புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
4 Posts - 27%
சிவா
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
310 Posts - 42%
heezulia
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழர் திருமணம் Poll_c10தமிழர் திருமணம் Poll_m10தமிழர் திருமணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் திருமணம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 8:30 am

1. பொற்காலம்

உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.

உலகம் மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் கிரேக்கர்களது கை வண்ணத்தையும் கலை வண்ணத்தையும் காணலாம்.

மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை மாற்றி கடவுளைத் தனது உருவத்தில் படைக்க ஆரம்பித்தவர்களும் கிரேக்கர்களே. உலகம் உட்பட எல்லாவற்றையும் எண்ணங்களாகவும் (concepts) உருவங்களாகவும் (figures) கிரேக்கர்கள் பார்த்தார்கள்.

இந்தக் கால கட்டத்திலேயே புகழ்பெற்ற தத்துவ ஞானிகளான தேல்ஸ் (Thales) ( கி.மு. 640-546), அறிவு ஆசான் சாக்கரட்டிஸ் (Socrates)( கி.மு. 469-399), பிளாட்டோ ( Plato)(கி.மு. 427-347)இ அரிஸ்ரோட்டல் (Aristotle)(கி.மு. 384-322), போன்றவர்கள் தோன்றினார்கள்.

"வரலாற்றின் தந்தை" ("Father of History") என அழைக்கப்படும் ஹெரடோரஸ் (Herodotus), சொற்பொழிவாளர் டெமொதீனஸ் (Demosthenes) (கி.மு. 384-322), "ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணம் உண்டு" ("every illness has a natural cause") என்று கூறிய மருத்துவத்தின் தந்தை ( "Father of Medicine") என்று போற்றப்பட்ட கிப்போகிறேட்ஸ் (Hippocrates) (கி.மு. 460-377) மகதீனஸ் (Magathenes)

இதே காலத்தைத் சேர்ந்தவர்கள்தான். கணித விற்பன்னர்களான பைத்தோகரஸ் (Pythagoras) , இகுலிட் (Euclid)இ ஆர்கிமிடிஸ் (Archimedes) போன்றவர்கள் வாழ்ந்த காலமும் இதுதான்.

எகிப்து, பாரசீகம், வட மேற்கு இந்தியா இவற்றின் மீது படையெடுத்து வெற்றி கண்ட மகா அலெக்சாந்தர் (Alexander the Great) காலமும் இதுதான். மகா அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டல் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பௌதீகம், வேதியல், தத்துவம், கணிதம், மருத்துவம், இலக்கியம், சமயம், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் சம்மந்தமான நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததினாலேயே ஐரோப்பா அறியாமை என்ற இருண்ட காலத்தில் இருந்து (Dark Age) னு அறிவுடமை நிறைந்த நாகரிக உலகத்துக்கு (கி.பி. 4வது - 11வது நூற்றாண்டு) காலடி எடுத்து வைக்க முடிந்தது.

ஐரோப்பிய மொழிகளின் அரிச்சுவடி கிரேக்க மொழியிலிருந்து சிறிய மாறுதலுடன் உருவாக்கப் பட்டதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல கலைச்சொற்கள் ( democracy, aristocracy, psychology) கிரேக்கத்தில் இருந்து நேரடியாக ஒலிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.

மேற்கூறியவற்றிலிருந்து உலக நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கர்களது பங்களிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயரை எடுத்துக் கொண்டால் அவர்களது பொற்காலம் விக்டோரியா அரசியாரின் (1819-1901) 65 ஆண்டு கால நீண்ட ஆட்சிக் காலம் (1837-1901)என்று சொல்லலாம். பிரித்தானியாவின் கடல் கடந்த சாம்ராஜ்யம் இவரது காலத்திலேயே வலுப்பெற்றது. இந்தியாவின் சக்கரவர்த்தினியாக 26 ஆண்டுகள் (1976-1901)அரசு கட்டிலில் இருந்திருக்கிறார். பிரித்தானியாவின் தொழிற்புரட்சி இவரது காலத்திலேயே ஏற்பட்டது. அறிவியல், போர், பொருளாதாரம், கலை, இலக்கியத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் பிரித்தானியா கொடி கட்டிப்பறந்தது. உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவமாக இருந்த பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வர்ணிக்கப் பட்டது.

தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்க காலமே தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழர்களது நீண்ட கால வரலாற்றை உய்த்து உணர்ந்து ஆராய்பவர்கள் இந்த உண்மையை எளிதில் ஒப்புக் கொள்வார்கள்.

சங்ககாலத்தில் ஆட்சி புரிந்த அரசர்களே தமிழ் மன்னர்களாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது பெயர்களும் தூய தமிழில் இருந்தன.

சங்கப் புலவர்களால் படைக்கப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழர்களது நாகரிகச் சிறப்புக்கும், கலை, பண்பாட்டிற்கும், இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கும் கட்டியங் கூறுகின்றன.

சங்க காலத்தில் பிற்காலத்தில் பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் எழுந்த சாதி, சமய, வேறுபாடுகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமைப்பு ரீதியான சமயம் இருக்கவில்லை. பேய், பிசாசு, மந்திர தந்திரம், சகுனம், மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நரகம், சொர்க்கம் போன்ற மூடநம்பிக்கைகள் இருக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்களை சமூகத்தின் பல படிகளிலும் இருந்த புலவர்கள் படைத்திருக்கிறார்கள். புவி ஆண்ட மன்னர்கள் தொடக்கம் கூலவாணிகர்கள் ஈறாக கவி பாடியுள்ளார்கள். ஆடவரும் பெண்டிரும், அந்தணரும், வணிகரும், குறவனும் குறத்தியும் என்று பல்வேறு பட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள். சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும். வேறு எந்த நாட்டிலும் காணாதவாறு பெண்பால் புலவர்கள் மட்டும் 50க்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது சங்க காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஒத்த கல்விகற்று ஒத்த உரிமையோடு வாழ்ந்திருந்த உயர்ந்த வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 8:32 am

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலையாது கற்றல் நன்றே"



என்று பாடிய ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்,

"யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய"


என்று பாடிய குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன்,

"பிச்சை புகினும் கற்க நன்றே"

என்று பாடிய அதிவீரராம பாண்டியன்,

"உண்டாலம்ம இவ்வுலகம்"

உட்பட பரிபாடலில் பதினைந்து பாடல்களைப் பாடிய இளம்பெருவழுதி,

"படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்

உடைப்படும் செல்வராயினும், இடைப்படக்

குறு குறு நடந்து, சிறகை நீட்டி......




என்று தொடங்கும் புறப்பாடலைப் பாடிய பாண்டியன் அறிவுடைநம்பி, பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகையில் முல்லைக்கலியின் இயல்பைப் பதினேழு பாடல்களில் நயமாகத் தீட்டிய சோழன் நல்லுருத்தன் இவர்கள் எல்லோரும் புவி ஆண்ட அரசராவர்.

சங்கப் புலவர்களான கடியலூர் உருத்திரங் கண்ணனார், உறையூர் முடமோசியார், கபிலர், நக்கீரர், பரணர் போன்றோர் அந்தணராவர்.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் போன்றோர் வணிகப் பெருமக்கள் ஆவர்.

ஆதிமந்தியார், பூதப்பாண்டியனின் அரசியார் பெருங்கோப்பெண்டு அரசகுலத்தில் பிறந்த கவியரசிகள் ஆவர்.

அதியமான் நெல்லிக் கனி ஈந்த அவனது அரசவைப் புலவர் ஒளவையார், காக்கைபாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், காமக்கண்ணியார், போன்றோர்
பெண்பால் புலவர்களில் சிலராவர்.

சைவ சமயத்தைச் சார்ந்த நக்கீரர், புத்தசமயத்தைச் சேர்ந்த இளம்போதியார், சமண மதத்தைச் சார்ந்த உலோச்சனார் இலக்கியம் படைத்துள்ளார்கள்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சங்கப் பாடல்களைப் பாடிய புலவர்கள் ஒத்த காலத்தவரோ அல்லது ஓரிடத்தவரோ அல்ல. கி.மு. நாநூறு ஆண்டுகள் தொடங்கி கி.பி. முதல் நூற்றாண்டு கால இடைவெளியில் வாழ்ந்த புலவர்கள் இப்பாடல்களைப் பாடியதாகத் தெரிகிறது. அது மட்டும் அல்லாமல் பாடிய காலம் வேறு பின்னர் அப்பாடல்கள் தொகுக்கப் பட்ட காலம் வேறாக இருந்திருக்கிறது. மிகச் சிறந்த பாடல்களே தொகுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படித் தொகுக்கப் படாது விடுபட்ட பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருந்திருக்கும். அவையெல்லாம் காலவெள்ளத்தில் அழிந்து போயின. ஏன் முதல் சங்கம், இடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட பல நூல்களும் இன்று இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 8:41 am

2. சங்ககால இலக்கியங்கள்

எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதிணென் கீழ்க்கணக்கு இவையே சங்க கால, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் என மேலே கூறினோம்.

எட்டுத்தொகை நூல்கள் எவையெவை என்பதைக் குறிக்க ஒரு பழம் வெண்பாப் பாடல் உள்ளது. அந்தப் பாடல் இது.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் போற்றும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்து எட்டுத் தொகை.


இவற்றுள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநாநூறு, கலித்தொகை அகப்பொருள் பற்றியன. புறநானூறும், பதிற்றுப் பத்தும் புறப்பொருள் நூல்களாகும். மொத்தம் 2426 தனிநிலைச் செய்யுள்களை எட்டுத்தொகை கொண்டுள்ளது. இந்த எட்டினுள் அகநானூறும் புறநானூறும் தமிழர்களது அகவாழ்க்கையினையும் புறவாழ்க்கையினையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையை இந்தப் பாடல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாது பல அரிய வரலாற்றுச் செய்திகளையும் இவை உள்ளடக்கி இருக்கின்றன.

பத்துப் பாட்டு நூல்கள் பின்வருமாறு.

பாட்டுடைத் தலைவனாக முருகனை வைத்து நக்கீரர் பாடிய (1) திருமுருகாற்றுப் படை.

காவிரிக்கு அணைகட்டிய கரிகால் சோழனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து முடத்தாமக் கண்ணியார் பாடிய (2) பொருநராற்றுப் படை.

நல்லியக் கோடனை பாட்டுடைத் தலைவனாக வைத்து நத்தத்தனார் பாடிய (3)சிறுபாணாற்றுப் படை.

சேரமன்னன் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து உருத்திரங்கண்ணனார் பாடிய (4) பெரும்பாணாற்றுப் படை.

நன்னன்சேய் நன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து பெருங்கௌசிகனார் பாடிய (5) மலைபடுகடாம் (கூத்தராற்றுப் படை).

ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ்மொழியைச் சொல்லிக் கொடுக்க கபிலர் பாடிய (6) குறிஞ்சிப் பாட்டு.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக வைத்து நப்பூதனார் பாடிய (7) முல்லைப் பாட்டு.

கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து உருத்திரங்கண்ணனார் பாடிய (8) பட்டினப்பாலை.

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நக்கீரர் பாடிய (9) நெடுநல் வாடை.

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து மாங்குடி மருதனார் பாடிய (10) மதுரைக் காஞ்சி.



இந்தப் பத்துப் பாட்டு நூல்கள் மொத்தம் 8552 வரிகளைக் கொண்டது. பத்துப் பாட்டு எட்டுத்தொகை இரண்டையும் சேர்த்து ஏறத்தாழ 461 புலவர்கள் இயற்றியுள்ளார்கள். இவர்களில் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் போன்றோர் பெரும்பான்மையான பாடல்களைப் பாடியுள்ளார்கள்.

சங்க காலத்தில் ஊன் உண்பதும், மது அருந்துவதும், பரத்தையரோடு இன்புற்றிருப்பதும் இயல்பான பண்பாடாக எண்ணப்பட்டது. அதியமான் துஞ்சியபோது அவனது பிரிவை ஆற்றமுடியாத ஒளவையார் இனித் தனக்கு யார் கள் தரப்போகிறார்கள் என்ற பொருள்படப் பாடல் பாடியுள்ளார்.

ஆனால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுந்த சங்க காலத்துக்குப் பிந்திய சங்கம் மருவிய காலத்தில் ஊன் உண்பது, கள் குடிப்பது, பரத்தையர் சேரிநாடிப் போவது மிக வன்மையாகக் கண்டிக்கப் படுகிறது. கணக்கு என்ற சொல் நூலைக் குறிப்பதாகும்.

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காலூன்றிய சமண, பௌத்த மதக் கொள்கைகளின் தாக்கங்கள் காரணமாகவே இந்த மாறுதல் ஏற்பட்டதாக நாம் கொள்ளலாம். பௌத்த மதம் கொல்லாமையை மட்டும் வற்புறுத்த சமணம் கொல்லாமை, புலால் உண்ணாமை இரண்டையும் கடுமையாக வலியுறுத்தியது. அகிம்சைக் கோட்பாடு பௌத்தம் சமணம் இரண்டின் அச்சாணியாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனால் சங்க காலத்தில் பாடுபொருளாகக் கொள்ளப்பட்ட அகத்துறை, புறத்துறையோடு அறத்துறையும் சேர்ந்து கொள்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 8:42 am

மேலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வடசொல் கலப்பு சங்க காலத்தை விட அதிக விழுக்காடு உடையதாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது சங்க காலத்தில் தலைகாட்டிய ஆரிய மொழி ஆதிக்கம், சமயப் பண்பாட்டுக் கோட்பாடுகள் சங்கம் மருவிய காலத்தில் நன்றாகக் கால்கொள்ளத் தொடங்கி விட்டதைக் காட்டுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவையெவை என்பதற்கும் ஒரு பழம் வெண்பாப் பாடல் உள்ளது. அது இது.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியோடு ஏலாதி என்பதூஉம்

கைந்நிலையுமாம் கீழ்க் கணக்கு.


இந்தப் பாடலில் திருக்குறள் முப்பால் எனக் குறிப்பிடப் படுவது கவனிக்கத்தக்கது. இத் தொகுப்பில் ஏறத்தாழ 3,250 செய்யுட்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் நாலடி, நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம் ஆகிய பதினொன்றும் அறவொழுக்கம் பற்றிய நீதி நூல்களாகும். ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது அகப்பொருள்பற்றிய நூல்களாகும்.

திருக்குறள் சங்கம் மருவிய காலத்து பதினெண்கணக்கு நூல்களில் ஒன்றாகச் சேர்க்கபட்டாலும் காலத்தால் திருக்குறள் தொன்மை வாய்ந்தது. அது மட்டும் அல்லாது மற்ற எல்லா அறநூல்களையும் விடக் கருத்தாளத்திலும், சொல் நயத்திலும் உயர்ந்து நிற்கிறது. திருக்குறளின் சிறப்பை திருவள்ளுவர் மாலை எடுத்துரைக்கிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நோக்கும்போது வள்ளுவரின் குறள் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படா விட்டாலும் அது தமிழ்ப் பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் வரைவிலக்கணம் கூறிய மறைநூல் என்று கொள்ளலாம். இதையிட்டுப் பின்னர் விளக்கிக் கூறுவோம்.



சங்க காலப் புலவர்கள் வாழ்க்கையின் உறுதிப் பொருட்கள் மூன்றென மொழிவர். அவையாவன அறம், பொருள், இன்பம். இந்த உறுதிப் பொருட்கள் மூன்றுமே தமிழ் இலக்கியப் படைப்புக்கு அடித்தளமாக இருந்தன. தமிழ்மொழியில் இன்று உள்ள மிகத் தொன்மையான இலக்கணக்கண நூலான தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் இந்த உறுதிப் பொருட்களைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

தொல்காப்பியரைப் பின்பற்றி திருவள்ளுவர் இந்த மூன்று உறுதிப் பொருட்களையும் அணுவைப் பிளந்து எழுகடலைப் புகுத்துமாப் போல் நூற்றிமுப்பது மூன்று அதிகாரங்களில், அதிகாரத்துக்குப் பத்துக் குறள் வீதம் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

தமிழ்மகள் என மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட ஒளவையார் அதே மூன்று உறுதிப்பொருட்களை மூன்றே மூன்று அடிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். பாடல் இது.

"ஈதல் அறம், தீவினை நீக்கி ஈட்டல் பொருள்

காதலர் இருவர் கருத்தொருமித்து

ஆதரவு பட்டது இன்பம். "


அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினுள்ளும் இன்பப் பகுதியே (இல்லறவாழ்க்கை) மனித வாழ்;க்கையின் உயிர்நாடியாக விளங்குகிறது. இன்பம் பற்றியே மனிதன் பொருளைத் தேடுகிறான். பொருள் கொண்டு அறம் செய்கிறான்.

தொல்காப்பியர் தொல்காப்பியத்தின் மூலம் தமிழ்மொழிக்கு இலக்கணவேலி அமைத்தார் என்றால் முன்னர் கூறியதுபோல திருவள்ளுவர் திருக்குறளின் வாயிலாக தமிழ்ப் பண்பாட்டுக்கு வேலி போட்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:08 am

3. ஒல்காப்புகழ் தொல்காப்பியம்

உலகில் பேசப்படும் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். இந்தியாவில் வழங்கும் மொழிகளில் தமிழ் மொழிமட்டுமே இலக்கிய, இலக்கணச் சிறப்போடு விளங்குகிறது. இச்சிறப்பின் காரணமாக தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என அழைக்கப்படுகிறது. தமிழ்மொழி போலவே வடமொழிக்கு இலக்கிய-இலக்கணச் சிறப்பிருந்தும் அது கிறித்து சகாப்தத்திற்கு முன்னரே பேச்சு வழக்கை இழந்து விட்டது.

செம்மொழி என்றால் செம்மையான, திருத்தமான மொழி எனப் பொருள்படும். தமிழ்மொழி ஏனைய பல மொழிகள்போல் அழிந்தொழியாது அல்லது பேச்சு வழக்கு இழக்காது சீரிளமையோடு எத்திசையும் புகழ்மணக்க கொலுவீற்றிருப்பதற்கு காரணம் அதன் இலக்கணகட்டமைப்புக்களே.

தமிழ்மொழியில் இன்று காணப்படும் நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும்.

தமிழர் தம் மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றியது மட்டும் அல்லாது தமிழரின் வாழ்வு, பண்பாடு, நாகரிகம் இவற்றை எடுத்துக்காட்டும் வரலாற்று நூலுமாகும்.

தொல்காப்;பியம் இயற்றப்பட்ட காலம் எதுவென்று அறிதியிட்டுச் சொல்லமுடியாது இருக்கிறது. அது கி.மு. ஐந்து நூற்றாண்டு பழமையானது என்பது அறிஞர்கள் பொதுவாக ஒத்துக்கொண்ட கருத்தாகும். இதனைவிட தொல்காப்பியம் பழமையானது, முதல், இடை, கடைச் சங்கங்களில் தொல்காப்பியம் இடைச்சங்;கத்தை சார்ந்த நூல் என்று கூறுவாரும் உளர்.

எது எப்படி இருப்பினும் தொல்காப்பியம் தமிழ் மக்களின் மிகப் பழமையான ஒரு சமூக அமைப்பைப் படம்பிடித்துக்காட்டுவதால் அது உண்மையிலேயே ஒரு தொன்மையான நூல் என்பதில் ஐயமில்லை.

தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் இந்திய மொழிகளிலோ, வேறு எந்த உலக மொழிகளிலோ அதுபோன்ற ஒரு இலக்கண நூல் தோன்றவில்லை என்று துணிந்து சொல்லலாம்.

பிறமொழியும், பிறபண்பாடும் தமிழ் மொழியோடும் தமிழ்ப் பண்பாடோடும் உறவுகொள்ளத் தொடங்கிய காலத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியிருக்கிறது. தமிழ் மொழியின் தனித்தன்மைகளையும், தமிழ்மக்களது பண்பாட்டின் தனித்தன்மைகளையும் பாதுகாத்து அவற்றிற்கு வேலிபோடவும், பிறமொழியாளர்களும், பிறபண்பாட்டாளர்களும் தமிழ்மொழியைப்பற்றியும், தமிழ்மக்களது பண' பாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்கிலும் தொல்காப்பியம் உருவாகியிருக்கிறது.

எள்ளிலிருந்து எண்ணெய் பிறப்பது போல் இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் பிறக்கும என்று கூறுவார்கள். இதன் அடிப்படையில் தொல்காப்பியத்துக்கு முன்னர் ஏராளமான இலக்கிய இலக்கண நூல்கள் தமிழில் கட்டாயமாக இருந்திருக்க வேண்டும்.

பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இந்த உண்மையைப் பின்வருமாறு எடுத்து இயம்புவார்:

Tholhappiyam is a book on phonology, grammar and poetics. Therefore, it implies the prior existence of Thamizh literature. There is a distinction made therein between literary language and colloquial or non-literary language- ceyyuL and valaKku, thus implying certain literary conventions not only in grammatical forms but also in literary forms and subject matter…

"தொல்காப்பியரே தனது நூற்பாக்களில் கூறப்படும் விதிகளுக்கு தனக்கு முன்னரும் தனது காலத்திலும் இருந்த புலவர்களது கூற்றுக்களைச் சான்றாகக் காட்டுவார். இப்படி ஏறத்தாழ 260 இடங்களில் தான் முன்னைய புலவர்களது நெறிகளையே தாம் எடுத்துரைப்பதாகக் கூறுவார்.

என்ப, என்மனார் புலவர், மொழிப-

யாப்பென மொழிப யாப்பறி புலவர்-

தோலென மொழிப தொன்மொழிப் புலவர்-

இயல்பு உணர்ந்தோரே-
என்ப குறியறிந்தோரே-

என்று நூலின் இடையிடையே பரவலாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொல்காப்பியர் "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்று தமக்கு முற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுகிறார். இதனால் அவருக்கு முன்பே இலக்கண நூல்கள் இருந்திருக்கிறதென்பதை துணிந்து சொல்லலாம்.

தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல்லாக இருந்தாலும், பொருளை விளக்கும் போது அதைத் தொல் சக காப்பு சக இயம் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தொல் என்றால் பழமை - பழமையை, தமிழரின் தொன்மையைக் காத்து இயம்பும் நூல் என்று பொருள்படும்.

தொல்காப்பியன் என்ற பெயர் புனைபெயராகத்தான் இருக்க வேண்டும். தொல்காப்பியத்தை எழுதியதால் தொல்காப்பியன் என்று பெயர் பெற்றார் என்று தெரிகிறது.

தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனார்-

" வடவேங்கடம் தென்குமரி ஆயிடை

தமிழ்கூறும் நல் உலகத்து,

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி,

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு

முந்து நூல் கண்டு, முறைப்பட எண்ணி

புலம் தொகுத்தோனே--போக்கு அறு பனுவல்

நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து

அறம் கரை நாவின் நான் மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி,

மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி,

பல் புகழ் நிறுத்த படிமையோனே"


"எனத் தன் பெயர் தோற்றி" என்பதால் "தொல்காப்பியன் எனப் பெயர் வைத்துக் கொண்டார்" என்பது தெளிவாகிறது.

இந்த பாயிரம் மூலமே பண்டைய தமிழகத்தின் எல்லை வடக்கே வேங்கடம் (இன்றைய திருப்பதி) தெற்கே குமரி என்பதும், தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியனார் என்பதும், தொல்காப்பியம் அரங்கேறிய இடம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவை என்பதும், அந்த அவைக்கு தலைமைதாங்கிய புலவர் அதங்கோட்டாசான் என்பதும் தொல்காப்பியர் அவர் காலத்து வழங்கிய ஐந்திரநெறியைப் பின்பற்றி தொல்காப்பியத்தை இயற்றினார் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

தொல்காப்பியம் வழிநூல் என்றும் அதன் முதல் நூல் அகத்தியம் என்றும் சொல்லப்படுவது உண்டாயினும் அதற்கு இந்தப் பாயிரத்திலோ அல்லது தொல்காப்பியத்திலோ சான்றுகள் இல்லை.

அகத்தியம் இன்று அழிந்துபட்டு விட்டது. இருந்தும் அகத்தியம் என்ற இலக்கண நூல் முதற்சங்க காலத்தில் இருந்ததற்கும், அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இலக்கணம் கண்டதற்கும் புறச் சான்றுகள் உள. இறையனாரகப்பொருளுரை அகத்தியர் முதற்சங்கத்து தலைமைப் புலவரென்றும், தலைச்சங்கத்தாருக்கு அகத்தியமே முதல்நூலாக இருந்ததென்றும், இடைச்சங்கத்தாருக்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக இருந்ததெனவும் தெரிவிக்கின்றது.

இலக்கண உரையாசிரியர்களும் அகத்தியம் முதல்நூல், தொல்காப்பியம் அதன் வழிநூல் என்றும், அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் தத்தம் உரைகளில் குறிப்பட்டுள்ளார்கள்.

அகத்தியம் பன்னீராயிரம் சூத்திரங்களைக் கொண்ட நூல் என்பர். இதனால் இதற்கு பேரகத்தியம் என்ற காரணப் பெயரும் உண்டாகிற்று.

தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி உரையாசிரியர்கள் அகத்திய நூற்பாக்களை மேற்கோள் காட்டி உரை செய்துள்ளார்கள். இப்படி மேற்கோள்காட்டி எழுதிய மொத்தம் 26 நூற்பாக்கள் மட்டும் இன்று கிடைத்துள்ளன.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் முறையே ஒன்பது இயல்களைக் கொண்டது. மொத்தம் 1,610 நூற்பாக்களை உள்ளடிக்கியது.

பொருளதிகாரம் வேறு எந்த உலகமொழி இலக்கணங்களில் காணப்படாத சிறப்பிலக்கணமாகும். ஏனைய இலக்கண நூல்கள் எழுத்து, சொல் இவற்றுக்கு மட்டும் இலக்கணம் சொல்லும் போது தொல்காப்பியம் பொருளுக்கும் இலக்கணம் நவில்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:11 am

"செந்தமிழ் மாணவன்" என்று தனது கல்லறையில் எழுதி வைக்குமாறு பெருமையாகக் கூறிக்கொண்ட பு.ரு. போப் ஐயர் தொல்காப்பிய நூலின் சிறப்பைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

"The ancient grammatical works existing in Tamil and its wonderful metrical system proves its assiduous cultivation for ages. An elaborate scientific series of metres such as Tamil glories is adapted to every style and theme of composition is the growth of centuries. Classical Tamil bears every mark of slow and natural evolution." (G.U. Pope- Thamilar Charithtram-Swami Gnanapragasar).

போப்பையர் போலவே தொல்காப்பியத்தின் பெருமையையும், சிறப்பையும் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் அதற்கு எழுதிய உரையின் தொடக்கத்தில் பின்வருமாறு கூறுவார்.

"தொல்காப்பியம் என்ற உலகக் களஞ்சியம் மொழியிலும் அகவாழ்விலும் புறச்சூழலிலும் கட்டுப்பாடு, வளர்ச்சி, தூய்மை வேண்டும் வரம்பு நூல். தொல்காப்பியம் என்ற தமிழ் முதனூல், வழிவந்த பழமைத் தடங்காட்டி, நிகழ்காலச் செவ்வி சேர்த்து, வளரும் எதிர்காலப் புதுமைப் புரட்சிக்கு இடம் வகுக்கும் இயக்க நூல்.

தொல்காப்பியம் என்ற மறைநூல் பிறப்பு, மதம், பால், குழு, இடம், பொருள் நிலை வேற்றுமைகளைப் பற்றாது இயற்கைஅறம், மறம், வெற்றி, அமைதி, காதல் இன்பம் என்னும்இவ்வுலகியங்களை மானிடத்திற்கு எடுத்துக்காட்டும் உலக வாழ்வு நூல். இயக்க வாழ்வுப் பெருமறையான தொல்காப்பியத்தை ஈன்றவள் தமிழ்த்தாய்.

தமிழர்களாகிய நாம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடைய இந்நூலை நம் தாய்மொழியிலே இன்றும் படிக்கும் எளிய இனிய நேர்வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். இதுவே தமிழ்ப்பிறப்பின் ஒரு சிறப்பென உணர்க. மேலும் தொல்காப்பியத்துக்கு இன்றுகாறும் பின்தோன்றிய பெரிய சிறிய இலக்கிய, இலக்கண நூல்களிலெல்லாம் தொல்காப்பிய நீரோட்டம் உண்டு. ஆதலின் தொல்காப்பிய நினைவும் தொல்காப்பியக் கருத்தறிவும் பெறுதல் தமிழன் என்பான் ஒவ்வொருவனின் பிறப்புக் கடமையாகும்."

எல்லாச் சொற்களுக்கும் பொருள்தான் அடிப்படை. பொருள் இலக்கணத்தை விளக்க சொற்கள் தேவைப்படுகின்றன. அச் சொற்கள் எழுத்துக்களினால் ஆனவை. எனவே பொருள் இலக்கணத்தைச் சொல்லத்தான் தொல்காப்பியர் எழுத்து இலக்கணத்தையும், சொல் இலக்கணத்தையும் சொன்னார்.

பொருளதிகாரம் உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, வெவ்வேறு நிலம், அந்த நிலத்துக்குரிய தெய்வங்கள், மக்கள், மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை நெறிகள், ஆடவர்க்குரிய பண்புகள், பெண்களுக்குரிய பண்புகள், மரங்கள், விலங்குகள், இலக்கிய வகைகள், இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய மரபுகள், இலக்கியத் திறனாய்வுகள், உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மெய்ப்பாடுகள் இப்படி ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றிச் சொல்கிறது,

தொல்காப்பியம் சொல்லும் பொருள் இலக்கணம் தமிழர்களுக்கு மட்டும் சொன்ன இலக்கணம் அன்று. உலக மக்களுக்குச் சொன்ன இலக்கணமாகவும் அது விளங்குகிறது.

எடுத்துக்காட்டாக தொல்காப்பியம் சொல்லும் எட்டுவகை மெய்ப்பாடுகளான நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் உலகத்தவர் யாவருக்கும் பொருந்துவனவாகும்.

பெருமிதத்துக்கு இலக்கணம் சொல்ல வந்த தொல்காப்பியர்-

"கல்வி தறுகண் இசைமை கொடை எனச்

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே"


என்று சொல்வது எல்லா மக்களுக்கும் பெருமிதம் ஏற்படுவதற்கு அடிப்படையானவை கற்ற கல்வி, அஞ்சாமை, புகழ், கொடுத்தலாகிய அறம் பொதுவானதாகும்.

எழுத்ததிகாரத்தில் நூல் மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்கள் விரித்துக் கூறப்பட்டுள்ளன.

முதலாவது இயலான நூல் மரபில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, எழுத்துக்களை ஒலிக்கும் கால அளவு, ஒலியின் அடிப்படையில் எழுத்துக்களின் வகைப்பாடு, அவற்றின் பெயர்கள், எழுத்துக்கள் ஒன்றோடொன்று சேர்ந்து வருகின்ற சேர்க்கை நிலை முதலான செய்திகள் தரப்பட்டுள்ளன. இப்படியே ஏனைய இயல்களும் மிக நுட்பமாக விளக்கப்படுகின்றன.

சொல்லதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பனவே அந்த ஒன்பது இயல்களாகும்.

ஐந்து தொடக்கம் எட்டுவரையிலான இயல்கள் முறையே பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நால்வகைச் சொற்களுக்கும் இலக்கணம் கூறுகின்றன.

தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலராவர். அவற்றில் இன்று எமது கைக்குக் கிடைத்திருப்பது ஒரு சிலரது உரைகளே ஆகும்.

ஏறக் குறைய 10-ஆம் நூற்றாண்டின் பின்னரே தொல்காப்பியத்துக்கான உரைகள் தோன்றுகின்றன. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் இம் மூன்றுக்கும் இளப்பூரணர் எழுதிய உரை கிடைத்திருக்கிறது. தொல்காப்பியத்துக்கு முதலாவது தோன்றிய உரையும் முழுமையாகக் கிடைத்திருக்கும் உரையும் இதுவே ஆகும்.

தொல்காப்பிய உரைகளில் முந்தியது இளம்பூரணர் உரையாகும். காலத்தால் பிந்தியது நர்ச்சினார்க்கினியரது உரை. எழுத்து அதிகாரத்துக்கு இளம்பூரணார் உரை நீங்கலாகக் கிடைத்திருக்கும் உரை நச்சினார்கினியரது உரையே.

சொல் அதிகாரத்துக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்பவர்கள் எழுதிய உரைகள் தற்போது கிடைக்கின்றன. பொருள் அதிகாரத்துக்கு ஏற்கனவே கூறியவாறு இளம்பூரணர் எழுதிய உரையை விட பொருள் அதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களுக்கும் செய்யுள் இயலுக்கும் நச்சினார்க்கினியர் உரை உள்ளது. பேராசிரியர் பொருள் அதிகாரம் மெய்ப்பாட்;டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபு இயல் நான்கிற்கும் உரை எழுதியுள்ளார். உண்மையில் பேராசிரியர் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதியதாக நம்பப்படுகிறது. பொருள் அதிகாரத்தின் மொத்த இயல் ஒன்பதில் நாலுக்கு உரை எழுதியவர் முதல் ஐந்தையும் விட்டு விட்டு கடைசி நான்குக்கு மட்டும் உரைசெய்திருப்பார் என்று சொல்ல முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:12 am

உரையாசிரியர்களைப்பற்றி இவ்வாறு விரிவாகக் கூறுவதற்குக் காரணம் இந்த உரையாசிரியர்கள் தொல்காப்பியத்துக்கு உரை செய்திராது விட்டிருந்தால் குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியத்தைப் படித்து அதன் உட்கருத்தை உள்ளவாறு உணர்ந்து கொள்வது சிரமமாக இருந்திருக்கும்.

கிடைக்கிற உரைகளும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு செய்தவையே. இதனால் தொல்காப்பியர் சூத்திரவடிவில் இறுக்கமாகச் சொல்வதற்கு அவர் கையாண்ட அவரது காலத்து சொல்லாட்சிகளுக்கு பொருள் காண்பதில் கருத்து வேறுபாடு இருக்கின்றன.

எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளதிகாரம,; புறத்திணையியல் (27)-

"கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே."


கொடிநிலை, கந்தளி, வள்ளி இந்தச் சொற்களுக்குப் பொருள் என்ன? இளம்பூரணர் கொடிநிலை, கந்தளி, வள்ளி இவற்றிற்கு நேரடியாகப் பொருள் சொல்லாது புறப்பாடல்களை உதாரணம் காட்டி, "இது கொடிநிலை", "இது கந்தளி" என்று சொல்வார்.

வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி என்ற முதலான மூன்றும் - குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே - பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தி வரும்.

கொடிநிலை என்றால் கீழ்த்திசைக் கடவுள். கந்தளி - பற்றுக் கோடற்ற தெய்வம். வள்ளி என்றால்வள்ளல்தன்மை. ஆனால் இந்தச் சொற்களுக்கு வேறுவிதமாகவும் உரை சொல்வர். "கதிர், தீ, மதி இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்படும்" என்றும் உரை செய்யப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் காலத்தில் ஆட்சியிலிருந்த சில சொற்கள் பின்னர் வழக்கொழிந்து போயின. உதாரணம் "இதோளி", "அதோளி", "உதோளி", "எதோளி" என்ற சொற்கள் இன்று வழக்கில் இல்லை.

இந்த இடத்தில் ஒன்றைக் கூறவேண்டும். தொல்காப்பியர் கடவுள் என்ற சொல்லை தேவர் என்ற பொருளில்தான் கையாள்கிறார். "எல்லாம் கடந்த மெய்ப்பொருள் கடவுள்" என்ற சொல்லாட்சி அவர் காலத்தில் இல்லை. தொல்காப்பியம் குறிப்பிடும் கடவுள் வாழ்த்தென்பதற்கு "அமரர் வாழ்த்து" என்பதுதான் பொருள்.

"காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்"

(தொல்.பொருள்-புறத்திணையியல் -சூத்திரம் 23)

"இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடத்தும் இருந்து நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்" என்பதே இதன் பொருள். அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயபனப்பவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும், பிறவும் ஆம்" என்பது நச்சினார்க்கினியர் உரை.

இஃது கடவுள் என்ற சொல் தேவர்களைக் குறித்ததைக் காட்டுகிறது.

தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன. திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, ஞாயிறு, திங்கள், தீ முதலியவைகளைத் தமிழர்கள் தெய்வங்களாக வணங்கி வந்தனர். இமையவர்கள் என்ற தேவர்களையும் தெய்வங்களாகக் கொண்டிருந்தனர்.

மிகவும் வியப்பான செய்தி என்னவென்றால் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருக்கவில்லை. சிவனைக் குறிக்கும் சொல் 1610 தொல்காப்பிய நூற்பாக்களில் ஒன்றிலும் இல்லை. (நால் வேதங்களில் முதல் வேதமான இருக்கு வேதமும் சிவனைக் குறிக்கவில்லை என்பது ஈங்கு குறித்தற்பாலது.)

சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சேயோன் என்றால் செம்மை, சிவந்த நிறத்தோன், எனவே சேயோன் சிவனைக் குறிக்கிறது என்பர்.

குறிஞ்சி நிலத்துத் தெய்வத்தை சேயோன் என்று தொல்காப்பியர் குறிப்பதை முன்னர் பார்த்தோம். குறிஞ்சி நிலத்து தெய்வம் முருகன், செவ்வேள், சேயோன் என்பதே தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். குறிஞ்சி நிலமக்கள் குறவர், குறத்தியர் எனத் தொல்காப்பியம் நவிலும். முருகன் திருமணம் செய்து கொண்டது குறப்பெண்ணான வள்ளி என்பது புராண வழக்கு. இதனாலேயே முருகன் தமிழ்க் கடவுள் என்று போற்றப்படுகிறார் போலும்.

எனவே "இலக்கிய வழக்கிலும், உலகியல் வழக்கிலும் குறிஞ்சித் தெய்வம் முருகனாகவே எண்ணப்படுகிறான். சிவபெருமான் குறிஞ்சித் தெய்வம் என்பதற்கு இலக்கிய வழக்கும் இல்லை. உலக வழக்கும் இல்லை." இருந்திருந்தால் தொல்காப்பியர் நிச்சயம் சுட்டியிருப்பார்.

இதனால் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிவன் என்ற தெய்வமோ சிவமதமோ இருக்கவில்லை என்;பது சாமி சிதம்பரனார் போன்ற தமிழறிஞர்களது துணிபாகும்.

தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்கள் சிவனைக் குறிக்கின்றன. "முக்கட் செல்வர் நகர்" எனப் புறநானூற்றின் 6ம் பாடல் குறிக்கிறது. நூற்றித் தொண்ணூற்றெட்டாவது பாடல் திருமாலை "ஆல் அமர் கடவுள்" எனக் குறிக்கிறது.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு வௌ;வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. இதில் காணப்படும் பழைய - புதிய பாடல்களிற்கு இடையில் 400-600 ஆண்டு இடைவெளி இருப்பதாக நம்பப்படுகிறது.

தொல்காப்பியம் தமிழர்களுக்கு கிடைத்த புதையலாகும். அதன் சிறப்புக் காரணமாகவே ஆயிரக்கணக்கான இடைச் சங்க, கடைச் சங்க இலக்கிய, இலக்கண நூல்கள் பல காலவெள்ளத்தில் அள்ளுண்டு அழிந்தொழிந்து போக தொல்காப்பியம் தப்பிப் பிழைத்தது.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமான இலக்கண நூல்கள், பல வழிநூல்களாக, எழுதப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றேனும் தொல்காப்பியர் படைத்த தொல்காப்பியத்தின் கொடுமுடியை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

தமிழில் பிற்காலத்தில் எழுந்த புராணங்கள் புனைகதைகளையும், பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளையும் மனம்போன போக்கில் சொல்லியுள்ளன.

இந்த உலகத்தை ஒரு அசுரன் பாயைப்போலச் சுருட்டிக் கொண்டுபோய் கடலில் ஒளித்துப் போட்டதாக சொல்லும் புராணக் கதை இருக்கிறது. பூமிக்கு மேலே ஏழுலுலகம், பூமிக்குக் கீழே ஏழுலுலகம், சொர்க்கலோகம், நரகலோகம், தேவலோகம் என்ற எண்ணிறந்த உலகங்களை புராணிகர்கள் கற்பனைக்கு எட்டியவாறு படைத்திருக்கிறார்கள்.

இதனை மனதில் வைத்துத்தான் மகாகவி பாரதியார் பின்வருமாறு பாடுவார்.

"கடலினைத் தாவும் குரங்கும் - வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்ததனாலே - தெற்கில்

வந்து சமன்செயும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த -திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்று மற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்

உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்

நன்று புராணங்கள் செய்தார் - அதில்

நல்ல கவிதை பலப்பல தந்தார்.

கவிதை மிக நல்ல தேனும் - அக்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்

புவிதனில் வாழ்நெறி காட்டி -நன்மை

போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்."


(பாரதியார் புதியபாடல்கள்)

எனவே புராணங்கள் எல்லாம் நல்ல கவிதைகள் என்றாலும் அவையெல்லாம் கட்டுக் கதைகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவற்றை வேதம் எனக் கருதி பாமரர்கள் அல்லல்பட்டு அலைகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:13 am

சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கையைக் கண்டு மகிழ்ந்து இயற்கை வாழ்க்கை வாழ்ந்தார்கள். அந்த இயற்கை வாழ்க்கையையே பாடல்களுக்குப் பாடு பொருளாகக் கொண்டார்கள்.

தொல்காப்பியர் காலத்தில் இந்த உலகத்தின் தோற்றத்தைப்பற்றியும், உலகிலுள்ள உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக தொகுத்து மரபியலில் எழுதியிருக்கிறார். மரபியல் என்பது பரம்பரையாக, வழிவழியாக வரும் முறைமை, வழக்குகள் பற்றிக் கூறுவதாகும்.

"நிலுமும், நீரும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் கூறுகிறார்.

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்."


(தொல். மரபியல் 1589)

(இவ்வுலகம் நிலம், தீ, நீர், காற்று, வான் என்ற ஐம்பூதங்களின் கலவைதான். அதனால் உயர்திணை, அல்திணை, ஆண், பெண், பலர், ஒன்று, பல என்ற இருதிணை, ஐந்து பால்களின் இயல்பினி;ன்றும் வழுவாது, திரிபு இல்லாத சொற்களால் கூறித் தழுவிக் கொள்ளல் வேண்டும்.)

உயிரின் தோற்றத்தையும் அதன் பாகுபாட்டையும் பின்வருமாறு தொல்காப்பியர் சொல்வார்.

"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே."


(தொல். மரபியல் -1526)

(உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவுயிர்கள். உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூஅறி உயிர்கள். உடம்பு, நா, மூக்கு, கண், இவை நான்காலும் அறிவன நாலறி உயிர்கள். உடம்பு, நா, மூக்கு, கண், காது என்னும் ஐந்தால் அறிவன ஐவறி உயிர்கள். உடம்பு, நா, மூக்கு, கண், காது, மனம் இந்த ஆறோடும் அறிவன ஆறறி உயிர்கள். இவற்றைத் தெளிவாக உணர்ந்தோர் நெறி முறையாக உணர்த்தி உள்ளனர்.)

தொல்காப்பியரின் இந்தச் சூத்திரம் பண்டைய தமிழர்களுக்கு கூர்தல் அறம் ( மனிதனின் பரிணாம வளர்ச்சி) தெரிந்திருந்ததைத் தெளிவாகக் காட்டுகிறது.

இதனை அடுத்து ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களுக்கு எடுத்துக்காட்டுக் காட்டுகிறார்.

புல்லும், மரமும் ஓர் அறிவு,

சங்கு, நத்தை, சிற்பி ஈரறிவு,

கறையான், எறும்பு மூன்றறிவு,

நண்டும், தும்பியும் நான்கறிவு,

விலங்குகள், பறவைகள் ஐந்தறிவு,

மனித இனம் மட்டுமே ஆறறிவு,


தொல்காப்பியர் காலத்தில் காகிதம், அச்சு, மை, நவீன எழுதுகோல் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆராய்ச்சி செய்ய உதவும் உபகரணங்கள் வெப்பமானி, உருப்பெருக்கி, தொலைப்பெருக்கி எதுவும் கண்டு பிடிக்கப் படவில்லை. அப்படியான ஒரு கால கட்டத்தில் இவ்வளவு ஆராய்ந்து கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது.

தொல்காப்பியர் மனித இனத் தோற்றம் பற்றிச் சொல்வது டார்வினின் கூர்தல்; கொள்கைக்கு ஏறக்குறைய ஒத்துள்ளது. இவ்வளவு ஆராய்ச்சி செய்த தமிழன்பற்றி பெருமைப்படக் காரணம் இருந்தாலும் பிற்காலத்தில் அவற்றை வளர்க்காமல் விட்டு, சொர்க்கம், நரகம், வீடுபேறு பேரின்பம், பாவ புண்ணியம், யாகம் வேள்வி, வேதாந்த- சித்தாந்த ஆராய்ச்சியில் தமிழன் இறங்கி "வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம் " என்ற திண்ணைப் பேச்சுப் பேசி அறியாமையில் மூழ்கியது கவலையைத் தருகிறது.

அரசியல் பண்பாட்டுத் தளத்தில் தாய்த் தமிழகம் எழுநூறு ஆண்டுகள் அந்நியரால் அடிமை கொள்ளப்பட்டது. சேய்த் தமிழகம் நானூறு ஆண்டுகள் அந்நிய ஆட்கிக்கு அடிமைப்பட்டது. இதனால் தமிழினம் கலப்பினமாகி வாழ்வும் வளமும் இழந்தது.

தமிழினம் இன்று தன்னை மீழ்கண்டு பிடிக்கும் முயற்சியில், புகழ் பூத்த தனது பழையகால வரலாற்றைப் திருப்பிப் பார்க்க விரும்புகிறது. நாகரிகத்தின் கொடு முடியைத் தொட்ட இனம் பிற்காலத்தில் பாதாளத்தில் வீழ்ந்து விட்டதற்கு தொல்காப்பியம் தரும் தரவுகள் சான்றாக உள்ளது. இறந்த காலத்தில் இருப்பதற்காக அல்ல இறந்தகாலம் புகட்டும் பாடத்தைப் படித்து எதிர்காலத்தை செப்பனிடவே தமிழர்கள் தொல்காப்பியம், மற்றும்சங்ககால் இலக்கியங்களை கொஞ்சம் முயற்சி செய்து படிக்க வேண்டும். தமிழனது அரசியல், பண்பாடு, கலை இவற்றின் மறுமலர்ச்கிக்கு அத்தகைய இலக்கண இலக்கிய வரலாற்று உணர்வு கைகொடுக்கும்.

தொல்காப்பியம் இலக்கண நூல் என்பதால் அதைத் தொட விரும்பாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தொல்காப்பியத்தை தமிழர்களது மொழி நாகரிகச் சிறப்பை அறிய உதவும் காலக் கண்ணாடி என்ற உணர்வோடு படித்தால் தொல்காப்பியம் நிச்சயம் இனிக்கும். அந்த ஆவலைத் தூண்டவே ஒல்காப்புகழ் தொல்காப்பியத்தை, பெரும்பாலும் பொருள் அதிகாரத்தை இங்கு மேலோட்டமாக ஆனால் சற்று விரிவாக அறிமுகம் செய்திருக்கிறேன். இதன் மூலம் தொல்காப்பியத்தின் அருமையும் சிறப்பும் கருதி மேலும் அதனைக் கற்க ஆர்வம் ஏற்படும் என நம்புகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:15 am

4. பொது மறை

இலக்கணம் என்பதற்காக தொல்காப்பியம் காலம் காலமாகப் புலவர்களால் போற்றப்பட்டு வந்திருப்பது போல் சிறந்த அறநூல் என்ற காரணத்துக்காக திருக்குறள் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இவ்வாறு புலவர் பெருமக்களால் போற்றப்பட்டு வந்த காரணத்தாலேயே இந்த இரண்டு நூல்களும் சிதைவுறாது முழுமையாக இன்று எமக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

அந்நிய மொழி, பண்பாட்டுப் படையெடுப்பினாலும், அரசுரிமை இழந்ததினாலுல் தமிழர்களே தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமையையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது. இன்றைய எமது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் இந்த அறியாமை முக்கிய காரணியாகும்.

வள்ளுவர் செய் திருக்குறளே தமிழர்களின் நாகரிகச் சிறப்பையும் பண்பாட்டின் உயர்வையும் உலகுக்கு எடுத்துச் சொல்கிறது. இதன் காரணமாகவே திருக்குறள் தமிழர்களின் மறையாகவேதமாகப் போற்றப்படுகிறது.

திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரம் உண்டு. இதில் முதல் 4 அதிகாரங்கள் பாயிரம் என்று தலைப்பிட்டு முறையே கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் பற்றிப் பேசுகின்றன, அடுத்து அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள் உண்டு என்று முன்னரே பார்த்தோம். எஞ்சிய 34 அதிகாரங்களில் 20 அதிகாரங்கள் இல்லற இயலைப்பற்றிப் பேசுகிறது. அடுத்து 13 அதிகாரங்கள் துறவற இயல்பற்றிப் சொல்கிறது. கடைசி அதிகாரமான ஊழ் இயல் ஊழ்பற்றிப் பேசுகிறது. பொருள் பாலில் 70 அதிகாரங்களும் காமத்துப்பாலில் எஞ்சிய 25 அதிகாரங்களும் காணப்படுகின்;றன. இதில் இருந்து தெரிவது என்னவென்றால் மொத்தம் 133 அதிகாரங்களில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் இந்த நான்கோடு துறவறம் பற்றிய 13 அதிகாரங்களையும் சேர்த்து மொத்தம் 17 அதிகாரங்களே அறவோர்க்கும் துறந்தோர்க்கும் ஒதுக்கி இருக்கிறார். எஞ்சிய 95 அதிகாரங்களும் இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான பொருள் பற்றியும் இன்பம் பற்றியும் சொல்வதற்கு ஒதுக்கி இருக்கிறார்.



"வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி"


என்று திருக்குறளின் நிறையையும் மனுதர்ம சாத்திரத்தின் குறையையும் தமிழ்தேசியத்துக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிய மனோண்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை ஒப்புநோக்கிச் சொல்வார். ஒரு குலத்துக்கு ஒரு நீதி வகுத்து நால்வருண சாதி முறையையும் பிராமண ஆதிக்கத்தையும் பாதுகாப்பதே மனுதர்மத்தின் நோக்கமாகும்.

கடந்த 2000 ஆண்டுகளாக திருக்குறள் அரச மட்டத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது. இராமாயணம், பாரதம் போன்ற பிற பண்பாட்டு இதிகாசங்கள், கற்பனைப் புராணங்கள், ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுசாத்திரங்கள் தமிழர் வாழ்வில் கலந்தது போல் திருக்குறள் கலக்கவில்லை. வர்ணாச்சிர தர்மத்தையும் அதன் உட்பிரிவான சாதி அமைப்பையும் தூக்கிப் பிடிக்கும் பகவத்கீதை தமிழ் சமூகத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது போல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்குறள் அறிமுகப்படுத்தப் படவில்லை. புறப் பண்பாட்டுச் சேற்றில் தமிழ் சமூகம் அமிழ்ந்து அழிந்து பட்டதே இதற்குக் காரணமாகும்.

திருக்குறள் முப்பால்பற்றி மட்டும் பேசியது. ஆரிய வேதங்கள் நாற்பால் பற்றிப் பிதற்றின. ஆரியவேதம் நால்வர்ணம், நாலாயிரம் சாதியைக் கற்பித்தது. திருக்குறள் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று முழங்கியது. வள்ளுவர் காலத்தில் பலர் பிறப்பு அடிப்படையில் தங்களை அந்தணர் என்று சொல்லியும், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லியும் உலா வந்திருக்க வேண்டும். அதனால் அந்தணர் யார் என்பதற்கு திருவள்ளுவர் வரைவிலக்கணம் வகுக்க வேண்டியிருந்தது. "அந்தணர் என்போர் அறவோர், மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்" என்று பறையறைந்தது திருக்குறள்.. இங்கே பிறப்பால் மட்டும் ஒருவன் உயர்வு கணிக்கப்படும் என்ற ஆரியக் கோட்பாட்டை முற்று முழுதாக உடைத்து எறிகிறார் வள்ளுவர்.

ஆரிய வேதம் அவி சொரிந்து ஆயிரம் வேள்விகள் நடாத்தியது. ஏமாந்த அல்லது ஏமாற்றப்பட்ட சங்க கால மூவேந்தர்களே இந்த வேள்விகள் செய்தால் சொர்க்கம் கிடைக்கும், சுகபோகம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் வேத வேள்விகள் செய்தார்கள். பிராமணர்களுக்கு முற்றும் அடிமையாகித் தமிழகத்தைப் பாழாக்கிய பாண்டியருள் தலைசிறந்த அரசர்களில் ஒருவனான பெருவழுதிக்கு "பல்யாகசாலை முதுகுடிமிப் பெருவழுதி" என்ற பட்டமே இருந்தது.

வேத வேள்விகளைக் கணக்கற்றுச் செய்ததாலும், வேதமோதிய பார்ப்பனர்களை எல்லாம் முனிவர் என்று கூறி, அவருக்குத் தன் குடிமி அவிழ்த்து விழுமாறு தலை குனிந்து வணங்கும்படி, முதுகுடுமிப் பெருவழுதியை காரிக்கிழார் என்ற தமிழ்ப் புலவர் வேண்ட அப்படியே அவன் செய்ததாலும் அவனுக்கு இந்தப் பட்டம் கிடைத்தது போலும். . அன்றைய நிலமையைப் பார்க்கும் போது இக்காலம் நற்காலம்போல் தோன்றுகிறது.

"இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே" (புறம் 6)

இறைஞ்சுக - வணங்குக. நின்சென்னி - நினது முடி. சிறந்த நான்மறை முனிவர் எந்து கை எதிரே - மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடு வாழ்கவென்று எடுத்த கையின் முன்னே. இறைஞ்சுக - வணங்குக.

வேத வேள்விகளின் போது கொட்டப்பட்ட நீரினால் நிலம் சேறாகிப் போய்விட்டதாக இன்னொரு புறப்பாடல் தெரிவிக்கிறது.

ஆனால் தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளோ "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செருத்து உண்ணாமை நன்று" என்று சாற்றியது. வேதத்தைக் காதால் கேட்பது சூத்திரனுக்கு அடாது என்று வேதசாத்திரங்கள் தமிழன் மூளைக்கு விலங்கு போட்ட போது திருக்குறள் "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற இடித்துச் சொல்லியது. இப்படி ஆரிய வேதத்திற்கும் பொதுமறை பேசும் திருக்குறளுக்கும் உள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் போன்றவை. வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் உள்ள வேறுபாடு போன்றவை. வைரத்துக்கும் கூழாங்கற்களுக்கும் உள்ள வேற்றுமை போன்றது. இப்படி ஆயிரம் வேறுபாடுகளை அடுக்கிக் காட்டலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:16 am

அண்மையில் கன்னியாகுமரியில் காலத்தால் அழியாத பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு 133 அடி உயர நினைவுச் சிலை தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். கோலாகலமாக நடந்த இந்தச் சிலைத் திறப்பு விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் உரையாற்றும்போது-

"கி. பின்னும் முன்னும் கடந்த 2000 ம் ஆண்டுகாலமாக களப்பிரர், பல்லவர், சோழர் ஆட்சி நடந்தது. கி.பி. 1310 வரை தமிழர் ஆட்சி நீடித்தது. பின்னர் தமிழர் வீழ்ச்சி அடைந்தனர். தமிழர் வீழ்ந்தால் எழப் பல நூற்றாண்டு ஆகும். சோழர், பாண்டிய மன்னர் ஆட்சி வள்ளுவர் காட்டிய நெறி முறைப்படி நடக்கவில்லை. பண்டைய காலக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள சொற்கள், வார்த்தைகளில் வள்ளுவர் நெறி முறைப்படி ஆட்சி செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

1891ல் மனோன்மணியம் சுந்தரனார் தமிழக வரலாற்றை சரியாக எழுத வேண்டும் என்று கூறினார். அவர் பெயரில் நெல்லையில் பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ளார் கலைஞர். அவரது பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது. வேத காலங்களில் வேதம் ஓதுதலை காதில் கேட்டாலே அது குற்றமாகக் கருதப்பட்டது.

அப்படியே தப்பித் தவறிக் கேட்பவர்களுக்கு கடும் தண்டனையும் வழங்கப்பட்டது. திருக்குறளின் தொடக்கத்தில் வள்ளுவர் எல்லாம் இயற்கை விதிப்படி நடக்கும் என்றார். இறுதியில் கயமைத்தனம் அதிகாரம் தொடங்கும் போது விரக்தி நிலைக்குச் சென்றுள்ளார்." (தினபூமி - 2-01-2000)

தமிழ்வளர்ச்சி அமைச்சர் தமிழ்குடிமகனைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் பேசினார்.

"இங்கு நடக்கும் திருவிழா உலகத் தமிழர்களுக்கே திருநாள் விழாவாகும். தேய்ந்த திராவிடன் தலை நிமிர இவ்விழா உதவும். நெறி அறியா மக்களுக்கு நெறிகூறும் நன்னாள் இன்னாள் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். கடத்தல்காரர்களிடம் இருந்து 160 பயணிகள் மீட்கப்பட்ட நல்ல செய்தி இத்திருநாளில் வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய வள்ளுவர் கூட கடத்தப்பட்டார். வள்ளுவரின் கற்பனை வரலாற்றை யுவயுகம் கடத்திச் சென்றது. வள்ளுவர் குறித்து தவறான கருத்துக்களும் பரப்பப்பட்டது. திருக்குறள் கூட வேறு மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகக் கதை கட்டப்பட்டது. தமிழுக்கு மனோன்மணியம் சுந்தரனார் எழுச்சியூட்டினார். பாரதியார் புரட்சி ஊட்டினார்.

திராவிட இயக்கம்தான் திருக்குறளை மக்களிடம் கொண்டு சென்றது என்று வாழப்பாடியார் இங்கே குறிப்பிட்டார். குறள் குறித்த உயர்வு தமிழர்கள் மத்தியில் வேரூன்ற பாடுபட்டோம். வள்ளுவருக்குரிய பெருமை இந்தியாவில் இல்லைதான். மற்ற மாநில மக்கள் தங்கள் சொந்த மாநில வரலாற்றையும் கூட அறிய மாட்டார்கள். கன்னடம், ஆந்திரம் ஆகிய வற்றில் தமிழும் உள்ளது. வள்ளுவர் கூட அந்த மாநிலங்களுக்குப் புரவலராக இருந்துள்ளார். கர்நாடகாவில் கூட வள்ளுவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதால்தான் அவருக்கு சிலை அமைப்பதில் மாறுபாடு உள்ளது. வள்ளுவரின் குறள், மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.

எந்த மதச் சார்பிலும் இல்லாத நூல் திருக்குறள். அது சமய நூல் அல்ல. அதற்கு அப்பாற்பட்டு எழுதப்பட்ட நூல். அதற்கு முன் கூட மன்னர் காலத்தில் திருக்குறள் அரங்கேறவில்லை. ஏனெனில் திருவள்ளுவர் தன்மானமிக்கவர். அவரது நூலை அரங்கேற்றும் அளவுக்குத் தகுதியானவர் அன்று எவரும் இல்லை.



வள்ளுவர்கூட ஒரு மன்னராக இருந்துள்ளார். மக்களிடம் திருக்குறளை அரங்கேற்றிய பெருமை திமுகவையே சேரும். வள்ளுவரைப் போன்று இன்னொரு புலவன் உலகில் எங்கும் இதுவரை பிறக்கவில்லை. திருக்குறள் போன்று வேறு எந்த நூலிலும் தத்துவம் கிடையாது. மனிதன் நல்லபடி வாழ நல்ல கருத்தை குறள் வடிவில் சொன்னவர் வள்ளுவர். இது நமக்குக் கிடைத்த கருவூலம். இதனை நாம் நன்கு உணரவேண்டும். உணராததற்குக் காரணம் மதம், சாதி, தீண்டாமை.

வள்ளுவர் கூட துறவிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தாலே போதும். துறவிகள் என்றால் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் என்று இருந்த நிலையை எதிர்த்தவர் வள்ளுவர். குறளுக்கு கலைஞர் உரை எழுதினார். ஓவியம் வரைந்தார். எல்லாவற்றிற்கும் சிகரமாக விண்ணுயர் சிலை தந்தார். வள்ளுவரின் திருக்குறளைப் போல் கலைஞர் வாழ்வாங்கு வாழ விரும்புகிறேன்."

உலகில் நான் அறிந்தளவில் இரண்டு சிந்தனையாளர்கள் மட்டுமே தாங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உரைத்துப் பார்த்து அறிவிக்குச் சரியென்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதில் ஒருவர் கௌதம புத்தர். மற்றவர் திருவள்ளுவர்.

திருக்குறளை ஊன்றிப் பகுத்தறிவுக் கண்ணோடு படிப்பவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். திருவள்ளுவர் முப்பால் என்ற ஒரு நூலை மட்டும் எழுதினார். அதனைப் பின்வந்த உரையாசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல இயல்களாகப் பிரித்து, பத்துப் பத்துக் குறள்களைக் கொண்ட அதிகாரங்களாக வகுத்தார்கள் (ஆறு. அனலை இராசேந்திரம் கவனிக்க). இயல் பகுப்புகள் வேறு வேறாக இருப்பதற்கும், சில அதிகாரங்களின் தலைப்புகள் வேறுபட்டு இருப்பதற்கும், சில குறள்கள் இடம்மாறி இருப்பதற்கும் இதுதான் காரணம் எனபது வெளிப்படை. எடுத்துக்காட்டாக பரிமேலளகரின் பகுப்பு முறைக்கும் திருக்குறளுக்கு உரைசெய்த இன்னொரு உரையாசிரியரான மணக்குடவர் வைப்பு முறைக்கும் வேறுபாடுள்ளது. பாடவேறுபாடும் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக பொருட்பாலில் உள்ள 70 குறள்களையும் பரிமேலளகர் அரசியல்( 25), அங்க இயல (32), ஒழிபு இயல் (13) என மூன்று இயலாக வகுக்க, உரையாசிரியர் மணக்குடவர் அதனை (பின்வரும்) ஆறு இயல்களாக வகுத்திருக்கிறார்.

1) அரசியல் (25)

2) அமைச்சியல் (10)

3) பொருள் இயல் (5)

4) நட்பு இயல் (5)

5) துன்ப இயல் (12)

6) குடியியல் (13)


"இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கண் அழியாமை ஈறாகக் கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரியவாதலின் அரசியல் என்றும், அமைச்சு முதலாக அவையஞ்சாமை ஈறாகச் கூறிய அதிகாரம் பத்தும் பெரும்பான்மை அமைச்சர்க்கு உரியவாதலின் அமைச்சியல்; என்றும், நாடு முதலாகப் படைச்செருக்கு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் பொருட்பகுதியாதலின் பொருளியல் என்றும், நட்பு முதலாகக் கூடாநட்பு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் நட்பின் பகுதியாதலின் நட்பியல் என்றும், பேதமை முதலாக மருந்து ஈறாகக் கூறிய அதிகாரம் பன்னிரண்டும் கேட்டுக்குக் காரணமாதலின் துன்பவியலென்றும், குடி முதலாக கயமை ஈறாகக் கூறிய அதிகாரம் பதின்மூன்றும் மக்களது இயல்பு கூறுதலின் குடியியல் என்றும் ஆகப் பொருட்பால் கூறிய அதிகாரம் எழுபதாயிற்று" என்று மணக்குடவர் தான் செய்த அதிகாரப் பகுப்பிற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இந்த விளக்கம் ஏற்கக் கூடியதாக அமைந்துள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக