்டிருந்த இளைஞன் திரும்பிப் பார்த்தான். ஒரு முனையில் போட்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் அந்தத் தடியர்களின் உருவங்கள் தெரிந்தன. அவர்களைப் பார்த்ததும் இளைஞனின் உடம்பு சிறிது நடுங்கிற்று. வீதியோரத்து இருண்ட நிழலில் இன்னும் நன்றாய் நகர்ந்து கொண்டு அவன் மேலே விரைந்து சென்றான். ஓடினால் கால் சத்தம் கேட்குமே என்றும் அவனுக்குப் பயமாயிருந்தது. ஆகையால், சத்தம் கேட்காதபடி கூடியவரையில் வேகமாக நடந்தான்.

நாலு வீடு தாண்டியதும், ஒரு வீட்டு வாசற் கதவண்டை யாரோ ஒருவன் நிற்பது போல் தோன்றியது. அருகில் நெருங்கியபோது, அவன் ஒரு வயதான கிழவன் என்று தோன்றியது. அவன் வாசற்புறத்திலிருந்து வீட்டுக்கதவின் பூட்டைத் திறந்து கொண்டிருந்தான். தேசீய உடை தரித்த வாலிபன் அந்த இடத்துக்கு வந்ததும் கிழவன் வீட்டின் கதவைத் திறந்ததும், சரியாக இருந்தது.

கதவைத் திறந்துவிட்டு, கிழே விழுந்திருந்த கைத்தடியை எடுப்பதற்காக அந்தக் கிழவன் குனிந்தபோது, வாலிபன் சட்டென்று அந்தத் திறந்த வீட்டுக்குள் நுழைந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:28 am

இரண்டாம் அத்தியாயம் - பெண்குரல்

திறந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபன், கிழவனுக்குத் தெரியாமல் மறைந்து கொள்ளும் நோக்கத்துடன், சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த வீட்டு நடையில் ஒரு பக்கத்தில் மரப்பலகையினாலான குறுகிய மச்சுப் படி காணப்பட்டது. மச்சுப் படியின் ஓரத்தில், கரியடைந்த அரிக்கன் விளக்கு மிக மங்கலான ஒளியைத் தந்து கொண்டிருந்தது. மச்சுப்படிக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியுமோ என்று பார்ப்பதற்காக வாலிபன் அங்கே போவதற்குள், கிழவன் உள்ளே நுழைந்து விட்டான்.

"யாரடா அவன்?" என்று கிழவன் கேட்ட குரலில், வியப்பும், திகைப்பும், கோபமும் கலந்திருந்தன.

ஆனால், அந்தக் குரலைக் கேட்ட வாலிபன், பளிச்சென்று திரும்பிப் பார்த்தபோது, அவனுடைய முகத்தில் வியப்புடன் மகிழ்ச்சியும் காணப்பட்டது.

"பாட்டா!" என்று சொல்லி, அவன் கிழவனை ஏறிட்டுப் பார்த்தபடி நின்றான்.

"யார்? மகுடபதியா?" என்று கிழவன் கெட்டான். அவனுடைய குரலில் இப்போது கோபத்துக்குப் பதிலாகக் கனிவு தோன்றியது.

"ஆமாம், பாட்டா!"

"இதென்ன அதிசயம், தம்பி! நீ எப்போது இங்கே வந்தே? எப்படி வந்தே? வாசற்கதவு பூட்டியிருக்கிறதே!"

"நீ பூட்டைத் திறந்துவிட்டு, தடியை எடுக்கக் குனிந்தாயல்லவா, பாட்டா? அப்போது நுழைந்தேன். ஆனால் நுழையும்போது நீதான் என்று தெரியாது. உன்னிடம் அகப்பட்டுக் கொள்ளாமலிருக்க, இந்த மச்சுப்படிக்குப் பின்னால் ஒளியப் பார்த்தேன். என்ன வேடிக்கை, பார்!" என்று கூறி மகுடபதி சிரிக்க முயன்றான்.

ஆனால், அச்சமயம் கிழவன் முகத்தில் காணப்பட்ட தயக்கத்தையும் பயத்தையும் பார்த்தபோது, சிரிப்பு வாய்க்குள்ளே அடங்கிவிட்டது.

"நீ விளையாடுகிறாயோ, என்னமோ தெரியவில்லை தம்பி! ஆனால் அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. ஒரு வினாடி கூட இருக்கக் கூடாது. உடனே போய்விடு..." என்று கிழவன் பரபரப்புடன் சொன்னான்.

மகுடபதி, அப்போது பாதி விளையாட்டுக் குரலில், "அதெல்லாம் முடியாது, பெரியண்ணக் கவுண்டரே! நான் இந்த வீட்டை விட்டு இன்று ராத்திரி கிளம்ப முடியாது. அப்படி என்னத்திற்காக என்னைக் கண்டு பயப்படுகிறாய்? இந்த வீட்டில் நீ களவாட, கிளவாட வரவில்லையே? உன் கையில் இருப்பது தடிதானே? கன்னக் கோல் இல்லையே?..." என்று சொல்லி வந்தவன் சட்டென்று பேசுவதை நிறுத்தி, வாசல் பக்கம் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான்.

வீதியில் காலடிச் சத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மனிதர்கள் பேசுகிற குரலும் கேட்டது.

பெரியண்ணன் ஏதோ கேட்க வாயெடுத்தபோது, மகுடபதி தன் வாயின் மேல் விரலை வைத்துப் பேசாமலிருக்கும்படி சமிக்ஞை செய்தான். ஏற்கனவே மங்கலாக எரிந்த அரிக்கன் லாந்தரின் திரியை இன்னும் கொஞ்சம் சின்னதாகப் பண்ணி, அதை மச்சுப் படிக்குப் பின்னால் வைத்தான். வீட்டை நெருங்கிய காலடிச் சத்தமும், பேச்சுக் குரலும் வீதியோடு சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்தன.

மகுடபதி, பெரியண்ணன் கையைப் பிடித்து ஜன்னலண்டை அழைத்துக் கொண்டு போய், வெளியே சுட்டிக் காட்டினான். தூரத்தில் இரண்டு தடியர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

"நீ கதவைத் தாழ்ப்பாளிட்டது நல்லதாய்ப் போயிற்று" என்றான் மகுடபதி, மெல்லிய குரலில்.

"என்ன தம்பி, சமாசாரம்? யார் அவர்கள்? எதற்காக நீ அவர்களைக் கண்டு பயப்படுகிறாய்?" என்று பெரியண்ணனும் மெதுவான குரலில் கேட்டான்.

"பாட்டா! அவர்கள் இருவரும் என்னை இன்றைக்குக் கொன்று போட்டு விடுவதென்று வந்திருக்கிறார்கள். இன்று ராத்திரி என்னை வெளியே அனுப்பினாயானால் அப்புறம் என்னை உயிரோடு பார்க்க மாட்டாய். மறு உலகத்தில் தான் பார்ப்பாய்" என்று மகுடபதி சொன்னபோது, கிழவன் முகத்தில் கோபம் கொதித்தது.

"என்ன சொல்கிறாய், தம்பி! இவன்களுக்குப் பயந்து கொண்டா நீ இந்த வீட்டில் ஒளிந்தாய்? எந்தக் களவாணிப் பயல் உன் மேல் கையை வைக்கிறான். பார்க்கலாம்! யாருக்கு அவ்வளவு நெஞ்சுத் தைரியம், பார்த்து விடுகிறேன், வா! இப்போதே வெளியே போகலாம்?" என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறக்கப் போன பெரியண்ணன், எதையோ நினைத்துக் கொண்டவன் போல், திடீரென்று தயங்கி நின்றான். மச்சுப் படிகளுக்கு மேலே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். பிறகு மகுடபதியை நோக்கிச் சொன்னான்: "தம்பி! ரொம்பத் தர்மசங்கடமாய்ப் போச்சு. இந்தச் சமயத்திலா உனக்கு இம்மாதிரி ஆபத்து வரவேணும்? இன்னொரு சமயமாயிருந்தால், உன் மேல் கைவைக்கத் துணிகிறவனின் கையை ஒடித்துக் கழுத்தையும் நெரித்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன். ஆனால் இந்தச் சமயம் சரியாயில்லை. நான் வேறு காரியமாய் இங்கே வந்திருக்கிறேன், தம்பி!..."

கிழவன் மச்சுப் படிக்கு மேலே அடிக்கடி அண்ணாந்து பார்த்தது மகுடபதிக்கு நினைவு வந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம் உதித்தது. "இந்த வீட்டில் வேறு யாராவது இருக்கிறர்களா என்ன பாட்டா? ஆனால், வீடு வெளியில் பூட்டியல்லவா இருந்தது? நீ வந்துதானே கதவைத் திறந்தாய்?" என்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:28 am

கிழவன் பரபரப்புடன், "ஆமாம், தம்பி, ஆமாம், இந்த வீட்டில் யாரும் இல்லை. நான் வந்துதான் கதவைத் திறந்தேன். ஒரு முக்கியமான காரணத்தினால், இப்போது இந்த வீட்டை விட்டு நான் வெளியே வரமுடியாது. நீ இங்கு இருக்கவும் கூடாது. போய்விடு" என்றான்.

"பெரிய மூடுமந்திரமாய்ப் பேசுகிறாயே, பாட்டா! இங்கே நான் இன்றைக்கு ராத்திரி இருந்தால் உனக்கு என்ன நஷ்டம்? இந்த வேளையில் என்னை எங்கே போகச் சொல்கிறாய்? கொலைகாரர்களிடம் நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாய் போலிருக்கிறதே?"

"சீச்சி! என்ன வார்த்தை சொல்கிறாய், தம்பி! முக்கியமான காரணம் இல்லாவிட்டால் சொல்வேனா? ஆனால், நீ இப்படிப் பாடுபட்டுப் பதுங்குவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. ஐம்பது குடிகாரர்கள் சேர்ந்தாற்போல் உன்மேல் பாய்ந்த போது கூட மனங் கலங்காமல் நின்றாயே? அப்படிப்பட்ட நீ, இரண்டு களவாணிப் பயல்களுக்குப் பயப்படுகிறாயே?"

"இதைக் கேள், பாட்டா! நமது தமிழ் நாட்டில் திருவள்ளுவர் என்று ஒரு பெரியவர் இருந்தார்..."

"இப்போது அந்தக் கதையெல்லாம் பேசச் சமயமில்லை தம்பி!" என்று கிழவன் தடுத்ததைப் பொருட்படுத்தாமல் மகுடபதி மேலும் சொன்னான்: "அந்தத் திருவள்ளுவர் என்ன சொன்னார் என்றால்,

அஞ்சுவது அஞ்சாமை பேதமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்


என்றார். அதாவது, பயப்படவேண்டிய காரியத்துக்குப் பயப்பட வேண்டும். அசட்டுத் தைரியம் உதவாது என்று அந்தப் பெரியவர் சொல்லியிருக்கிறார். சத்தியாக்கிரகத் தொண்டர் படையில் சேர்ந்து போய், போலீஸ் குண்டாந்தடியால் அடிபட்டுச் செத்தால் பிரயோசனமுண்டு சாகும்போது தேசத்துக்காக உயிரை விடுகிறோம் என்ற திருப்தியுடன் சாகலாம்..."

கிழவன் மிகுந்த ஆர்வத்துடன், "தம்பி! இன்றைக்கு என்ன நடந்தது? ரொம்ப கலாட்டாவாமே? போலீஸ்காரர்கள் ரொம்ப அக்கிரமம் பண்ணி விட்டார்களாமே? ஊரெல்லாம் கொல்லென்று போய்க் கிடக்கிறதே! காங்கிரஸ் தொண்டர்கள் செத்துப் போனது வாஸ்தவந்தானா?" என்றான்.

"இதுவரையில் ஒருவரும் சாகவில்லை, பாட்டா! ஆனால், அந்தக் கண்காட்சியை நீ பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே? காந்தி மகாத்மாவினுடைய ஆன்ம சக்தியை இன்றைக்குத்தான் நான் பார்த்தேன். கொஞ்சங்கூட ஈவு இரக்கம் பச்சாத்தாபம் இல்லாமல், போலீஸார் என்ன அடி அடித்தார்கள்? ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் கொஞ்சமாவது மனங் கலங்க வேண்டுமே? ஓட வேண்டுமே? ஒரு தொண்டர் முப்பது அடி அடிக்கிற வரையில் 'வந்தேமாதரம்', 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்று கோஷித்துக் கொண்டிருந்தார். அப்புறம் கீழே விழுந்து மூர்ச்சையானார்..."

"ஐயையோ! கேட்பதற்குச் சகிக்கவில்லையே? அப்படியா அடித்தார்கள் பாவிகள்? நல்லவேளை, நீயாவது தப்பி வந்தாயே?"

"என்ன அப்படிச் சொல்கிறாய், பாட்டா! என்னை என்னவென்று நினைத்தாய்? நானும் சீக்கிரத்தில் ஒரு நாள் தொண்டர் படையில் சேர்ந்து, போகந்தான் போகிறான். அதற்காகத்தான் இன்று என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு பிரயத்தனப்படுகிறேன்."

"ஓகோ! அப்படியானால், இன்றைக்கு நீ சத்தியாக்கிரகத்தில் சேரவில்லையா, தம்பி! பின்னே எதற்காக இன்றைக்கு கோயமுத்தூருக்கு வந்தாய்?"

"இங்கே நடக்கிறதைப் பார்த்துவிட்டு, மேலே செய்ய வேண்டியதைப் பற்றித் தலைவர்களிடம் யோசனை கேட்டுக் கொண்டு போகலாமென்று வந்தேன். எங்கள் தாலுக்காவிலேயே என்னைச் சத்தியாக்கிரகம் செய்யும்படி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் திரும்பி மேட்டுப்பாளையம் போகிறதற்குள் கார்க்கோடக் கவுண்டரின் ஆட்கள் என்னை வேலை தீர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது."

கிழவன் இப்போது ரொம்பவும் திடுக்கிட்டான். அவன் முகத்தில் பீதியின் அறிகுறியே காணப்பட்டது. முன்போல் மறுபடியும் மச்சுப்படியின் உச்சியை ஏறிட்டு நோக்கினான். பிறகு, மகுடபதியைப் பார்த்து, "கொஞ்சம் மெதுவாய்ப் பேசு தம்பி! யார் கள்ளிப்பட்டிக் கார்கோடக் கவுண்டரா? அவருக்கென்ன உன் பேரில்...?" என்று இரகசியம் பேசும் குரலில் கேட்டான்.

"என்ன, ஒன்றும் தெரியாதவனைப் போல் கேட்கிறாய், பெரியண்ணா! அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கள்ளுக்கடை வருமானம் என்னால் போய்விட்டதோ, இல்லையோ? முக்கியமாக அந்த ஆக்ரோஷந்தான். இன்றைக்கு இங்கே போலீஸ் அமுல் பலமாயிருக்குமென்று, அவருக்கு முன்னாலேயே தெரியும் போலிருக்கிறது. இந்தச் சமயத்தில் காந்திக் குல்லாப் போட்டவனை அடித்துக் கொன்றுவிட்டால், கேள்வி முறையே இராது என்று அவருக்கு எண்ணம். பழி போலீஸார் மேல் போய்விடுமல்லவா?"

"எனக்கு நம்பிக்கைப்படவில்லை, தம்பி! இப்படிப்பட்ட அக்கிரமமும் உண்டா? உனக்கு யார் சொன்னார்கள்?" என்று பெரியண்ணன் கேட்டான்.

இந்தச் சமயத்தில் மேலேயிருந்து, தேனினும் இனியதான ஒரு பெண் குரல், "பாட்டா! யார் அந்த மனுஷர்? எத்தனை நேரம் பேசிக் கொண்டேயிருப்பாய்? நான் இங்கே இருக்கிறேனென்பதையே மறந்துவிட்டாயா?" என்று கேட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:29 am

மூன்றாம் அத்தியாயம் - ஓடக்கரை

சென்ற அத்தியாயத்தின் இறுதியில், 'தேனினும் இனிய பெண் குரல்' என்று நாம் சொன்னபோது, மகுடபதியின் செவியில், அக்குரல் எவ்விதம் தொனித்தது என்பதைத்தான் குறிப்பிட்டோ ம். மற்றவர்களுக்கு அது சாதாரணப் பெண் குரலாகவே தோன்றியிருக்கலாம்.

அந்தத் தேனினும் இனிய குரல், மகுடபதிக்கு அளித்த வியப்பையும் கிளர்ச்சியையும் வர்ணிக்கத் தரமன்று. அந்தக் குரலைச் சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை மகுடபதி கேட்டிருக்கின்றான். ஒரே ஒரு தடவைதான். ஆனால், அதைக் கேட்ட இடமும் சந்தர்ப்பமும் அந்தக் குரலில் கூறப்பட்ட விஷயங்களும், அவன் மனதில் என்றும் மறக்க முடியாதபடி பதிந்து கிடந்தன.

மீண்டும் இப்படிப்பட்ட எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில் அந்தக் குரலைக் கேட்டபோது, மகுடபதிக்கு உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டு விட்டது. குரல் கேட்ட அதே காலத்தில் மகுடபதி அண்ணாந்து பார்த்தான். அழுது வடிந்த அரிக்கன் லாந்தரின் மங்கிய வெளிச்சத்திலும், அந்தப் பெண்ணின் சிறிது குனிந்த முகம் அவனுக்குப் பளிச்சென்று புலப்பட்டது. ஆமாம்; அவள் தான் சந்தேகமில்லை. பார்த்தது பார்த்தபடியே நின்றான் மகுடபதி.

அந்தப் பெண்ணோ, மின்னல் வீச்சைப் போல் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட்டுக் கிழவனை நோக்கினாள். கிழவன் தடுமாறிய வண்ணம், "அம்மா, செந்திரு! இதோ ஒரு 'நிமிட்டி'லே வந்து விடுகிறேன். தாயி! கொஞ்சம் பொறுத்துக் கொள்" என்றான். உடனே மகுடபதியைப் பார்த்து, "தம்பி! நான் ஏன் உன்னைப் போகச் சொன்னேன் என்று தெரிகிறதா? உடனே போய்விடு, அப்பா! உன்னை ஒரு களவாணிப் பயலும் ஒன்றும் செய்யமாட்டான். பழனியாண்டவர் காப்பாற்றுவார்" என்றான்.

மகுடபதிக்கோ கிழவன் சொன்னது ஒன்றும் காதில் விழவேயில்லை. செந்திருவின் முகத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு ஒரு விஷயம் மிகுந்த ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது. அந்தப் பெண் தன்னைத் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லையே, ஏன்? இருட்டினால் தெரியவில்லையா? ஒரு வேளை அடியோடு மறந்துவிட்டாளா? மறந்திருக்க முடியுமா? என்ன ஏமாற்றம்?

செந்திரு, அடுத்தாற்போல் பெரியண்ணனைக் கேட்ட கேள்வி அவனுடைய ஏமாற்றத்தை அதிகமாக்கிற்று. "இவர் யார், பாட்டா? உனக்கு ரொம்பப் பழக்கமானவர் போலிருக்கிறதே? இந்த ஊர்க்கார மனுஷராயிருந்தால் கொஞ்சம் இங்கே அழைத்துக் கொண்டுவா, சில விஷயங்கள் பேச வேண்டும்" என்றாள்.

தன்னை மேலே அழைத்து வரும்படி சொன்னது மகுடபதிக்குச் சிறிது திருப்தியளித்தாலும், அவள் தன்னைத் தெரிந்து கொள்ளவில்லையென்ற ஏமாற்றம் மனதை வருத்திற்று.

பெரியண்ணனோ, இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்தான். மேலே செந்திருவின் முகத்தை நோக்கினான். பிறகு மகுடபதியின் முகத்தைப் பார்த்தான். "தம்பி!..." என்று இழுத்தான்.

"பாட்டா நீ கவலைப்பட வேண்டாம். நான் போகிறேன்" என்றான் மகுடபதி.

"இல்லை, தம்பி! குழந்தை உன்னிடம் என்னமோ கேட்கவேணுமென்கிறது..."

"பாட்டா! நான் உனக்குத்தான் குழந்தை; ஊருக்கெல்லாம் குழந்தையா?" என்று மேலிருந்தபடி செந்திரு கேட்டாள்.

மகுடபதி கிழவனிடம் "இல்லை பாட்டா! உனக்கு என்னத்திற்கு வீண் கஷ்டம்? நான் போய் வருகிறேன். நீ இங்கே தனியாய் இருக்கிறதாக நினைத்துக் கொண்டு அவ்வளவு பிடிவாதம் பிடித்தேன். வேறு யாரோ இருப்பதாக மட்டும் தெரிந்திருந்தால் இங்கே வந்திருக்கவே மாட்டேன். உனக்குத்தான் தெரியுமே. அப்படி ஒன்றும் நான் உயிருக்குப் பயப்படுகிறவன் அல்ல" என்றான்.

அச்சமயம் அவன் மேலே நோக்கிப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், செந்திருவின் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தோன்றிக் கணத்தில் மறைந்ததைக் கவனித்திருக்கலாம்.

மச்சுப்படிகளில் இரண்டு படி செந்திரு பரபரப்புடன் இறங்கிச் சற்று மெதுவான குரலில், "பாட்டா! இங்கே கொஞ்சம் வா! சற்று முன்னால் இரண்டு தடியர்கள் இந்தத் தெருவோடு போனார்கள். அவர்கள் கையில் கத்தியும் தடியும் இருந்தது. எனக்கு ரொம்பவும் பயமாயிருந்தது. இப்போது அவர்கள் மறுபடியும் திரும்பி வருகிறார்கள். சட்டென்று இங்கே வந்து பார்!" என்றாள். உடனே மகுடபதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "பாட்டா! அவரைக் கூட இப்போது போகச் சொல்லாதே! கதவைத் திறந்தால் அந்தத் தடியர்கள் உள்ளே வந்தாலும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்தாலே எனக்குக் கதிகலங்குகிறது. உன் சினேகிதரை இங்கேயே கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகச் சொல்லு. அவருக்கு உயிருக்குப் பயமில்லாமற் போனாலும், எனக்குப் பயமாயிருக்கிறது" என்றாள்.

பெரியண்ணன் அப்போது மகுடபதியின் கையைப் பிடித்துக் கொண்டு, "வா, தம்பி! மச்சுக்குப் போய் அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு அப்புறம் போகலாம். அப்படியொன்றும் ரொம்ப நேரமாகிவிடவில்லையே, ஏழரை மணிதான் இருக்கும்" என்றான். பிறகு அவன் ஒரு கையால் மகுடபதியின் கையைப் பிடித்து இழுத்த வண்ணம் மச்சுப்படியில் ஏறத் தொடங்கினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:30 am

மகுடபதிக்கோ மச்சுப்படியில் ஏறுகையில் ஒரே மனக்குழப்பமாயிருந்தது. அந்தப் பெண் யார்? பதினெட்டு மாதத்துக்கு முன்பு, அந்த அழகிய நீரோடைக் கரையில் தான் சந்தித்த பெண்தானா, இல்லையா? அந்தக் காட்சி நேற்றுத்தான் நடந்ததுபோல் அவன் மனக்கண்ணின் முன்னால் வந்தது.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பித்தபோது, மகுடபதி காலேஜ் படிப்பை நிறுத்திவிட்டு வந்து சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டான்.

அவனுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அது பூர்த்தியாகி வெளியில் வந்தபோது, கோயமுத்தூர் ஜில்லாவில் மதுவிலக்கு இயக்கம் தீவிரமாக நடந்து வருவதை அறிந்தான். அவனும் அந்த இயக்கத்தில் ஈடுபட ஆவல் கொண்டான். நீலகிரி மலையின் அடிவாரத்திலுள்ள மேட்டுப் பாளையத்துக்கருகில் வேங்கைப்பட்டி என்பது அவனுடைய கிராமம். அந்தக் கிராமத்தில் போய்த் தங்கி, மேட்டுப்பாளையம் தாலுக்கா முழுவதும் சுற்றித் தீவிரமான மதுவிலக்குப் பிரசாரம் செய்யத் தொடங்கினான்.

இந்த வேலையில் ஈடுபட்டிருந்த காலத்தில்தான் ஒரு நாள் மகுடபதி மிதிவண்டியில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, அந்த மறக்க முடியாத சம்பவம் நடந்தது. காலை ஒன்பது மணி இருக்கும். சாலை ஓரத்தில் ஓர் அழகான ஓடை. இரண்டு மூன்று நாளைக்கு முன்னால் நன்றாக மழை பெய்திருந்தபடியால், ஓடையில் நிரம்பத் தண்ணீர் இருந்தது. தெளிவான பளிங்கு போன்ற தண்ணீர்; சுற்றிலும் பசுமையான மரங்கள்; ஓங்கி வளர்ந்த மரங்கள் அல்ல; குட்டையான மரங்கள் தான். சற்று தூரத்தில் மரங்களுக்கு மேலே ஒரு பெரிய வீட்டின் மேல் பாகம் மட்டும் தெரிந்தது. பசுமையான மரங்களுக்கு மேலே தூய வெள்ளைச் சுண்ணாம்பு அடித்த சுவரும், அதன் மேலே சில ஓட்டுக் கூரையும், மேலே ஆகாசமும் ஒரு வர்ணக் காட்சி போல் புலப்பட்டன. நீரோடையின் ஒரு புறத்தில் இரண்டு வெண்ணிறக் கொக்குகள் ஒற்றைக் காலால் நின்று தவம் செய்த காட்சி அதைவிட அருமையாயிருந்தது.

மகுடபதி அந்த ஓடைக் காட்சியைக் கண்டு சிறிது நேரம் இன்புற எண்ணி, மிதிவண்டியிலிருந்து இறங்கினான். மிதி வண்டியை ஒரு மரத்தடியில் சாத்திவிட்டு, ஓடையில் தண்ணீர்க் கரைக்குச் சமீபமாய்ச் சென்றான். அப்படிப் போகும் போது சுற்றுமுற்றும் பார்க்கையில் அவனுடைய நெஞ்சை ஒரு கணம் ஓடாமல் நிறுத்திய ஒரு காட்சி தென்பட்டது. ஒரு மரத்தடியில் ஓர் அழகிய இளம் பெண் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மூடியிருந்தன. அந்த நிலையில் அவளைப் பார்க்கும்போது சாதாரண மனிதப் பெண்ணாகத் தோன்றவில்லை. நிசப்தமான அந்த ஏகாந்தமான பிரதேசத்தில் - அந்த அழகிய ஓடைக்கரையில் - இந்த நேரத்தில் படுத்துத் தூங்குவது மனிதப் பெண்ணாயிருக்க முடியாது; வனதேவதையாகத் தானிருக்க வேண்டும்! - இப்படி எண்ணிய மகுடபதிக்குச் சட்டென்று இன்னொரு நினைவு உண்டாயிற்று. அவள் தூங்குகிறாளோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் மூர்ச்சையாகித்தான் கிடக்கிறாளோ? - இவ்விதம் எண்ணியதும், அவன் விரைந்து சென்று அப்பெண்ணின் அருகில் நெருங்கினான். குனிந்து பார்த்தான். மூர்ச்சையாயிருக்கிறாளா, தூங்குகிறாளா என்று தெரிந்துகொள்ள வழி தெரியவில்லை. மூக்கின் அருகில் விரலை நீட்டியபோது, மிக மிக இலேசாக மூச்சு வருவது போல் தெரிந்தது. அதே சமயத்தில் அந்த முகத்தின் அழகும் அவன் கண்ணுக்குத் தெரியாமல் போகவில்லை. மூடியிருந்த கண்கள் கூம்பிய நீலோற்பல மொட்டுக்களை அவனுக்கு ஞாபகப்படுத்தின. ஒரு கொசுத்தேனீ அம்முகத்தினருகில் வந்து அப்போது வட்டமிட்டது. "இந்த முகத்தைத் தாமரை மலர் என்று எண்ணித்தான் இந்தத் தேனீ வட்டமிடுகிறது" என்று நினைத்தான்.

வெறுமே இப்படிப்பட்ட வர்ணனைக் கற்பனைகளில் அவன் அதிக காலம் கடத்தி விடவில்லை. 'தூங்குகிறவளாயிருந்தால் இவ்வளவு சமீபத்தில் நாம் வந்து நிற்கும் போது விழித்துக் கொள்ளாமல் இருப்பாளா? மூர்ச்சையாகத்தான் இருக்கவேண்டும்' என்று தீர்மானித்துக் கொண்டு ஓடைக் கரைக்கு ஓடினான். கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து எடுத்துக் கொண்டு ஒரு நொடியில் ஓடி வந்தான். அந்தத் தண்ணீரைப் பிழிந்து முகத்தில் தெளித்தவுடனே, அவள் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து முகத்தைத் துடைத்துக் கொண்டதோடல்லாமல், மகுடபதியைப் பார்த்துக் கலகல வென்று சிரிக்கவும் தொடங்கினாள். மகுடபதிக்கு முதலில் சிறிது வெட்கமாயும் கோபமாயும் இருந்தது. ஆனால் அவளுடைய கலகலப்பான இனிய சுபாவமும், சாதுரியமான பேச்சும் அதை மாற்றிவிட்டன. முகத்தின் மோகன சௌந்தரியத்தோடு, கவிகள் வர்ணிப்பது போல் காதளவு நீண்ட கண்களின் காந்த சக்தியும் சேர்ந்துவிட்டால், பிறகு கேட்பானேன்? அந்த மரத்தடியிலேயே நிம்மதியாக உட்கார்ந்து இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

மகுடபதி அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிய விரும்பினான். அவளோ தன்னைப் பற்றி ஒன்றும் அதிகமாய்ச் சொல்லாமல் மகுடபதியைப் பற்றியும் அவன் அப்போது செய்த வேலையைப் பற்றியும் மூச்சுவிடாமல் கேள்வி கேட்டு அவனைத் திணற அடித்தாள். "ஆறு மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தேன்" என்று மகுடபதி சொன்னபோது, "இது ஒரு பிரமாதமா? நான் மூன்று வருஷமாக ஜெயிலில் இருக்கிறேனே? அதோ அந்த வீடுதான் என் ஜெயில்" என்று அவள் சொன்னாள். இதைக் கேட்ட மகுடபதிக்கு மனதை என்னமோ செய்தது. அதைப்பற்றி மேலும் விசாரிப்பதற்குள் அவள் பேச்சை மாற்றிவிட்டாள். மகுடபதி இன்னொரு சமயம் பேச்சினிடையே "பாரதத் தாயின் விடுதலைக்காகத் தான் நாங்கள் எல்லோரும் பாடுபடுகிறோம்" என்றான். அப்போது அந்தப் பெண் பெருமூச்சுடன், "என்னை யார் வந்து எப்போது விடுதலை செய்யப் போகிறார்களோ தெரியவில்லை!" என்றாள். "நான் செய்கிறேன்; தேசம் விடுதலையடைந்தவுடனே நானே வந்து உன்னை விடுதலை செய்கிறேன்" என்று மகுடபதி பளிச்சென்று பதில் சொன்னான். "இந்த வார்த்தை சத்தியமா?" என்று அவள் கேட்டாள். "சத்தியம்" என்று மகுடபதி உறுதி கூறி, "ஆனால், நீ உன்னைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேனென்கிறாயே?" என்று கேட்டான். இந்தச் சமயத்தில் சற்றுத் தூரத்தில் மோட்டார் வண்டியின் ஹாரன் சப்தம் கேட்டது. "ஐயோ! சித்தப்பா வருகிறார், உன்னையும் என்னையும் சேர்த்துக் கண்டால் இங்கேயே கொலை விழுந்துவிடும்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் எழுந்து விரைந்து போய் மரங்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டாள்.

'அந்தப் பெண் தானா இவள்? அல்லது நமக்குத்தான் சித்தப்பிரமையா' என்று மகுடபதி மச்சுப்படி ஏறும்போது சிந்தனை செய்தான். அடடா! தன்னுடைய பெயர் என்ன என்று கூடச் சொல்லாமற் போய்விட்டாள்? செந்திரு! - என்ன அழகான, அபூர்வமான பெயர்! அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்கு இவ்வளவு அழகான பெயர் யார் வைத்திருக்க முடியும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:31 am

நான்காம் அத்தியாயம் - கத்திக் குத்து

மச்சுப் படிகளில் ஏறி மேல்மாடித் தளத்தை அடைந்ததும், மகுடபதி சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு பெரிய ஹாலும், அதன் ஒருபுறத்துச் சுவரில் இரண்டு வாசற்படிகளும் காணப்பட்டன. திறந்திருந்த வாசற்படி வழியாகப் பார்த்தால், இருளடைந்த அறை ஒன்று தோன்றிற்று. ஹாலின் மத்தியில் ஒரு மேஜையும், அதைச் சுற்றி நாலு நாற்காலிகளும் இருந்தன. ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக ஒரு பழைய சோபா கிடந்தது. தரையும் மேஜை நாற்காலிகளும், சோபாவும் புழுதியடைந்து கிடந்தன. சில இடங்களில் மட்டும் புழுதி கலைந்திருந்தது. இதனாலெல்லாம், அது வெகு நாளாகக் குடித்தனம் இல்லாத வீடு என்று ஊகிப்பது சாத்தியமாயிருந்தது. மேலேயிருந்து அழுக்கடைந்த மின்சார விளக்குகள் தொங்கின. அவற்றை ஏற்றி வெகு நாளாகியிருக்க வேண்டும். ஒருவேளை 'கரண்ட்'டே வரவதில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் அரிக்கன் லாந்தர் எதற்கு? இந்த ஹாலுக்கும் வெளிச்சம் அளித்தது ஒரு அரிக்கன் லாந்தர் தான். சோபாவின் மேல் ஹோட்டலிலிருந்து வாங்கி வந்த பட்சணப் பொட்டணங்கள் கிடந்தன. கீழே ஒரு டிரங்குப் பெட்டியும், கூஜாவும் காணப்பட்டன. சற்றுத் தூரத்தில் தரையில் படுப்பதற்கான சமுக்காளமும் விரித்துக் கிடந்தது.

இவ்வளவையும் மகுடபதி ஒரே நிமிஷத்தில் பார்த்துக் கொண்டான். ஓடைக் கரையில் தான் பார்த்த பெண்ணாயிருந்தால், என்னத்திற்காக இந்தக் குடியில்லாத வீட்டில் வந்து தனியாக இருக்கிறாள் என்று நினைத்தவண்ணம், ஜன்னல் பக்கம் நோக்கினான். அதுவரையில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த செந்திரு சட்டென்று கிழவன் பக்கம் திரும்பி, "பாட்டா! சீக்கிரம் வந்தாலல்லவா தேவலை? அவர்கள் மறுபடியும் திரும்பிப் போகிறார்கள்?" என்றாள். பெரியண்ணன் ஜன்னலண்டை போய், செந்திரு சுட்டிக் காட்டிய பக்கம் கூர்ந்து பார்த்தான். "ஒன்றும் தெரியவில்லையே, அம்மா!" என்றான். "உனக்கு ஏற்கனவே சாளேசுரம்; இந்த இருட்டிலே என்ன தெரியப் போகிறது? அதோ அந்தச் சந்து வழியாகத் திரும்புகிறார்கள், பார்!" என்றாள். மகுடபதியும் ஜன்னலுக்குச் சற்று தூரத்தில் நின்றபடியே உற்றுப் பார்த்தான். அவனுக்கும் ஒன்றும் புலனாகவில்லை.

"அவர்கள் யார் தெரியுமா, பாட்டா உனக்கு? பார்க்கிறதற்கே பயமாயிருந்தது. இவருக்கு மட்டும் கொஞ்சங்கூடப் பயமில்லை போலிருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே செந்திரு ஜன்னலண்டையிலிருந்து திரும்பினாள். தன்னை இவ்விதம் அவள் கேலி செய்தது கூட மகுடபதிக்குத் தெரியவில்லை. அச்சமயம் அவளுடைய முகத்தில் தவழ்ந்த குறுகுறுப்பான புன்னகையும் விஷமமான கடைக்கண் பார்வையும் அவ்வளவு தூரம் அவனை மயக்கிவிட்டன.

எல்லாரும் ஹாலின் நடுமத்திக்குப் போனார்கள். செந்திரு சமுக்காளத்தில் உட்கார்ந்தாள்.

"பாட்டா! எனக்குப் பசி பிராணன் போகிறது. வா, சாப்பிடலாம்" என்று சொல்லிக் கொண்டே சோபாவின் மேல் வைத்திருந்த பொட்டணங்களை எடுத்து வைத்துக் கொண்டு பிரிக்கத் தொடங்கினாள். பிரசித்திபெற்ற கோயமுத்தூர் ஜிலேபிகளையும் ரவைத் தோசைகளையும் பார்த்ததும் மகுடபதியின் நாக்கில் ஜலம் ஊறிற்று. பாவம்! அவன் காலையில் சாப்பிட்டதுதான். நிஜமாகவே அவனுக்குப் பசியினால் பிராணன் போய்க் கொண்டிருந்தது.

கிழவன், கூஜாவைக் கொண்டுபோய்ப் பக்கத்தில் வைத்துவிட்டு, மகுடபதியை நோக்கினான். செந்திரு கடைக் கண்ணால் மகுடபதியைப் பார்த்துக் கொண்டு, "பாட்டா! உன் சிநேகிதருக்குப் பயம் மட்டுந்தான் இல்லையா, பசியும் கிடையாதா என்று கேள். ஒருவேளை, நாம் தொட்டதை அவர் சாப்பிடுவாரோ, என்னமோ!" என்றாள் செந்திரு.

"ஏன் அம்மா, அப்படிச் சொல்லுகிறாய்? இவரும் நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்தான்; மேலும் இவர் காந்திக்காரராச்சே!" என்றான்.

"இந்த அழகான கையினால் விஷத்தைக் கொடுத்தாலும் சாப்பிடலாம்" என்ற மனோநிலையில் அப்போதிருந்தான் மகுடபதி. அவனும் அவர்களுக்குச் சமீபமாய் போய் உட்கார்ந்து கொண்டான்.

"அழகுதான், கவுண்டரே! எனக்கு இப்போது இருக்கும் பசியில், உங்களுக்கு ஒன்றும் பாக்கி வைக்க மாட்டேன். ஆமாம், இதையெல்லம் எப்போது வாங்கிக் கொண்டு வந்தாய், பாட்டா? போலீஸ் கலாட்டாவுக்கு முன்னாலேயே வாங்கிக் கொண்டு வந்தாயாக்கும்! சாயங்காலந்தான் ஹோட்டல் எல்லாம் மூடிவிட்டார்களே?"

அப்போது செந்திரு, மறந்துபோனதை திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல் திடுக்கிட்ட தோற்றத்துடன், "பாட்டா, நீ போன காரியத்தைச் சொல்லவேயில்லையே! கடுதாசியைக் கொடுத்தாயா?" என்று கேட்டாள்.

"நானும் மறந்து விட்டேனே, குழந்தை! பங்களாவைக் கண்டுபிடித்தேன். அவர்கள் ஊரில் இல்லையாம்; வீட்டுச் சேவகன் இருந்தான்..." என்று கிழவன் சொன்னவுடன், செந்திரு, "ஐயையோ!" என்று அலறினாள். அவள் முகத்திலிருந்த குறுகுறுப்பு, புன்னகையெல்லாம் மறைந்துவிட்டன. அந்த முகத்தில் இப்போது பீதியும், சொல்வதற்கு முடியாத கவலையும் காணப்பட்டன. இதைப் பார்த்த மகுடபதியும் பயந்து போனான்.

கிழவன் தொடர்ந்து, "நாளைக்கு அநேகமாக வந்து விடுவார்களாம். சேவகனிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன்" என்றான்.

"நிச்சயமாக நாளைக்கு வந்து விடுவார்களாமா?" என்று செந்திரு கேட்டாள்.

"நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்களாம். 'நிச்சயமாய் வருவார்களா?' என்று கேட்டதற்கு அந்த நாய் குலைக்க ஆரம்பித்துவிட்டது, பேசாமல் வந்து விட்டேன்."

"ஐயோ! பாட்டா! அவர்கள் நாளைக்காவது வராமல் போனால் நான் என்ன செய்வேன்? இதை யோசனை செய்யாமல் கிளம்பி விட்டேனே?" என்று அழுகை வரும் குரலில் செந்திரு சொன்னாள். அவள் கண்களில் நீர் தளும்பிற்று.

"நான் எத்தனையோ தடுத்துச் சொன்னேன்; நீ கேட்கவில்லை குழந்தை! இருந்தாலும் பழனியாண்டவன் இருக்கிறார். நீ வருத்தப்படாதே" என்றான் கிழவன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:31 am

இத்தனை நேரம் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த மகுடபதி ஆவலை அடக்க முடியாமல், "பாட்டா! என்ன சமாசாரம்? யாருக்கு கடுதாசி? எதற்கு? என்னிடம் சொல்லலாமென்றால், சொல்லு! இன்றைய தினம் நீங்கள் எனக்கு அடைக்கலம் கொடுத்து என் உயிரைக் காப்பாற்றினீர்கள். இது உண்மையான விஷயம். இதற்காக என்னை நீங்கள் பயந்தவன் என்று பரிகாசம் செய்தாலும் உண்மையை மறைப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை" என்று சொல்லி, செந்திருவைக் கடைக்கண்ணால் பார்த்தான். மறுபடியும் கிழவன் பக்கம் திரும்பி "என் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான். அப்போது உணர்ச்சி மிகுதியால் அவனுடைய தொண்டை அடைத்தது.

கிழவன் அப்போது செந்திருவை ஏறிட்டுப் பார்த்தான். "குழந்தை! இவரிடம் சொல்லலாமா? உன் அபிப்பிராயம் என்ன?" என்ற கேள்விகள் அவனுடைய பார்வையிலேயே இருந்தன.

செந்திரு, "பாட்டா! எனக்கு இவரை முன்பின் தெரியாது. உனக்கு நம்பிக்கையுள்ளவரா யிருந்தால் சொல்லு" என்றாள்.

"செந்திரு! இந்தத் தம்பிதான் என்னை மனுஷனாக்கியவர். அதற்கு முன்னால் நான் வெறும் மிருகமாயிருந்தேன். கோயமுத்தூர் ஜில்லாவிலேயே என்னைப் போலக் குடிகாரன் கிடையாது. அந்தக் கர்ம காண்டத்தை விட்டொழிக்கும்படி செய்த புண்ணியவான் இந்த மகுடபதிதான். ஒரு நாள் நல்ல போதையிலே நான் இருந்த போது இந்தப் பிள்ளை வந்து எனக்குப் புத்தி போதிக்க ஆரம்பித்தார். என் இடுப்பிலே செருகியிருந்த கத்தியை எடுத்து இவரைக் குத்தி விட்டேன். இவர் கைச்சட்டையை விலக்கினால், முழங்கையண்டை காயம் இன்னும் தெரியும்..."

இவ்விதம் சொல்லிப் பெரியண்ணன் மகுடபதியின் கையைப் பிடித்து, சட்டையை மேலே விலக்கினான். முழங்கைக்குக் கீழே ஒரு பெரிய காயத்தின் வடு தெரிந்தது.

செந்திரு அதைப் பார்த்துவிட்டு, பரிதாபத்துடன், "ஐயையோ! நீயா இப்படிச் செய்தே, பாட்டா? அப்புறம் என்ன ஆயிற்று?" என்று கேட்டாள்.

"ஆமாம், செந்திரு! போதையிலே இருக்கிற மனுஷன் என்ன வேணுமானாலும் செய்வான். அப்புறம் என்ன ஆச்சு என்றா கேட்கிறாய்! இரத்தம் கொட கொட வென்று கொட்டிற்று. இவர் நினைவு தப்பிக் கீழே விழுந்து விட்டார். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ப் போட்டார்கள். போலீஸ்காரர்கள் என்னை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போனார்கள். கேஸ் நடந்தது..."

"அது எப்படி, பாட்டா! சர்க்கார்தான் கள்ளுக்கடைக் கட்சியாயிற்றே? காந்திக் கட்சிக்காரரை நீ குத்தியதற்காக உன் பேரில் எப்படிக் கேஸ் போட்டார்கள்?" என்று செந்திரு கேட்டாள்.

அப்போது மகுடபதி குறுக்கிட்டு, "போன வருஷம் மட்டும் இதற்கு மாறாயிருந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் பிரகாரம் சர்க்காரே கள்ளுக்கடை மறியலை அனுமதித்திருந்தார்கள். மறியலின் போது கலாட்டா நடக்காமல் போலீஸ் பந்தோபஸ்து போட்டிருந்தார்கள்" என்று விளக்கிக் கூறினான்.

"சரி, அப்புறம் கேஸ் என்ன ஆயிற்று? உன்னைத் தண்டித்து விட்டார்களோ?"

"அதுதானே இல்லை! இந்தத் தம்பியை கோர்ட்டுக்குச் சாட்சிக்குக் கூப்பிட்டிருந்தார்கள். தம்பி போலீஸுக்குச் சாதகமாகச் சாட்சி சொல்லவில்லை. 'கிழவன் சும்மா கத்தியை ஓங்கினான். நான் அதைத் தடுத்தேன். அப்போது தவறிக் கத்தி பட்டுவிட்டது. கிழவன் பேரில் தப்பே இல்லை' என்று சொல்லிவிட்டார். என்னை ஜெயிலுக்கு அனுப்பாமலிருப்பதற்காக இந்தத் தம்பி பொய்ச் சாட்சி கூடச் சொன்னார்..."

"இல்லவே இல்லை, பாட்டா! நீ நிஜமாகவே நல்ல நினைவில் இருந்திருந்தால் என்னைக் குத்தியிருப்பாயா? போதையினாலேதானே செய்தாய்? அதற்காக, கள்ளுக்கடை வைத்திருக்கும் கவர்ன்மெண்டைத் தண்டிப்பதை விட்டு உன்னைத் தண்டிப்பதில் என்ன பிரயோசனம்?"

"தம்பி சாட்சி சொன்னதைக் கேட்டபோது நான் கோர்ட்டிலேயே அழுதுவிட்டேன். பழனியாண்டவர் அறிய இனிமேல் குடிப்பதில்லையென்று அங்கேயே சத்தியம் செய்தேன். பீடையை அது முதல் விட்டு ஒழித்து விட்டேன். தம்பி அப்படிச் சாட்சி சொல்லியிராவிட்டால் இத்தனை நாள் நான் ஜெயிலிலேயே இருப்பேன்" என்று சொன்னபோது, கிழவன் கண்கள் கண்ணீர் பொழிந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:32 am

ஐந்தாம் அத்தியாயம் - "நான் அனாதை"

பெரியண்ணன் தன்னுடைய கதையைச் சொல்லி முடித்துக் கண்ணீர் பொழிந்த போது, சற்று நேரம் அந்த மேல் மாடியில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

மகுடபதி தான் முதலில் பேசினான்.

"பாட்டா! நான் செய்தது ஒன்றும் பெரிய காரியமில்லை. நீ சபதத்தை நிறைவேற்றிக் குடியை விட்டிருக்கிறாயே, அதுதான் பெரிய காரியம்" என்றான்.

அப்போது கிழவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "தம்பி, தம்பி! 'பெரிய காரியம்' என்று சொல்லாதே, 'பெரிய காரியம்' என்றால் நம் ஊரிலே 'எழவு'க்குச் சொல்வார்கள். பிள்ளைகள் பட்டணத்துக்குப் படிக்கப் போய் நம்ம பேச்சைக் கூட மறந்து விடுகிறார்கள்" என்றான்.

"எனக்குப் பேச்சு சொல்லிக் கொடுக்கிறது அப்புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் பேச்சைச் சொல்லுங்கள். ஏதோ அபாயம், தலை போகிற விஷயம் என்று சொன்னீர்கள். வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறோமே?" என்றான் மகுடபதி.

கிழவன் செந்திருவின் முகத்தை நோக்கி, "நீ என்ன சொல்லுகிறாய், தாயே! இந்தத் தம்பியிடம் எனக்குப் பூரண நம்பிக்கை. உனக்கு இஷ்டமிருந்தால் இவரிடம் எல்லாவற்றையும் சொல்லி யோசனை கேட்கலாம்" என்றான்.

அப்போது செந்திரு, "உன் இஷ்டம், பாட்டா! நாமோ இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒத்தாசை வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் ஒத்தாசை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. ஒரு சமயம் இவர் மாதிரியேதான் ஒரு காந்திக் குல்லாக்காரர் என்னிடம் ரொம்ப ரொம்பக் கரிசனமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஜெயிலிலே இருந்ததாகச் சொன்னார். நானும் மூன்று வருஷமாக ஜெயிலிலேதான் இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். சீக்கிரத்தில் வந்து விடுதலை செய்கிறதாகச் சொல்லிவிட்டுப் போனார். ஒன்றரை வருஷம் ஆச்சு; அப்புறம் எட்டியே பார்க்கவில்லை. அதனால் தான் காந்திக் குல்லாக்காரர்களிடம் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது" என்று செந்திரு சொல்லிவந்தபோது, மகுடபதியின் உடம்பில் மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. செந்திரு கடைசி வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தன்னைக் கடைக்கண்ணால் நோக்கியதை அவன் பார்த்தான். அந்த அழகிய கரிய கண்களின் முனைகளில் நீர்த்துளிகள் துளித்து நிற்பதைக் கண்டான். தான் ஓடைக் கரையில் பார்த்த பெண் தான் இவள் என்பதையும், தன்னை அவளும் அறிந்து கொண்டாள் என்பதையும், அதற்குப் பிறகுதான் அவளைப் பார்க்க வரவில்லையென்ற கோபத்தினாலும் துக்கத்தினாலுந்தான் அப்படிப் பேசுகிறாள் என்பதையும் ஒரு நொடியில் அறிந்து கொண்டான்.

தழதழத்த குரலில், "நான் அப்போது சொன்னது என்ன? தேசம் விடுதலையான பிறகு உன்னை வந்து விடுதலை செய்வதாகத்தானே சொன்னேன்?" என்றான்.

"தேசம் இன்னும் விடுதலையாகவில்லையா?" என்றாள் செந்திரு.

மகுடபதிக்குச் சிரிப்பு வந்தது. அவன் கம்பராமாயணம் கேட்டிருந்தான். சீதை அயோத்தி நகரின் கேட்டை வாசலைத் தாண்டியதும், "காடு எங்கே?" என்று ராமனிடம் கேட்ட விஷயம் அவனுக்கு நினைவு வந்தது.

"தேச விடுதலை என்பது, அவ்வளவு சீக்கிரம் நடக்கக் கூடியதல்ல, போன வருஷம் தேச விடுதலை நெருங்கியிருந்ததாகத் தோன்றியது. இந்த வருஷம் அது வெகு தூரம் போய்விட்டது" என்றான்.

"அதனால்தான் அவ்வளவு தைரியமாக 'வந்து விடுதலை செய்கிறேன்' என்று சொன்னீர்கள் போலிருக்கிறது! 'நாளைக்கு கடன்' என்று பட்டிக்காட்டுக் கடைகளில் எழுதி வைக்கிறார்களே, அந்த மாதிரி!" என்று ஆத்திரத்துடன் பேசினாள்.

இந்தச் சம்பாஷணையின் விஷயம் பெரியண்ணனுக்குப் புரியவில்லை. இரண்டு பேர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"தம்பி! இதென்ன, குழந்தையை உனக்கு முன்னாலேயே தெரியுமா?" என்றான்.

செந்திரு, "ஆமாம், பாட்டா! ஒருநாள் நான் ஓடைக் கரையில் படுத்துக் கொண்டு, செத்துப் போவதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்த மனுஷர் வந்து 'நான் உன்னை விடுதலை செய்கிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனார். அப்புறம் திரும்பியே பார்க்கவில்லை" என்று குரோதம் பொங்கிய குரலில் கூறினாள்.

அப்போது மகுடபதி, "என்பேரில் தப்பு ஒன்றும் இல்லை. நீ சரியாக விவரம் சொல்லாமல் ஓடிப்போய் விட்டாய். உன் பெயரைக் கூடச் சொல்லவில்லை. இருந்தாலும் நான் உன்னை மறந்துவிடவில்லை. ஓயாமல் உன் ஞாபகமாகவே இருந்தேன். நீ சுட்டிக் காட்டிய வீட்டைப் பற்றித் தகவல் விசாரித்தேன். அது சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் வீடு என்று தெரிந்தது. அவருடைய வீட்டில் அவருடைய சொந்தப் பெண்கள் மூன்று பேரும் அவருடைய தமையனார் பெண்ணும் இருப்பதாகவும், அவரே சமீபத்தில் இரண்டாந்தாரம் கலியாணம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. இத்தனை பேரில் நீ யார் என்று நான் எப்படிக் கண்டுபிடிப்பது? அப்புறம் பல தடவை அந்த ஓடைக்கரைப் பக்கம் நான் வந்தேன். எவ்வளவோ நேரம் காத்திருந்தேன். உன்னைப் பார்க்க முடியவில்லை. நீ என்னை மறந்துவிட்டாய் என்றும் அன்று என்னிடம் சொன்னதெல்லாம் விளையாட்டுப் பேச்சு என்றும் எண்ணிக் கொண்டேன்" என்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக