புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 3%
bala_t
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
prajai
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
Kavithas
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
293 Posts - 42%
heezulia
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
6 Posts - 1%
prajai
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
5 Posts - 1%
manikavi
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:35 am

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) ZrtrPXg












ஈகரை தமிழ் களஞ்சியம்




தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:36 am

கிழ‌வியும் குழ‌வியும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)


கிழப் பாட்டி ஒருத்தி. பாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டு இருந்த இடத்திலேயே கிடப்பவள். ஆனால் இந்தப் பாட்டி அப்படி இல்லை. இவள் நின்ற இடத்தில் நிற்காமல் இந்தத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக்கொண்டே இருந்தாள். ஒரு குக்கிராமம் பாக்கியில்லாமல் ஊர் ஊராக, தெருத் தெருவாக ஓடிக்கொண்டேயிருந்தாள். அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு உற்சாக சக்தி இருந்தது. பாட்டி விஷயம் இப்படி இருக்கட்டும்.

குழந்தை ஒன்று. ‘கஷுக் முஷுக்’ என்று நல்ல ஆரோக்கியமாக இருக்கிற குழந்தை அது. குழந்தை என்றால் பொதுவாக என்ன பண்ணும்? துள்ளி விளையாடும். ஒரு க்ஷணம்கூட இருந்த இடத்தில் இருக்காமல் ‘துரு துரு’ என்று ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் இந்தக் குழந்தை இதற்கு நேர்மாறுதல். உட்கார்ந்த இடத்தைவிட்டு அது அசைவதில்லை.

வேடிக்கையான பாட்டி. வேடிக்கையான குழந்தை! குழந்தை மாதிரி பாட்டி ஓடிக் கொண்டிருக்கிறாள். பாட்டி மாதிரி குழந்தை இருந்த இடத்தைவிட்டு நகராமல் உட்கார்ந்திருக்கிற‌து.

ஆனால் அந்த‌ப் பாட்டி த‌ள்ளாத‌ வய‌சிலும் அத்த‌னை உற்சாகத்தோடு ஓடி ஆடிக் கொண்டிருந்ததற்கு இந்தக் குழந்தைதான் கார‌ண‌ம். இந்த‌க் குழந்தை கொடுத்த‌ ச‌க்தியினால்தான் அவ‌ள் அவ்வ‌ள‌வு காரிய‌ம் செய்தாள்.

இந்த‌ப் பிள்ளை யார்?

“பிள்ளை” என்றாலே அவ‌ர்தான். ம‌ரியாதையாக‌ப் “பிள்ளையார்” என்கிறோமே, அவ‌ர்தான் அந்த‌க் குழ‌ந்தை. யாராவ‌து ஒருத்த‌ர் இட‌த்தைவிட்டு ந‌க‌ராம‌ல் இருந்தால் ‘க‌ல்லுப் பிள்ளையார் மாதிரி” என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌ம்!

ச‌க‌ல‌ உல‌கங்க‌ளுக்கும் தாய் த‌ந்தையான‌ பார்வ‌தி ப‌ர‌மேச்வ‌ர‌ர்க‌ளின் மூத்த‌ பிள்ளை அவ‌ர். அத‌னால்தான் த‌மிழ் நாட்டில் அவ‌ரைப் “பிள்ளையார்” என்று சொல்கிறோம்.

ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் இவ‌ரை க‌ணேஷ் (க‌ணேச‌ர்), க‌ண‌ப‌தி என்பார்க‌ள். சிவ‌பெருமானின் ப‌டைக‌ளுக்கு, பூதகணங்களுக்கெல்லாம் பிள்ளையார்தான் தலைவர், ஈச‌ர், ப‌தி. அதனால் க‌ணேச‌ர், க‌ண‌ப‌தி என்று பெய‌ர். இவ‌ருக்கு மேலே த‌லைவ‌ர் யாரும் கிடையாது. எல்லாவ‌ற்றுக்கும் முந்திய‌வ‌ராக‌, முத‌ல்வ‌ராக‌, மேலாக‌ இருப்ப‌வ‌ர் அவர். அவ‌ருக்கு மேலே இன்னொரு த‌லைவ‌ர் (நாய‌கர்) இல்லை. அத‌னால் ‘விநாய‌க‌ர்’ என்றும் பெய‌ர். ‘வி’ என்ப‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒன்றை உய‌ர்த்திக் காட்டுவ‌த‌ற்கும் சில‌ சம‌ய‌ங்க‌ளில் ஒன்றுக்கு எதிர்ம‌றையான‌தைக் (opposite) குறிப்பிட‌வும் வார்த்தைக்கு முத‌லில் வ‌ரும். இங்கே “நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர்” என்று எதிர்ம‌றையாக‌ வ‌ருகிற‌து. த‌ம‌க்குமேல் ஒரு நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர் என்று அர்த்த‌ம்.

அவ‌ர் செய்யாத‌ அநுக்கிர‌ஹ‌ம் இல்லை. குறிப்பாக‌, ந‌மக்கு வ‌ருகிற‌ விக்கின‌ங்க‌ளை எல்லாம் அழிக்கிற‌வ‌ர் அவ‌ர்தான். ஆகையால் ‘விக்நேச்வ‌ர‌ர்’ என்றும் அவ‌ரை சொல்கிறோம். எந்த‌ காரிய‌த்துக்கும் த‌டை வ‌ராம‌ல் இருப்ப‌த‌ற்காக‌வே முத‌லில் இவ‌ரை பிரார்த்திக்கிறோம். முத‌ல் பூஜை இவ‌ருக்குத்தான்.

க‌ஜ‌முக‌ன், க‌ஜ‌ராஜ‌ன் இப்ப‌டியெல்லாம் அவருக்குப் பெய‌ர் இருக்கிற‌து. யானை முக‌த்தோடு அவ‌ர் விள‌ங்குவ‌தால் இந்தப் பெய‌ர்க‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌.

யானைக்குத் தேக‌ப‌ல‌ம் மிக‌வும் அதிக‌ம். ஆனாலும் அது சிங்க‌ம், புலி போல் ம‌ற்ற‌ப் பிராணிக‌ளை ஹிம்சிப்ப‌தில்லை. ப‌ர்மா, ம‌லையாள‌ம் மாதிரி இட‌ங்க‌ளில் ஜ‌ன‌ங்க‌ளுக்காக‌ யானைக‌ள் தான் பெரிய‌ பெரிய‌ காரிய‌ங்க‌ளைச் செய்கின்ற‌ன‌. பிள்ளையாரும் இப்ப‌டித்தான் ரொம்ப‌ ச‌க்திவாய்ந்த‌வ‌ர்; ஆனாலும் அதைக் காட்டிக் கெடுத‌ல் செய்யாம‌ல் ந‌ம‌க்கெல்லாம் ந‌ன்மையே செய்துகொண்டிருப்பார். யானைக்கு புத்திகூர்மை, ஞாப‌க‌ச‌க்தி எல்லாம் மிக அதிக‌ம். பிள்ளையார் அறிவே வ‌டிவான‌வ‌ர்.

யானை என்ன‌ செய்தாலும் அழ‌காயிருக்கிற‌து. அது அசக்கி அச‌க்கி ந‌ட‌ப்ப‌து, சாப்பிடுவ‌து, காதை ஆட்டுவ‌து, தும்பிக்கையைத் தூக்குவ‌து – எல்லாமே பார்க்க‌ ஆன‌ந்த‌மாயிருக்கிற‌து. அத‌ன் முகத்தைப் பார்த்தாலே ப‌ர‌ம‌ சாந்தமாக இருக்கிற‌து. சின்ன‌ க‌ண்க‌ளான‌லும், அமைதியாக‌, அன்பாக‌ இருக்கின்ற‌ன‌. மிருக‌ வ‌ர்க்கத்தில் நாம் பார்த்துக்கொண்டேயிருப்ப‌து யானையைத்தான்.

ம‌னித‌வ‌ர்க்க‌த்தில் குழ‌ந்தை என்றால் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க‌ வேண்டும் போல் தோன்றுகிற‌து. கெட்ட‌ எண்ண‌மே இல்லாதது குழ‌ந்தை. ஆன‌ந்த‌மாக‌ விளையாடிக்கொண்டு இருப்ப‌து குழ‌ந்தை. அதைப் பார்த்தாலே நம‌க்கும் ஸந்தோஷ‌மாக‌ இருக்கிற‌து.

பிள்ளையார் யானைக்கு யானை; குழ‌ந்தைக்குக் குழ‌ந்தை. அதனால் அவ‌ரை எத்த‌னை பார்த்தாலும் போதும் என்ற‌ திருப்தி உண்டாவ‌தில்லை. க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ம் இல்லாத‌ குழ‌ந்தை ம‌னசு அவ‌ருக்கு. குழ‌ந்தை போல் ந‌ல்ல‌ உள்ள‌ம்; யானை மாதிரி தேக‌ பல‌ம், புத்தி கூர்மை; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ தெவிட்டாத‌ அழ‌கு; ஆன‌ந்த‌ம் பொங்கிக் கொண்டிருக்கிற‌ ரூபம்.

சேராத‌தெல்லாம் அவ‌ரிட‌ம் ஸ்வபாவமாக‌ச் சேருகிற‌து. க‌ழுத்துக்கு கீழே குழ‌ந்தை; ம‌னித‌வ‌ர்க்க‌ம். மேலே முக‌ம் யானை; மிருக‌வ‌ர்க்க‌ம். ஆனால், அவ‌ர் வாஸ்த‌வ‌த்தில் தேவ‌வ‌ர்க்க‌ம். தேவ‌ர்க‌ளுக்குள் முத‌ல் பூஜை பெறும் தெய்வ‌மாக‌ இருக்கிறார்.

குழ‌ந்தையாக‌ இருந்துகொண்டே மஹா பெரிய‌ த‌த்வ‌ங்க‌ளுக்கு ரூப‌கமாக‌ (Personification) இருக்கிற‌ பிள்ளையாரிட‌ம் ப‌ல‌ தினுசான‌ மாறுபாடுக‌ள் (Contrasts). இதிலே ஓர் அழ‌கு. வித்தியாச‌மான‌தெல்லாம் அவ‌ரிட‌ம் சேர்ந்திருப்பதாலேயே அவ‌ரிட‌ம் எல்லாம் ஐக்கிய‌ம் என்றாகிற‌து. உதார‌ண‌மாக‌, ஒரு கையில் ஒடிந்த‌ த‌ந்த‌ம் என்றால், இன்னொரு கையிலே கொழுக்க‌ட்டை வைத்திருக்கிறார். அத‌ற்குள் தித்திப்பாக‌ இருக்கிற‌ வ‌ஸ்துவுக்குப் பெய‌ர் பூர்ண‌ம். பூர்ண‌ம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற‌ த‌ந்த‌ம் மூளி; இன்னொன்றிலோ முழுமை. எல்லாம் நிறைந்த‌ பூர‌ண‌ப் பொருள் பிள்ளையாரேதான். இதை அறிந்துகொள்வ‌துதான் பேரான‌ந்த‌ம். ஆன‌ந்த‌த்திற்கு இன்னொரு பேர் மோத‌ம், மோத‌க‌ம். கொழுக்க‌ட்டைக்கும் மோத‌க‌ம் என்றே பெய‌ர்.

இன்னொரு மாறுபாடு: பிள்ளையார் குழ‌ந்தை. அத‌னால் பிர‌ம்ம‌ச்சாரி. ஆனால் இவ‌ர் யானையாக‌ வ‌ந்து வ‌ள்ளியை விர‌ட்டிய‌தால்தான் அவ‌ள் ஸுப்ரம்ம‌ண்ய‌ ஸ்வாமியை க‌ல்யாண‌ம் செய்துகொண்டாள்! இன்றைக்கும் க‌ல்யாண‌ம் ஆக‌வேண்டுமானால் இந்த‌ க‌ட்டைப் பிர‌ம்ம‌ச்சாரியை வேண்டிக்கொள்கிறார்க‌ள். இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்? அவ‌ர் இருக்கிற‌ நிலையில் அவ‌ருக்கு வேண்டாத‌தையெல்லாம் கூட‌, அவ‌ர் நிலைக்கு மாறாக‌ இருக்கிற‌ ந‌ம‌க்குப் ப‌ர‌ம‌ க‌ருணையோடு கொடுத்துக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தூக்கிவிடுக்கிறார்.

‘க‌ல்லுப் பிள்ளையார்’ என்ப‌த‌ற்கேற்கத் தாம் உட்கார்ந்த‌ இட‌த்தைவிட்டு அசையாம‌லே இருந்தாலும் ப‌க்த‌ர்க‌ளை ஒரே தூக்காக‌ தூக்கி உச்ச‌த்தில் சேர்த்து விடுவார். அவ்வையாரை இப்ப‌டிததான் க‌டைசியில், தாம் இருக்கிற‌ இட‌த்திலிருந்தே தும்பிக்கையால் ஒரு தூக்குத் தூக்கி கைலாஸத்திலேயே கொண்டு சேர்த்து விட்டார்!

பிள்ளையாரைப் பார்க்க‌ப் பார்க்க‌ ந‌ம‌க்கு மேலே மேலே இப்ப‌டிப் ப‌ல‌ த‌த்துவ‌ம் தோன்றுகிற‌து. இதுவும் ந‌ம் அறிவின் அள‌வுக்கு எவ்வ‌ள‌வு எட்டுகிற‌தோ அவ்வ‌ள‌வுதான். வாஸ்த‌வ‌த்தில் ந‌ம‌க்குத் தெரிவ‌த‌ற்கும் அதிக‌மாக‌, அவ‌ரிட‌ம் பெருமைக‌ள் அள‌விட‌ முடியாம‌ல் இருக்கின்ற‌ன‌.

‘குழ‌ந்தையும் தெய்வ‌மும் கொண்டாடும் இட‌த்திலே’ என்பார்க‌ள். தெய்வ‌மே குழ‌ந்தையாக‌ வ‌ந்துவிட்ட‌து பிள்ளையாரில். அத‌னால் குழ‌ந்தை ஸ்வாமியாக‌க் கொண்டாடுகின்ற‌ த‌மிழ்நாட்டில், ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாம‌ல் எங்கு பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டு அநுக்கிர‌ஹ‌ம் ப‌ண்ணிக் கொண்டிருக்கிறார்.

அவ‌ர் செய்த‌ அநுக்கிர‌ஹ‌த்தினால்தான் அந்த‌ப் பாட்டி தமிழ் நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாள்.

அந்த‌ப் பாட்டி யார் என்றால், அவ‌ள்தான் அவ்வையார். பிள்ளையார் – அவ்வையார்.



தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:39 am


த‌மிழ் நாட்டின் சிற‌ப்பு

அவ்வையாரைவிட‌த் த‌மிழ் நாட்டுக்கு உப‌கார‌ம் செய்த‌வ‌ர் இல்லை. ஆயிர‌ம் கால‌மாக‌ இந்த‌த் தேச‌த்தில் ஒழுக்க‌மும் ப‌க்தியும் இருந்து வ‌ந்திருக்கிற‌தென்றால் அது முக்கிய‌மாக‌ அவ்வையாரால்தான்.

முளைக்கிற‌போதே, குழ‌ந்தைக‌ளாக‌ இருக்கிற‌போதே, ந‌ல்ல‌ ஒழுக்க‌த்தையும், ப‌க்தியையும், உண்டாக்கி விட்டால்தான் பிற‌கு அவை நிலைத்து நிற்கும். தமிழ் நாட்டில் எத்த‌னையோ ம்காக‌விக‌ள், ப‌க்த‌ர்க‌ள் இருந்திருக்கிறார்க‌ள். ஆனால் அவ‌ர்க‌ள் பாடிய‌து முக்கிய‌மாக‌ப் பெரிய‌வ‌ர்க‌ளுக்குத்தான். அவ்வையாருக்கு அவ‌ர்க‌ளைவிட‌க் க‌விதா ச‌க்தியோ, ப‌க்தியோ குறைச்ச‌ல் இல்லை. அவ‌ள் ரொம்ப‌ப் பெரிய‌வ‌ள்; ஞானி; யோக‌ சாஸ்திர‌த்தில் க‌ரை க‌ண்ட‌வ‌ள். ஆனாலும் அவ‌ள் குழ‌ந்தைக‌ளை ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக்க‌ வேண்டும் என்ப‌தில் முக்கிய‌மாக‌க் க‌வ‌ன‌ம் வைத்து, அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ குண‌ங்க‌ளையும், ஒழுக்கத்தையும், நீதியையும், தெய்வ பக்தியையும் போத‌னை செய்து பாடினாள்.

பேர‌க் குழ‌ந்தைக‌ள் ந‌ன்றாக‌ இருக்க‌ வேண்டுமே என்ற‌ க‌ரிச‌ன‌த்தோடு ஒரு பாட்டி ந‌ல்ல‌து சொல்வ‌து மாதிரி அவ்வைப் பாட்டி அத்த‌னை த‌மிழ்க் குழ‌ந்தைக‌ளுக்கும் உப‌தேச‌ம் செய்தாள். அவ‌ளுடைய‌ அன்பின் விசேஷ‌த்தால் அவ‌ளுக்க‌ப்புற‌ம் எத்தனையோ தலைமுறைக‌ள் ஆன‌பிற‌கு, இப்போதும் நாம் குழ‌ந்தையாக‌ப் ப‌டிக்க‌ ஆரம்பிக்கிற‌ போதே, அவ‌ளுடைய‌ ‘ஆத்திசூடி’தான் முத‌லில் வ‌ருகிற‌து.

முத‌ல் பூஜை பிள்ளையாருக்கு; முத‌ல் ப‌டிப்பு அவ்வையார் பாட‌ல்.

இத்தனை ஆயிர‌ம் வ‌ருஷ‌ங்க‌ளாக‌ அவ‌ளுடைய வார்த்தை எப்ப‌டி அழியாம‌ல் தொட‌ர்ந்து வ‌ருகிற‌து என்றால் அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ளுடைய‌ வாக்கின் ச‌க்திதான். ப‌ர‌ம‌ ச‌த்திய‌மான‌ ஒன்றை, நிறைந்த‌ அன்போடு சொல்லிவிட்டால், அப்ப‌டிப்ப‌ட்ட‌ சொல் ஆயிர‌ம் கால‌மானாலும் அழியாம‌ல் நிற்கிற‌து. அவ்வை இப்ப‌டி அன்போடு உண்மைக‌ளை உப‌தேசித்தாள். ந‌ம்மில் க‌ம்ப‌ர், புக‌ழேந்தி, இள‌ங்கோ போன்ற‌ க‌விக‌ளைப் ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் இருக்க‌லாம். ஆனால் அவ்வை வாக்கு ஒன்றாவ‌து தெரியாத‌வ‌ர் இருக்க முடியாது.

அவ்வையாருக்கு இத்த‌னை வாக்கு ச‌க்தி எங்கேயிருந்து வ‌ந்த‌து? வாக்குச் ச‌க்தி ம‌ட்டும் இல்லை; அவ‌ளுக்கு ரொம்ப‌ தேக‌ ச‌க்தியும் இருந்திருக்கிற‌து. அத‌னால்தான் ‘ஐயோ, தமிழ்க் குழ‌ந்தை ஒன்றுக்குக்கூட‌ ந‌ம் வாக்கு கிடைக்காம‌ல் போக‌க் கூடாதே! ஒவ்வொரு குழ‌ந்தைக்கும் நாம் இந்த‌ உப‌தேச‌ங்க‌ளைக் கொடுக்க‌ வேண்டுமே!’ என்ற‌ ப‌ரிவோடு அந்த‌ப் பாட்டி ஒரு கிராம‌ம் மிச்ச‌ம் இல்லாம‌ல் ஓடி ஓடிப் போய் குழ‌ந்தைக‌களைத் தேடித் தேடி அவ‌ர்க‌ளுக்குத் த‌ன் நூல்க‌ளைப் ப‌ரிந்து ப‌ரிந்து போதித்தாள். இந்த‌ தேக‌ ச‌க்தி அவ‌ளுக்கு எப்ப‌டி வ‌ந்த‌து? பிள்ளையார்தான் அவளுக்கு இந்தச் சக்திகளையெல்லாம் கொடுத்தார்.

அவ்வையார் பெரிய‌ பிள்ளையார் ப‌க்தை. அந்த‌க் குழ‌ந்தை ஸ்வாமியை வேண்டிக் கொண்டுதான் அவ‌ள் சின்ன‌ வ‌ய‌சிலேயே கிழ‌வியாகிவிட்டாள். ஏன் அப்ப‌டிச் செய்தாள்? வாலிப‌மாக‌வும், ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தாக‌வும் இருந்தால் ஒருத்தனைக் க‌ல்யாண‌ம் செய்து கொண்டு குடித்த‌ன‌ம் ந‌ட‌த்த‌ வேண்டியிருக்கும். ப‌க்திக்குக் குடும்ப வாழ்க்கை இடையூறு என்ப‌தாலேயே, இடையூறுக‌ளை எல்லாம் போக்கும் விக்நேச்வ‌ர‌ரை வேண்டிக்கொண்டு கிழ‌வியாகிவிட்டாள்.

ஸுப்ர‌ம்ம‌ண்ய‌ ஸ்வாமிக்குக் க‌ல்யாண‌மாக‌ ஸஹாய‌ம் ப‌ண்ணின‌ பிள்ளையார் இவ‌ளைக் க‌ல்யாணமேயில்லாத‌ பாட்டி ஆக்கினார்! யாருக்கு எதைத் த‌ர‌வேண்டுமோ அதைத் த‌ருவார். இவ‌ளைச் சிறு பிராய‌த்திலேயே கிழ‌வியாக்கிவிட்டார். ஆனால் அவ‌ர் குழ‌ந்தை ஸ்வாமி அல்ல‌வா? அத‌னால், இவ‌ள் த‌ன்னிட‌ம் ம‌ட்டும் எப்போது பார்த்தாலும் ப‌க்தியாக‌ இருந்தால் போதாது, இவ‌ளால் எல்ல‌க் குழ‌ந்தைக‌ளும் ந‌ன்மை பெற‌ வேண்டும் என்று நினைத்தார். ஒரு சின்ன‌க் குடும்ப‌ம் வேண்டாம் என்று கிழ‌வி ஆன‌வ‌ளை, அத்த‌னை குழ‌ந்தைக‌ளையும் கொண்ட‌ பெரிய‌ தமிழ் நாட்டுக் குடும்ப‌த்துக்கே உப‌தேச‌ம் செய்கிற‌ பாட்டியாக்கிவிட்டார்!

அவ‌ளும் ஸ‌ந்தோஷ‌மாக‌ அந்த‌க் காரிய‌த்தைச் செய்தாள். மாறி மாறி பிள்ளையாரைத் தியானித்துப் பூஜிப்ப‌தும், குழ‌ந்தைக‌ளுக்கெல்லாம் உப‌தேச‌ம் ப‌ண்ணுவ‌துமாக‌த் த‌ன் வாழ்க்கையைக் க‌ழித்தாள்.

அந்த‌ப் பாட்டி அன்றைக்குச் சுற்றினாள். இன்றை‌க்கு நானும் எத்த‌னையோ சுற்றியிருக்கிறேன். அவ‌ள் த‌மிழ் நாடு ம‌ட்டும் சுற்றினாள். நான் இன்னும் ம‌லையாள‌ம், தெலுங்குதேச‌ம், பெங்கால், ஹிந்துஸ்தானி தேச‌ம் என்று ப‌ல‌ இட‌ங்க‌ள் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் நான் பார்க்காம‌ல் இந்த‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பார்க்கும் விசேஷ‌ம் என்ன‌வென்றால், த‌மிழ்நாடு ஒன்றிலேயே இப்ப‌டிச் ச‌ந்து பொந்து, ம‌ரத்த‌டி, ஆற்ற‌ங்க‌ரை எங்கே பார்த்தாலும் ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்ப‌துதான்! த‌மிழ் நாட்டைவிட்டுக் கொஞ்ச‌ம் தாண்டிப் போனால்கூட‌ இப்ப‌டிக் காணோம்!

பிள்ளையார் த‌ம‌க்குப் பெரிசாக‌ ராஜ‌கோபுர‌ம், பிராகார‌ம் க‌ட்டிக் கோயில் எழுப்ப‌வேண்டும் என்று நினைக்க‌வில்லை. சின்ன‌தாக‌ ஒரு ச‌ந்நிதி வைத்துவிட்டாலும் அவ‌ருக்குப் போதும். த‌க‌ர‌க் கொட்ட‌கை போட்டால்கூட‌ அவ‌ருக்குத் திருப்திதான்! அதுகூட‌ வேண்டாம்! ஒரு க‌ட்டிட‌மும் கூரையும் இல்லாம‌ல் வான‌ம் பார்க்க‌ அர‌ச‌ம‌ர‌த்த‌டியில் அவ‌ர் பாட்டுக்கு அம‌ர்ந்து அநுக்கிர‌ஹ‌ம் ப‌ண்ணிக்கொண்டிருப்பார். ஆற்றங்க‌ரையில் எங்கே பார்த்தாலும் ந‌ன்றாக‌ உட்கார்ந்து கொண்டு ஆன‌ந்த‌மாக‌ இருப்பார்.

இந்த‌த் த‌மிழ்த் தேச‌த்தில் ம‌ட்டும் ஏன் இந்த‌ விசேஷ‌ம் என்று கேட்டால், அவ்வையாருடைய‌ விசேஷம்தான் இது என்று தோன்றுகிற‌து. அவ‌ள் த‌மிழ் நாட்டில் ஓடாத‌ இட‌மில்லை அல்ல‌வா? அவ‌ள் போன‌ இட‌த்திலெல்லாம் அவ‌ளுடைய‌ இஷ்ட‌ தெய்வ‌மான‌ பிள்ளையாரும் வ‌ந்து உட்கார்ந்து கொண்டு விட்டார்!

த‌மிழ் நாட்டின் சிற‌ப்புக்க‌ள் என்று புஸ்த‌க‌ங்க‌ளில் எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ள் போடுகிறார்க‌ள். ஆனால் என‌க்குத் தெரிகிற‌ பெரிய‌ சிற‌ப்பு இங்கே எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கிற‌துதான்.



தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:40 am

உல‌குக்கெல்லாம் சொந்த‌மான‌வ‌ர்

பிள்ளையார் ஏழை எளிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ஸ்வாமி. ம‌ஞ்ச‌ள் பொடியிலும், க‌ளிம‌ண்ணிலும், சாணியிலும் கூட‌ எவ‌ரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிட‌லாம். அவ‌ர் எளிதில் ஸந்தோஷ‌ப்ப‌டுகிற‌வ‌ர். எங்கே, எப்ப‌டி, எதில் கூப்பிட்டாலும் உட‌னே வ‌ந்து அந்த‌க் க‌ல்லோ, க‌ளிம‌ண்ணோ அத‌ற்குள்ளிருந்துகொண்டு அருள் செய்வார். அவ‌ரை வ‌ழிப‌ட‌ நிறைய‌ சாஸ்திர‌ம் படிக்க‌வேண்டும் என்ப‌தில்லை. ஒன்றும் ப‌டிக்காத‌வ‌னுக்கும், அவ‌ன் கூப்பிட்ட‌ குர‌லுக்கு வ‌ந்துவிடுவார்.

‘ம‌ற்ற‌ தேவ‌தா விக்கிர‌ஹ‌ங்க‌ளில் ஸாங்கோபாங்க‌மாக‌ப் பிராண‌ப் பிரதிஷ்டை என்று ப‌ண்ணி, அவ‌ற்றில் அந்த‌ந்த‌ தேவ‌தைக‌ளின் ஜீவ‌ க‌லையை உண்டாக்குவ‌து போல் பிள்ளையாருக்குப் ப‌ண்ண‌ வேண்டுமென்ப‌தில்லை. பாவித்த மாத்திர‌த்தில் எந்த‌ மூர்த்தியிலும் அவ‌ர் வ‌ந்துவிடுகிறார்’. என்று சொல்வ‌துண்டு.

ம‌ற்ற‌ ஸ்வாமிக‌ளைத் த‌ரிச‌ன‌ம் செய்வ‌து என்றால், நாம் அத‌ற்காக‌ ஒரு கால‌ம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்ச‌னை சாம‌ன்க‌ள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போக‌ வேண்டியிருக்கிற‌து. கோயிலுக்குப் போனாலும் நேரே அந்த‌ ஸ்வாமியிட‌ம் போய்விட‌ முடியாது. பிராகார‌ம் சுற்றிக்கொண்டு உள்ளே போக‌வேண்டும். அப்போதும் கூட‌ ஸ்வாமிக்கு ரொம்ப‌ப் ப‌க்க‌த்தில் போக‌க் கூடாது. கொஞ்ச‌ம் த‌ள்ளித்தான் நிற்க‌ வேண்டும். பிள்ளையார் இப்ப‌டி இல்லை. எந்த‌ ச‌ம‌ய‌மானாலும் ச‌ரி, நாம் ஆபீஸுக்கோ, ஸ்கூலுக்கோ, க‌டைக்கோ போய் வ‌ருகிற‌போதுகூட‌, தெருவிலே த‌ற்செயலாக‌த் த‌லையைத் தூக்கினால், அங்கே ஒரு முக்கில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்! அவ‌ரைப் பார்த்த‌மாத்திர‌த்தில் நாமாக‌ நெற்றியில் குட்டிக் கொண்டு ஒரு தோப்புக்க‌ர‌ண‌ம் போட்டுவிட்டு ந‌டையைக் க‌ட்டுகிறோம். இதிலேயே ந‌ம‌க்குச் சொல்ல‌த் தெரியாத‌ ஒரு நிம்ம‌தி, ஸ‌ந்தோஷ‌ம் உண்டாகிற‌து.

அவ‌ருக்குக் கோயில் என்று இருப்ப‌தே ஒரு அறைதான். அத‌னால் ஒரு பேத‌மும் இல்லாம‌ல் யாரும் கிட்டே போய்த் த‌ரிசிக்க‌ முடிகிற‌து. எல்லோருக்கும் அவ‌ர் ஸ்வாதீன‌ம்! பிராகார‌ங்க‌ள் எல்லாம் தாண்டி உள்ளுக்குள்ளே உட்கார்ந்திருக்கிற‌ ஸ்வாமிக‌ளைவிட‌, இப்ப‌டி எங்கே பார்த்தாலும் ந‌ட்ட ந‌டுவில் உட்கார்ந்திருக்கிற‌ பிள்ளையார்தான் த‌ப்பாம‌ல் ஜ‌ன‌ங்க‌ளை இழுத்து தோப்புக் க‌ர‌ண‌ம் வாங்கிக் கொண்டுவிடுகிறார்!

பிள்ளையார் வ‌ழிபாட்டுக்கென்றே சில‌ அம்ச‌ங்க‌ள் இருக்கின்ற‌ன. சித‌று தேங்காய் போடுவ‌து, நெற்றியில் குட்டிக்கொள்வ‌து, தோப்புக் க‌ர‌ண‌ம் போடுவ‌து ஆகிய‌வை பிள்ளையார் ஒருவ‌ருக்கே உரிய‌வை.

பிள்ளையார் ச‌ந்நிதியில், இர‌ண்டு கைக‌ளையும் ம‌றித்து நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள‌வேண்டும். இப்ப‌டியே இர‌ண்டு கைகளையும் ம‌றித்துக் காதுக‌ளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் த‌ரையில் ப‌டுகிற‌ மாதிரி தோப்புக்க‌ர‌ண‌ம் போட‌வேண்டும். இவை எத‌ற்கு என்றால்:

யோக‌ சாஸ்திர‌ம் என்று ஒன்று இருக்கிற‌து. அதிலே ந‌ம் நாடிகளில் ஏற்ப‌டுகிற‌ ச‌ல‌ன‌ங்களால் எப்ப‌டி ம‌ன‌ஸையும் ந‌ல்ல‌தாக‌ மாற்றிக்கொள்ள‌லாம் என்று வ‌ழி சொல்லியிருக்கிற‌து. ந‌ம் உட‌ம்பைப் ப‌ல‌ தினுசாக‌ வ‌ளைத்துச் செய்கிற‌ அப்பியாஸ‌ங்க‌ளால், சுவாஸ‌த்தின் கதியில் உண்டாக்கிக்கொள்கிற‌ மாறுத‌ல்க‌ளால் ந‌ம் உள்ள‌ம் உய‌ர்வ‌த‌ற்கான‌ வ‌ழி அந்த‌ சாஸ்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வ‌து, தோப்புக்க‌ர‌ண‌ம் போடுவ‌து இவ‌ற்றால் ந‌ம் நாடிக‌ளின் ச‌ல‌ன‌ம் மாறும்; ம‌ன‌ஸில் தெய்விக‌மான‌ மாறுத‌ல்க‌ள் உண்டாகும். ந‌ம்பிக்கையோடு செய்தால் ப‌ல‌ன் தெரியும்.

குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீதி நூல்களைச் செய்த‌ அவ்வையார் பெரிய‌வ‌ர்க‌ளுக்குக்கூட‌ எளிதில் புரியாத‌ பெரிய‌ யோக‌ த‌த்துவ‌ங்க‌ளை வைத்துப் பிள்ள‌யார் மேலேயே ஒரு ஸ்தோத்திர‌ம் செய்திருக்கிறாள். அத‌ற்கு “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” என்று பெய‌ர். அள‌வில் சின்ன‌துதான் அந்த‌ அக‌வ‌ல் ஸ்தோத்திர‌ம்.

பிள்ளையாரை நினைக்கிற‌போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இர‌ட்டிப்பு அநுக்கிர‌ஹ‌ம் கிடைக்கும். ‘விநாய‌க‌ர் அக‌வ‌லை’ச் சொன்னால் இர‌ண்டு பேரையும் ஒரே ச‌ம‌யத்தில் நினைத்த‌தாகும். எல்லோரும் இதைச் செய்ய‌வேண்டும். வெள்ளிக்கிழ‌மைதோறும் ப‌க்க‌த்திலுள்ள‌ பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” சொல்லி விக்நேச்வ‌ர‌னுக்கு அர்ப்ப‌ண‌ம் ப‌ண்ண‌வேண்டும்.

பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்த‌ம்; பிள்ளையார் எல்லோருக்கும் சொந்த‌ம். ஏழை எளிய‌வ‌ருக்கும், சாஸ்திர‌ம் ப‌டிக்காத‌ சாமானிய‌ ஜ‌ன‌ங்க‌ளுக்கும்கூட‌ச் சொந்த‌ம். ம‌ற்ற‌ ஸ்வாமிக‌ளின் நைவேத்திய‌ விநியோக‌த்தில் பெரிய‌ ம‌நுஷ்ய‌ர்க‌ளுக்குத்தான் முத‌லிட‌ம். பிள்ளையாரோ த‌ம‌க்குப் போடுகிற‌ சித‌றுகாய் இவ‌ர்க‌ளுக்குப் போகாம‌ல் ஏழைக் குழ‌ந்தைக‌ளுக்கே போகும்ப‌டியாக‌ வைத்துக் கொண்டிருக்கிறார்! எல்லோரும் “அக‌வ‌ல்” சொல்லி அவ‌ரை வ‌ழிப‌ட‌ வேண்டும். பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் இதில் அதிக‌ உரிமை உண்டு. அவ்வை பெண்ணாக‌ப் பிற‌ந்த‌தால், பெண்க‌ள் எல்லோருக்கும் அவ‌ளுடைய‌ இந்த‌ ஸ்தோத்திர‌த்தில் பாத்திய‌தை ஜாஸ்தி. அவ‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு உப‌தேசித்த‌ பாட்டி. விநாய‌க‌ரும் குழ‌ந்தைத் தெய்வ‌ம். அத‌னால் அவ‌ளுடைய‌ அக‌வ‌லைக் குழ‌ந்தைக‌ள் யாவ‌ரும் அவர்முன் பாடி ஸ‌ம‌ர்ப்பிக்க‌வேண்டும். கொஞ்ச‌ம் ‘க‌ட‌முட‌’ என்றிருக்கிற‌தே, அர்த்த‌ம் புரிய‌வில்லையே என்று பார்க்க‌ வேண்டாம். அர்த்த‌ம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே ந‌ன்மை செய்கிற‌ ச‌க்தி உண்டு’ என்று ந‌ம்பி அக‌வ‌லைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அத‌னால் நாமும் க்ஷேம‌ம் அடைவோம். நாடும் க்ஷேம‌ம் அடையும்.

அழ‌கான‌ பெட்டி ஒன்று கிடைக்கிற‌து. அதற்குள் நிறைய‌ ர‌த்தின‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் பெட்டியைத் திற‌க்க‌ச் சாவியைக் காணோம். அத‌னால் பெட்டி வேண்டாம் என்று விட்டு விடுவோமா? “சாவி கிடைக்கிற‌போது கிடைக்க‌ட்டும்” என்று பெட்டியை வைத்துக் கொள்வோம் அல்ல‌வா? இப்போது பெட்டியை விட்டுவிட்டால் பிற‌கு சாவி கிடைத்தாலும் பிர‌யோஜ‌ன‌மில்லையே? “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” அப்ப‌டிப்ப‌ட்ட‌ அழ‌கான‌ பெட்டி. அத‌ற்குள்ளே யோக‌ சாஸ்திர‌ விஷ‌ய‌ங்க‌ள் ர‌த்தின‌ம் மாதிரி உள்ள‌ன‌. அவ‌ற்றைப் புரிந்துகொள்கிற‌ புத்தி (சாவி) இப்போது ந‌ம்மிட‌ம் இல்லாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. இப்போதே பிடித்து அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்ல‌ச் சொல்ல‌, தானே அர்த்த‌மும் புரிய‌ ஆர‌ம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவ‌த‌ற்கான‌ அநுக்கிர‌ஹ‌த்தைச் செய்வார்.

பிள்ளையார் எல்லாருக்கும் ந‌ல்ல‌வ‌ர்; எல்லாருக்கும் வேண்டிய‌வ‌ர்; சொந்த‌ம். சிவ‌ ச‌ம்ப‌ந்த‌மான‌ லிங்க‌ம், அம்பாள், முருக‌ன் முத‌லிய‌ விக்கிர‌ஹ‌ங்க‌ளைப் பெருமாள் கோயிலில் பார்க்க‌ முடியாது. ஆனால், பிள்ளையாரும் சிவ‌ குடும்ப‌த்தைதான் சேர்ந்த‌வ‌ர் என்றாலும், விஷ்ணு ஆல‌ய‌ங்க‌ளில்கூட‌ப் பிள்ளையார் ம‌ட்டும் இருப்பார். ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்று அவ‌ருக்குப் பெய‌ர் சொல்லுவார்க‌ள். ம‌தச்ச‌ண்டைக‌ளுக்கெல்லாம் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர் அவ‌ர்.

அத‌னால்தான் புத்த‌ம‌த‌ம், ஜைன‌ம‌த‌ம் எல்லாவ‌ற்றிலும்கூட‌ அவ‌ரை வ‌ழிப‌டுகிறார்க‌ள். த‌மிழ் நாட்டிலிருப்ப‌துபோல் ம‌ற்ற‌ ராஜ்ய‌ங்க‌ளில் த‌டுக்கி விழுந்த‌ இட‌மெல்ல‌ம் விநாய‌க‌ர் இல்லாவிட்டாலுங்கூட‌, பார‌த‌ தேச‌த்திலுள்ள‌ அத்த‌னை ஸ்த‌ல‌ங்க‌ளிலும் ஓரிடத்திலாவ‌து அவ‌ர் இருப்பார். “க‌ன்னியாகும‌ரியிலும் பிள்ளையார்; ஹிம‌ய‌த்தின் கோடியில் கேதாரத்திலும் ஒரு பிள்ளையார்” என்று ஒரு க‌ண‌ப‌தி ப‌க்த‌ர் என்னிட‌ம் பெருமைப்ப‌ட்டுக் கொண்டார்.

ந‌ம் தேச‌த்தில் ம‌ட்டும்தான் என்றில்லை. ஜ‌ப்பானிலிருந்து மெக்ஸிகோ வ‌ரை உல‌கத்தின் எல்ல‌த் தேச‌ங்க‌ளிலும் விநாய‌க‌ர் விக்கிர‌ஹ‌ம் அக‌ப்ப‌டுகிற‌து! லோக‌ம் பூராவும் உள்ள‌ ஸ‌க‌ல‌ நாடுகளிலும் அவ‌ரைப் ப‌ல‌ தினுசான‌ மூர்த்திக‌ளில் வ‌ழிப‌டுகிறார்க‌ள்.

அப்ப‌டி லோக‌ம் முழுவ‌த‌ற்கும் சொந்த‌மாக‌ இருக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரை நாம் எல்லோரும் த‌வ‌றாம‌ல் ஆராதிக்க‌ வேண்டும். வ‌ச‌தி இருப்ப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ருக்கு மோத‌க‌மும், ம‌ற்ற‌ ப‌க்ஷ‌ண‌மும், ப‌ழ‌ங்க‌ளும் நிறைய‌ நிவேத‌ன‌ம் செய்து, குழ‌ந்தைக‌ளுக்கு விநியோக‌ம் ப‌ண்ண‌வேண்டும். அவ‌ர் குழ‌ந்தையாக‌ வ‌ந்த‌ ஸ்வாமி. குழ்ந்தை என்றால் அது கொழுகொழு என்று இருக்க‌வேண்டும். அத‌ற்கு நிறைய‌ ஆகார‌ம் கொடுக்க‌ வேண்டும். பிள்ளையாரின் தொப்பை வாடாம‌ல் அவ‌ருக்கு நிறைய‌ நிவேத‌ன‌ம் செய்ய‌வேண்டும். வெள்ளிக்கிழ‌மைதோறும் அவ‌ருக்கு சித‌றுகாய் போட்டுக் குழ‌ந்தைக‌ளை ஸ‌ந்தோஷ‌ப்ப‌டுத்த‌ வேண்டும். பெரிய‌வ‌ர்க‌ள் இவ்வாறு ம‌ற்ற‌க் குழ‌ந்தைக‌ளை ம‌கிழ்வித்தால், ஈச‌ன் குழ‌ந்தையான‌ பிள்ளையாரும் ம‌கிழ்ந்து, பெரிய‌வ‌ர்களையும் குழ‌ந்தைக‌ளாக்கித் த‌ம்மோடு விளையாட‌ச் செய்வார்.

பெரிய‌வ‌ர்க‌ளானால் துக்கமும், தொல்லையும் தான். குழ‌ந்தை ஸ்வாமியோடு சேர்ந்து இந்த‌த் துக்க‌த்தை தொலைத்து அவ‌ரைப்போல் ஆன‌ந்த‌மாகிவிட‌ வேண்டும். அவ‌ர் எப்போதும் சிரித்த‌ முக‌முள்ள‌வ‌ர். ‘ஸுமுக‌ர்’, ‘பிர‌ஸ‌ன்ன‌ வ‌தன‌ர்’ என்று பெய‌ர் பெற்று எப்போதும் பேரான‌ந்த‌த்தைப் பொங்க‌ விடுப‌வ‌ர். நாம் உண்மையாக‌ ப‌க்தி செய்தால் ந‌ம்மையும் அப்ப‌டி ஆக்குவார்.

த‌மிழ் நாட்டின் பாக்கிய‌மாக‌த் திரும்பிய‌ இட‌மெல்லாம் அம‌ர்ந்திருக்கும் அவ‌ரை நாம் எந்நாளும் ம‌ற‌க்க‌க் கூடாது. நாம் எல்லோரும் த‌வ‌றாம‌ல் பிள்ளையார் கோயிலுக்குப் போவ‌து, தேங்காய் உடைப்ப‌து, ‘விநாய‌க‌ர் அக‌வ‌ல்’ சொல்வ‌து என்று வைத்துக்கொண்டால் இப்போதிருக்கிற‌ இத்த‌னை ஆயிர‌ம் கோயிலுங்கூட‌ப் போதாது; புதிதாக‌க் க‌ட்ட‌ வேண்டியிருக்கும்.

புதிதாக‌ப் பிள்ளையார் கோயில் க‌ட்டி மூர்த்திப் பிர‌திஷ்டை செய்வ‌தில் வேடிக்கையாக‌ ஒரு உல‌க‌ வ‌ழ‌க்கு இருக்கிற‌து. அதாவ‌து புதிதாக‌ப் பிள்ளையார் விக்கிர‌ஹ‌ம் அடிக்க‌க் கொடுக்காம‌ல், ஏற்க‌ன‌வே ஒரு கோயிலில் இருக்கிற‌ பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வ‌ந்துதான் புதுக்கோயில் வைக்க‌வேண்டும் என்பார்கள். ‘இது என்ன‌, சாதார‌ண‌ விஷ‌ய‌ங்க‌ளிலேயே திருட்டு கூடாது என்றால், தெய்வ‌க் காரிய‌த்தில் போய்த் திருட்டுச் செய்ய‌லாமா’ என்று தோன்றுகிற‌த‌ல்ல‌வா? பிள்ளையாரைத் திருட‌லாம் என்றால்தான், ஒவ்வொரு கோயிலைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளும், ‘ந‌ம் பிள்ளையார் எங்கே திருட்டுப் போய்விடுவாரோ?’ என்ற‌ ப‌ய‌த்தால், அவ‌ரை அல்லும் ப‌க‌லும் க‌வ‌னித்துக் கொள்வார்க‌ள். இப்போது பல‌ ஊர்க‌ளில் க‌வ‌ன‌க் குறைவால், ‘ஸ்வாமியைக் காணோம்’ என்று செய்தி வ‌ருகிற‌ மாதிரி ந‌ட‌க்காம‌ல் இருக்கும். அத‌ற்காக‌வே இப்ப‌டி ஒரு திருட்டு வ‌ழ‌க்க‌த்தைச் சொல்லி வ‌ருகிறார்க‌ள் போலிருக்கிற‌து. பிள்ளையார் நினைப்பு ந‌ம் ஜ‌ன‌ங்க‌ளுக்கு நீங்க‌வே கூடாது என்றுதான் இம்மாதிரியான‌ ஏற்பாடுக‌ளை ந‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் செய்து வைத்திருக்கிறார்க‌ள். ந‌ம‌க்கு எப்போதும் துணை அவ‌ர்தான்.

ந‌ம‌க்கும், நாட்டுக்கும், உல‌குக்கும் எல்லா க்ஷேம‌ங்க‌ளும் உண்டாவ‌த‌ற்கு அவ்வையார் மூல‌ம் பிள்ளையாரைப் பிடிப்ப‌தே வ‌ழி.



தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:44 am


ஒரு ராஜா – ராணி கதை

ராஜா ஒருத்தன். ராஜா என்றிருந்தால் சத்ரு ராஜா, யுத்தம் எல்லாமும் இருக்கத்தானே செய்யும்? இந்த ராஜாவை எதிர்த்து எதிரி ராஜா வந்தான். இவனுடைய துரதிருஷ்டம், யுத்தத்தில் இவன் தோற்றுப் போனான்.

‘வெற்றி; இல்லாவிட்டால் வீர ஸ்வர்க்கம்!’ என்று சில ராஜாக்கள் யுத்த பூமியிலேயே உயிரை விட்டு விடுவார்கள். இன்னும் சில ராஜாக்கள் தோற்றுப் போனால் ஓடி ஒதுங்கிப் பதுங்கிக் கொள்வார்கள். இவர்கள் எல்லோருமே வீரத்திலோ மானத்திலோ குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. பாய்கிற புலி பதுங்கும் என்கிற மாதிரி இவர்கள் பதுங்குவது பிற்பாடு படையெடுத்துப் பழி வாங்குவதற்காகத்தான். மகாசூரர்களும், மானஸ்தர்களுமான ராஜபுத்ர ராஜாக்கள் கூட, இப்படி முஸ்லீம்களின் படையெடுப்பின் போது ஓடிப்போய், பிறகு பெரிய சைனியம் திரட்டிக் கொண்டு வந்து சண்டை போட்டிருக்கிருக்கிறார்கள்.

என் ‘கதை- ராஜாவும்’ தோற்றுப் போனவுடன் பிராணஹத்தி பண்ணிக் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டான்.

அவன் மட்டுமாக ஓடவில்லை.

அவனது பத்தினியையும் குதிரை மேல் வைத்துக் கொண்டு ஓடினான்.

அப்போது அவள் நிறை கர்ப்பிணி.

இந்த நாளில் ‘அண்டர் க்ரவுன்ட்’ டாகப் போவது என்ற மாதிரி அப்போதும் உண்டு. இந்த ராஜாவுக்கு ரொம்பவும் அபிமான மந்திரி இப்படித்தான் தலைமறைவாகிவிட்டான். ராஜாவும் ராணியும் தப்பித்து ஓடியது அவனுக்கு மட்டும் அப்போதே தெரியும்.

ராஜாவின் குதிரை வனப் பிரதேசத்தில் போய்க் கொண்டிருந்தது.

அவனைத் தேடிப் பிடித்து வர, சத்ரு ராஜா நாலாபக்கமும் குதிரைப் படையை அனுப்பியிருந்தான்.

அவர்களில் சிலர் இந்தக் காட்டுக்கே வந்துவிட்டார்கள். ராஜா போவதைத் தூரத்தில் பார்த்து அவனைப் பின் தொடர்ந்து துரத்தி வந்தார்கள்.

இவனைத் துரதிருஷ்டமும் துரத்திக் கொண்டு வந்தது. சத்ருக்கள் கிட்டே கிட்டே வந்து விட்டார்கள்.

பக்கத்திலே ஒரு வேடன் குடிசை இருந்தது. அதைப் பார்த்ததும் ராஜாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. குதிரையை நிறுத்தி, அதிலிருந்து இறங்கினான். ராணியையும் இறக்கினான்.

“சத்ருக்கள் என்னை விடமாட்டார்கள். அவர்கள் ஏராளமான பேர்கள் இருப்பதால் நான் எதிர்த்து எதுவும் பண்ணுவதற்கில்லை. என் முடிவு நிச்சயம். ஆனால் என்னோடு நீயும் போய்விடக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால், என்னால் பழி வாங்கமுடியாவிட்டாலும், இப்போது நீ கர்ப்பவதியாக இருக்கிறாயல்லவா? உனக்கு நம் குலம் விளங்க ஒரு புத்திரன் பிறந்தாலும் பிறக்கலாம்; பிறக்கப் போகும் பிள்ளையாவது சத்ருவை ஜயித்து ராஜ்யத்தை மறுபடியும் நம் பரம்பரையின் கைக்குக் கொண்டு வரவேண்டும். ஆகையால் நீ பதிவிரதை என்பதற்காக என்னோடு செத்துப் போவதை விட, என் மனோரதத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவே உயிரோடிருந்து பிள்ளையைப் பெற்று வளர்க்கவேண்டும். இந்த வேடன் குடிசையில் அடைக்கலம் புகுந்து பிழைத்துக் கொள்” என்று ராணியிடம் ராஜா சொன்னான்.

அவளுக்கு அது தாங்க முடியாத கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ராஜ தர்மம் என்ற ஒன்று, அதற்கென்றே மானம், கௌரவம் என்றெல்லாம் இருந்ததால், பதியின் வார்த்தையை அவளால் தட்டமுடியவில்லை. ‘புருஷன் சொல்வதுதானே நமக்கு வேதம்? அவன் சா என்றால் செத்துப் போகத் தயாராக இருக்கிற மாதிரியே, செத்துப் போவதுதான் சந்தோஷம் என்கிற ஸ்திதியில் அவன், ‘சாகாதே. நீ உயிரோடுதான் இருக்கவேண்டும்’ என்றால் அதையும் நாம் கேட்டுத்தானாக வேண்டும்’ என்று தன்னைத் தானே ஒரு மாதிரி தேற்றிக் கொண்டு குடிசைக்குள் போய் மறைந்து கொண்டு விட்டாள்.

சத்ரு வீரர்கள் வந்து ராஜாவைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவன் கதை அதோடு முடிந்தது.

அவர்களுக்கு ராணியையும் இவன் கூட அழைத்து வந்தது தெரியாது. ‘தனக்கு என்ன ஆபத்து வந்தாலும் வரட்டும்; அவளுக்கு வரக்கூடாது’ என்று தான் இவன் குதிரையில் அவளை முன்னே உட்கார வைத்து மறைத்துக் கொண்டு ஓட்டினான். பின்னாலிருந்து வந்த எதிரிகளுக்குக் குதிரை மேல் இவனுக்கு முன்னால் அவள் உட்கார்ந்திருந்தது தெரியவில்லை.

அதனால் ராணியைத் தேடிப் பார்க்காமலே அவர்கள், வந்த காரியம் முடிந்தது என்று ஸந்தோஷமாகப் போய்விட்டார்கள்.

வேடன் குடிசையில் வேடனின் அம்மாக் கிழவி இருந்தாள். பூர்ண கர்ப்பிணியாகத் தஞ்சம் என்று வந்த ராணியை மனஸார வரவேற்று வைத்துக் கொண்டாள்.

படித்தவர்கள், நாகரிகக்காரர்கள் என்கிற நம்மை விட, பாமரமான ஏழை ஜனங்களிடம் உபகாரம் செய்கிற ஸ்வபாவம், விச்வாஸப் பண்பு எல்லாம் எக்காலத்திலும் ஜாஸ்திதான்.

ராஜ ஸ்திரீயை வேட ஸ்திரீ தன் வயிற்றில் பிறந்த மகளைப் போல் வைத்துப் பராமரித்தாள்.

ராணி வயிற்றில் ஒரு பிள்ளை பிறந்தது.

அதோடு தன் கடமை ஆகிவிட்டது என்கிற மாதிரி பிரஸவத்திலேயே ராணி மரணம் அடைந்து விட்டாள்.

பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது.

சத்ரு ராஜாவே பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் ஜனங்களுக்கு அதில் திருப்தியில்லை. ஒரு ராஜ்யம் தோற்றுப் போனால்கூட ஜனங்களுக்குத் தங்கள் பழைய பாரம்பரிய ராஜா இல்லையே என்று தாபம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த ‘கதை-ராஜ்ய’த்திலிருந்த ஜனங்களுக்கு ராஜாவோடு ராணியும் தப்பித்துப் போனதோ, காட்டிலே அவளுக்குக் குழந்தை பிறந்ததோ தெரியாது. அதனால் தங்கள் கஷ்டத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு பொறுமையோடு இருந்தார்கள்.

மந்திரிக்கு மட்டும் ராஜ தம்பதி இரண்டு பேருமே ஓடியது தெரியுமல்லவா?அதனால் அவன் யோசித்தான். ‘ஈச்வர கிருபையில் ராணிக்குப் பிள்ளைக் குழந்தையாகவே பிறந்திருந்து, அது இப்போது எங்கேனும் வளர்ந்துவந்தால் பன்னிரண்டு வயசு இருக்கும் அல்லவா? பாரம்பரியமான யுவராஜா என்றால் சைன்யத்தை நடத்தி யுத்தம் பண்ணவும், மந்திரிகளின் ஆலோசனையோடு ராஜ்ய பாரம் பண்ணவும் பன்னிரண்டு வயசு போதுமே! அதனால், ராஜகுமாரன் கிடைக்கிறானா என்று தேடிக் கண்டுபிடித்து அவனை கொஞ்சம் தநுர்வேதத்தில் [போர்ப்பயிற்சியில்] தேற்றிவிட்டால், ஜனங்கள் ஒரு மனஸாக அவன் கீழ் சேர்ந்து சத்ரு ராஜாவை அப்புறப்படுத்துவார்களே!’ என்று நினைத்தான்.

ரகசியமாக கோஷ்டி சேர்த்து, அவன் பழைய ராஜாவின் சந்ததி இருக்கிறதா என்று தேடினான்.

வேடனின் குடிசைக்கு வந்து சேர்ந்தான்.

அங்கே அநேக வேடப் பசங்களோடு ராஜாவின் பிள்ளையும் ஒரு கோவணத்தைக் கட்டிக் கொண்டு, தலையை முடிந்து இறக்கை சொருகிக் கொண்டு, குந்துமணி மாலையும் புலிநகமும் போட்டுக்கொண்டு அணில் குத்தி விளையாடிக் கொண்டிருந்தான். ஆனாலும் வம்சவாரியான ராஜ களை, பழைய ராஜாவின் ஜாடையெல்லாம் அவனுக்கு இருந்ததால், புத்திசாலியான மந்திரிக்கு ஊகமாகப் புரிந்தது.

அந்த கிழவி இப்போதும் உயிரோடு இருந்தாள்.

அவளிடம் கேட்டான்.

காட்டு ஜனங்களுக்கு சூது, வாது, பொய், புரட்டு தெரியாது. அதனால் அவள் உள்ளபடி சொன்னாள். ரொம்ப வருஷம் முந்தி ஒரு கர்ப்பிணி இங்கே வந்து அடைக்கலம் கேட்டாள். அவளை நான் என் மகள் மாதிரி வளர்த்தேன். ஆனாலும் அவள், தான் யார், என்ன என்று சொல்லிக்கொள்ளாமலே இந்தப் பிள்ளையை பெற்றுப் போட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு போய்விட்டாள். அதற்கப்புறம் இந்தப் பிள்ளைக்கு நானே அம்மாவாக இருந்து வளர்த்து வருகிறேன். ராஜகுடும்பம் மாதிரியான பெரிய இடத்து வாரிசு என்று ஊகிக்க முடிந்தாலும் இன்னார் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. எங்களில் ஒருத்தனாக எங்களோடேயே வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றாள்.

மந்திரிக்கு உடனே இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி ‘நம் ராஜகுமாரன்தான் இங்கே வளர்வது’ என்று புரிந்து விட்டது.

அதை அவன் சொல்லி, பிள்ளையை அழைத்துப் போக முன்வந்தவுடன், கிழவி, வேடன் எல்லோருக்கும் ரொம்பவும் கஷ்டமாகி விட்டது. வளர்த்த பாசம்! ஆனானப்பட்ட கண்வ மஹரிஷி, ஜட பரதர் மாதிரியானவர்களையே வளர்த்த பாசம் ஆட்டி வைத்திருக்கிறதே! ஆனாலும் ராஜ்யகாரியம் என்பதால், இந்த வேடர்கள் தியாக புத்தியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் வேடப்பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த ராஜகுமாரனை மந்திரி கூப்பிட்டதும், அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடப் பார்த்தான். அவனுக்கு வேட சகவாசம்தான் பிடித்ததே தவிர, இந்தப் பெரிய மநுஷ்ய சம்பந்தம் பிடிக்கவேயில்லை.

வேடப்பிள்ளை மாதிரியே, “இவங்கள்ளாந்தான் என் ஜாதி ஜனங்க, இவங்களைவிட்டு வரமாட்டேன்” என்று ஓடினான்.

அப்புறம் அவனைப் பிடித்து வந்து மந்திரி அவனுக்கு வாஸ்தவத்தையெல்லாம் விளக்கிச் சொன்னான். “நீ ராஜகுமாரன். நீ பிறக்கும் முன்பே, சத்ருக்களிடமிருந்து தப்பி இங்கே ஓடிவந்த உன் தகப்பனார் கொல்லப்பட்டார்.அதற்கப்புறம் வேடர் குடிசையில் உன்னைப் பிரஸவித்து விட்டு உன் அம்மாவும் போய்விட்டாள். அதிலிருந்து நீ இங்கே வளர்ந்து வருகிறாய். ஆனாலும் நீ ராஜ்யத்தையெல்லாம் ஆள வேண்டியவன். உன்னைத் தலைவனாக வைத்துக் கொண்டு தான் நாங்கள் அதை சத்ருவிடமிருந்து மீண்டும் ஜயிக்க ஆலோசனை செய்திருக்கிறோம். இப்போது நீ இருப்பதைவிடக் கோடி மடங்கு உயர்ந்த ஸ்திதியில் இருக்க வேண்டியவன். ‘மாட்டேன்’ என்று சொல்லலாமா?” என்று எடுத்துச் சொல்லி விளக்கினான்.

அந்தப் பிள்ளைக்கு வீரம், பித்ருபாசம், அதற்காக எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எல்லாவற்றையும் மூட்டி விட்டான்.

தான் ராஜகுமாரன் என்று தெரிந்தவுடனேயே, அந்தப் பிள்ளைக்கு ரொம்ப சக்தி, தேஜஸ், காம்பீர்யம் எல்லாம் உண்டாகிவிட்டது.

அப்புறம் அவனுக்கு அஸ்திர சஸ்திர அப்பியாஸம், கொஞ்சம் சொல்லிக் கொடுத்தவுடனேயே அவற்றை நன்றாகப் பிடித்துக் கொண்டான்.

வேட ஜனங்களை விட்டுப் போனான். மந்திரியின் சகாயத்துடன் நாட்டில் சைனியம் திரட்டினான். ராஜ விச்வாஸம் கொண்ட ஜனங்கள், தங்கள் பழைய பாரம்பரிய வாரிசு வந்திருக்கிறான் என்றவுடன் உத்ஸாகமாக அவன் கீழ் ஒன்று சேர்ந்தார்கள்.

இப்போதெல்லாம் குடியரசு யுகத்தில் ஒருத்தரைத் தலைவர் என்று ஸ்தோத்திரம் பண்ணி ஊரையெல்லாம் இரண்டு படுத்துகிற மாதிரி டெமான்ஸ்ட்ரேஷன்கள் பண்ணிவிட்டு, கொஞ்ச காலமானால் அவரை எவரும் சீந்தாமல் தூக்கிப் போடுகிற மாதிரி இல்லை, ராஜ விச்வாஸம் என்பது. அது நின்று நிலைத்து ஹ்ருதயபூர்வமாக இருந்து வந்த விஷயம். ராஜாக்களும் இந்த விச்வாஸத்தைப் பெறுவதற்குப் பாத்திரர்களாகவே ரொம்பவும் ஒழுக்கத்தோடு குடிஜனங்களைத் தம் பெற்ற குழந்தைகளைப் போலப் பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அதிகாரம் வந்து, அந்த ருசியில் கண்டது காணாதது போல் ஒழுங்கு தப்பிப போகிற மாதிரி இல்லை, பாரம்பரிய ராஜ்யாதிகாரம் என்பது. இந்தக் கதையில் வரும் பையன் மாதிரி திடீர் அதிகாரம் வந்தால்கூட பாரம்பரியப் பண்பு அவர்கள் தலைதெறிக்கப் போகாமலே கட்டுப்படுத்தும். புராணங்களைப் பார்த்தால் வேனனையும் அஸமஞ்ஜனையும் போல் எங்கேயாவது நூற்றிலே ஒரு ராஜாவோ ராஜகுமாரனோ முறை தப்பிப் போனால் அப்போது ஜனங்களே அவனைத் தொலைத்து முழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் ‘யதா ராஜா ததா ப்ரஜா’ [அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி] என்ற மாதிரி, அப்போது இரண்டு பக்கத்திலும் தர்மத்துக்குப் பயந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் என்று வெறும் ராஜாங்க ரீதியில் போடுகிறபோது, முதலில் அதைப் பண்ணுகிறவர்கள் சரியாகயிருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. இந்த சட்டங்களுக்கெல்லாம் மேலான த்ரிலோக ராஜாவான பரமேச்வரனின் சட்டமான தர்மசாஸ்திரத்துக்கு அடங்கியே ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் ஆகிய இருவரும் இருந்தால்தான் லோகம் நன்றாயிருக்கும். பூர்வகாலங்களில் ஆளப்படுகிறவர்களுக்கும் ஆளுகிறவர்களே இப்படி தர்மத்துக்கு அடங்கியிருந்து வழி காட்டியிருக்கிறார்கள். இதனால்தான் ஜனங்களுக்கு ஸ்வபாவமாக, ராஜவிஸ்வாசம் என்ற ஆழ்ந்த, நிஜமான பற்று இருந்து வந்திருக்கி்றது. ‘இவர்கள் தன் ஜனங்கள்’ என்ற பாந்தவ்யம் ராஜாவுக்கும், ‘இவன் நம் ராஜா’ என்ற அன்பு ஜனங்களுக்கும் இருந்து வந்தது.

கதையில் சொன்ன பையன், சத்ருவை ஜயிக்க மந்திரியின் ஏற்பாட்டில் ஆயத்தம் பண்ணுகிறான் என்றவுடன் ஜனங்களெல்லாம் அவன் கட்சியில் சேர்ந்து யுத்தத்துக்கு கிளம்பிவிட்டார்கள்.

சுலபத்தில் சத்ருவை ஜயித்தும் விட்டார்கள்.

பையனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி ராஜா ஆக்கினார்கள்.

அவனுக்குத் தான் வேடனாக இருந்த எண்ணமே அடியோடு மறந்து போய்விட்டது. பூர்ண ராஜாவாகவே இருந்தான்.

இந்தக்கதையை நான் சொல்லவில்லை. பெரிய ஆசார்யர் ஒருத்தர், அத்வைத ஸம்பிரதாயத்தின் ஆதிகாலப் பிரவர்த்தகர்களில் ஒருத்தர் சொல்லியிருக்கிறார். குரு தத்வத்தைச் சொல்லும்போது இப்படிக் கதை சொல்லியிருக்கிறார். நான் கொஞ்சம் காது,மூக்கு வைத்தேன்.



தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:45 am


குரு பரம்பரை

அத்வைத ஆசார்யர் என்றால் உடனே எல்லோரும் நம்முடைய ஸ்ரீ சங்கர பகவத் பாதாளைத் தான் நினைத்துக் கொள்வீர்கள். அவர் தான் பரமேச்வராவதாரமாக வந்து, அத்வைதத்தை நன்றாக விளக்கி, என்றைக்கும் பெயர்க்க முடியாமல் ஸ்தாபனம் செய்துவிட்டுப் போனவர். ஆனால் அவர்தான் அத்வைத ஸித்தாந்தத்தை முதலில் கண்டுபிடித்தார் என்றில்லை. அவருக்கு ரொம்ப முன்னாடி லோகத்தின் முதல் கிரந்தமான வேதத்திலேயே – இப்படிச் சொல்வதுகூட தப்பு. லோகத்தையே பிரம்மா வேதத்தை guide ஆக வைத்துக் கொண்டுதான் சிருஷ்டி பண்ணியிருக்கிறார். அதனால் அதை லோகத்தின் முதல் கிரந்தம் என்கிறது கூட சரியில்லைதான். அப்படிப்பட்ட, லோக சிருஷ்டிக்கும் முந்தியதான வேதத்திலேயே – அத்வைத தத்துவம் சொல்லியிருக்கிறது. வேத சிரஸ் (மறைமுடி) என்கிற உபநிஷத்துக்களிலெல்லாம் இந்தத் தத்வம் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் முடிவாக இதைத்தான் சொல்லியிருக்கிறார். ‘கீதை’ என்றால் ‘பகவத் கீதை’ என்றே இப்போது பிரஸித்தமாயிருந்தாலும், ஒவ்வொரு ஸ்வாமிக்குமான புராணத்தைப் பார்த்தால் ‘தேவீ கீதை’, ‘சிவ கீதை’ என்றெல்லாம் வரும். அந்த தெய்வங்களும் முடிவாக அத்வைத உபதேசமே செய்திருக்கின்றன. அப்புறம் ஆசார்யாள் [ஆதிசங்கரர்] வரையில் அநேக குருக்கள் வந்திருக்கிறார்கள்.

தக்ஷிணாமூர்த்தி, தத்தாத்ரேயர், நாராயணன், பிரம்மா ஆகியவர்களை அத்வைத சம்பிரதாய ஆசாரிய வரிசையில் முதலில் சொல்வது வழக்கம். இந்தத் தெய்வக்குருக்களுக்கு அப்புறம் வஸிஷ்டர், சக்தி, பராசரர், வியாஸர் என்ற ரிஷிகள் அத்வைதத்தை அப்பாவிடமிருந்து பிள்ளையாகப் பெற்று உபதேசம் செய்திருக்கிறார்கள். இவர்கள் ரிஷிகள்.

ரிஷிகளை மநுஷ்ய ஆசார்யர்களோடு சேர்க்கக் கூடாது. மநுஷ்யர்கள் அறியமுடியாததை அறிகிற, மநுஷ்யகளுக்குத் தெரியாததைப் பார்க்கிற, மநுஷ்யர்கள் கேட்காததைக் கேட்கிற, மநுஷ்யர்களால் செய்யமுடியாததைச் செய்கிற அதீந்திரிய சக்திகள் உள்ளவர்களே ரிஷிகள். ஆகாசத்தில் பரவியுள்ள பரமாத்மாவின் சுவாஸ சலனங்களான சப்தங்களை மந்திரங்களாகப் பிடித்துத் தரக்கூடிய மகாசக்தி படைத்தவர்கள். அதனால் இவர்களை சாதாரணமாக மநுஷ்ய இனத்தோடே சேர்ப்பதில்லை.

உதாரணமாக, கோவில்களில் பிரதிஷ்டையாகியிருக்கிற மூர்த்திகளை நாலைந்து தினுசாகப் பிரித்திருக்கிறார்கள் – ஸ்வயம்வியக்தம், தைவிகம், மாநுஷம், ஆஸுரம், ஆர்ஷம் என்று.

ஸ்வாமி தானாகவே ஒரு இடத்தில் லிங்கமாகவோ, விக்ரஹமாகவோ ஆவிர்பவிப்பதற்கு “ஸ்வயம் வியக்தம்” என்று பெயர். “ஸ்வயம்பு”, “சுயம்பு”, “தான்தோன்றி ” ( “தாந்தோணியம்மன் “என்கிறதில் வரும் “தாந்தோணி “) என்பதெல்லாம் அதைத்தான்.

சிவ ஸ்தலங்கள் பலவற்றில் ஸ்வயம்பு லிங்கம் இருப்பதைப் பார்க்கிறோம். வைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கம், திருப்பதி, பத்ரிநாத், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், [புஷ்கரம், ஸாளக்ராமம், நான்குநேரி] என்று எட்டை ஸ்வயம்வியக்த க்ஷேத்ரங்களாகச் சொல்கிறார்கள்.

தேவர்கள் பிரதிஷ்டை பண்ணினது தைவிகம். காஞ்சீபுரத்தில் அம்பாளே மண்ணை லிங்கமாகப் பிடித்துவைத்தாள். திருவீழிமிழலையில் மஹாவிஷ்ணுவே லிங்கப் பிரதிஷ்டை செய்தார். அநேக ஸ்தலங்களில் இந்திரன் தோஷம் நீங்குவதற்காக ஈச்வரனையோ, விஷ்ணுவையோ பூஜை பண்ணினதாகச் சொல்வார்கள். இதெல்லாம் ” தைவிகம் “. இதற்கு நேர் எதிர் வெட்டாக திரிசரன், ஓணன் மாதிரியான அசுரர்கள் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்த இடங்கள்தான் திரிசிரபுரம் என்ற திருச்சினாப்பள்ளி, காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன் தளி முதலிய இடங்கள். அஸுரர் பிரதிஷ்டை செய்ததுதான் “ஆஸுரம்”.

மநுஷ்யர்கள் – அநேக ராஜாக்களும் பக்தர்களும் – பிரதிஷ்டை பண்ணினதுதான் “மாநுஷம்” என்று நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

இன்னொன்று “ஆர்ஷம்” என்று சொன்னேனல்லவா? “ஆர்ஷம்” என்றால் “ரிஷிகள் பண்ணினது” என்று அர்த்தம். குற்றாலத்தில் அகஸ்திய மஹரிஷி மூர்த்திப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார். சிக்கலில் வஸிஷ்ட மஹரிஷி, திருக்களரில் துர்வாஸர், ஜம்புகேச்வரம் என்ற திருவானைக்காவலில் ஜம்பு மஹரிஷி என்றிப்படி அநேக க்ஷேத்திரங்களில் ஆர்ஷப் பிரதிஷ்டைதான். ஏதோ, இப்போது நினைவில் வருவது, வாயில் வருவதை மட்டும் சொன்னேன்.

இதை எதற்கு சொல்ல வந்தேன் என்றால் பொதுவாக தேவ ஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்ய ஜாதி என்ற மூன்றைத்தான் நாம் சொன்னாலும், இங்கே ஆர்ஷம் என்று ரிஷிகளை மநுஷ்யர்களோடு சேர்க்காமல் தனி இனமாக வைத்திருக்கிறது என்று காட்டத்தான்.

மாநுஷ லிங்கம் என்று ராஜ ராஜ சோழன் பிருஹதீச்வரப் பிரதிஷ்டை பண்ணும் போதுகூட நேராக அவனே பண்ணாமல் கருவூர்ச் சித்தரைத்தான் பிராணப் பிரதிஷ்டை செய்ய வைத்திருக்கிறான். இதே மாதிரி “ரிஷிகள்” என்று சொல்லுகிற அளவுக்கு திவ்ய சக்தி இல்லாதவர்களானாலும் அந்தந்தக் காலத்தில் உள்ள மஹான்களை, ஸித்த புருஷர்களைக் கொண்டே மாநுஷ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இப்போதுகூட காலனிக்குக் காலனி புதுக்கோயில் கட்டுகிறபோது யாராவது ஒரு ஸ்வாமிகளைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டுதானே கும்பாபிஷேகம் பண்ணுகிறீர்கள்? ஆனால் பிராணப் பிரதிஷ்டை முதலானதுகளை சிவாச்சாரியர்களோ, பட்டர்களோதான் செய்கிறார்கள். இவர்கள் நியமத்தோடு செய்தால், மந்திரங்களுக்கே ஸ்வயமான வீர்யம் உண்டாதலால், மந்திரவத்தாக இவர்கள் செய்யும் பிரதிஷ்டையிலும் தெய்வ ஸாந்நித்யம் உண்டாகி லோகத்துக்கு க்ஷேமம் உண்டாகும்.

ரிஷிகள் தனி இனம் மாதிரி என்று சொல்ல வந்தேன்.

தேவ தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம் என்னும் போதும் ரிஷிகளைத் தனி இனமாகத்தான் வைத்திருக்கிறது.

அத்வைத ஸம்பிரதாயத்தில் தக்ஷிணாமூர்த்தி, தத்தர், நாராயணர், பிரம்மா ஆகிய தேவர்களுக்கு அப்புறம், வஸிஷ்டர், சக்தி, பராசரர், வியாஸர் என்ற ரிஷிகள் குருமார்களாக வந்தார்கள். வியாஸரின் பிள்ளை சுகர். அவர் மநுஷ்யர், ரிஷி, தேவர் எல்லாரையும்விடப் பெரியவர். சுகப்பிரம்மம் என்றே சொல்லப்பட்டவர். பிரம்மமாக இருந்த சுகர் பிரம்மச்சாரி. அதனால் அவருக்கப்புறம் பிள்ளை வழியில் சம்பிரதாயம் போகவில்லை. சிஷ்யர் வழியில் போயிற்று.

சுகருக்கு அப்புறம்தான், ரிஷிகள் என்று சொல்லமுடியாத ஸந்நியாஸிகளான கௌடபாதரும், அவருக்கப்புறம் அவருடைய சிஷ்யரான கோவிந்த பகவத்பாதரும் அத்வைத ஆசார்யர்களாக வந்தார்கள். ரிஷிகள் எல்லோரும் ஸந்நியாஸிகள் அல்ல. அவர்கள் பத்னிகளோடு இருந்திருக்கிறார்கள். அருந்ததி வஸிஷ்ட மஹரிஷிக்குப் பத்தினி, அநஸுயை அத்ரி மஹரிஷிக்குப் பத்தினி என்றெல்லாம் படிக்கிறோமல்லவா? யக்ஞம், யக்ஞோபவீதம் (பூணூல்) முதலியவை ரிஷிகளுக்கு உண்டு. ஸந்நியாஸிகளுக்கு இவை இல்லை. ஸந்நியாஸிகளான கௌடபாதருக்கும் கோவிந்த பகவத்பாதர்களுக்கும் அப்புறம்தான் “ஆசார்யாள்” என்ற மாத்திரத்தில் குறிப்பிடப்படும் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் வந்தார்கள். சுகர் முதல் வருகிற துறவிகளான ஆசார்யர்களுக்குப் “பரிவ்ராஜகர்கள்” என்று பெயர். “பரமஹம்ஸ பரிவ்ராஜக” என்பது வழக்கம்.

பரமேச்வரனானாலும் மநுஷ்ய ரூபத்திலேயே இருந்து கொண்டு, மநுஷ்யர் மாதிரியே காரியம் செய்து காட்டினவர் நம் ஆசார்யாள். மநுஷ்யராக இருந்து கொண்டே ரொம்பவும் சக்தியோடு வைதீக தர்மத்தை, அத்வைதத்தை நிலை நாட்டியதுதான் அவர் பெருமை.

ஆசார்யாளுடைய நேர் குரு என்பதால் கோவிந்த பகவத்பாதருக்குப் பெருமை. ஆசார்யாளே “பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்” என்று மூன்று தரம் சொல்லும்போது, கிருஷ்ணனோடு கூடத் தம் குருவையும் நினைத்துக் கொண்டுதான் சொல்லியிருக்கிறார். பகவானுக்கு எத்தனையோ நாமாக்கள் இருந்தாலும், ஆசார்யாள் ‘கோவிந்த’ நாமத்தையே ‘ஸெலக்ட்’ பண்ணினதற்குக் காரணம், அது தம் குருவின் பெயராகவும் இருக்கிறது என்பதுதான்.

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச |

வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் ||

ஸ்ரீ சங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் |

தம் தோடகம் வார்த்திககாரம் அன்யான் அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி ||

என்கிற ச்லோகத்தில், அத்வைத ஆசார்ய பரம்பரையை முழுக்க சொல்லி, ‘இப்படிப் பட்ட எல்லோரையும் நமஸ்காரம் பண்ணுகிறேன்’ என்று முடித்திருக்கிறது. அத்வைத குரு பரம்பரையை ‘பிரம்ம வித்யா ஸம்பிரதாய கர்த்தா’க்கள் என்றே சொல்வார்கள். இதில் முதலில் நாராயணன். அதாவது மஹாவிஷ்ணு. அப்புறம் ” பத்மபுவன்” என்றது பிரம்மா;தாமரையில் உண்டானவர் என்று அர்த்தம். அதற்கப்புறம் வஸிஷ்டர், சக்தி, பராசரர், வியாஸர், சுகர், கௌடர், கோவிந்த பகவத் பாதர் இவர்களைச் சொல்லி, இப்படிச் சொல்லும்போதே கௌடபாதருக்கு மஹான் (‘மஹாந்தம்’) என்றும் கோவிந்தருக்கு யோகீந்திரர் என்றும் சிறப்புக் கொடுத்திருக்கிறது. ஆசார்யாளுக்கு மட்டும் “ஸ்ரீ” போட்டுத் தனி மரியாதை கொடுத்து “ஸ்ரீ சங்கராசார்யம்” என்று “ஆசார்ய” பதத்தையும் கொடுத்து கௌரவம் சொல்லியிருக்கிறது. அதற்கப்புறம், ஆசார்யாளின் முக்கியமான சிஷ்யர்களாக இருக்கப்பட்ட பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர், ஸுரேச்வரர் ஆகியவர்களை சொல்லியிருக்கிறது. ஸுரேச்வரர் என்று சொல்லாமல் “வார்த்திககாரர்” என்று சொல்லியிருக்கிறது. “வார்த்திகம்” என்ற விளக்கவுரை எழுதியவர் ஸுரேச்வரர். அதனால் இப்படிச் சொல்லியிருக்கிறது. “வார்த்திகம்” என்றால் பாஷ்யம், வியாக்யானம், விரிவுரை என்ற மாதிரியான விளக்கம். உபநிஷதங்களை விளக்கி ஆசார்யாள் பாஷ்யம் எழுதினாரென்றால், அவற்றில் பிருஹதாரண்யம், தைத்திரீயம் இவற்றுக்கான பாஷ்யங்களையும் இன்னும் விரிவாக விளக்கி “வார்த்திகம்” எழுதினவர் ஸுரேச்வராசார்யாள். இவர் வரையில் பேரைச் சொல்லி, அப்புறம் தனியாகப் பேர் சொல்லாமலே, “அவர்களுக்கப்புறம் இன்றுள்ள எங்கள் குருவரைக்கும் வந்துள்ள எல்லா ஆசார்யர்களுக்கும் நமஸ்காரம் பண்ணுகிறேன்” என்று ச்லோகம் முடிகிறது.

இங்கே சொன்னது ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களை ஆசார்யராகக் கொண்டவர்களின் குரு பரம்பரா ச்லோகம். மற்ற ஸம்பிரதாயத்தவர்களும் தங்கள் தங்கள் குரு பரம்பரையைத் தெரிந்து கொண்டு,அவர்கள் பெயரைச் சொல்லி நமஸ்காரம் பண்ண வேண்டும்.

ஆத்ம ஜ்யோதிஸை [ஜோதியை]ப் பூர்ணமாகப் பிரகாசிக்கக் செய்யவும், துக்கமில்லாமல் இருப்பதற்குரிய ஸாதனங்களைச் சொல்லவும் நமக்கு ஆசாரிய பரம்பரை வேண்டும். ஒரு ஆசாரியர் தமக்குப் பிற்காலத்தில் தம் காரியத்தைச் செய்ய மற்றொருவருக்கு அதிகாரம் கொடுக்கிறார். இப்படி வருபவர்களின் வரிசைதான் ஆசாரிய பரம்பரை. அந்தப் பரம்பரை விஷயத்தில் நாம் நிரம்ப நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். ஆத்ம ஜ்யோதிஸை அடையவேண்டிய மார்க்கமாகிய நிதியைக் காப்பாற்றித் தந்தவர்கள் அவர்களே! யார் யார் மூலமாக இந்த நிதியானது லோகத்தில் இன்றுவரையில் வந்திருக்கிறதோ, அவ்வளவு பேரையும் த்யானித்தால் அதிக அநுக்கிரஹம் உண்டாகும். ஆகவே குரு பரம்பரா ஞானமானது ஆத்ம தத்வத்தில் நாட்டமுடையவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.

சாச்வத ஐச்வர்யமான ஆத்ம ஸாம்ராஜ்யத்தை நமக்குக் காட்டிக் கொடுத்த இந்த எல்லா ஆசார்யர்களின் பெயரையும் தினமும் சொல்லி, இந்த ச்லோகத்தால் அவர்களையெல்லாம் அனைவரும் நமஸ்கரிக்க வேண்டும்.

இங்கே ஆத்ம ஸாம்ராஜ்யம் என்று சொன்னேன். முதலில் ஒரு வேடப் பையனுக்கு ஸாம்ராஜ்யம் கிடைத்த கதையில் ஆரம்பித்தேன். அப்புறம் எங்கேயோ அத்வைத குரு பரம்பரை என்று கொண்டு போய்விட்டேன்! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? சொல்கிறேன் :

ஆசார்யாளுக்கு முந்தி மநுஷ்ய ரூபத்தில் இருந்து கொண்டு அத்வைதோபதேசம் செய்தவர்களில் அவருடைய குருவான கோவிந்தர், குருவுக்கு குருவான பரமகுரு கௌடபாதர் ஆகிய இரண்டு பேரை மட்டும் ச்லோகத்தில் சொல்லியிருந்தாலும், லோகத்திலும் பொதுவாக இந்த இருவரின் பேர் மட்டும் கொஞ்சம் தெரிந்திருந்தாலும் வேறு சில மநுஷ்ய ரூப அத்வைத ஆசார்யர்களும் நம் பகவத்பாதாளுக்கு முந்தியே, சுகருக்கு அப்புறம் இருந்திருக்கிறார்கள்.

நாராயணனிலிருந்து சுகர் வரையிலானவர்களை, அத்வைதிகளைப் போலவே மற்ற ஸித்தாந்திகளும் தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு மூல புருஷர்களாக வைத்துக் கொண்டு நமஸ்காரம் செய்கிறார்கள். ஆனால் கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் இருவரும் அத்வைதந்தான் தத்வம் என்று, மற்ற ஸித்தாந்தங்களை நிராகரித்துத் தீர்மானம் பண்ணியிருப்பதால், இவர்கள் அத்வைதிகளுக்கு மட்டுமே ஆசார்யர்கள் ஆவர். இப்படி exclusive- ஆக அத்வைதத்துக்கு மட்டுமே கிரந்தங்கள் உபகரித்தவர்களில் ஆசார்யர்களுக்குப் பூர்வத்தில் வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பேரையாவது உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். ஆத்ரேய பிரம்மநந்தி என்பவர் ஒருத்தர்; ஸுந்தர பாண்டியர்கள் என்று ஒருத்தர் (ஏதோ தெற்கத்தி ராஜா பேர் மாதிரி இருக்கிறது!); பர்த்ரு ப்ரபஞ்சர் என்று இன்னொருவர்; பர்த்ருஹரியும் ஒருவர். ப்ரம்மதத்தர் என்று ஒருத்தர் ஸூத்ர பாஷ்யமே பண்ணியிருப்பதாகத் தெரிகிறது. இன்னொருத்தர் த்ராவிடாசார்யார். இந்த த்ரவிடாசாரியரை விசிஷ்டாத்வைதிகளும் தங்கள் ஸித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்று சொல்லிக் கொள்வதுண்டு.

இவர்களுடைய கிரந்தம் எதுவும் இப்போது பூர்ணமாக நமக்குக் கிடைக்காவிட்டாலும், ஸாக்ஷாத் நம் சங்கர பகவத்பாதாள் உள்படப் பிற்கால அத்வைத கிரந்த கர்த்தாக்கள் இவர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

இவர்களில் த்ரவிடாசார்யார்தான் நம் கதைக்கு சம்பந்தப்பட்டவர்.



தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:46 am


த்ராவிட விஷயம்

தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. இதனால் சிலபேர் ஸம்ஸ்கிருதத்தையே “ரொம்ப’ ஸம்ஸ்கிருதமாக்கி ‘தேகம்’ என்பதைக்கூட ‘த்ரேகம்’ என்று சொல்கிறார்கள்!

த-மி-ழ் என்பதில் ‘த’, ‘த்ர’ வாயிருக்கிறது. ‘மி’ என்பது ‘வி’ என்றாயிருக்கிறது. ‘ம’ வும் ‘வ’ வும் ஒன்றுக்கொன்று மாறுவதற்கு ஃபைலாலஜிக்காரர்கள் [மொழி ஒப்பு இயல் நிபுணர்கள்] நிறைய உதாரணம் கொடுப்பார்கள். ஸம்ஸ்கிருதத்துக்குள்ளேயே இதில் ஒன்று மற்றதாகும். உதாரணமாக ‘சாளக்ராவம்’ என்பதுதான் ‘சாளக்ராமம்’ என்றாயிருக்கிறது . சம்ஸ்க்ருதத்தில் ‘மண்டோதரி’ என்பதைத் தமி்ழில் ‘வண்டோதரி’ என்கிறோம். ‘த்ரவிட’ என்பதையே ‘த்ரமிட’ என்றும் சொல்வதுண்டு. ‘ழ’ வும் ‘ள’ வும் மாறுவது சகஜம். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் போனால் ‘வாளைப்பளத்தில் வளுக்கி விளுந்திடப்போறே’ என்று சொல்வார்கள். ‘ழ’ வுக்கும் ‘ள’ வுக்கும் ரொம்பக் கிட்டத்தில் உள்ளதுதான் ‘ட’ வும். வேதத்திலேயே ‘அக்னிமீடே’ என்று வருவது ‘அக்னிமீளே’ என்றும் மாறுகிறது. இப்படித்தான் ‘தமிழ்’ என்பதில் உள்ள ‘ழ்’ ‘த்ரவிட்’ என்பதன் ‘ட்’ ஆக இருக்கிறது.

த – ‘த்ர’வாகவும், மி – ‘வி’ யாகவும், ழ் – ‘ட்’ டாகவும் – மொத்தத்தில் ‘தமிழ்’ என்பது ‘த்ரவிட்’ என்றிருக்கிறது.

இப்போது எல்லாவற்றிலும் தமிழ் சம்பந்தம் காட்டினால் ஒரு ஸந்தோஷம் உண்டாவதால், த்ரவிடாசார்யாரைச் சொல்லும்போது அவருக்குத் தமிழ் சம்பந்தம் காட்டி நாமுந்தான் ஸந்தோஷப்படுவோமே என்று தோன்றிற்று; சொன்னேன்.

பகவத்பாதாளே ‘ஸெளந்தர்யலஹரி’யில் “அம்மா, நீ தமிழ்க் குழந்தைக்குப் பால் கொடுத்தாயே?” என்கிறபோது, “த்ரவிட சிசு” என்று பதப் ப்ரயோகம் செய்திருக்கிறார்.

‘தமிழ்’ தான் ‘த்ரவிட்’ என்றால், ஆர்யன் – திராவிடன் ‘ரேஸ் தியரி’ (இனக்கொள்கை)யை வைத்துக் கொண்டு தப்பர்த்தங்கள் பண்ணிக்கொள்ளக் கூடாது.

வேத சாஸ்திரங்களைப் பார்த்தால் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு வேறு ‘ரேஸ்’ (இனம்) என்பதற்குக் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லை. ஆனால் வெள்ளைக்காரர்களின் Divide-and-rule (பிரித்து ஆள்கிற) கொள்கைப்படி, அவன் இந்த ரேஸ் – தியரியைக் கட்டி விட்டுவிட்டான்.

சாஸ்திரப் பிரகாரம் என்ன சொல்லியிருக்கிறது? ஆரிய இனம் என்று ஒன்றைச் சொல்லவேயில்லை. ‘ஆர்ய’ என்றால் மதிப்புக்குரிய என்று அர்த்தம். அவ்வளவுதான். இன்றைய ரேஸ் கொள்கைப்படி, ஆரியனான அர்ஜுனனைப் பார்த்தே பகவான் கீதையிலே, “நீ என்ன இப்படி பேடி மாதிரி மனத்தளர்ச்சி அடைந்து அநார்யனாகி விட்டாயே !” என்கிறார். ‘அநார்யன்’ என்றால் ‘ஆர்யன் அல்லாதவன்’ என்று அர்த்தம். (முன்னே ‘அன்’ சேர்த்தால் எதிர்ப்பதமாகிவிடும். இதையே இங்கிலீஷிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஹாப்பிக்கு’ எதிர்ப்பதம் ‘அன்-ஹாப்பி’.) ‘மதிப்பிற்குரியவனாக அல்லாமற் போய்விட்டாயே !’ என்பதுதான் இங்கு பகவான் சொல்வதன் அர்த்தமே ஒழிய, இனரீதியில் இங்கே அர்த்தம் பண்ணமுடியாது. பழங்காலக் காவியங்களை, நாடகங்களைப் பார்த்தால் ராணிகள் தங்கள் பதியான ராஜாவை ‘ஆர்ய புத்ர’ என்று அழைக்கிறார்கள். இப்போதைய கொள்கைப்படி ‘ஆர்ய’ என்பது ஒரு இனமானால், ‘ஆர்யபுத்ர’ என்று அழைக்கும் ராணிகள் அதற்கு மாறாக ‘திராவிட புத்ரி’களாக அல்லவா இருக்க வேண்டும்? ஐயர் ஜாதிப் பெண்ணொருத்தி ஒரு ஐயங்கார்ப் பையனைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் அவனை ‘ஐயங்கார் வீட்டுப் பிள்ளையே!’ என்று கூப்பிடலாம். இவளும் ஐயங்காரானால் அப்படிக் கூப்பிடுவாளோ ? மாட்டாள். ஸீதை ராமரை ‘ஆர்ய புத்ர’ என்று கூப்பிட்டபோது ‘ஆர்ய’வுக்கு ரேஸ் அர்த்தம் கொடுத்தால் அவள் திராவிட ஜாதி என்றாகிவிடும். இது அபத்தம். இதனால் என்ன ஏற்படுகிறது ? இங்கேயும் ஆர்ய என்றால் ‘மதிப்புக்குகந்த’ என்றுதான் அர்த்தம். ‘ஆர்ய புத்ர’ என்றால் ‘மதிப்புக்குகந்த குடிமகனே’ என்று அர்த்தம்.

ஆர்ய என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக சாஸ்திரங்களில் எங்குமே வரவில்லை.

‘த்ராவிட’ என்பதும் இனப்பெயராக வரவில்லை.

ஒரே இனத்தைச் சேர்ந்த பாரத ஜனங்களைத் தான் விந்தியத்துக்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும் தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. ஆர்ய-திராவிட இன வேற்றுமை இல்லை, கௌடர்- திராவிடர் என்பதாக, இனத்தை வைத்துப் பிரிக்காமல், ஒரே இனக்காரர்களைப் பிரதேச ரீதியில் பிரித்திருக்கிறார்கள்.

ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுதும் கௌட தேசம்; அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்று இருந்தது. கௌட தேசத்தில் வசித்த கௌடர்களை மேலும் பிரதேச ரீதியில் ஐந்தாகப் பிரித்தார்கள். அப்படியே திராவிடத்தில் வசித்தவர்களையும் ஐந்தாகப் பிரித்திருக்கிறது. இவர்களைப் பஞ்ச கௌடர், பஞ்ச த்ராவிடர் என்பார்கள். பஞ்ச கௌடர்களில் ரொம்பவும் வடக்கே காச்மீரத்தில் இருந்தவர்களை ஸாரஸ்வதர்கள் என்றும் அதற்கு தெற்கே பஞ்சாபில் இருந்தவர்களை கான்யகுப்ஜர்கள் என்றும், பிறகு கிழக்குவாக்காக உத்தரப்ரதேஷ், பிஹாரில் உள்ளவர்களை மைதிலர்கள் என்றும் அப்புறம் தெற்கே ஒரிஸாவில் இருப்பவர்களை உத்கலர் என்றும் பிரித்துவிட்டு கடைசியாகக் கிழக்குக்கோடியில் வங்காளத்தில் இருப்பவர்களுக்கு தனியாகப் பெயர் தராமல் கௌடர்கள் என்றே விட்டு விட்டார்கள். ஆக, ஸாரஸ்வதர், கான்யகுப்ஜர், மைதிலர், உத்கலர், கௌடர் ஆகிய ஐவரும் பஞ்ச கௌடர்கள். இப்படியே விந்தியத்திற்குத் தெற்கே ஐந்தாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகள், கூர்ஜரர் (குஜராத்தி) , மஹாராஷ்ட்ரர், ஆந்திரர், கர்நாடகர், கடைசியில் தெற்குக் கோடியில் வேறு பேர் இல்லாமல் திராவிடர் என்றே வைக்கபட்ட தமிழ் தேசத்தவர். இதிலே கேரளீயர்களான மலையாளிகளைச் சொல்லாததற்குக் காரணம், மலையாள பாஷை ஆயிரம் வருஷங்களுக்கு உள்ளாகத்தான் தனி ரூபம் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தி அதுவும் தமிழ் தேசமாகத் தான் இருந்தது.

இரண்டு வெவ்வேறு இனமில்லை; பிரதேச ரீதியில் ஒரே இனத்தில் பத்துப் பிரிவுகள். இரண்டு பாதிகளுக்குப் பேராக இருந்த கௌடம், திராவிடம் என்பன குறிப்பாக கிழக்குக்கோடி, தெற்குக் கோடிப் பிரதேசங்களுக்கு மட்டும் பேர் ஆகிவிட்டது.

இன்று கௌடர்கள் என்றாலே வங்காளிகள் என்றாகி விட்டது. ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் அந்தத் தேசத்தவர்தான். அதனால் தான் அவர்களுடைய மடத்தை கௌடீய மடம் என்கிறார்கள். அப்படியே திராவிடர்கள் என்றால் முக்கியமாகத் தமிழர்கள்தான் என்று ஆகிவிட்டது. இதிலே ஒரு வேடிக்கை. வங்காளத்திலும், தமிழ்த் தேசத்திலும் தான் வெள்ளைக்கார நாகரிகமும் இங்கலீஷ் படிப்பும் முதலிலேயே வேகமாகப் பரவிற்று; பிரிட்டிஷ் ராஜ்யத்தில் எங்கே பார்த்தாலும் குமாஸ்தாக்களாகப் போனவர்களும் இந்த இருவர்தான்.

ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே குறிப்பிடுவார்கள். மஹாராஷ்டிரத்தில் இப்போது பலருக்கு டிலாங் என்று (இயற்) பெயருக்குப் பின்னால் வருகிறதைப் பார்க்கிறோம். இவர்களுடைய முன்னோர்கள் தெலுங்கு தேசத்திலிருந்து மஹாராஷ்டிராவிற்குப் போய் அங்கேயே ‘ஸெட்டில்’ ஆகிவிட்டார்கள். ‘தெலுங்கு’ என்பதன் திரிபுதான் ‘டிலாங்’. இதேமாதிரி காசி முதலான அநேக உத்தரதேச ஸ்தலங்களில் இருக்கிற சில பிராம்மணர்களுக்கு த்ரவிட் என்று வம்சப் பெயர் இருக்கிறது. ஆதிகாலத்தில் தமிழ் தேசத்திலிருந்து அங்கே போய் குடியேறினவர்களின் வம்சத்தில் வந்தவர்களே இந்த ‘த்ரவிட்’கள். இப்படி ‘திராவிடர்’ என்று பெயர் கொண்ட வடக்கத்தியார் எல்லாரும் பிராம்மணர்களே என்பதைக் கவனிக்க வேண்டும். ரேஸ் தியரிப்படி பிராம்மணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் வாஸ்தவத்திலோ இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் ‘த்ரவிட்’ அடைமொழி இருக்கிறது. இதிலிருந்தே ‘திராவிட’ என்பது பிரதேசத்தைக் குறிப்பதேயன்றி இனத்தைக் குறிக்கவேயில்லை என்று தெரிகிறதல்லவா?

தமிழ் தேசத்தின் உச்சாரண வழக்குப்படி ‘த்ரவிட்’ என்பது தமிழ் என்று இருக்கிறது. ‘த்ர’ என்பது போல ஸம்ஸ்க்ருதத்தில் ஒற்றெழுத்தோடு சேர்ந்து வருகிற ‘ர’காரம் தமிழில் உதிர்ந்து விடும். ஸம்ஸ்கிருத ‘ச்ரமண’ தமிழில் ‘சமண’ ஆகிறது; ‘ப்ரவாள’ என்பது ‘பவள’மாகிறது. இப்படியே ‘த்ர’ என்பது த என்று இருக்கிறது.

திரவிடாச்சார்யாரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்ததில் இத்தனை ஊர்க்கதை வந்து சேர்ந்து விட்டது! அவர் ஆசார்யாளுக்கு முன்னால் வாழ்ந்த அத்வைத ஸித்தாந்தி என்று சொன்னேன்.



தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:47 am


வேடனே ராஜா; ஜீவனே பிரம்மம்

ஆசார்யாளும் பின்னால் வந்தவர்களும் சாந்தோக்ய உபநிஷத்துக்கு பாஷ்யம் பண்ணும்போது, அதில் மூன்றாவது, நாலாவது அத்தியாயங்களில் வரும் ‘மதுவித்யை’, ‘ஸம்வர்க வித்யை’ முதலானவற்றை விளக்கும் போது த்ரவிடாச்சார்யாளை quote செய்திருக்கிறார்கள்.

இந்த சாந்தோக்ய உபநிஷத்தில்தான் ‘தத்-த்வமஸி’ என்ற மஹா வாக்கியம் வருகிறது. “நீயேதானப்பா அந்த பிரம்மமாயிருக்கிறாய்” என்று ச்வேதகேதுவுக்கு அவனுடைய பிதாவும் குருவுமான உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை செய்த உபதேசம் அது.

‘தத்-த்வம்-அஸி’ என்பதில் ‘தத்’ என்பது பரமாத்மாவான பிரம்மம்; ‘த்வம்’ என்பது ஜீவாத்மா : அதற்கு ‘பெர்ஸானிஃபிகேஷனா’க உள்ள ச்வேதகேது; ‘அஸி’ என்றால் ‘இருக்கிறாய்.’ “நீ பிரம்மமாக இருக்கிறாய்” என்று தகப்பனார் உபதேசிக்கிறார் – “ஸாதனைகளெல்லாம் செய்து என்றைக்கோ ஒருநாள் பிரம்மமாக ஆகப்போகிறாய்” என்று அல்ல! எதிர்காலத்தில் இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலேதான் பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

‘அப்படியானால் ஸாதனை எதற்கு?’ என்றால்… பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்து கொண்டிருந்தோமானால் இத்தனை அழுகை, இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப முடியாமல் ஆகாசம் வரை முட்டிக்கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா பிரசாந்த நிலையில் இருந்து கொண்டிருப்போம்? அப்படி ஒரு நிலை உண்டு என்று கூடத் தெரியாதவர்களாக அல்லவா இப்போது நாம் தடமாடிக் கொண்டிருக்கிறோம்? இப்படிப்பட்ட நம்மிடம், ‘நீ இப்போதும் பிரம்மம் தானப்பா’ என்றால் எப்படி ஒப்புக் கொள்வது?

இதை ஒப்புக்கொள்ள வைப்பதற்காகத்தான் த்ரவிடாச்சார்யாள் வேடப் பையன் மாதிரி இருந்த ராஜகுமாரனின் கதையைச் சொல்லியிருக்கிறார்.

ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி தன்னிலிருந்தே நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும், ஆத்மாவிலிருந்தே அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது என்ற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிற போது, இந்தக் கதையை மேற்கோள் காட்டுகிறார். இது த்ரவிடாசார்யாள் சொன்னது என்று பேரைச் சொல்லாமல் ரொம்பவும் மரியாதையுடன், “ஸம்பிரதாயமறிந்த பெரியவர்களின் கதை இப்படியொன்று இருக்கிறது” – அத்ர ச ஸம்ப்ரதாயவித ஆக்யாயிகாம் ஸம்ப்ரசக்ஷதே – என்கிறார். ஆசார்யாளின் பாஷ்யத்தை மேலும் விரித்து உரை எழுதின ஆனந்தகிரி என்பவரே இது திராவிடாசார்யார்கள் சொன்ன கதை என்று பேரை வெளியிட்டிருக்கிறார்.

கதையிலே வேடப் பையனாக இருந்தவன் ராஜ குமாரனாக உருமாறவா மாறினான்? Transform ஆனானா என்ன? வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இதை முதலில் தெரிந்து கொள்ளாதிருந்தான். அதனால் வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மையைத் தெரிந்து கொண்டு விட்டவுடன், ராஜகுமாரனாகவே எப்போதும் இருந்தவன், ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். இரண்டுபேர் இல்லை; ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான் முதலில் தன்னைத் தானே புரிந்து கொள்ளாமல் இருந்தான். அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாக உயர்வு பெற்றுவிட்டான். அப்புறம் சண்டை போட்டு ஸாம்ராஜ்யாதிபதியாகவே ஆகிவிட்டான்.

வேட வேஷத்தில் (வேட வேடத்தில்: ‘வேஷம்’ என்பது தமிழில் ‘வேடம்’ என்றாகும்) இருந்த ராஜகுமாரன் மாதிரித் தான் நாமெல்லாம் ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான். இந்திரியங்கள் இழுக்கிற வழியில் ஓடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் பிரம்மம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டாலும் அதை அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் இழுத்துக் கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளையெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாக ஆகவேண்டும். ‘ஸம்ராட்’ – அதாவது ராஜா – என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ அதுதான் உருகி மறுபடியும் தன் ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால் மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது.

ஐஸ் தானாக கரைகிறது; நாம் கரைய மட்டோம் என்கிறோம்.

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும்

என் கல்நெஞ்சம் உருகவில்லையே!

என்று தாயுமான ஸ்வாமிகள் நம் நிலைக்கு இறங்கி வந்து நமக்காகத்தான் பாடியிருக்கிறார்.

நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி, நம்மை உருக்கி ‘நிஜ நாமாகப்’ பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் ‘வரமாட்டேன்’ என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி, பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? நம்மை நம்முடைய நிஜ நாமாக ஆக்கக்கூடிய ஒருத்தர் இருக்கிறாரா?

இருக்கத்தான் செய்கிறார்.

வேடப் பையனுக்கு “நீதானப்பா ராஜகுமாரன்” என்று சொல்லிப் புரிய வைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி கொடுத்து, அவனை ராஜாவாக்குவதற்காக அவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம் [உருவகம்]. நமக்கு நம் பரமாத்மத்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.





தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2023 7:55 pm

குரு பக்தி


‘ஈசுவரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்?’ என்று கேட்டால்: ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான்,

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: |



என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ச்லோகத்தில் குருவுக்கும் பரமாத்மாவுக்கும் அபேதம் சொல்லியிருப்பது ஒரு விசேஷம். Incidental – ஆக இதிலேயே இன்னொரு விசேஷம், இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த ச்லோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு அபேத பாவமும் உண்டாகி விடும்.

ஜகத்தை ஸ்ருஷ்டிப்பது, பரிபாலிப்பது போன்ற பல காரியங்கள் ஈசுவரனுக்கு இருக்கின்றன. அவை எல்லாம் குருவுக்கு இல்லை. அவனுக்கு ஆபீஸ் உண்டு; இவருக்கு ஆபீஸ் இல்லை. ஆபீஸ் இருக்கிறவனிடம் போய்த் தொந்தரவு கொடுப்பதைவிட ஆபீஸ் இல்லாமல் சும்மா இருக்கிறவரிடம் நம் காரியத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டு விடலாம். ஈச்வரனுக்கு என்ன என்ன உத்தமமான குணங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாம் இந்த குருவிடத்தில் இருக்கின்றன. இவர் சுத்தமானவர், பொய் சொல்லாதவர்; வஞ்சனை தெரியாதவர்; இந்திரியங்களை எல்லாம் வென்றவர்; கருணை நிறைந்தவர்; மகா ஞானி. இவரைப் பிரத்தியக்ஷமாக பார்க்கிறோம். பகவானையோ பிரத்தியக்ஷத்தில் பார்க்க முடியவில்லை. ஆகவே குருவின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு பக்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், ஈசுவர பக்தியினால் நமக்கு என்ன அநுகூலங்கள் உண்டாகின்றனவோ அத்தனையும் சுலபமாக உண்டாகிவிடும். அதனால் தான் குருபக்தி உயர்ந்தது என்று சொன்னார்கள்.

ஆனால் தெய்வ பக்தியை மறக்கக்கூடாது. இந்த குருவை இவனோடு சேர்த்து வைப்பதே தெய்வந்தானே? தெய்வ அநுக்கிரஹம் இல்லாவிட்டால் இந்த குருவை இவன் எப்படி அடைவான்?

துர்லபம் த்ரயமேவைதத் தேவாநுக்ரஹ ஹேதுகம் |
மநுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷ ஸம்ச்ரய: ||



”தெய்வாநுக்ரஹத்தாலேயே ஒருத்தனுக்குக் கிடைக்கிற மூன்று பெரிய வாய்ப்புகள்: ஒன்று, மநுஷ்ய ஜன்மா கிடைப்பது. இரண்டு, ஸத்ய தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது; மூன்று, மஹா புருஷனான ஒரு குரு கிடைப்பது” என்று ஆசார்யாள் ‘விவேக சூடாமணி’ ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்.

எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான்: தக்ஷிணாமூர்த்தி தான்.
ஸ பூர்வேஷாமபி குரு: காலேநாநவச்சேதாத் ||1

நம் குருவுக்கும் அந்த குருவுடைய குருவுக்கும் அவருடைய குருவுக்கும் ஞானம் எப்படிப் பூர்ணமாக ஏற்பட்டிருக்கும்? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு குருவைச் சொல்லிக்கொண்டே போனால் கடைசியில் ஒருத்தருக்கு ஸாக்ஷாத் ஈசுவரனேதான் குருவாக இருந்து ஞானத்தை தந்திருக்க வேண்டும் என்று தெரியும். அதனால்தான் தெய்வத்தை மறக்கக் கூடாது என்றார்கள்.

இதையே வேறு விதமாகவும் சொல்வதுண்டு. குரு, ஈசுவரன் என்ற இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல் ஈசுவரனே குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டு விட்டோமானால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்ற இரண்டு தனித்தனியாகப் பண்ணவேண்டாம். குருவே ஈசுவரன் என்று கருதி அந்த குருவான ஈசுவரன் ஒருத்தனிடத்திலேயே பூர்ண சரணாகதி பண்ணிவிடலாம். குரு பரம சுத்தமானவராக, உத்தமமானவராக இல்லாவிட்டாலும்கூட, இவர் மூலமாக நாம் நித்திய சுத்தனும் உத்தமோத்தமனுமான ஈசுவரனையே பக்தி பண்ணுவதால், அந்த ஈச்வரனே இவர் மூலமாக நமக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவான். இதனால் தான் குருவையே ப்ரம்மா, விஷ்ணு, சிவன், இந்த மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம் என்று எடுத்த எடுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: |
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||



பிரம்ம வித்யா ஆசார்யர்களில் முக்கியமான வியாஸரைப் பற்றிச் சொல்கிறபோது ‘குருர் ப்ரம்மா’ சுலோகத்தின் தாத்பரியத்தையே இன்னும் ரஸமாகச் சொல்வதுண்டு.

அசதுர்வதநோ ப்ரஹ்மா த்விபாஹுரபரோ ஹரி: |
அபாலலோசந சம்பு: பகவாந் பாதராயண: ||



என்பார்கள். பாதராயணர் என்று வியாஸருக்குப் பெயர். அவர் ‘அசதுர்வதநோ ப்ரஹ்மா’, அதாவது நான்கு முகம் இல்லாத ஒரு முக பிரம்மா; ‘த்விபாஹு: அபரோ ஹரி:’, நாலு கையில்லாமல் இரண்டு கையுள்ள ஹரி, அதாவது விஷ்ணு; ‘அபால லோசந:சம்பு:’, நெற்றிக் கண் இல்லாத போதிலும் சிவன்!

குருவைவிட சிரேஷ்டமானவர் இல்லை. நமக்கு அவரிடத்தில் பூர்ணமான நம்பிக்கை ஏற்பட வேண்டும். அது நிஜமான நம்பிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு அவரிடத்தில் ஈசுவரனே இப்படி வந்திருக்கிறான் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், அப்புறம் தனியாக ஸ்வாமிகூட வேண்டாம். இந்த நம்பிக்கையே, அவரிடத்தில் நாம் வைக்கிற பக்தியே, நம்மைக் கடைத்தேறச் செய்து விடும்.

வைஷ்ணவர்களுக்கு ஆசார்ய பக்திதான் மிகவும் பிரதானம்.

ஈசுவர அபராதம் பண்ணினால் ஈசுவரனிடத்திலேயே போய் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது இல்லை; ஆசார்யன் மன்னித்து விட்டாலே போதும். ஈசுவரனுடைய கோபம் தணிந்து விடும். ஆனால் குருவினிடத்தில் அபசாரம் பண்ணிவிட்டு ஈசுவரனிடத்தில் போனாலும் ஒன்றும் நடக்காது. குருவிடத்திலேயே போய்த்தான் அந்த அபசாரத்துக்கும் நிவிருத்தி தேடிக்கொள்ள வேண்டும் என்று ஸ்வாமியே சொல்லி விடுவார்.

சிஷ்யனுக்காக குருவே பரமாத்மாவிடம் சிபாரிசு பண்ணினால் அவருக்குக் கோபம் போய் இவனுக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவார். ஆனால் குருவுக்கே கோபம் வந்து விட்டால் ரக்ஷிக்கிறவர் எவருமே இல்லை. இப்படி ஒரு ச்லோகம் கூட இருக்கிறது.2

அதனால்தான் குரு பக்தியை மிகவும் விசேஷமாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. உத்தமமான குரு கிடைக்கவில்லை என்றால், அரைகுறையாக ஒரு குரு இருந்தாலும் அவரை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு ஈசுவர பக்தி செய்ய வேண்டும்.

நாம் பக்தி செய்வதால் ஈசுவரனுக்கோ குருவுக்கோ ஒரு லாபமும் இல்லை. நமக்கேதான் பெரிய லாபம், என்ன லாபம் என்றால் :

நாம் அழுக்கு உடையவர்களாக இருக்கிறோம்; சஞ்சலம் உடையவர்களாக இருக்கிறோம். மனஸை ஒரு நிமிஷங்கூட ஓர் இடத்தில் நிறுத்த முடியாதவர்களாக இருக்கிறோம். எப்போதும் சுத்தமாக, நிரம்பிய ஞானம் உடையவனாக, அசங்காமல், ஆடாமல், பட்ட கட்டை மாதிரியாக இருக்கிறவனை நாம் நினைத்தால்தான், நாம் நினைக்கிற அவனது நிச்சலனமான நிலை நமக்கும் வரும். நாமே அவனாக ஆகிவிடுவோம். ஈசுவரனைத்தான் அப்படி நினைக்க வேண்டும் என்பது இல்லை. இப்படிப்பட்ட குணங்கள் உடையதாக எதை நினைத்துக் கொண்டாலும், நம்மைப் போன்ற ஒரு மனிதரையே இவ்வளவு குணங்கள் உடையவராகக் கருதி அவரையே குருவாக நினைத்து பக்தி செய்தாலும் நாம் அப்படியே ஆகிவிடுவோம். மனஸ் நின்றால்தான் ஆத்மா பிரகாசிக்கும்; அதாவது நமது நிஜமான ஆனந்த நிலை தெரியும். மனஸை நிறுத்துவதற்காகத்தான் குரு பக்தி வேண்டும், ஈசுவர பக்தி வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

குருவின் அநுக்கிரஹத்தால்தான் ஞானம் கிடைக்கும் என்ற விஷயம் சாந்தோக்ய உபநிஷத் சொல்லியிருக்கிறது. ஆசார்யவான் புருஷோ வேத – ஆசார்யனைப் பெற்ற புருஷன் தான் ஞானத்தை அடைகிறான் – என்று அதில் இருக்கிறது. ஒரு சின்னக் கதை போல இதைச் சொல்லியிருக்கிறது. கந்தார தேசத்தை (இந்த நாள் காண்டஹார் என்பது அதுதான்) சேர்ந்த ஒருத்தனின் கண்ணைக் கட்டிக் கொண்டு போய் ஜனசஞ்சாரமில்லாத ஒரு இடத்தில் விட்டு விட்டால் எப்படியிருக்கும்? அவன் எப்படித் தன் ஊருக்குத் திரும்புவான்? கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா என்று தெரியாமல்தானே தவித்துக் கொண்டிருப்பான்? இந்த மாதிரிதான் மாயை நம் கண்ணைக் கட்டி இந்த லோகத்தில் விட்டிருக்கிறது. அப்புறம் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவனிடம் ஒருவன் வருகிறான். கட்டை அவிழ்த்து விடுகிறான். கந்தார தேசத்துக்குப் போகிற வழியையும் சொல்லிக் கொடுக்கிறான். அதற்கப்புறம் இவன் அழவில்லை. பயப்படவில்லை. அவன் சொன்ன மாதிரியே போய்த் தன் ஊரை அடைகிறான். இந்த மாதிரிதான் ஆசார்யனின் உபதேசத்தால், நாம் எங்கேயிருந்து வந்தோமோ அந்தப் பரமாத்ம ஸ்தானத்துக்கு வழியைத் தெரிந்து கொண்டு அங்கே போய்ச் சேருகிறோம் என்று சாந்தோக்யம் சொல்கிறது.

ஜகத்குரு என்று பிரஸித்தி பெற்ற ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எங்கு பார்த்தாலும் குருவின் பெருமையைச் சொல்கிறார். ”ஒருவனுக்கு எத்தனைதான் பெருமை இருந்தால் என்ன? குருவின் சரணாரவிந்தங்களில் அவன் தன் மனஸைக் கட்டிப் போட்டிருக்காவிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறார். ‘என்ன பிரயோஜனம்?’ என்று ஒரே ஒரு தரம் தரம் கேட்கவில்லை. நாலு தரம், ” தத:கிம்? தத:கிம்? தத:கிம்? தத:கிம்?’ ‘என்று கேட்கிறார். ”குர்வஷ்டகம்” (அதாவது குரு ஸ்துதியான எட்டு ச்லோகங்கள்) என்ற ஸ்தோத்தரத்தில், ஒவ்வொரு அடி முடிவிலும் இப்படி நான்கு தரம், மொத்தம் முப்பத்திரண்டு தடவை கேட்கிறார்.

முடிவில், தம் சரீரத்தைவிட்டு அவர் புறப்படுவதற்கு முந்திப் பண்ணின உபதேசத்திலும்,

ஸத் வித்வான் உபஸ்ருப்யதாம் ப்ரதிதினம் தத்பாதுகா ஸேவ்யதாம்
ப்ரஹ்மைகாக்ஷரம் அர்த்யதாம் ச்ருதிசிரோவாக்யம் ஸமாகர்ண்யதாம்



என்கிறார். ”ஸத்தான வித்வானை ஆசார்யனாக வரிப்பாயாக! தினந்தோறும் அவருக்குப் பாத பூஜை பண்ணுவாயாக! அவரிடமிருந்து உபதேசம், பிரணவ உபதேசம், உபநிஷத மஹாவாக்ய உபதேசம் எல்லாம் வாஙகிக் கொள்வாயாக!” என்கிறார். (”ப்ரதி தினம் தத்பாதுகா ஸேவ்யதாம்” என்று சொன்ன பகவத் பாதாளின் பாதுகைக்கு, இன்றைக்கும், ஒரு நாள் விடாமல் பிரதி தினமும் மடத்தில் பாத பூஜை நடந்து கொண்டிருக்கிறது!)

இங்கே சொன்னது ஸந்நியாஸம் தருகிற ஸந்நியாஸ குருவைப் பற்றி ஆகும். அந்த ஆசிரமத்தில்தான் பிரணவோபாஸனை, மஹாவாக்ய அநுஸந்தானம் இவற்றின் மூலம் மோக்ஷத்தைத் தேடுவது. இது நாலு ஆச்ரமங்களில் கடைசி. முதலில் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் ஒரு கிருஹஸ்த குருவை அடைந்து வேதாத்யயனமும், வேதகர்மாநுஷ்டானமும் பண்ணுவதிலிருந்து ஆரம்பித்து, கடைசியில் இந்த ஸந்நியாஸ நிலைக்கு வருமாறு ஆசார்யாள் உபதேசித்திருக்கிறார்.

முதலில் வேத கர்மா எதற்கு? மனமடங்கிப் பரமசாந்தமாக இருந்து கொண்டு கேட்டால்தான் குருமூலமாகப் பெறுகிற பிரணவமும் மஹாவாக்யமும் பரம புருஷார்த்தமான மோக்ஷத்தைக் கொடுக்கும். மனம் ஒருமைப்பட்டு கேட்காவிட்டால் பிரயோஜனம் இராது. உழுத இடத்தில் ஊன்றினால் தான் விதை பிரயோஜனப்படும். நாம் எவ்வளவோ உபந்நியாஸம் கேட்கிறோம்; கீதை முதலானதுகளை நிறைய வாசிக்கிறோம். ஆனாலும் நமக்கு ஏன் துக்கம் போகவில்லை? ஞானம் உண்டாகவில்லை? நாம் சித்த சுத்தி பண்ணிக்கொள்ளாமலே கேட்பதாலும் படிப்பதாலும்தான் அது நிரந்தரமாக நின்று பலன் தருவதில்லை. ”வைதிக கர்மாக்களை நிறையப் பண்ணி ஈச்வரார்ப்பணம் செய். பலனை எதிர்பார்க்காமல், அதை பகவத் ஆராதனமாக நினைத்துக் கொள்” என்று ஆசார்யாள் இந்த உபதேசத்தின் ஆரம்பத்தில் சொன்னது, சித்த சுத்தியை, மனஸின் அமைதியை உண்டாக்கி கொள்வதற்காகத்தான். கர்மாவால் மனஸை உழுதாக வேண்டும். அது முதல் காரியம். அப்புறம் ஜலம் பாய்ச்ச வேண்டுமல்லவா? அதுதான் பக்தி. நம் ஹ்ருதயத்தில் ஜலம் பாய்ச்சுவது பக்திதான். ஈச்வரனிடமும், ஆசார்யனிடமும் பக்தி செலுத்த வேண்டும். குரு பக்தி இருந்தால் மனது தானாக சாந்தத்தை அடைகிறது. பெரியவர்களுக்கு, மஹான்களுக்கு முன் ஒன்றை வாசித்தாலும் கேட்டாலும் அல்லது அவர்களே ஒன்றைச் சொன்னாலும், அது மனஸில் நன்றாகப் பதிகிறது. ஏனென்றால் அவர்கள் ஸந்நிதானத்தில் நம் மனஸ் ஒரு விதமான சாந்தத்தோடு இருக்கிறது. கிளப்பிலும், லைப்ரரியிலும் இப்படி இருக்கவில்லை. அதனால்தான் அங்கெல்லாம் படிப்பதும், கேட்பதும் நிற்காமல் ஓடிப்போய்விடுகிறது. மனஸ் குரு பக்தியில் நனைந்தால் உடனே பலன் உண்டாகும். அதனால்தான் மஹான்களாக இருக்கிறவர்களிடமும் உபதேசம் கேட்க வேண்டும், எதையும் குருமுகமாக கற்க வேண்டும் என்பது. நாம் எவ்வளவோ படித்திருக்கிறோம். ஆனாலும் நமக்குள்ள அஞ்ஞானத்  தடிப்புக்  கொஞ்சமும் குறையவில்லை. அது எந்த இடத்தில் குறையுமோ அங்கே போய்ச் சேர்ந்தால் அஞ்ஞானத் தடிப்புத் தேய்ந்து போய், ஞானம் உதயமாகத் தொடங்கும். அப்படிப்பட்ட இடம் தான் ஆசார்யனின் சந்நிதி.

பிரம்மசரிய ஆசிரமத்தில் இப்படிச் சித்த சுத்திக்காக ஒரு குருவிடமிருந்து வேதங்களைத் தெரிந்து கொண்டபின், கிருஹஸ்தாச்ரமத்தில் அந்த வேதத்தில் சொன்ன கர்மாக்களைப் பண்ணி மனஸின் அழுக்குக்களையெல்லாம் போக்கடித்துக் கொண்டபின், ஸந்நியாஸ ஆசிரம குருவிடம் மஹாவாக்ய உபதேசத்தை வாங்கிக் கொண்டால் அது பயிராக விளைகிறது. அதாவது ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியத்தைப் பெறுகிறான். அதற்கு வழி பண்ணுவது, ஆரம்பித்திலும் சரி, முடிவிலும் சரி குரு தான்.

இதனால் தான் குருபக்தியை எங்கு பார்த்தாலும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.
1 “காலத்தில் கட்டுப்படாதவனானதால் ஈசனே ஆதி குருவுக்கும் குரு.” (யோக ஸூத்ரம் I.26)
2 சிவே ருஷ்டே குருஸ்த்ராதா குரௌ ருஷ்டே ந கச்சன || (-“குரு கீதை”)




தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2023 8:16 pm

குருகுல வாஸம்


ராஜாங்கம் என்பது இந்த லோகத்தில் இருக்கும் பொழுது நாம் நன்றாக இருப்பதற்காக ஏற்பட்டது. துஷ்டர்களால் ஸாதுகளுக்குக் கஷ்டம் ஏற்படக் கூடாது, பலிஷ்டர்களால் துர்பலர்களுக்குக் கஷ்டம் உண்டாகக் கூடாது. இந்த ரக்ஷணையைத் தருவதற்கும், ஜனங்களுடைய மற்ற இகலோக ஸெளக்கியங்களை ஏற்படுத்தி தருவதற்காகவும், ராஜா என்று ஒருத்தனை வைத்தார்கள். இப்போது மந்திரி சபை என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். எதுவானாலும் நமக்கு இந்த ரக்ஷணையையும் வசதிகளையும் தருகிற ராஜாங்கத்துக்குப் பிரதியாக நாம் சேவை செய்கிறோம்; பலவிதமான வரிகள் செலுத்துகிறோம்.

இந்த லோகம் சாச்வதமல்ல. சாச்வதமான இன்னொரு லோகத்தில் நாம் இடம் பிடித்தாக வேண்டும். அதற்கு நாம் போகவொட்டாமல் உட்பகை என்று சொல்லுகிற ஆறு துஷ்டர்கள், பலிஷ்டர்கள் நம்மைத் தடுக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டு, பக்தி, த்யான, ஞானாதிகளில் நாம் முன்னேறினால்தான் அந்த சாச்வத லோகத்துக்குப் போய் சேரலாம். இப்போதும் எப்போதும் நமக்குள்ளேயே இருப்பதுதான் அந்த சாச்வத லோகம் என்றால்கூட, அதற்குப்போய்ச் சேருவதுதான் பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. அங்கே போவதற்கு நமக்கு ராஜாவாக, ராஜாங்கமாக ஸஹாயம் செய்கிறவரைத்தான் ஆசார்யர் என்பது. இந்த லோகத்தில் ஸுகமாக இருப்பதற்காக ராஜா (அல்லது மந்திரி ஸபை) வேண்டியிருக்கிறது போலப் பரலோகம் (என்கிற உள்ளுலகமான ஆத்ம லோகம்) போகும் படியான காரியத்துக்கு ஆசார்யர் வேண்டும். இந்த லோகத்தில் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. இந்த லோகத்தில் நன்றாக இல்லாமலே போனால்கூடப் பரவாயில்லை. ஆனால் இங்கேயிருந்து போன பிறகு மறுபடி திரும்பி வராமல் அந்த சாச்வத லோகத்தில் சேர வேண்டியது ரொம்பவும் அவசியம்.

இந்த நச்வரமான [அழியும் தன்மை வாய்ந்த] லோக வாழ்க்கையின் போதேதான் நாம் அந்த சாச்வத வாழ்க்கைக்கு வழி பண்ணிக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையைத் தொடங்குகிற போதே இந்த முக்கியமான காரியத்துக்கு ஏற்பாடு பண்ணிவிடவேண்டும். அதற்காகத்தான் பாலப் பருவத்திலேயே பிரம்மச்சரிய ஆச்ரமம் என்று ஆரம்பித்து குருகுல வாஸம் பண்ணவைத்தார்கள்.

இப்படி வைத்ததால், அந்தச் சின்ன வயசிலேயே இந்த லோகம் பொய், பரமாத்மா தான் நிஜம் என்று அதனிடமே ஒரு ஜீவனைத் திருப்பி விட்டார்கள் என்று அர்த்தமில்லை.

குருகுலத்தில் ஆத்ம வித்யா சாஸ்திரங்களைச் சொல்லிக் கொடுத்தது வாஸ்தவம். ஆனால் அதற்காக அப்போதே மாணாக்கனை லோக வாழ்க்கையை விட்டு ஓட்டி விடுவதாக அர்த்தமில்லை. மற்ற ஸகல வித்தைகளையும், சாஸ்திரங்களையும் (இவற்றில் இக்காலத்திய ஸயன்ஸ்களில் அநேகம் வந்துவிடும்) , காவியங்களையும் நாடகங்களையும் கூட குருகுலத்தில் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பெரிய லோக நாடகத்தில் அரும்பு பூவாகி, பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, அந்தக் காய்தான் கனிந்து பழமாகும் என்ற நியாயம் நம் பூர்விகர்களுக்கு நன்றாகத் தெரியும். அபூர்வமாக எங்கேயோ எவரோ பால்யத்திலேயே பரம ஞானியாக வைராக்யத்தோடு மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்காரலாமே ஒழிய, மற்றவர்கள் படிப்படியாகத்தான் ஏறவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் இது படிப்படியாகத்தான் இருந்தாலும் ஏற்றிவிடுவதாக இருக்க வேண்டும். இறக்கிவிடுவதாக விட்டுவிடக்கூடாது என்றுதான் பிரம்மசரியத்துக்கு அப்புறம் கிருஹஸ்தாச்ரமமும், அதிலே தாம்பத்யம், சந்ததி விருத்தி எல்லாவற்றையும் வைத்து அப்புறம் ஓரளவு வைராக்யத்தோடு குடும்பத்தைவிட்டு, ஆனாலும் வைதீக கர்மாவை விடாமல் நடத்துகிற வானப்ரஸ்த ஆச்ரமத்தை விதித்து, கடைசியில் பூவை இயற்கையாக முதிரவிட்டுக் காயாகிக் கனிகிற நிலையில் ஸந்நியாஸத்தை வைத்தார்கள். லோக வாழ்க்கையை எடுத்த எடுப்பிலே விட்டுவிட முடியாது. அதனாலே அப்படிச் செய்ய வேண்டாம். ஆனால் அதே சமயத்தில் சாச்வதமான பரலோக வாழ்க்கையையும் மறக்கக்கூடாது. இவன் ஒரேடியாக ஏறாவிட்டால் பரவாயில்லை; ஆனால், ஒரே உருளலாக உருண்டு கீழேயும் போய் விடக்கூடாது – என்றுதான் தர்ம சாஸ்திரங்களை இவனுக்கு வழிகாட்டியாக வைத்து, இவன் எந்த ஸ்டேஜில், எந்த ஆசிரமத்திலிருந்தாலும், எப்போதும் இவனுக்குக் கொஞ்சம் ஆத்ம சிந்தனை, தெய்வ பக்தி, நல்லொழுக்கம், பரோபகார பண்பு எல்லாம் இருக்கும்படி சீர்படுத்திக் கொடுத்தார்கள். ஆரம்பித்திலேயே வாழ்க்கையின் லக்ஷ்யமான பரமதத்வத்துக்கு விதையைப் போட்டுவிட வேண்டும்; அப்போதுதான், ஒருவன் உடனே அதற்கென்று தன்னை அர்ப்பணம் பண்ணிக்கொள்ளாவிட்டாலும், அவன் லோக வாழ்க்கை நடத்துகிற போதுகூடக் கெட்டுப்போய் விடாமல், இருக்கிற நிலையிலிருந்து இறங்கி விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக மேலே போவான் என்று தான் அவனுக்கு பிரம்மச்சரிய ஆசிரமத்திலேயே வேத உபநிஷத்துகளை உபதேசித்து விட்டார்கள். அதை உடனே உபயோகித்துக் கொண்டு [ practical -ஆக apply பண்ணிக்கொண்டு] ஆத்ம விசாரம் பண்ணி ஜீவன் முக்தனாகிவிட வேண்டும் என்றில்லை. அது பாங்கில் போட்ட டிபாஸிட் மாதிரி. இவன் பக்குவம் அடைகிற வரையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வட்டி மாதிரி வந்து கொண்டிருந்தால் போதும். அப்புறம் உரிய பருவத்தில் அதைப் பூராவாக draw பண்ணி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த டிபாஸிட்டை வாழ்க்கை ஆரம்பிக்கிறபோதே போட்டு இந்த வட்டி கிடைக்கிற மாதிரியாகப் பண்ணிவிடவேண்டும். இல்லாவிட்டால் இவன் யௌவனத்தின் வேகத்திலும், நடுத்தர வயசின் உணர்ச்சி விகாரங்களிலும், ஏற்ற தாழ்வுகளிலும், விருத்தாப்பியத்தின் அசக்தத்திலும் [பலவீனத்திலும்] வீணாகவே போய்விடுவான்.

தற்போது பள்ளிக்கூடங்களிலும் காலேஜ்களிலும் ஒருத்தனின் ஜீவனோபாயத்துக்காக உதவுகிற படிப்பைச் சொல்லிக் கொடுப்பதுபோல, ஆதி காலத்திலும் இவனுக்குத் தொழிலைச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனாலும் தொழிலைச் கொடுக்கிறபோதே அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அத்யாத்ம சாஸ்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். இதனால் இப்போது நடக்கிறமாதிரி வயிற்றுப்பாட்டுக்கு மட்டும் வழி செய்து விட்டு, ஜனங்களின் நன்னடத்தை (மொராலிடி) , ஆத்மாபிவிருத்தி இவற்றுக்கு ஒன்றுமே செய்யாத மாதிரி அப்போது இல்லை. பரலோக லக்ஷ்யம், தர்மம்- மொராலிடி இவற்றைக் கெட்டியான அஸ்திவாரமாக வைத்துக்கொண்டே ஜீவன விருத்தி நடக்க வழி செய்தார்கள்.

ஒரேடியாக மநுஷ்ய ஸ்வபாவத்தைக் கவனிக்காமல் இவனை அத்யாத்ம மார்க்கம், வைராக்யம் என்று சின்ன வயசிலேயே கட்டுப்படுத்தவுமில்லை; ஒரேடியாக இவனைத் தறுதலையாக அறுத்துவிட்டிருக்கவும் இல்லை.

ரொம்பவும் sympathy, understanding என்று சொல்கிறார்களே அப்படி மநுஷ்ய இயல்பை அனுதாபத்தோடு புரிந்து கொண்டு, ஆனாலும் ஆத்மா வீணாகப் போகாதபடி, அதை ஹிதமாகப் பக்குவம் பண்ணுகிற தினுசில், ஆச்ரம தர்மங்களை விபாகம் செய்திருக்கிறார்கள் [வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.] காளிதாசன் வாக்கிலே இது தெரிகிறது2. முதலில் ‘சைசவே அப்யஸ்த வித்யானாம்’ என்கிறான். அப்படியென்றால், பாலப் பிராயத்திலேயே சகல வித்தைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடவேண்டும். வேதம், உபநிஷத்துக்களைக் கூட அப்போதே தெரிந்து கொண்டுவிட வேண்டும். எதுவும் மனஸில் பதிந்து ஏறுகிற காலம் அதுதான். ஆனால் இதற்காக உடனே ஆத்மவிசாரம் என்று ஓடிப்போய் மூக்கைப் பிடித்துக் கொள்ளவேண்டுமா என்றால், அப்படி இல்லை. அடுத்தபடியாக ‘யௌவனே விஷயைஷிணாம்’ என்கிறான். யௌவனத்தில் கிருஹஸ்த தர்மத்தை மேற்கொண்டு இல்லற ஸுகங்களை (துக்கங்களையும்தான்) அநுபவிக்க வேண்டும். இந்த ஸுகமும் உண்மையில் துக்கம் தான் என்ற பேச்சு இந்த ஸ்டேஜில் எடுபடாது. ஆனாலும் இவன் குருகுலவாஸத்தின் போது அநுஷ்டித்த பிரம்மச்சரிய நியமமும், படித்த வேத உபநிஷத்துகளும் இவனை ஒரேடியாக விஷய ஸுகங்களில் தலைதெறித்துப் போகாதபடி கட்டுப்படுத்தும். இது இவன் ஓரளவுக்கு பொருள் சேர்த்து ஸம்பாத்தியம் செய்கிற சமயமும் ஆகும். ஆனாலும் பொருளாசையே பேராசையாகி விடாது. இவன் தர்மத்தை ஒருக்காலும் மீறாதபடி, முன்னே செய்த வித்யாப்யாஸம் இவனை ரக்ஷிக்கும். அதோடு இவனுக்கு இருக்கிற கர்மாநுஷ்டானம், அத்யாபனாதிகள், ஏராளமான யாகங்கள், யக்ஞங்கள் இவை யாவும் இவனை ஒரு நெறியில் (discipline –ல்) வைத்துச் சித்தம் ரொம்பவும் விகாரப்பட்டுப் போகாமல் காப்பாற்றும்.

இது பிராம்மணனுக்குச் சொன்னது. எந்த ஜாதியாரானாலும் அவரவர்களுக்கேற்பட்ட தொழிலைச் செய்து, பேராசையும் பொறாமையும் இல்லாமல் செய்து, ஈச்வரார்ப்பணம் பண்ணினால் அதுவே சித்த சுத்தி தந்துவிடும்.

தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி என்று பகவானே சொன்னதுபோல், தர்மம் தப்பாமலே சில இயற்கையான ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது யௌவனத்துக்கென்று சாஸ்திரமே அங்கீகரித்தது. நாளடைவில் கர்மாநுஷ்டானங்களின் பலம் ஏறி ஏறி ஆசை, கோபம் முதலான வேகங்களெல்லாம் தாமாகக் குறைந்து கொண்டு வர ஆரம்பிக்கும். இப்போது கொஞ்சம் கிழத்தனமான வயசும் வந்திருக்கும். இந்த ஸமயத்தில் வார்த்தகே முனிவ்ருத்தீனாம் என்கிறான் காளிதாஸன். கிழப்பருவம் ஆரம்பிக்கிற காலத்தில் முனிவர்களை, தபஸ்விகளை அடுத்து உபதேசங்களைப் பெற்று, ஆசைகளைப் போக்கிக்கொண்டு, (விராகம், வீதராகம் என்று சொல்வார்கள் – ஆசை போன நிலையை, அப்படிப்பட்ட விரக்தியுடன்) நிறைய பகவத் த்யானம், தபஸ், ஆத்ம சிந்தனையென்று ஈடுபடவேண்டும். வானப்ரஸ்தம் என்ற இந்த ஆச்ரமத்தில் வீடு வாசலையும், பிள்ளை குட்டிகளையும் விட்டுவிட்டுப் பத்தினியை மட்டும் கூட அழைத்துக் கொண்டுபோய்க் காட்டிலே வைதிக கர்மாக்களை அநுஷ்டானம் பண்ண வேண்டும். அந்த அநுஷ்டானத்துக்கு ஸஹாயம் செய்வதற்காகத்தான் பத்தினி வேண்டும்; விஷய ஸுகத்துக்காக அல்ல. அப்புறம் கடைசி ஸ்டேஜ். யோகேனாந்தே தநுத்யஜாம் – அதாவது வைதீக கர்மாக்களையும் விட்டு விட்டு ஸந்நியாஸியாகி, சரீரத்தை விடுகிறபோது கொஞ்சம் கூட அழுகையில்லாமல் பேரானந்தமாக பரமாத்மாவுடன் இரண்டறச் சேர்ந்து விடுகிற யோகமாக மரணத்தை ஆக்கிக் கொண்டு விடவேண்டும்.

அந்தப் பேரானந்த மோக்ஷத்துக்கு எங்கே அஸ்திவாரம் போட்டிருக்கிறது என்றால் ”சைசவே அப்யஸ்தவித்யானாம்” என்று பாலபருவத்தில் படிக்கிறபோதே போட்டிருக்கிறது. அப்பொழுது போட்டுக் கொடுத்த moral foundation (தர்ம நெறி அடிப்படை) தான் அப்புறம் ஜன்மா முழுக்க கை கொடுத்துக் கொண்டே வந்து, குழந்தையாக இவன் படித்த உபநிஷத்தின் லக்ஷ்யமான ஜீவப் பிரம்ம ஐக்கியத்தை இவன் முடிவிலே சாதிக்கத் துணை செய்கிறது.

குழந்தை பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு ; அடக்கம்; விநயம்; கட்டுபாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம் போனால்தான் அடக்கம் வரும். ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியது விநயம்தான்.

மருந்தைவிட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் முக்கியமானது. இந்த விநயத்தைத்தான் பழைய காலத்தில் மாணாக்கனின் பிரதான லக்ஷணமாக வைத்தார்கள். ‘விநயமுடையவன்’ என்ற பொருள் கொண்டதான ‘விநேயன்’ என்றே மாணாக்கனுக்குப் பேர். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாஸம் என்று ஒரு ஆசார்யனிடத்திலேயே வாழும்படியாகக் கொண்டு விட்டார்கள். எட்டு வயசுக்குள் உபநயனம் (பூணூல் கல்யாணம்) பண்ணி குருகுலத்துக்கு அனுப்பினார்கள்.

உபநயனம் என்றால் என்ன?



‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’. கண்ணில்லாதவனை இன்னொருத்தன் தான் அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான் நம்மை அழைத்துப் போகிறதென்று தெரிகிறது. எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’ என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம். ‘உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான். அதாவது, குருகுலத்தில் கொண்டு விடுவதற்குப் பூர்வங்கம்தான் உபநயனம்.

இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை – stage of life – என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம்.

முதல் ஆச்ரமத்தில் இவனுக்கு ஸகலமுமாக இருப்பது குருதான். கடைசியில் ஸந்நியாஸ ஆச்ரமத்திலும் இன்னொரு குரு வருகிறார். இப்போது போட்ட பூணூலைக் கத்தரித்துப் போடுவதற்கு அந்த குரு வந்தாக வேண்டும். முதல் குரு சொல்லிக் கொடுத்த உபநிஷத் லக்ஷ்யமான பிரம்மத்தை இவன் ஸாக்ஷாத்காரம் பண்ணுவதற்கு ஸஹாயம் செய்வதற்காக அந்தத் துறவியான குரு வருகிறார். ”குரு பரம்பரை” என்று நாம் நமஸ்காரம் பண்ணுவதெல்லாம் அந்த ஸந்நியாஸி குருமார்களைத்தான்.

ஆனால், அந்த குருவிடம் அந்தியத்திலாவது நாம் போகிறதற்கு யோக்யதையை உண்டாக்கித் தருபவர் யாரென்றால் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் நமக்கு ஸகல வித்தைகளையும் தரும் இந்த குரு தான். இவர் அவரைப் போல சந்நியாஸி அல்ல. கிருஹஸ்தர்தான். கடைசி குரு பிரம்மவித் (பிரம்மத்தை அறிந்தவர்) என்றும் முதல் குரு வேதவித் (வேதத்தை அறிந்தவர்) என்றும் சொல்வதுண்டு. இந்த வேதவித்துக்கு பிரம்மத்தைப் பற்றிப் படிப்பறிவு நிறைய உண்டே தவிர அநுபவ ஞானம் இருக்கும் என்று சொல்லமுடியாது. இவரும் ஒரு பிரம்மவித்திடம் போய் இனிமேல்தான் ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு பிரம்மத்தை அநுஸந்தானம் பண்ணவேண்டும்.

இதனால் இவர் மட்டம் என்று இல்லை. ஆச்ரம தர்மப்படி வாழ்க்கையின் எந்த ஸ்டேஜில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருப்பவர் இவர். மாணாக்கன் விநேயனாக இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விநயத்தை அவனுக்கு ஊட்டுபவராக, அவனது இயல்பான மரியாதைக்கு பாத்திரராக இவர் வாழ்ந்தாக வேண்டும். நல்ல கர்மாநுஷ்டாதாவாக இருக்கவேண்டும். தர்மிஷ்டராக இருக்க வேண்டும். மாணாக்கனிடம் கண்டிப்பாக இருந்து திருத்தும் போதே, மாதா பிதாக்களை விட்டுத் தன்னிடம் வாஸம் செய்ய வந்திருக்கிற அந்தக் குழந்தையிடம் பரிவுள்ளவராக இருக்க வேண்டும். ‘விநேயன்’ என்பது போலவே மாணாக்கனுக்கு ‘அந்தேவாஸி’ என்று இன்னொரு பெயர் இருக்கிறது. ‘அந்தேவாஸி’ என்றால், ‘உடன் வஸிக்கிறவன்’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். ‘உபநயனம்’ என்னும் போது ‘ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’ என்பதை ‘குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’ என்று பொருள் கொண்டது போலவே, அந்தேவாஸி (‘உடன் வஸிக்கிறவன்’) என்றாலும் ‘குருவுடன் வஸிக்கிறவன்’ என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். வாஸ்தவத்தில் ‘அந்தே’ என்றால் ‘உடன்’ என்றோ ‘பக்கத்தில்’ என்றோ அர்த்தம் இல்லை. ‘அந்தே’ என்றால் ‘உள்ளுக்குள்ளே’ என்றுதான் அர்த்தம். அந்தரங்கம், அந்தராத்மா, அந்தர்யாமி என்றெல்லாம் சொல்லும்போது ‘அந்த’ என்றால் ‘ஹ்ருதயத்துக்குள்ளே’ என்றே அர்த்தம். அம்மாதிரி ஆசார்யன் தன் ஹ்ருதயத்துக்கு உள்ளேயே சீஷப்பிள்ளைகளை அழைத்து வைத்துக் கொண்டு விட வேண்டும். அத்தனை அன்பு காட்ட வேண்டும்.

சிஷ்யனிடம் இவருக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை ஆற்றாவிட்டால் இவருக்கே பெரிய ஹானி உண்டாகும். இந்தக் காலத்தில் உபாத்தியாயர்கள், ‘பையன் உருப்பட்டால் என்ன? உருப்படாவிட்டால் என்ன? நம் சம்பளம் எப்படியும் வருகிறது’ என்று இருக்கலாம். அந்த மாதிரி குருகுலம் நடத்துகிறவர் இருக்க முடியாது. ஏனென்றால் அங்கே குரு-சிஷ்ய உறவு வெறும் வியாபார ஒப்பந்தம் (பிஸினெஸ் கான்ட்ராக்ட்) மாதிரி இல்லை. இப்போதுள்ள படிப்புமுறை பிஸினெஸ் கான்ட்ராக்ட்டுக்கும் ஒரு படி கீழே! பிஸினஸில்கூட ஒரு விலை கொடுத்தால் அதற்கான ஒரு வஸ்துவைத் தரத்தான் வேண்டும். ஆனால் இங்கேயோ சம்பளம் (விலை) கொடுத்த ஒரு மாணாக்கன் ஃபெயில் ஆனால் கூட அது உபாத்தியாரைப் பாதிப்பதில்லை. குருகுலம் நடத்துகிற பழைய கால குருவோ ஒரு மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது என்ன?

”சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்” என்று நீதிசாஸ்திரம் சொல்கிறது. அதாவது சிஷ்யன் பண்ணுகிற பாபம் குருவையே போய்ச் சேருகிறது. இவனுக்கு வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தராமல், இவனை ஒழுக்கமுள்ளவனாக்கவும் அவர் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார். எடுத்துக் கொண்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றாவிட்டால், அதற்கு தண்டனை உண்டு. சிஷ்யனை இவர் யோக்கியனாக்க முடியவில்லை, அவன் ஒரு பாபம் செய்கிறான் என்றால், அந்தப் பாபம் சிஷ்யனைத் தாக்காது; அவனைச் சீர்திருத்தத் தவறிய குருவையே சென்றடையும்.

ஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி நடந்தால் அதன் பாப பலன் அவளைத் தாக்காது; அவளை நல்வழிபடுத்தத் தவறிய புருஷனைத்தான் சேரும். தேச காரியத்திலே ஒரு பிரஜை தப்பு பண்ணினால், அதற்கான பாபம் அவனைத் திருத்தி வைக்காத ராஜாவைத்தான் சேரும். அந்த ராஜாவே பண்ணும்படியான பாபம், அவனை நல்வழிப்படுத்தத் தவறிய ராஜப் புரோஹிகிதரைச் சேரும். நீதி சாஸ்திரத்தில் இப்படியாக ஒரு பர்த்தாவுக்கும், ராஜாங்கம் நடத்துகிறவனுக்கும், ஆசார்யனுக்கும் ரொம்பப் பெரிய பொறுப்பைத் தந்திருக்கிறது.

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராஜபாபம் புரோஹிதம் |

பர்த்தாரம் ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத் ||



ஒரு பர்த்தா என்றால் மனைவியையும், ராஜாவானவன் குடிமக்களையும், குரு என்கிறவன் சிஷ்யனையும் அதட்டி அதிகாரம் பண்ணிக் கொண்டிருப்பதற்காக ஏற்பட்டவர்கள் அல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆதீனத்தில் உள்ளவர்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். அந்த கடமையை நிறைவேற்றத் தவறினால் தங்கள் ஆதீனத்தில் இருக்கிறவர்களின் பாபத்தைத் தாங்களே வாங்கிக்கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள்.



தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக